பெரிய திருமொழி ஏழாம் பத்து


ஏழாம் பத்து

 

முதல் திருமொழி

 

1548:##

கறவா மடநாகு * தன் கன்று உள்ளினாற்போல்*

மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*

நறவார் பொழில்சூழ்* நறையூர் நின்ற நம்பி*

பிறவாமை எனைப்பணி* எந்தை பிரானே!*. (2) 7.1.1

 

1549:

வற்றாமுது நீரொடு* மால்வரை ஏழும்*

துற்றாக முன்துற்றிய* தொல்புகழோனே*

அற்றேன் அடியேன் * உன்னையே அழைக்கின்றேன்*

பெற்றேன் அருள்தந்திடு* என் எந்தை பிரானே!*.       7.1.2

 

1550:

தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*

ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*

காரேய் கடலே மலையே* திருக்கோட்டியூரே*

உகந்தாயை * உகந்து அடியேனே*.                  7.1.3

 

1551:

புள்வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*

உள்ளே நின்று* என்னுள்ளம் குளிரும் ஒருவா!*

கள்வா! * கடன்மல்லைக் கிடந்த கரும்பே*

வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*.        7.1.4

 

1552:

வில்லேர் நுதல் * வேல் நெடுங்கண்ணியும் நீயும்*

கல்லார் கடுங்கானம்* திரிந்த களிறே*

நல்லாய் நர நாரணனே!* எங்கள்நம்பி*

சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழுமாறே*.        7.1.5

 

1553:

பணியேய் பரங்குன்றின்* பவளத் திரளே*

முனியே* திருமூழிக்களத்து விளக்கே*

இனியாய தொண்டரோம்* பருகு இன்னமுதாய கனியே*

உன்னைக்கண்டு கொண்டு* உய்ந்தொழிந்தேனே*.                7.1.6

 

1554:

கதியே லில்லை* நின்னருளல்லது எனக்கு*

நிதியே!* திருநீர்மலை நித்திலத்தொத்தே*

பதியே பரவித்தொழும் * தொண்டர் தமக்குக்கதியே*

உன்னைக்கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே*       7.1.7

 

1555:

அத்தா! அரியே!என்று* உன்னை அழைக்க*

பித்தா வென்று பேசுகின்றார்* பிறர் என்னை*

முத்தே! மணிமாணிக்கமே!* முளைக்கின்ற வித்தே*

உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!*                                            7.1.8

 

 

1556:

தூயாய்! சுடர்மாமதி போல் * உயிர்க்கெல்லாம் *

தாயாய் அளிக்கின்ற* தண் தாமரைக்கண்ணா!*

ஆயா! அலை நீருலகேழும்* முன்னுண்ட வாயா*

உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*                                         7.1.9

 

1557:##

வண்டார் பொழில்சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-

தொண்டாய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*

தொண்டீர்! இவைபாடுமின் * பாடி நின்றாட*

உண்டே விசும்பு* உந்தமக்கு இல்லை துயரே*  (2)       7.1.10

 

இரண்டாம் திருமொழி

 

1558:##

புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து* என்னை உள்ளங்கொண்ட-

கள்வா!என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*

உள்ளே நின்றுருகி* நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால்*

நள்ளேன் உன்னையல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!* (2)  7.2.1

 

1559:

ஓடா வாளரியின் * உருவாய் மருவி* என் தன்-

மாடே வந்து * அடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா*

பாடேன் தொண்டர் தம்மை * கவிதைப் பனுவல் கொண்டு*

நாடேன் உன்னையல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ!*.     7.2.2

 

1560:

எம்மானும் எம்மனையும்* என்னைப் பெற்றொழிந்த தற்பின்*

அம்மானும் அம்மனையும்* அடியேனுக்காகி நின்ற*

நன்மான வொண்சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-

மைம்மான வண்ணமல்லால்* மகிழ்ந்து ஏத்த மாட்டேனே*.      7.2.3

 

1561:

