எட்டாம் பத்து
முதல் திருமொழி
1648:##
‘சிலையிலங்கு பொன்னாழி* திண்படைதண்டு ஒண்சங்கம்‘ என்கின்றாளால்,*
‘மலையிலங்கு தோள் நான்கே* மற்றவனுக்கு எற்றேகாண்!‘ என்கின்றாளால்*
முலையிலங்கு பூம்பயலை* முன்போட அன்போடி இருக்கின்றாளால்*
கலையிலங்கு மொழியாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ! (2)
1649:##
‘செருவரை முன்னாசறுத்த* சிலையன்றோ?கைத்தலத்தது‘ என்கின்றாளால்,*
‘பொருவரைமுன் போர்தொலைத்த* பொன்னாழி மற்றொருகை‘ என்கின்றாளால்*
‘ஒருவரையும் நின்னொப்பார்* ஒப்பிலா என்னப்பா!‘ என்கின்றாளால்*
கருவரைபோல் நின்றானைக்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1650:
‘துன்னுமா மணிமுடிமேல்* துழாயலங்கல் தோன்றுமால்‘ என்கின்றாளால்,*
‘மின்னுமா மணிமகர குண்டலங்கள்* வில்வீசும்‘ என்கின்றாளால்*
‘பொன்னின் மாமணி ஆரம்* அணியாகத்து இலங்குமால்‘ என்கின்றாளால்*
கன்னிமா மதிள்புடைசூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1651:
‘தாராய தண்துளப* வண்டுழுத வரைமார்பன்‘ என்கின்றாளால்*
‘போரானைக் கொம்பொசித்த புட்பாகன்* என்னம்மான்‘ என்கின்றாளால்*
‘ஆரானும் காண்மின்கள்* அம்பவளம் வாயவனுக்கு‘ என்கின்றாளால்*
கார்வானம் நின்றதிரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1652:
‘அடித்தலமும் தாமரையே* அங்கையும் பங்கயமே‘ என்கின்றாளால்,*
‘முடித்தலமும் பொற்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா‘ என்கின்றாளால்*
‘வடித்தடங்கண் மலரவளோ* வரையாகத்து உள்ளிருப்பாள்?’என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்ளுகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1653:
‘பேராயிரம் உடைய பேராளன்* பேராளன்‘ என்கின்றாளால்*
‘ஏரார் கனமகர குண்டலத்தன்* எண்தோளன்‘ என்கின்றாளால்*
‘நீரார் மழைமுகிலே* நீள்வரையே ஒக்குமால்‘ என்கின்றாளால்*
காரார் வயல் அமரும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ! 8.1.6
1654:
‘செவ்வரத்த உடையாடை* அதன்மேலோர் சிவளிகைக்கச்‘ சென்கின்றாளால்*
‘அவ்வரத்த அடியிணையும்* அங்கைகளும் பங்கயமே‘ என்கின்றாளால்*
‘மைவளர்க்கும் மணியுருவம்* மரகதம் மழைமுகிலோ!‘ என்கின்றாளால்*
கைவளர்க்கும் அழலாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1655:
‘கொற்றப்புள் ஒன்றேறி* மன்னூடே வருகின்றான்‘ என்கின்றாளால்*
‘வெற்றிப்போர் இந்திரற்கும்* இந்திரனே ஒக்குமால்‘ என்கின்றாளால்*
‘பெற்றக்கால் அவனாகம்* பெண்பிறந்தோம் உய்யோமோ?’ என்கின்றாளால்*
கற்றநூல் மறையாளர்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1656:
‘வண்டமரும் வனமாலை* மணிமுடிமேல் மணநாறும்‘ என்கின்றாளால்*
‘உண்டிவர் பால் அன்பு எனக்கென்று* ஒருகாலும் பிரிகிலேன்‘ என்கின்றாளால்*
‘பண்டிவரைக் கண்டறிவது* எவ்வூரில் யாம்?’என்றே பயில்கின்றாளால்*
கண்டவர்தம் மனம்வழங்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொல்லோ!
