ஏழாம் பத்து
முதல் திருமொழி
1548:##
கறவா மடநாகு * தன் கன்று உள்ளினாற்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவார் பொழில்சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப்பணி* எந்தை பிரானே!*. (2) 7.1.1
1549:
வற்றாமுது நீரொடு* மால்வரை ஏழும்*
துற்றாக முன்துற்றிய* தொல்புகழோனே*
அற்றேன் அடியேன் * உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள்தந்திடு* என் எந்தை பிரானே!*. 7.1.2
1550:
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
காரேய் கடலே மலையே* திருக்கோட்டியூரே*
உகந்தாயை * உகந்து அடியேனே*. 7.1.3
1551:
புள்வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*
உள்ளே நின்று* என்னுள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா! * கடன்மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*. 7.1.4
1552:
வில்லேர் நுதல் * வேல் நெடுங்கண்ணியும் நீயும்*
கல்லார் கடுங்கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள்நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழுமாறே*. 7.1.5
1553:
பணியேய் பரங்குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய தொண்டரோம்* பருகு இன்னமுதாய கனியே*
உன்னைக்கண்டு கொண்டு* உய்ந்தொழிந்தேனே*. 7.1.6
1554:
கதியே லில்லை* நின்னருளல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத்தொத்தே*
பதியே பரவித்தொழும் * தொண்டர் தமக்குக்கதியே*
உன்னைக்கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே* 7.1.7
1555:
அத்தா! அரியே!‘ என்று* உன்னை அழைக்க*
பித்தா வென்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே! மணிமாணிக்கமே!* முளைக்கின்ற வித்தே*
உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!* 7.1.8
1556:
தூயாய்! சுடர்மாமதி போல் * உயிர்க்கெல்லாம் *
தாயாய் அளிக்கின்ற* தண் தாமரைக்கண்ணா!*
ஆயா! அலை நீருலகேழும்* முன்னுண்ட வாயா*
உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?* 7.1.9
1557:##
வண்டார் பொழில்சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டாய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவைபாடுமின் * பாடி நின்றாட*
உண்டே விசும்பு* உந்தமக்கு இல்லை துயரே* (2) 7.1.10
இரண்டாம் திருமொழி
1558:##
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து* என்னை உள்ளங்கொண்ட-
கள்வா!‘ என்றலும்* என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*
உள்ளே நின்றுருகி* நெஞ்சம் உன்னை யுள்ளியக்கால்*
நள்ளேன் உன்னையல்லால்* நறையூர் நின்ற நம்பீயோ!* (2) 7.2.1
1559:
ஓடா வாளரியின் * உருவாய் மருவி* என் தன்-
மாடே வந்து * அடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா*
பாடேன் தொண்டர் தம்மை * கவிதைப் பனுவல் கொண்டு*
நாடேன் உன்னையல்லால் * நறையூர் நின்ற நம்பீயோ!*. 7.2.2
1560:
எம்மானும் எம்மனையும்* என்னைப் பெற்றொழிந்த தற்பின்*
அம்மானும் அம்மனையும்* அடியேனுக்காகி நின்ற*
நன்மான வொண்சுடரே!* நறையூர் நின்ற நம்பீ!* உன்-