சிறியாய் ஓர் பிள்ளையுமாய்* உலகுண்டு ஓராலிலை மேல்

உறைவாய்* என்நெஞ்சினுள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*

அறியாதிருந்து அறியேன்* அடியேன் அணி வண்டுகிண்டும்*

நறைவாரும் பொழில்சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*.    7.2.4

 

1562:

நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பரிதால்*

ஆண்டாயென்று ஆதரிக்கப் படுவாய்க்கு* நான் அடிமை பூண்டேன்*

என் நெஞ்சினுள்ளே* புகுந்தாயைப் போகலொட்டேன்*

நாண்தாண் உனக்கொழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*.7.2.5   

 

1563:

எந்தாதை தாதை அப்பால்* எழுவர் பழவடிமை வந்தார்*

என் நெஞ்சினுள்ளே* வந்தாயைப் போகலொட்டேன்*

அந்தோ! என்னாருயிரே!* அரசே! அருள் எனக்கு*

நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*.7.2.6     

 

1564:

மன்னஞ்ச ஆயிரந்தோள்* மழுவில் துணித்த மைந்தா*

என்நெஞ்சத் துள்ளிருந்து* இங்கு இனிப்போய்ப் பிறரொருவர்*

வன்னெஞ்சம் புக்கிருக்க ஒட்டேன்* வளைத்துவைத்தேன்*

நன்னெஞ்ச வன்னமன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*.                             7.2.7

 

 

1565:

எப்போதும் பொன் மலரிட்டு *இமையோர் தொழுது* தங்கள்-

கைப்போது கொண்டு இறைஞ்சிக்* கழல்மேல் வணங்க நின்றாய்*

இப்போது என் நெஞ்சினுள்ளே* புகுந்தாயைப் போகலொட்டேன்*

நற்போது வண்டுகிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*.        7.2.8

 

1566:

ஊனேர் ஆக்கைதன்னை* உழந்தோம்பி வைத்தமையால்*

யானாய் என்தனக்காய் * அடியேன் மனம்புகுந்ததேனே!*

தீங்கரும்பின் தெளிவே!* என் சிந்தை தன்னால்*

நானே எய்தப்பெற்றேன்* நறையூர்நின்ற நம்பீயோ!*.       7.2.9

 

1567:##

நன்னீர் வயல் புடைசூழ்* நறையூர்நின்ற நம்பியை*

கன்னீர மால்வரைத்தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*

சொன்னீர சொல்மாலை* சொல்வார்கள்* சூழ்விசும்பில்-

நன்னீர்மையால் மகிழ்ந்து* நெடுந்காலம் வாழ்வாரே*.(2)7.2.10      

 

மூன்றாம் திருமொழி

 

1568:##

சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச்*

  செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் மனமுள் கொண்டு*

என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை*

  மரமேழ் எய்த மைந்தனை*

நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை*

  நான் அடியேன் நறையூர் நின்றநம்பியை*

கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்-

  கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே!*.  (2)      7.3.1

 

1569:

தாய் நினைந்த கன்றேயொக்க*

 என்னையும் தன்னையே நினைக்கச்செய்து*

தான் எனக்காய் நினைந்தருள் செய்யும் அப்பனை*

  அன்று இவ்வையகம் உண்டுமிழ்ந்திட்ட வாயனை*

மகரக்குழைக் காதனை*

  மைந்தனை மதிட்கோவலிடை கழி ஆயனை*

அமரர்க்கு அரியேற்றை*

 என் அன்பனையன்றி ஆதரியேனே*.       7.3.2

 

1570:

வந்த நாள்வந்து என் நெஞ்சிடம் கொண்டான்*

  மற்றோர் நெஞ்சறியான்*

அடியேனுடைச் சிந்தையாய் வந்து*

  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*

கொந்துலாம் பொழில்சூழ் குடந்தைத்தலைக் கோவினை*

  குடமாடிய கூத்தனை*

எந்தையை எந்தை தந்தை தம்மானை*

  எம்பிரானை எத்தால் மறக்கேனே?*.    7.3.3

1571:

உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*

  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய்ச்சென்று*

இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை*

  வம்பார் புனல் காவிரி*

அரங்கமாளி என்னாளி விண்ணாளி*

  ஆழி சூழிலங்கை மலங்கச்சென்று*

சரங்களாண்ட தண்தாமரைக் கண்ணனுக்கன்றி*

  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.      7.3.4

 

1572:

ஆங்கு வெந்நரகத்து அழுந்தும்போது*

  அஞ்சேலென்று அடியேனை அங்கேவந்து தாங்கு*

தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை*

உம்பர்க்கணியாய் நின்ற*

  வேங்கடத்தரியைப் பரிகீறியை*

வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினை*

தேனை நன்பாலினை அன்றி*

  என்மனம் சிந்தை செய்யாதே*.       7.3.5

 

1573:

எட்டனைப் பொழுதாகிலும் *

  என்றும் என் மனத்து அகலாதிருக்கும் புகழ்*

தட்டலர்த்த பொன்னை அலர் கோங்கின்*

  தாழ்பொழில் திருமாலிருஞ்சோலையங்கட்டியை*

கரும்பீன்ற இன் சாற்றை*

  காதலால் மறைநான்கும் முன்னோதிய பட்டனை*

பரவைத் துயிலேற்றை *

  என் பண்பனையன்றிப் பாடல் செய்யேனே*.    7.3.6

 

1574:

பண்ணின் இன்மொழியாழ் நரம்பில் பெற்ற*

  பாலையாகி இங்கே புகுந்து*

என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடங்கொண்டான் *

  கொண்டபின் மறையோர் மனம் தன்னுள் *

விண்ணுளார் பெருமானை எம்மானை *

  வீங்குநீர் மகரம் திளைக்கும் கடல்வண்ணன் *

மாமணி வண்ணண் எம் அண்ணல் *

  வண்ணமே அன்றி வாயுரையாதே *.        7.3.7

 

1575:

இனி எப்பாவம் வந்தெய்தும்? சொல்லீர்*

  எமக்கு இம்மையே அருள் பெற்றமையால்*

அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர்*

  தோற்றத் தொன்னெறியை*

வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*

  பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியை*

காதல் செய்து என்னுள்ளம் கொண்ட  கள்வனை*

  இன்று கண்டு கொண்டேனே *.       7.3.8

 

1576:

என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும் *

  என் மனத்தே இருக்கும் புகழ் *

தஞ்சை யாளியைப் பொன் பெயரோன்*

  நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலேபுரை*

மின் செய்வாளரக்கன் நகர் பாழ்பட*

  சூழ்கடல் சிறைவைத்து இமையோர் தொழும்*

பொன்செய்மால் வரையை மணிக்குன்றினை அன்றி*

  என் மனம் போற்றி யென்னாதே*.    7.3.9

 

1577:##

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்*

  தோன்றல் வாள்கலியன் திருவாலி

நாடன் * நன்னறையூர் நின்றநம்பி தன் *

  நல்ல மாமலர் சேவடி சென்னியில்*

சூடியும் தொழுதும் எழுந்தாடியும்*

  தொண்டர்க்கட்கு அவன் சொன்ன சொல்மாலை*

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்! பாட*

  நும்மிடைப் பாவம் நில்லாவே*.  (2)       7.3.10

 

 

நான்காம் திருமொழி

 

1578:##

கண்சோர வெங்குருதி வந்திழிய* வெந்தழல்போல் கூந்தலாளை*

மண்சேர முலையுண்ட மாமதலாய்!* வானவர்தம் கோவே! என்று*

விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு* மணிமாட மல்கு* செல்வத்-

தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார்*காண்மின் என்தலை மேலாரே*. 

 

1579:

அம்புருவ வரி நெடுங்கண்*அலர்மகளை வரையகலத்தமர்ந்து மல்லல்*

கொம்புருவ விளங்கனிமேல்* இளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்*

வம்பலரும் தண்சோலை* வண்சேறை வானுந்து கோயில் மேய*

எம்பெருமான் தாள்தொழுவார்* எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே*.  