1657:##
‘மாவளரு மென்னோக்கி* மாதராள் மாயவனைக் கண்டாள்‘ என்று*
காவளரும் கடிபொழில்சூழ்* கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*
பாவளரும் தமிழ்மாலை* பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
பூவளரும் கற்பகம்சேர்* பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ் தக்கோரே. (2)
இரண்டாம் திருமொழி
1658:##
தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*
வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்*
ஓ!துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-
கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1
1659:
நீணிலா முற்றத்து* நின்றிவள் நோக்கினாள்,*
காணுமோ!* கண்ணபுரம் என்று காட்டினாள்,*
பாணனார் திண்ணம் இருக்க* இனிஇவள்-
நாணுமோ,?* நன்று நன்று நறையூரர்க்கே. 8.2.2
1660:##
‘அருவிசோர் வேங்கடம்* நீர்மலை‘ என்றுவாய்-
வெருவினாள்* மெய்யம் வினவி இருக்கின்றாள்,*
‘பெருகுசீர்க்* கண்ணபுரம்‘ என்று பேசினாள்-
உருகினாள்,* உள்மெலிந்தாள் இது என்கொலோ! (2) 8.2.3
1661:
உண்ணும் நாளில்லை* உறக்கமும் தானில்லை,*
பெண்மையும் சால* நிறைந்திலள் பேதைதான்,*
கண்ணனூர் கண்ணபுரம்* தொழும் கார்க்கடல்-
வண்ணர்மேல்,* எண்ணம் இவட்கு இது என்கொலோ! 8.2.4
1662:
கண்ணனூர்* கண்ணபுரம் தொழும் காரிகை,*
பெண்மையும் தன்னுடை* உண்மை உரைக்கின்றாள்,*
வெண்ணெயுண்டு ஆப்புண்ட* வண்ணம் விளம்பினால்,*
வண்ணமும்* பொன்னிறம் ஆவது ஒழியுமே. 8.2.5
1663:
‘வடவரை நின்றும் வந்து* இன்று கணபுரம்,*
இடவகை கொள்வது* யாம்‘என்று பேசினாள்,*
மடவரல் மாதர் என் பேதை* இவர்க்குஇவள்-
கடவதென்,?* கண்துயில் இன்று* இவர் கொள்ளவே. 8.2.6
1664:##
தரங்கநீர் பேசினும்* தண்மதி காயினும்,*
இரங்குமோ?* எத்தனை நாளிருந்து எள்கினாள்?*
‘துரங்கம் வாய் கீண்டு உகந்தான்* அது தொன்மை ஊர்*
அரங்கமே‘ என்பது* இவள் தனக்கு ஆசையே. 8.2.7
1665:
தொண்டெல்லாம் நின்னடியே* தொழுது உய்யுமா-
கண்டு,* தான் கணபுரம்* கைதொழப் போயினாள்*
வண்டுலாம் கோதை என் பேதை* மணிநிறம்-
கொண்டுதான்,* கோயின்மை செய்வது தக்கதே? 8.2.8
1666:
முள்ளெயிறு ஏய்ந்தில,* கூழை முடிகொடா,*
தெள்ளியள் என்பதோர்* தேசிலள் என்செய்கேன்,*
கள்ளவிழ் சோலைக்* கணபுரம் கைதொழும்-
பிள்ளையை,* பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 8.2.9
1667:##
கார்மலி* கண்ணபுரத்து எம் அடிகளை,*
பார்மலி மங்கையர் கோன்* பரகாலன் சொல்,*
சீர்மலி பாடல்* இவைபத்தும் வல்லவர்,*
நீர்மலி வையத்து* நீடு நிற்பார்களே. (2) 8.2.10
1668:
மூன்றாம் திருமொழி
கரையெடுத்த சுரிசங்கும்* கனபவளத் தெழுகொடியும்,*
திரையெடுத்து வருபுனல்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
விரையெடுத்த துழாயலங்கல்* விறல்வரைத்தோள் புடைபெயர*
வரையெடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் வரிவளையே. (2) 8.3.1
1669:
அரிவிரவு முகில்கணத்தால்* அகில்புகையால் வரையோடும்*
தெரிவரிய மணிமாடத்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வரியரவின் அணைத்துயின்று* மழைமதத்த சிறுதறுகண்,*