மைம்மான வண்ணமல்லால்* மகிழ்ந்து ஏத்த மாட்டேனே*. 7.2.3
1561:
சிறியாய் ஓர் பிள்ளையுமாய்* உலகுண்டு ஓராலிலை மேல்
உறைவாய்* என்நெஞ்சினுள்ளே* உறைவாய் உறைந்ததுதான்*
அறியாதிருந்து அறியேன்* அடியேன் அணி வண்டுகிண்டும்*
நறைவாரும் பொழில்சூழ்* நறையூர் நின்ற நம்பீயோ!*. 7.2.4
1562:
நீண்டாயை வானவர்கள்* நினைந்து ஏத்திக் காண்பரிதால்*
ஆண்டாயென்று ஆதரிக்கப் படுவாய்க்கு* நான் அடிமை பூண்டேன்*
என் நெஞ்சினுள்ளே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நாண்தாண் உனக்கொழிந்தேன்* நறையூர் நின்ற நம்பீயோ!*.7.2.5
1563:
எந்தாதை தாதை அப்பால்* எழுவர் பழவடிமை வந்தார்*
என் நெஞ்சினுள்ளே* வந்தாயைப் போகலொட்டேன்*
அந்தோ! என்னாருயிரே!* அரசே! அருள் எனக்கு*
நந்தாமல் தந்த எந்தாய்!* நறையூர் நின்ற நம்பீயோ!*.7.2.6
1564:
மன்னஞ்ச ஆயிரந்தோள்* மழுவில் துணித்த மைந்தா*
என்நெஞ்சத் துள்ளிருந்து* இங்கு இனிப்போய்ப் பிறரொருவர்*
வன்னெஞ்சம் புக்கிருக்க ஒட்டேன்* வளைத்துவைத்தேன்*
நன்னெஞ்ச வன்னமன்னும்* நறையூர் நின்ற நம்பீயோ!*. 7.2.7
1565:
எப்போதும் பொன் மலரிட்டு *இமையோர் தொழுது* தங்கள்-
கைப்போது கொண்டு இறைஞ்சிக்* கழல்மேல் வணங்க நின்றாய்*
இப்போது என் நெஞ்சினுள்ளே* புகுந்தாயைப் போகலொட்டேன்*
நற்போது வண்டுகிண்டும்* நறையூர் நின்ற நம்பீயோ!*. 7.2.8
1566:
ஊனேர் ஆக்கைதன்னை* உழந்தோம்பி வைத்தமையால்*
யானாய் என்தனக்காய் * அடியேன் மனம்புகுந்ததேனே!*
தீங்கரும்பின் தெளிவே!* என் சிந்தை தன்னால்*
நானே எய்தப்பெற்றேன்* நறையூர்நின்ற நம்பீயோ!*. 7.2.9
1567:##
நன்னீர் வயல் புடைசூழ்* நறையூர்நின்ற நம்பியை*
கன்னீர மால்வரைத்தோள்* கலிகன்றி மங்கையர்கோன்*
சொன்னீர சொல்மாலை* சொல்வார்கள்* சூழ்விசும்பில்-
நன்னீர்மையால் மகிழ்ந்து* நெடுந்காலம் வாழ்வாரே*.(2)7.2.10
மூன்றாம் திருமொழி
1568:##
சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச்*
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் மனமுள் கொண்டு*
என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை*
மரமேழ் எய்த மைந்தனை*
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை*
நான் அடியேன் நறையூர் நின்றநம்பியை*
கனவில் கண்டேன் இன்று கண்டமையால்* என்-
கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே!*. (2) 7.3.1
1569:
தாய் நினைந்த கன்றேயொக்க*
என்னையும் தன்னையே நினைக்கச்செய்து*
தான் எனக்காய் நினைந்தருள் செய்யும் அப்பனை*
அன்று இவ்வையகம் உண்டுமிழ்ந்திட்ட வாயனை*
மகரக்குழைக் காதனை*
மைந்தனை மதிட்கோவலிடை கழி ஆயனை*
அமரர்க்கு அரியேற்றை*
என் அன்பனையன்றி ஆதரியேனே*. 7.3.2
1570:
வந்த நாள்வந்து என் நெஞ்சிடம் கொண்டான்*
மற்றோர் நெஞ்சறியான்*
அடியேனுடைச் சிந்தையாய் வந்து*
தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*
கொந்துலாம் பொழில்சூழ் குடந்தைத்தலைக் கோவினை*
குடமாடிய கூத்தனை*
எந்தையை எந்தை தந்தை தம்மானை*
எம்பிரானை எத்தால் மறக்கேனே?*. 7.3.3
1571:
உரங்களால் இயன்ற மன்னர் மாளப்*
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய்ச்சென்று*