 

1580:

மீதோடி வாளெயிறு மின்னிலக* முன்விலகும் உருவினாளை*

காதோடு கொடிமூக்கன்றுடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*

தாதோடு வண்டலம்பும் * தண்சேறை எம்பெருமான் தாளையேத்தி*

போதோடு புனல்தூவும் புண்ணியரே* விண்ணவரில் பொலிகின்றாரே*     7.4.3

 

1581:

தேராளும் வாளரக்கன்* தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றிவீழ*

போராளும் சிலையதனால்* பொருகணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்

தாராளும் வரைமார்பன்* தண்சேறை எம்பெருமான் உம்பராளும்*

பேராளன் பேரோதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*.        7.4.4

 

1582:

வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்*

முந்திச் சென்றரியுருவாய்* இரணியனை முரணழித்த முதல்வர்க்கல்லால்*

சந்தப்பூ மலர்ச்சோலை* தண்சேறை எம்பெருமான் தாளை* நாளும்-

சிந்திப்பார்க்கு என்னுள்ளம்* தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே*.  

 

1583:

பண்டு ஏனமாய் உலகை அன்றிடந்த* பண்பாளா என்று நின்று*

தொண்டானேன் திருவடியே துணையல்லால்* துணையிலேன் சொல்லுகின்றேன்*

வண்டேந்தும் மலர்ப்புறவில்* வண்சேறை எம்பெருமானடியார் தம்மை*

கண்டேனுக்கு இதுகாணீர்* என்நெஞ்சம் கண்ணிணையும் களிக்குமாறே*.    

 

 

1584:

பைவிரியும் வரியரவில்* படுகடலுள் துயிலமர்ந்த பண்பா! என்றும்*

மைவிரியும் மணிவரைபோல்* மாயவனே! என்றென்றும் வண்டார் நீலம்*

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்* திருவடியை சிந்தித்தேற்கு*

என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்* என் அன்பு தானே*.     

 

1585:

உண்ணாது வெங்கூற்றம்* ஓவாது பாவங்கள் சேரா* மேலை-

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்* மென்தளிர் போலடியினானை*

பண்ணார வண்டியம்பும்* பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை*

கண்ணாரக் கண்டுருகி* கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே*.  7.4.8

 

1586:

கள்ளத்தேன் பொய்யகத்தேனாதலால்* போதொருகால் கவலை யென்னும்*

வெள்ளத்தேற்கு என்கொலோ* விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால்-

தள்ள* தேன் மணநாறும்* தண்சேறை எம்பெருமான் தாளை* நாளும்-

உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்* என்னுள்ளம் உருகுமாறே*. 7.4.9

 

1587:##

பூ மாண் சேர்க்கருங்குழலார் போல்நடந்து* வயல்நின்ற பெடையோடு*

அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்* தண்சேறை அம்மான்தன்னை*

வாமான் தேர்ப்பரகாலன்* கலிகன்றி யொலிமாலை கொண்டு தொண்டீர்*

தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின்* நும் துணைக்கையால் தொழுதுநின்றே*.(2) 7.4.10

 

ஐந்தாம் திருமொழி

 

1588:##

தந்தை காலில் பெருவிலங்கு* தாளவிழ* நள்ளிருட்கண்-

வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*

முந்தி வானம் மழைபொழியும்* மூவாவுருவின் மறையாளர்*

அந்தி மூன்றும் அனலோம்பும்* அணியார் வீதி அழுந்தூரே*.  (2)     

 

1589:

பாரித்தெழுந்த* படைமன்னர் தம்மை மாள* பாரதத்துத்-

தேரில் பாகனாய் ஊர்ந்த* தேவ தேவன் ஊர்போலும்*

நீரில் பணைத்த நெடுவாளைக்கு* அஞ்சிப் போன குருகினங்கள்*

ஆரல் கவுளோடு அருகணையும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.     