கரிவெருவ மருப்பொசித்தாற்கு* இழந்தேன் என் கனவளையே. 8.3.2
1670:
துங்கமா மணிமாட* நெடுமுகட்டின் சூலிகை,போம்*
திங்கள்மா முகில்துணிக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
பைங்கண்மால் விடையடர்த்துப்* பனிமதிகோள் விடுத்துகந்த*
செங்கண்மால் அம்மானுக்கு* இழந்தேன் என் செறிவளையே. 8.3.3
1671:
கணமருவு மயிலகவு* கடிபொழில்சூழ் நெடுமறுகில்,*
திணமருவு கனமதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
மணமருவு தோளாய்ச்சி* ஆர்க்கப்போய், உரலோடும்*
புணர்மருதம் இறநடந்தாற்கு* இழந்தேன் என் பொன்வளையே. 8.3.4
1672:
வாயெடுத்த மந்திரத்தால்* அந்தணர்தம் செய்தொழில்கள்*
தீயெடுத்து மறைவளர்க்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்*
தாயெடுத்த சிறுகோலுக்கு* உளைந்தோடித் தயிருண்ட,*
வாய்துடைத்த மைந்தனுக்கு* இழந்தேன் என் வரிவளையே. 8.3.5
1673:
மடலெடுத்த நெடுந்தாழை* மருங்கெல்லாம் வளர்பவளம்,*
திடலெடுத்துச் சுடரிமைக்கும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
அடலடர்த்து அன்று இரணியனை* முரணழிய அணியுகிரால்,*
உடலெடுத்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே. 8.3.6
1674:
வண்டமரும் மலர்ப்புன்னை* வரிநீழல் அணிமுத்தம்,*
தெண்திரைகள் வரத்திரட்டும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
எண்திசையும் எழுசுடரும்* இருநிலனும் பெருவிசும்பும்,*
உண்டுமிழ்ந்த பெருமானுக்கு* இழந்தேன் என் ஒளிவளையே. 8.3.7
1675:
கொங்குமலி கருங்குவளை* கண்ணாக தெண்கயங்கள்*
செங்கமல முகமலர்த்தும்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
வங்கமலி தடங்கடலுள்* வரியரவின் அணைத்துயின்ற,*
செங்கமல நாபனுக்கு* இழந்தேன் என் செறிவளையே. 8.3.8
1676:
வாராளும் இளங்கொங்கை* நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
சீராளும் வரைமார்வன்* திருக்கண்ணபுரத்து உறையும்,*
பேராளன் ஆயிரம்பேர்* ஆயிரவாய் அரவணைமேல்*
பேராளர் பெருமானுக்கு* இழந்தேன் என் பெய்வளையே. 8.3.9
1677:##
தேமருவு பொழில்புடைசூழ்* திருக்கண்ணபுரத்து உறையும்-
வாமனனை,* மறிகடல்சூழ்* வயலாலி வளநாடன்,*
காமருசீர்க் கலிகன்றி* கண்டுரைத்த தமிழ்மாலை,*
நாமருவி இவைபாட* வினையாய நண்ணாவே. (2) 8.3.10
நான்காம் திருமொழி
1678:##
விண்ணவர் தங்கள் பெருமான்* திருமார்வன்,*
மண்ணவர் எல்லாம் வணங்கும்* மலிபுகழ்சேர்,*
கண்ணபுரத்து எம் பெருமான்* கதிர்முடிமேல்,*
வண்ண நறுந்துழாய்* வந்து ஊதாய் கோல்தும்பீ! (2) 8.4.1
1679:
வேத முதல்வன்* விளங்கு புரிநூலன்,*
பாதம் பரவிப்* பலரும் பணிந்தேத்தி,*
காதன்மை செய்யும்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாது நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ! 8.4.2
1680:
விண்ட மலரெல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
அண்ட முதல்வன்* அமரர்கள் எல்லாரும்,*
கண்டு வணங்கும்* கண்ணபுரத்து எம்பெருமான்*
வண்டு நறுந்துழாய்* வந்தூதாய் கோல்தும்பீ! 8.4.3
1681:
நீர் மலிகின்றது ஓர்* மீனாய் ஓர் ஆமையுமாய்,*
சீர் மலிகின்றது ஓர்* சிங்க உருவாகி,*
கார்மலி வண்ணன்* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தார்மலி தண்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ! 8.4.4
1682:
ஏரார் மலரெல்லாம்* ஊதி நீ என்பெறுதி,?*
பாரார் உலகம் பரவப்* பெருங்கடலுள்,*
காராமை ஆன* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாரார் நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ! 8.4.5
1683:
மார்வில் திருவன்* வலனேந்து சக்கரத்தன்,*
பாரைப் பிளந்த* பரமன் பரஞ்சோதி,*
காரில் திகழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
தாரில் நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ! 8.4.6
1684:
வாமனன் கற்கி* மதுசூதன் மாதவன்*
தார்மன்னு* தாசரதியாய தடமார்வன்,*
காமன்தன் தாதை* கண்ணபுரத்து எம்பெருமான்,*
தாம நறுந்துழாய்* தாழ்ந்தூதாய் கோல்தும்பீ! 8.4.7
1685:
நீல மலர்கள்* நெடுநீர் வயல் மருங்கில்,*
சால மலரெல்லாம்* ஊதாதே,* வாளரக்கர்-
காலன்* கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,*
கோல நறுந்துழாய்* கொண்åதாய் கோல்தும்பீ! 8.4.8
1686:
நந்தன் மதலை* நிலமங்கை நல்துணைவன்,*
அந்த முதல்வன்* அமரர்கள் தம்பெருமான்,*
கந்தம் கமழ்* காயா வண்ணன் கதிர்முடிமேல்,*
கொந்து நறுந்துழாய்* கொண்åதாய் கோல்தும்பீ! 8.4.9
1687:##
வண்டு அமரும் சோலை* வயலாலி நல்நாடன்,*
கண்டசீர் வென்றிக்* கலியன் ஒலிமாலை,*
கொண்டல் நிறவண்ணன்* கண்ண புரத்தானை,*
தொண்டரோம் பாட* நினைந்தூதாய் கோல்தும்பீ! (2) 8.4.10
ஐந்தாம் திருமொழி
1688:##
தந்தை காலில் விலங்கற* வந்து தோன்றிய தோன்றல்பின்,* தமியேன் தன்-
சிந்தை போயிற்றுத்* திருவருள் அவனிடைப் பெறுமளவு இருந்தேனை,*
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர்* அவைசுட அதேனாடும்,*
மந்த மாருதம் வனமுலை தடவந்து* வலிசெய்வது ஒழியாதே! (2) 8.5.1
1689:
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்* வரைபுரை திருமார்பில்,*
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்* தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது* ஒளியவன் விசும்பியங்கும்,*
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன* செய்வது ஒன்று அறியேனே! 8.5.2
1690:
ஆயன் மாயமே அன்றி மற்றென்கையில்* வளைகளும் இறைநில்லா,*
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை* நம் பெண்ணுயிர்க்கு இரங்குமோ,*
தூய மாமதிக் கதிர்ச்சுடத்துணையில்லை* இணைமுலை வேகின்றதால்,*
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்* அஞ்சேல் என்பார் இலையே!
1691:
கயம்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல்* கழல்மன்னர் பெரும்போரில்,*
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்* வந்திலன், மறிகடல்நீர்*
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும்* தழல் முகந்து இளமுலைமேல்,*
இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை* எனக்கெனப் பெறலாமே!