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை*
வம்பார் புனல் காவிரி*
அரங்கமாளி என்னாளி விண்ணாளி*
ஆழி சூழிலங்கை மலங்கச்சென்று*
சரங்களாண்ட தண்தாமரைக் கண்ணனுக்கன்றி*
என் மனம் தாழ்ந்து நில்லாதே*. 7.3.4
1572:
ஆங்கு வெந்நரகத்து அழுந்தும்போது*
அஞ்சேலென்று அடியேனை அங்கேவந்து தாங்கு*
தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை*
உம்பர்க்கணியாய் நின்ற*
வேங்கடத்தரியைப் பரிகீறியை*
வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினை*
தேனை நன்பாலினை அன்றி*
என்மனம் சிந்தை செய்யாதே*. 7.3.5
1573:
எட்டனைப் பொழுதாகிலும் *
என்றும் என் மனத்து அகலாதிருக்கும் புகழ்*
தட்டலர்த்த பொன்னை அலர் கோங்கின்*
தாழ்பொழில் திருமாலிருஞ்சோலையங்கட்டியை*
கரும்பீன்ற இன் சாற்றை*
காதலால் மறைநான்கும் முன்னோதிய பட்டனை*
பரவைத் துயிலேற்றை *
என் பண்பனையன்றிப் பாடல் செய்யேனே*. 7.3.6
1574:
பண்ணின் இன்மொழியாழ் நரம்பில் பெற்ற*
பாலையாகி இங்கே புகுந்து*
என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடங்கொண்டான் *
கொண்டபின் மறையோர் மனம் தன்னுள் *
விண்ணுளார் பெருமானை எம்மானை *
வீங்குநீர் மகரம் திளைக்கும் கடல்வண்ணன் *
மாமணி வண்ணண் எம் அண்ணல் *
வண்ணமே அன்றி வாயுரையாதே *. 7.3.7
1575:
இனி எப்பாவம் வந்தெய்தும்? சொல்லீர்*
எமக்கு இம்மையே அருள் பெற்றமையால்*
அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர்*
தோற்றத் தொன்னெறியை*
வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*
பத்தர் தாம் நுகர்கின்றதோர் கனியை*
காதல் செய்து என்னுள்ளம் கொண்ட கள்வனை*
இன்று கண்டு கொண்டேனே *. 7.3.8
1576:
என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும் *
என் மனத்தே இருக்கும் புகழ் *
தஞ்சை யாளியைப் பொன் பெயரோன்*
நெஞ்சம் அன்று இடந்தவனைத் தழலேபுரை*
மின் செய்வாளரக்கன் நகர் பாழ்பட*
சூழ்கடல் சிறைவைத்து இமையோர் தொழும்*
பொன்செய்மால் வரையை மணிக்குன்றினை அன்றி*
என் மனம் போற்றி யென்னாதே*. 7.3.9
1577:##
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்*
தோன்றல் வாள்கலியன் திருவாலி
நாடன் * நன்னறையூர் நின்றநம்பி தன் *
நல்ல மாமலர் சேவடி சென்னியில்*
சூடியும் தொழுதும் எழுந்தாடியும்*
தொண்டர்க்கட்கு அவன் சொன்ன சொல்மாலை*
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்! பாட*
நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2) 7.3.10
நான்காம் திருமொழி
1578:##
கண்சோர வெங்குருதி வந்திழிய* வெந்தழல்போல் கூந்தலாளை*
மண்சேர முலையுண்ட மாமதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு* மணிமாட மல்கு* செல்வத்-
தண்சேறை எம்பெருமான் தாள்தொழுவார்*காண்மின் என்தலை மேலாரே*.
1579:
அம்புருவ வரி நெடுங்கண்*அலர்மகளை வரையகலத்தமர்ந்து மல்லல்*
கொம்புருவ விளங்கனிமேல்* இளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்*
வம்பலரும் தண்சோலை* வண்சேறை வானுந்து கோயில் மேய*
எம்பெருமான் தாள்தொழுவார்* எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே*.