 

1590:

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்கிறைவன்* சிரங்கள் ஐயிரண்டும்*

உம்பர் வாளிக்கு இலக்காக* உதிர்த்த வுரவோன் ஊர்போலும்*

கொம்பி லார்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டினங்கள்*

அம்ப ராவும் கண்மடவார்* ஐம்பாலணையும் அழுந்தூரே*.  7.5.3

 

1591:

வெள்ளத்துள் ஓராலிலை மேல்மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-

உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்* போன காதல் பெடையோடும்*

அள்ளல் செறுவில் கயல்நாடும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.7.5.4     

 

1592:

பகலும் இரவும் தானேயாய்ப்* பாரும் விண்ணும் தானேயாய்*

நிகரில் சுடராய் இருளாகி* நின்றார் நின்ற ஊர்போலும்*

துகிலின் கொடியும் தேர்த்துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*

அகிலின் புகையால் முகிலேய்க்கும்* அணியார் வீதி அழுந்தூரே*.    7.5.5

 

1593:

ஏடிலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*

மாடு வந்து என் மனம்புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*

நீடு மாடத் தனிச்சூலம்* போழக் கொண்டல் துளிதூவ*

ஆடல் அரவத் தார்ப்பு ஓவா* அணியார் வீதி அழுந்தூரே*.    7.5.6

 

1594:

மாலைப் புகுந்து மலரணைமேல்* வைகி அடியேன் மனம்புகுந்து* என்-

நீலக் கண்கள் பனிமல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*

வேலைக் கடல்போல் நெடுவீதி* விண்தோய் சுதைவெண் மணிமாடத்து*

ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே*  7.5.7

 

1595:

வஞ்சி மருங்கு லிடைநோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-

நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*

பஞ்சி யன்ன மெல்லடி* நற்பாவைமார்கள்* ஆடகத்தின்-

அஞ்சிலம்பினார்ப்பு ஓவா* அணியார் வீதி அழுந்தூரே*.    7.5.8

 

1596:

என்னைம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*

பொன்னங் கலைகள் மெலிவெய்தப்* போன புனித ஊர்போலும்*

மன்னு முதுநீர் அரவிந்த மலர்மேல்* வரிவண்டு இசைபாட*

அன்னம் பெடையோடு உடனாடும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.7.5.9     

 

1597:##

நெல்லில் குவளை கண்காட்ட* நீரில் குமுதம் வாய்காட்ட*

அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி* அழுந்தூர் நின்றானை*

வல்லிப் பொதும்பில் குயில்கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*

சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்லப் பாவம் நில்லாவே*.  (2)       

 

ஆறாம் திருமொழி

 

1598:##

சிங்கமதாய் அவுணன்* திறலாகம் முன் கீண்டுகந்த*

சங்கமிடத்தானைத்* தழலாழி வலத்தானை*

செங்கமலத் தயனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

அங் கமலக்கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.  (2)        7.6.1

 

1599:

கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*

மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-

ஆ!ஆ! என்றிரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.      7.6.2

 

1600:

உடையானை* ஒலி நீருலகங்கள் படைத்தானை*

விடையானோட அன்று* விறலாழி விசைத்தானை*

அடையார் தென்னிலங்கை அழித்தானை* அணியழுந்தூர்-

உடையானை* அடியேன் அடைந்துய்ந்து போனேனே*.   7.6.3

 

1601:

குன்றால் மாரி தடுத்தவனைக்* குல வேழமன்று-

பொன்றாமை* அதனுக்கருள் செய்த* போரேற்றை*

அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ண அணியழுந்தூர்-

நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*. 7.6.4

 

1602:

கஞ்சனைக் காய்ந்தானைக்* கண்ணமங்கையுள் நின்றானை*

வஞ்சனப் பேய்முலையூடு* உயிர்வாய் மடுத்துண்டானை*

செஞ்சொல் நான்மறையோர்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

அஞ்சனக் குன்றந்தன்னை* அடியேன் கண்டு கொண்டேனே*.      7.6.5

 

1603:

பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*

உரியானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு அரியானை*

அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும் கரியானை*

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே*.    7.6.6

 

1604:

திருவாழ் மார்வன் தன்னைத்* திசை மண்நீர் எரிமுதலா*

உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*

அருவாய் நின்றவனைத்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

கருவார் கற்பகத்தைக்* கண்டுகொண்டு களித்தேனே*. 7.6.7

 