1692:
ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத்து* இலங்கையை மலங்குவித்த-
ஆழியான்,* நமக்கு அருளிய அருளொடும்* பகலெல்லை கழிகின்றதால்,*
தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணையில்லை* சுடர்படு முதுநீரில்,*
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர்* அந்தி வந்து அடைகின்றதே! 8.5.5
1693:
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட* முழங்கழல் எரியம்பின்,*
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும்* வந்திலன் என்செய்கேன்,*
எரியும் வெங்கதிர் துயின்றது* பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
கரிய நாழிகை ஊழியில் பெரியன* கழியுமாறு அறியேனே! 8.5.6
1694:
கலங்க மாக்கடல் கடைந்தடைத்து* இலங்கையர் கோனது வரையாகம்,-
மலங்க* வெஞ்சமத்து அடுசரம் துரந்த* எம் அடிகளும் வாரானால்,*
இலங்கு வெங்கதிர் இளமதி அதனொடும்* விடைமணி யடும்,* ஆயன்-
விலங்கல் வேயினது ஓசையுமாய்* இனி விளைவது ஒன்றறியேனே! 8.5.7
1695:
முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்* முனிவனும் முனிவெய்தி,*
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய* மைந்தனும் வாரானால்,*
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை* அடங்க அஞ்சிறைகோலி,*
தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதோர்* கொடுவினை அறியேனே! 8.5.8
1696:
கனஞ்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்* கனவினில் அவன்தந்த,*
மனஞ்செய் இன்பம்வந்து உள்புக எள்கி* என் வளைநெக இருந்தேனை,*
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசை* என் சிந்தையைச் சிந்துவிக்கும்,*
அனந்தல் அன்றிலின் அரிகுரல்* பாவியேன் ஆவியை அடுகின்றதே! 8.5.9
1697:##
வார்கொள் மென்முலை மடந்தையர்* தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை* அறிந்துமுன் உரைசெய்த,*
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்* கலிகன்றி ஒலிவல்லார்,*
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு* இமையவரொடும் கூடுவரே! (2) 8.5.10
ஆறாம் திருமொழி
1698:##
தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்* துளங்கா அரக்கர் துளங்க,* முன்-
திண்தோள் நிமிரச் சிலைவளையச்* சிறிதே முனிந்த திருமார்பன்,*
வண்டார் கூந்தல் மலர்மங்கை* வடிக்கண் மடந்தை மாநோக்கம்-
கண்டான்,* கண்டு கொண்டுகந்த* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
1699:
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்* பொன்ற அன்று புள்ðர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரளப்* பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை*
இருந்தார் தம்மையுடன் கொண்டு* அங்கு எழிலார் பிலத்துப்புக் கொளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.2
1700:##
வல்லி யிடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெஞ்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்லாளரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியை*
கல்விச் சிலையால் காத்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2) 8.6.3
1701:
மல்லை முந்நீர் அதர்பட* வரிவெஞ் சிலைகால் வளைவித்து*
கொல்லை விலங்கு பணிசெய்யக்* கொடியோன் இலங்கை புகலுற்று*
தொல்லை மரங்கள் புகப்பெய்து* துவலை நிமிர்ந்து வானணவ*
கல்லால் கடலை அடைத்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.4
1702:
ஆமையாகி அரியாகி* அன்னமாகி,* அந்தணர்தம்-
ஓமமாகி ஊழியாகி* உலகு சூழ்ந்த நெடும்புணரி*
சேமமதிள் சூழிலங்கைக்கோன்* சிரமும் கரமும் துணித்து,* முன்-
காமற் பயந்தான் கருதுமூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.5
1703:
வருந்தாது இரு நீ மடநெஞ்சே* நம்மேல் வினைகள் வாரா,* முன்-