1580:
மீதோடி வாளெயிறு மின்னிலக* முன்விலகும் உருவினாளை*
காதோடு கொடிமூக்கன்றுடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*
தாதோடு வண்டலம்பும் * தண்சேறை எம்பெருமான் தாளையேத்தி*
போதோடு புனல்தூவும் புண்ணியரே* விண்ணவரில் பொலிகின்றாரே* 7.4.3
1581:
தேராளும் வாளரக்கன்* தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றிவீழ*
போராளும் சிலையதனால்* பொருகணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்
தாராளும் வரைமார்பன்* தண்சேறை எம்பெருமான் உம்பராளும்*
பேராளன் பேரோதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*. 7.4.4
1582:
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்றரியுருவாய்* இரணியனை முரணழித்த முதல்வர்க்கல்லால்*
சந்தப்பூ மலர்ச்சோலை* தண்சேறை எம்பெருமான் தாளை* நாளும்-
சிந்திப்பார்க்கு என்னுள்ளம்* தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே*.
1583:
பண்டு ஏனமாய் உலகை அன்றிடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டானேன் திருவடியே துணையல்லால்* துணையிலேன் சொல்லுகின்றேன்*
வண்டேந்தும் மலர்ப்புறவில்* வண்சேறை எம்பெருமானடியார் தம்மை*
கண்டேனுக்கு இதுகாணீர்* என்நெஞ்சம் கண்ணிணையும் களிக்குமாறே*.
1584:
பைவிரியும் வரியரவில்* படுகடலுள் துயிலமர்ந்த பண்பா! என்றும்*
மைவிரியும் மணிவரைபோல்* மாயவனே! என்றென்றும் வண்டார் நீலம்*
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்* திருவடியை சிந்தித்தேற்கு*
என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்* என் அன்பு தானே*.
1585:
உண்ணாது வெங்கூற்றம்* ஓவாது பாவங்கள் சேரா* மேலை-
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்* மென்தளிர் போலடியினானை*
பண்ணார வண்டியம்பும்* பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னை*
கண்ணாரக் கண்டுருகி* கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே*. 7.4.8
1586:
கள்ளத்தேன் பொய்யகத்தேனாதலால்* போதொருகால் கவலை யென்னும்*
வெள்ளத்தேற்கு என்கொலோ* விளைவயலுள் கருநீலம் களைஞர் தாளால்-
தள்ள* தேன் மணநாறும்* தண்சேறை எம்பெருமான் தாளை* நாளும்-
உள்ளத்தே வைப்பாருக்கு இதுகாணீர்* என்னுள்ளம் உருகுமாறே*. 7.4.9
1587:##
பூ மாண் சேர்க்கருங்குழலார் போல்நடந்து* வயல்நின்ற பெடையோடு*
அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்* தண்சேறை அம்மான்தன்னை*
வாமான் தேர்ப்பரகாலன்* கலிகன்றி யொலிமாலை கொண்டு தொண்டீர்*
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின்* நும் துணைக்கையால் தொழுதுநின்றே*.(2) 7.4.10
ஐந்தாம் திருமொழி
1588:##
தந்தை காலில் பெருவிலங்கு* தாளவிழ* நள்ளிருட்கண்-
வந்த எந்தை பெருமானார்* மருவி நின்ற ஊர்போலும்*
முந்தி வானம் மழைபொழியும்* மூவாவுருவின் மறையாளர்*
அந்தி மூன்றும் அனலோம்பும்* அணியார் வீதி அழுந்தூரே*. (2)
1589:
பாரித்தெழுந்த* படைமன்னர் தம்மை மாள* பாரதத்துத்-
தேரில் பாகனாய் ஊர்ந்த* தேவ தேவன் ஊர்போலும்*
நீரில் பணைத்த நெடுவாளைக்கு* அஞ்சிப் போன குருகினங்கள்*
ஆரல் கவுளோடு அருகணையும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.