1605:

நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-

முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*

அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*

கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*.  7.6.8

 

1606:##

பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-

வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*

ஆரா இன்னமுதைத்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

காரார் கருமுகிலைக்* கண்டு கொண்டு களித்தேனே*.  (2)      7.6.9

 

1607:##

திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*

அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*

கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*

முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.  (2) 7.6.10

 

 

ஏழாம் திரு மொழி

 

1608:##

திருவுக்கும் திருவாகிய செல்வா!*

  தெய்வத்துக்கரசே! செய்ய கண்ணா*

உருவச் செஞ்சுடராழி வல்லானே!*

  உலகுண்ட ஒருவா! திருமார்பா!*

ஒருவற்காற்றியுய்யும் வகையென்றால்*

  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-

தருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்

  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*.  (2)        7.7.1

 

 

 

1609:

பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*

  பாவை பூமகள் தன்னொடும் உடனே-

வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்*

  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*

  சாமவேதியனே! நெடுமாலே*

அந்தோ! நின்னடியன்றி மற்றறியேன்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.2

 

1610:

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*

  நீண்ட தோளுடையாய்* அடியேனைச்-

செய்யாத உலகத்திடைச் செய்தாய்*

  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

பொய்யால் ஐவர் என் மெய்குடியேறிப்*

  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்*

ஐயா! நின்னடியன்றி மற்றறியேன்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.3

 

1611:

பரனே! பஞ்சவன் பௌழியன் சோழன்*

  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்தேத்தும்-

வரனே!* மாதவனே! மதுசூதா!*

  மற்றோர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

நரனே! நாரணனே! திருநறையூர் நம்பீ!*

எம்பெருமான்! உம்ப ராளும்-

அரனே* ஆதிவராகம் முனானாய்!*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.4

 

1612:

விண்டான் விண்புக வெஞ்சமத்து அரியாய்ப்*

  பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து*

பண்டு ஆனுய்ய ஓர் மால்வரை ஏந்தும்*

  பண்பாளா! பரனே! பவித்திரனே*

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*

  கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்*

அண்டா! நின்னடியன்றி மற்றறியேன்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.5

 

1613:

தோயாவின் தயிர் நெய்யமுது உண்ணச்-

  சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-

தாயால் ஆப்புண்டிருந்து அழுதேங்கும்-

  தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

சேயாய்*  கிரேத திரேத துவாபர-

  கலியுகம்* இவை நான்கும் முனானாய்*

ஆயா! நின்னடியன்றி மற்றறியேன்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.6

 

1614:

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*

  கார்வண்ணா! கடல் போலொளி வண்ணா*

இறுத்திட்டான் விடையேழும் முன்வென்றாய்! *

  எந்தாய்! அந்தரமேழும் உனானாய்*

பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணா*

  போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-

அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.7

 

1615:

நெடியானே! கடியார் கலிநம்பீ!*

  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை*

கடியார் காளையரைவர் புகுந்து*

  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*

  கூறைசோறு இவை தந்து எனக்கருளி*

அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய்!*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.8

 

1616:

கோவாய் ஐவர் என் மெய்குடியேறிக்*

  கூறைசோறு இவைதா வென்று குமைத்துப்-

போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்*

  புனிதா! புட்கொடியாய்! நெடுமாலே*

தீவாய் நாகணையில் துயில்வானே!*

  திருமாலே! இனிச் செய்வதொன்று அறியேன்*

ஆ! ஆ! என்றடியேற்கு இறை இரங்காய்*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*.     7.7.9

 

1617:##

அன்ன மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*

  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானை*

கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-

  ஆலி நாடன்* மங்கைக் குலவேந்தன்*

சொன்னவின் தமிழ் நன்மணிக்கோவை*

  தூய மாலை இவைபத்தும் வல்லார்*

மன்னி மன்னவராய் உலகாண்டு*

  மான வெண்குடைக் கீழ் மகிழ்வாரே*.  (2)       7.7.10

 