திருந்தா அரக்கர் தென்னிலங்கை* செந்தீ உண்ணச் சிவந்து ஒருநாள்*
பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து* பின்னை மணாளனாகி* முன்-
கருந்தாள் களிறொன்று ஒசித்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.6
1704:
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய்* முதலை தன்னால் அடர்ப்புண்டு*
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய* அதனுக்கு அருள்புரிந்தான்*
அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு* இளையோற்கு அரசை அருளி* முன்-
கலைமாச் சிலையால் எய்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7
1705:
மாலாய் மனமே! அருந்துயரில்* வருந்தாது இரு நீ, வலிமிக்க*
காலார் மருதும் காய்சினத்த கழுதும்* கதமாக் கழுதையும்*
மாலார் விடையும் மதகரியும்* மல்லர் உயிரும் மடிவித்து*
காலால் சகடம் பாய்ந்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.8
1706:
குன்றால் மாரி பழுதாக்கிக்* கொடியேர் இடையாள் பொருட்டாக*
வன்தாள் விடையேழ் அன்றடர்த்த* வானோர் பெருமான் மாமாயன்*
சென்றான் தூது பஞ்சவர்க்காய்* திரிகாற் சகடம் சினமழித்து*
கன்றால் விளங்கா எறிந்தானூர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.9
1707:##
கருமா முகில்தோய் நெடுமாட* கண்ணபுரத்து எம் அடிகளை*
திருமா மகளால் அருள்மாரி* செழு நீராலி வளநாடன்*
மருவார் புயற்கைக் கலிகன்றி* மங்கை வேந்தன் ஒலிவல்லார்*
இருமா நிலத்துக்கு அரசாகி* இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. (2)
ஏழாம் திருமொழி
1708:##
வியமுடை விடையினம்* உடைதர மடமகள்*
குயமிடை தடவரை* அகலமது உடையவர்*
நயமுடை நடையனம்* இளையவர் நடைபயில்*
கயமிடை கணபுரம்* அடிகள்தம் இடமே. (2) 8.7.1
1709:
இணைமலி மருதினொடு* எருதிற இகல்செய்து*
துணைமலி முலையவள்* மணமிகு கலவியுள்*
மணமலி விழவினொடு* அடியவர் அளவிய*
கணமலி கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.2
1710:
புயலுறு வரைமழை* பொழிதர மணிநிரை*
மயலுற வரைகுடை* எடுவிய நெடியவர்*
முயல்துளர் மிளைமுயல் துள* வள விளைவயல்*
கயல்துளு கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.3
1711:##
ஏதலர் நகைசெய* இளையவர் அளைவெணெய்*
போதுசெய் தமரிய* புனிதர்நல் விரை* மலர்-
கோதிய மதுகரம்* குலவிய மலர்மகள்*
காதல்செய் கணபுரம்* அடிகள்தம் இடமே. (2) 8.7.4
1712:
தொண்டரும் அமரரும்* முனிவரும் தொழுதெழ*
அண்டமொடு அகலிடம்* அளந்தவர் அமர்செய்து*
விண்டவர் பட* மதிளிலங்கை முன்எரியெழ*
கண்டவர் கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.5
1713:
மழுவியல் படையுடை* அவனிடம் மழைமுகில்*
தழுவிய உருவினர்* திருமகள் மருவிய,*
கொழுவிய செழுமலர்* முழுசிய பறவைபண்*
எழுவிய கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.6
1714:
பரிதியொடு அணிமதி* பனிவரை திசைநிலம்*
எரிதியொடு எனவின* இயல்வினர் செலவினர்*
சுருதியொடு அருமறை* முறைசொலும் அடியவர்*
கருதிய கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.7
1715:
படிபுல்கும் அடியிணை* பலர்தொழ மலர்வைகு*
கொடிபுல்கு தடவரை* அகலமது உடையவர்*
முடிபுல்கு நெடுவயல்* படைசெல அடிமலர்*
கடிபுல்கு கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.8
1716:
புலமனு மலர்மிசை* மலர்மகள் புணரிய*
நிலமகளென இன* மகளிர்கள் இவரொடும்*
வலமனு படையுடை* மணிவணர் நிதிகுவை*
கலமனு கணபுரம்* அடிகள்தம் இடமே. 8.7.9
1717:##
மலிபுகழ் கணபுரமுடைய* எம் அடிகளை*
வலிகெழு மதிளயல்* வயலணி மங்கையர்*
கலியன தமிழிவை* விழுமிய விசையினொடு*
ஒலிசொலும் அடியவர்* உறுதுயர் இலரே. (2) 8.7.10
எட்டாம் திருமொழி
1718:##
வானோர் அளவும் முது முந்நீர்* வளர்ந்த காலம்,* வலியுருவில்-
மீனாய் வந்து வியந்து உய்யக்கொண்ட* தண்தாமரைக் கண்ணன்*
ஆனா உருவில் ஆனாயன்* அவனை அம்மா விளைவயலுள்*
கானார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. (2)