1590:
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்கிறைவன்* சிரங்கள் ஐயிரண்டும்*
உம்பர் வாளிக்கு இலக்காக* உதிர்த்த வுரவோன் ஊர்போலும்*
கொம்பி லார்ந்த மாதவிமேல்* கோதி மேய்ந்த வண்டினங்கள்*
அம்ப ராவும் கண்மடவார்* ஐம்பாலணையும் அழுந்தூரே*. 7.5.3
1591:
வெள்ளத்துள் ஓராலிலை மேல்மேவி* அடியேன் மனம் புகுந்து* என்-
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்* நின்றார் நின்ற ஊர்போலும்*
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்* போன காதல் பெடையோடும்*
அள்ளல் செறுவில் கயல்நாடும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.7.5.4
1592:
பகலும் இரவும் தானேயாய்ப்* பாரும் விண்ணும் தானேயாய்*
நிகரில் சுடராய் இருளாகி* நின்றார் நின்ற ஊர்போலும்*
துகிலின் கொடியும் தேர்த்துகளும்* துன்னி மாதர் கூந்தல்வாய்*
அகிலின் புகையால் முகிலேய்க்கும்* அணியார் வீதி அழுந்தூரே*. 7.5.5
1593:
ஏடிலங்கு தாமரைபோல்* செவ்வாய் முறுவல் செய்தருளி*
மாடு வந்து என் மனம்புகுந்து* நின்றார் நின்ற ஊர்போலும்*
நீடு மாடத் தனிச்சூலம்* போழக் கொண்டல் துளிதூவ*
ஆடல் அரவத் தார்ப்பு ஓவா* அணியார் வீதி அழுந்தூரே*. 7.5.6
1594:
மாலைப் புகுந்து மலரணைமேல்* வைகி அடியேன் மனம்புகுந்து* என்-
நீலக் கண்கள் பனிமல்க* நின்றார் நின்ற ஊர்போலும்*
வேலைக் கடல்போல் நெடுவீதி* விண்தோய் சுதைவெண் மணிமாடத்து*
ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும்* வீதி அழுந்தூரே* 7.5.7
1595:
வஞ்சி மருங்கு லிடைநோவ* மணந்து நின்ற கனவகத்து* என்-
நெஞ்சு நிறையக் கைகூப்பி* நின்றார் நின்ற ஊர்போலும்*
பஞ்சி யன்ன மெல்லடி* நற்பாவைமார்கள்* ஆடகத்தின்-
அஞ்சிலம்பினார்ப்பு ஓவா* அணியார் வீதி அழுந்தூரே*. 7.5.8
1596:
என்னைம்புலனும் எழிலும் கொண்டு* இங்கே நெருநல் எழுந்தருளி*
பொன்னங் கலைகள் மெலிவெய்தப்* போன புனித ஊர்போலும்*
மன்னு முதுநீர் அரவிந்த மலர்மேல்* வரிவண்டு இசைபாட*
அன்னம் பெடையோடு உடனாடும்* அணியார் வயல்சூழ் அழுந்தூரே*.7.5.9
1597:##
நெல்லில் குவளை கண்காட்ட* நீரில் குமுதம் வாய்காட்ட*
அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி* அழுந்தூர் நின்றானை*
வல்லிப் பொதும்பில் குயில்கூவும்* மங்கை வேந்தன் பரகாலன்*
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை* சொல்லப் பாவம் நில்லாவே*. (2)
ஆறாம் திருமொழி
1598:##
சிங்கமதாய் அவுணன்* திறலாகம் முன் கீண்டுகந்த*
சங்கமிடத்தானைத்* தழலாழி வலத்தானை*
செங்கமலத் தயனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அங் கமலக்கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*. (2) 7.6.1
1599:
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ!ஆ! என்றிரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*. 7.6.2
1600:
உடையானை* ஒலி நீருலகங்கள் படைத்தானை*
விடையானோட அன்று* விறலாழி விசைத்தானை*
அடையார் தென்னிலங்கை அழித்தானை* அணியழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்துய்ந்து போனேனே*. 7.6.3
1601:
குன்றால் மாரி தடுத்தவனைக்* குல வேழமன்று-
பொன்றாமை* அதனுக்கருள் செய்த* போரேற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ண அணியழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*. 7.6.4
1602:
கஞ்சனைக் காய்ந்தானைக்* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய்முலையூடு* உயிர்வாய் மடுத்துண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அஞ்சனக் குன்றந்தன்னை* அடியேன் கண்டு கொண்டேனே*. 7.6.5
1603:
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரியானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு அரியானை*
அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும் கரியானை*
அடியேன் கண்டு கொண்டு களித்தேனே*. 7.6.6
1604:
திருவாழ் மார்வன் தன்னைத்* திசை மண்நீர் எரிமுதலா*
உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*
அருவாய் நின்றவனைத்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
கருவார் கற்பகத்தைக்* கண்டுகொண்டு களித்தேனே*. 7.6.7
1605:
நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-
முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*
அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*
கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*. 7.6.8
1606:##
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதைத்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலைக்* கண்டு கொண்டு களித்தேனே*. (2) 7.6.9
1607:##
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*. (2) 7.6.10
ஏழாம் திரு மொழி
1608:##
திருவுக்கும் திருவாகிய செல்வா!*
தெய்வத்துக்கரசே! செய்ய கண்ணா*
உருவச் செஞ்சுடராழி வல்லானே!*
உலகுண்ட ஒருவா! திருமார்பா!*