எட்டாம் திருமொழி

 

1618:##

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*

  திருவடியினிணை வருட முனிவரேத்த*

வங்கமலி தடங்கடலுள் அனந்தனென்னும்*

  வரியரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்*

எங்குமலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து-

  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*

அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  (2)    7.8.1

 

1619:##

முன் இவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண*

  முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-

பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்*

  பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின்*

செந்நெல் மலிகதிர்க் கவரி வீசச்*

  சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி*

அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர்க்கோவே*.  7.8.2

 

1620:

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்*

  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*

நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ! என்ன*

  நெஞ்சிடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*

மலைத்திகழ் சந்தகில் கனகமணியும் கொண்டு*

  வந்துந்தி வயல்கள் தொறும் மடைகள்பாய*

அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து *

அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*  7.8.3.

 

1621:

சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்*

  திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றியாகி*

இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*

  எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் காண்மின்*

புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க*

  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்களால*

அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.4

 

1622:

சினமேவும் அடலரியின் உருவமாகித்*

  திறல்மேவும் இரணியன தாகம் கீண்டு*

மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-

  மாள* உயிர் வௌவிய எம்மாயோன் காண்மின்*

இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை*

  ஏய்வாய் மரகதம்போல் கிளியினின் சொல்*

அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.5

 

1623:

வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*

  மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி*

தானமர ஏழுலகும் அளந்த வென்றித்*

  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*

தேனமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதிச்*

  செழுமாட மாளிகைகள் கூடந்தோறும்*

ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.6

 

1624:

பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகிப்*

  பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன்*

அந்தமில் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*

  அடுகணையால் எய்துகந்த அம்மான் காண்மின்*

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*

  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*

அந்தணர்தம் ஆகுதியின் புகையார் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.7

 

1625:

கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு-

  பறித்து* மழவிடை யடர்த்துக் குரவை கோத்து*

வம்பவிழும் மலர்க்குழலாளாய்ச்சி வைத்த-

  தயிர்வெண்ணெய்* உண்டுகந்த மாயோன் காண்மின்*

செம்பவள மரதகம் நன் முத்தம் காட்டத்*

  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*

அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.8

 

1626:

ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*

  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*

நீடேறு பெருவலித் தோளுடைய வென்றி*

  நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்*

சேடேறு பொழில்தழுவும் எழில்கொள் வீதித்*

  திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்*

ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*

  அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*.  7.8.9

 

1627:##

பன்றியாய் மீனாகி அரியாய்ப்* பாரைப்-

  படைத்துக் காத்துண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*

அன்று அமரர்க்கதிபதியும் அயனும் சேயும்-

  அடிபணிய* அணியழுந்தூர் நின்ற கோவை*

கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*

  கலிகன்றி யொலிசெய்த இன்பப் பாடல்*

ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும் வல்லார்*

  ஒலிகடல் சூழுலகாளும் உம்பர் தாமே*.  (2)   7.8. 10

 

ஒன்பதாம் திருமொழி

 

1628:##

கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக்கழல் தொழுவீர்*

வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய* கரை யெங்கும்-

தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்-

துள்ளும்* எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளÖரே*.  (2)     7.9.1

 

1629:

தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-

மருவி* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்தடைவீர்*

திருவிற் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*

உருவக் குறளடிகள் அடி* புணர்மின் உணர்வீரே      7.9.2

 

1630:

பறையும் வினைதொழுது உய்ம்மினீர்* பணியும் சிறு தொண்டீர்!*

அறையும் புனல் ஒருபால் * வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

சிறைவண்டின மறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-

உறையும்* இறையடியல்லது* ஒன்று இறையும் அறியேனே*.        7.9.3

 

1631:

வானார் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*

தானாகிய தலைவன் அவன்* அமரர்க்கதிபதியாம்*

தேனார்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து

ஆனாயனது* அடியல்லது* ஒன்று அறியேன் அடியேனே*.       7.9.4

 

1632:

நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-

எந்தாய்! என* இமையோர் தொழுதேத்தும் இடம்* எறிநீர்-

செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அந்தாமரை யடியாய்!* உனதடியேற்கு அருள் புரியே*. 7.9.5

 

1633:

முழுநீலமும் மலராம்பலும்* அரவிந்தமும் விரவி*

கழுநீரொடு மடவாரவர்* கண்வாய் முக மலரும்*

செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*

தொழுநீர் மையதுடையார்* அடி தொழுவார் துயரிலரே*.    7.9.6

 

1634:##

சேயோங்கு * தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-

மாயா* எனக்குரையாய் இது* மறை நான்கினுளாயோ?*

தீயோம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-

தாயோ?* உனதடியார் மனத்தாயோ?* அறியேனே*.  (2)      7.9.7

 

1635:

மையார் வரிநீலம்* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*

உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-

செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஐவாய் அரவணைமேல்* உறை அமலா! அருளாயே*.        7.9.8

 

1636:##

கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*

பெருமால் வரை உருவா!* பிறவுருவா! நினதுருவா!*

திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அருமா கடலமுதே!* உனது அடியே சரணாமே*.  (2)        7.9.9

 

1637:##

சீரார் நெடுமறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஏரார்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*

காரார் வயல் மங்கைக்கிறை* கலியனொலி மாலை*

பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே*.   (2)      7.9.10

 

பத்தாம் திருமொழி

 

1638:

பெரும் புறக்கடலை அடலேற்றினைப்*

  பெண்ணை ஆணை* எண்ணில் முனிவர்க்கருள்-

தருந்தவத்தை முத்தின் திரள் கோவையைப்*

  பத்த ராவியை நித்திலத் தொத்தினை*

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை*

  அமுதம் பொதியின் சுவை*

கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.  (2) 7.10.1

 

1639:

மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும்*

  மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர்சங்குடை*

மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை* மாலை-

  ஆலிலைப் பள்ளி கொள் மாயனை*

நென்னலைப் பகலை இற்றை நாளினை*

  நாளையாய் வரும் திங்களை ஆண்டினை*

கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.2

 

1640:

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*

  வாசவார் குழலாள் மலைமங்கை தன்-

பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்*

  பான்மையைப் பனிமா மதியம் தவழ்*

மங்குலைச் சுடரை வடமாமலை-

  உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-

கங்குலை* பகலைச் சென்று நாடிக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.3

 

1641:

பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்*

  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*

மாயனை மதிள் கோவலிடைகழி மைந்தனை*

  அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*

இலங்கும் சுடர்ச் சோதியை*

  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*

காசினை மணியைச் சென்று நாடிக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.4

 

1642:

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை*

  இம்மையை மறுமைக்கு மருந்தினை,*

ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனைக்*

  கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை*

குரு மாமணிக் குன்றினை*

  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*

காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.5

 

1643:

துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*

  சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை*

திருமங்கை மணாளனைத்*

  தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*

உலகேழினை ஊழியை*

  ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*

கழுநீர் மலரும் வயல்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.6

 

1644:

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*

  தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை*

விளங்கும் சுடர்ச் சோதியை*

  விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*

அரியைப் பரிகீறிய அப்பனை*

  அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*

களி வண்டறையும் பொழில்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.7

 

1645:

வெஞ்சினக் களிற்றை விளங்காய் விழக்*

  கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-

துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*

  தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-

நஞ்சினை* அமுதத்தினை நாதனை*

  நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.8

 

1646:

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*

  பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-

விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*

  வேள்வியை விளக்கினொளி தன்னை*

மண்ணினை மலையை அலை நீரினை*

  மாலை மாமதியை மறையோர் தங்கள்-

கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று*

  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.       7.10.9

 

1647:##

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*

  காதலால் கலி கன்றி உரைசெய்த*

வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*

  வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*

விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*

  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-

கண்ணா!*  நின் தனக்கும் குறிப்பாகில்-

  கற்கலாம்* கவியின் பொருள் தானே*.  (2)        7.10.10