1719:
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக* அங்கு ஓர் வரைநட்டு*
இலங்கு சோதியார் அமுதம்* எய்தும் அளவு ஓராமையாய்*
விலங்கல் திரியத் தடங்கடலுள்* சுமந்து கிடந்த வித்தகனை*
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2
1720:
பாரார் அளவும் முது முந்நீர்* பரந்த காலம்,* வளைமருப்பில்-
ஏரார் உருவத்து ஏனமாய்* எடுத்த ஆற்றல் அம்மானை*
கூராரார் அலிரை கருதிக்* குருகு பாயக் கயல் இரியும்*
காரார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3
1721:
உளைந்த அரியும் மானிடமும்* உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து*
விளைந்த சீற்றம் விண்வெதும்ப* வேற்றோன் அகலம் வெஞ்சமத்து*
பிளந்து வளைந்த உகிரானைப்* பெருந்தண் செந்நெல் குலைதடிந்து*
களஞ்செய் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.* 8.8.4
1722:
தொழுநீர் வடிவில் குறளுருவாய்* வந்து தோன்றி மாவலிபால்*
முழுநீர் வையம் முன்கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப* ஒருபால் முல்லை முகையோடும்*
கழுநீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5
1723:
வடிவாய் மழுவே படையாக* வந்து தோன்றி மூவெழுகால்*
படியார் அரசு களைகட்ட* பாழி யானை அம்மானை*
குடியா வண்டு கொண்டுண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
கடியார் புறவில் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6
1724:
வையம் எல்லாம் உடன்வணங்க* வணங்கா மன்னனாய்த் தோன்றி*
வெய்ய சீற்றக் கடியிலங்கை* குடிகொண்டு ஓட வெஞ்சமத்து*
செய்த வெம்போர் நம்பரனைச்* செழுந்தண் கானல் மணநாறும்*
கைதை வேலிக் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7
1725:
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்* ஒருபால் தோன்றத் தான்தோன்றி*
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்* விண்பால் செல்ல வெஞ்சமத்து*
செற்ற கொற்றத் தொழிலானைச்* செந்தீ மூன்றும் இல்லிருப்ப*
கற்ற மறையோர் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8
1726:
துவரிக் கனிவாய் நிலமங்கை* துயர்தீர்ந்து உய்யப் பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற* இருள்நாள் பிறந்த அம்மானை*
உவரி யோதம் முத்துந்த* ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9
1727:##
மீனோடு ஆமைகேழல் அரிகுறளாய்* முன்னும் இராமனாய்த் தானாய்*
பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க்* கற்கியும் ஆனான் தன்னை*
கண்ணபுரத்து அடியன்* கலியன் ஒலிசெய்த*
தேனார் இன்சொல் தமிழ்மாலை* செப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10
ஒன்பதாம் திருமொழி
1728:##
கைம்மான மதயானை* இடர்தீர்த்த கருமுகிலை*
மைம்மான மணியை* அணிகொள் மரகதத்தை*
எம்மானை எம்பிரானை ஈசனை* என்மனத்துள்-
அம்மானை* அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. (2) 8.9.1
1729:
தருமான மழைமுகிலைப்* பிரியாது தன்னடைந்தார்*
வருமானம் தவிர்க்கும்* மணியை அணியுருவில்*
திருமாலை அம்மானை* அமுதத்தைக் கடற்கிடந்த-
பெருமானை* அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 8.9.2
1730:
விடையேழ் அன்றடர்த்து* வெகுண்டு விலங்கலுற*
படையால்ஆழி தட்ட* பரமன் பரஞ்சோதி*
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ்* கண்ணபுரமொன்று-
உடையானுக்கு* அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? 8.9.3
1731:##
மிக்கானை* மறையாய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானைப்* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானைக் கடிகை* தடங்குன்றின் மிசையிருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2) 8.9.4
1732:
வந்தாய் என்மனத்தே* வந்துநீ புகுந்தபின்னை,*
எந்தாய்! போயறியாய்* இதுவே அமையாதோ*