ஒருவற்காற்றியுய்யும் வகையென்றால்*
உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து* ஒழியாது-
தருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*. (2) 7.7.1
1609:
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*
பாவை பூமகள் தன்னொடும் உடனே-
வந்தாய்* என் மனத்தே மன்னி நின்றாய்*
மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*
சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*
சாமவேதியனே! நெடுமாலே*
அந்தோ! நின்னடியன்றி மற்றறியேன்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.2
1610:
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*
நீண்ட தோளுடையாய்* அடியேனைச்-
செய்யாத உலகத்திடைச் செய்தாய்*
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*
பொய்யால் ஐவர் என் மெய்குடியேறிப்*
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்*
ஐயா! நின்னடியன்றி மற்றறியேன்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.3
1611:
பரனே! பஞ்சவன் பௌழியன் சோழன்*
பார்மன்னர் மன்னர் தாம் பணிந்தேத்தும்-
வரனே!* மாதவனே! மதுசூதா!*
மற்றோர் நல்துணை நின்னலால் இலேன்காண்*
நரனே! நாரணனே! திருநறையூர் நம்பீ!*
எம்பெருமான்! உம்ப ராளும்-
அரனே* ஆதிவராகம் முனானாய்!*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.4
1612:
விண்டான் விண்புக வெஞ்சமத்து அரியாய்ப்*
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து*
பண்டு ஆனுய்ய ஓர் மால்வரை ஏந்தும்*
பண்பாளா! பரனே! பவித்திரனே*
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*
கருமமாவதும் என்தனக்கு அறிந்தேன்*
அண்டா! நின்னடியன்றி மற்றறியேன்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.5
1613:
தோயாவின் தயிர் நெய்யமுது உண்ணச்-
சொன்னார்* சொல்லி நகும் பரிசே* பெற்ற-
தாயால் ஆப்புண்டிருந்து அழுதேங்கும்-
தாடாளா!* தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-
சேயாய்* கிரேத திரேத துவாபர-
கலியுகம்* இவை நான்கும் முனானாய்*
ஆயா! நின்னடியன்றி மற்றறியேன்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.6
1614:
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*
கார்வண்ணா! கடல் போலொளி வண்ணா*
இறுத்திட்டான் விடையேழும் முன்வென்றாய்! *
எந்தாய்! அந்தரமேழும் உனானாய்*
பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணா*
போகமே நுகர்வான் புகுந்து* ஐவர்-
அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.7
1615:
நெடியானே! கடியார் கலிநம்பீ!*
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை*
கடியார் காளையரைவர் புகுந்து*
காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*
கூறைசோறு இவை தந்து எனக்கருளி*
அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய்!*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.8
1616:
கோவாய் ஐவர் என் மெய்குடியேறிக்*
கூறைசோறு இவைதா வென்று குமைத்துப்-
போகார்* நான் அவரைப் பொறுக்ககிலேன்*
புனிதா! புட்கொடியாய்! நெடுமாலே*
தீவாய் நாகணையில் துயில்வானே!*
திருமாலே! இனிச் செய்வதொன்று அறியேன்*
ஆ! ஆ! என்றடியேற்கு இறை இரங்காய்*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*. 7.7.9
1617:##
அன்ன மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானை*
கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-
ஆலி நாடன்* மங்கைக் குலவேந்தன்*
சொன்னவின் தமிழ் நன்மணிக்கோவை*
தூய மாலை இவைபத்தும் வல்லார்*
மன்னி மன்னவராய் உலகாண்டு*
மான வெண்குடைக் கீழ் மகிழ்வாரே*. (2) 7.7.10
எட்டாம் திருமொழி
1618:##
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*
திருவடியினிணை வருட முனிவரேத்த*
வங்கமலி தடங்கடலுள் அனந்தனென்னும்*
வரியரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்*
எங்குமலி நிறை புகழ்நால் வேதம்* ஐந்து-
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை*
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. (2) 7.8.1
1619:##
முன் இவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண*
முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்*
பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர்க் கவரி வீசச்*
சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர்க்கோவே*. 7.8.2
1620:
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்*
கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ! என்ன*
நெஞ்சிடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*
மலைத்திகழ் சந்தகில் கனகமணியும் கொண்டு*
வந்துந்தி வயல்கள் தொறும் மடைகள்பாய*
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து *
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே* 7.8.3.