கொந்தார் பைம்பொழில்சூழ்* குடந்தைக் கிடந்துகந்த-
மைந்தா,* உன்னைஎன்றும்* மறவாமைப் பெற்றேனே. 8.9.5
1733:
எஞ்சா வெந்நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேலென்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே! நீநினையாது* இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
மஞ்சார் மாளிகைசூழ்* வயலாலி மைந்தனையே. 8.9.6
1734:
பெற்றார் பெற்றொழிந்தார்* பின்னும்நின்று அடியேனுக்கு*
உற்றானாய் வளர்த்து* என்னுயிராகி நின்றானை*
முற்றா மாமதிகோள் விடுத்தானை* எம்மானை*
எத்தால் யான்மறக்கேன்* இதுசொல்என் ஏழைநெஞ்சே! 8.9.7
1735:
கற்றார் பற்றறுக்கும்* பிறவிப் பெருங்கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்தபின்னை*
வற்றா நீர்வயல்சூழ்* வயலாலி அம்மானைப்-
பெற்றேன்* பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே. 8.9.8
1736:
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்க மேல்திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெஞ்சுடரை*
கண்ணாரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ? 8.9.9
1737:##
செருநீர வேல்வலவன்* கலிகன்றி மங்கையர்கோன்*
கருநீர் முகில்வண்ணன்* கண்ண புரத்தானை*
இருநீரின் தமிழ்* இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்*
வருநீர் வையம்உய்ய* இவைபாடி ஆடுமினே. (2) 8.9.10
பத்தாம் திருமொழி
1738:##
வண்டார்பூ மாமலர் மங்கை* மணநோக்கம் உண்டானே*
உன்னை உகந்துகந்து* உன்தனக்கே தொண்டானேற்கு*
என்செய்கின்றாய் சொல்லு* நால்வேதம் கண்டானே*
கண்ணபுறத்து உறை அம்மானே! (2) 8.10.1
1739:
பெருநீரும் விண்ணும்* மலையும் உலகேழும்*
ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய* நின்னை அல்லால்*
வருதேவர் மற்றுளர் என்று* என்மனத்து இறையும்-
கருதேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.2
1740:##
மற்றும் ஓர்தெய்வம் உளதென்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்னடியார்க்கு அடிமை*
மற்றெல்லாம் பேசிலும்* நின்திரு எட்டெழுத்தும்-
கற்று* நான் கண்ணபுரத்து உறை அம்மானே! (2) 8.10.3
1741:
பெண்ணானாள்* பேரிளங் கொங்கையினார் அழல்போல்,*
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை* உகந்தேன்நான்*
மண்ணாளா! வாள்நெடுங் கண்ணி* மதுமலராள்-
கண்ணாளா* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.4
1742:
பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*
மற்றாரும் பற்றிலேன்* ஆதலால் நின்னடைந்தேன்*
உற்றானென்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*
கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.5
1743:
ஏத்திஉன் சேவடி* எண்ணி இருப்பாரை*
பார்த்திருந்து அங்கு* நமன்தமர் பற்றாது*
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று* தொடாமைநீ,-
காத்திபோல்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.6
1744:
வெள்ளைநீர் வெள்ளத்து* அணைந்த அரவணைமேல்*
துள்ளுநீர் மெள்ளத்* துயின்ற பெருமானே*
வள்ளலே! உன்தமர்க்கு என்றும்* நமன்தமர்-
கள்ளர்போல்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.7
1745:
மாணாகி* வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
பூணாகம் கீண்டதுவும்* ஈண்டு நினைந்திருந்தேன்*
பேணாத வல்வினையேன்* இடர் எத்தனையும்-
காணேன்நான்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.8
1746:
நாட்டினாய் என்னை* உனக்குமுன் தொண்டாக*
மாட்டினேன் அத்தனையே கொண்டு* என் வல்வினையை*
பாட்டினால் உன்னை* என் நெஞ்சத்து இருந்தமை-
காட்டினாய்* கண்ணபுரத்து உறை அம்மானே! 8.10.9
1747:##
கண்டசீர்க்* கண்ணபுரத்து உறை அம்மானை*
கொண்டசீர்த் தொண்டன்* கலியன் ஒலிமாலை*
பண்டமாய்ப் பாடும்* அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
அண்டம்போய் ஆட்சி* அவர்க்கு அது அறிந்தோமே. (2) 8.10.10