1621:
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்*
திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றியாகி*
இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*
எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் காண்மின்*
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க*
பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்களால*
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.4
1622:
சினமேவும் அடலரியின் உருவமாகித்*
திறல்மேவும் இரணியன தாகம் கீண்டு*
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-
மாள* உயிர் வௌவிய எம்மாயோன் காண்மின்*
இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை*
ஏய்வாய் மரகதம்போல் கிளியினின் சொல்*
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.5
1623:
வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*
மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி*
தானமர ஏழுலகும் அளந்த வென்றித்*
தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
தேனமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதிச்*
செழுமாட மாளிகைகள் கூடந்தோறும்*
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.6
1624:
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகிப்*
பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன்*
அந்தமில் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*
அடுகணையால் எய்துகந்த அம்மான் காண்மின்*
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க*
அந்தணர்தம் ஆகுதியின் புகையார் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.7
1625:
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு-
பறித்து* மழவிடை யடர்த்துக் குரவை கோத்து*
வம்பவிழும் மலர்க்குழலாளாய்ச்சி வைத்த-
தயிர்வெண்ணெய்* உண்டுகந்த மாயோன் காண்மின்*
செம்பவள மரதகம் நன் முத்தம் காட்டத்*
திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.8
1626:
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*
ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற*
நீடேறு பெருவலித் தோளுடைய வென்றி*
நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்*
சேடேறு பொழில்தழுவும் எழில்கொள் வீதித்*
திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்*
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே*. 7.8.9
1627:##
பன்றியாய் மீனாகி அரியாய்ப்* பாரைப்-
படைத்துக் காத்துண்டு உமிழ்ந்த பரமன் தன்னை*
அன்று அமரர்க்கதிபதியும் அயனும் சேயும்-
அடிபணிய* அணியழுந்தூர் நின்ற கோவை*
கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*
கலிகன்றி யொலிசெய்த இன்பப் பாடல்*
ஒன்றினொடு நான்கும் ஓரைந்தும் வல்லார்*
ஒலிகடல் சூழுலகாளும் உம்பர் தாமே*. (2) 7.8. 10
ஒன்பதாம் திருமொழி
1628:##
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக்கழல் தொழுவீர்*
வெள்ளம் முதுபரவைத்* திரை விரிய* கரை யெங்கும்-
தெள்ளும் மணிதிகழும்* சிறு புலியூர்ச் சலசயனத்-
துள்ளும்* எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளÖரே*. (2) 7.9.1
1629:
தெருவில் திரிசிறு நோன்பியர்* செஞ்சோற்றொடு கஞ்சி-
மருவி* பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்தடைவீர்*
திருவிற் பொலிமறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறளடிகள் அடி* புணர்மின் உணர்வீரே 7.9.2
1630:
பறையும் வினைதொழுது உய்ம்மினீர்* பணியும் சிறு தொண்டீர்!*
அறையும் புனல் ஒருபால் * வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
சிறைவண்டின மறையும்* சிறு புலியூர்ச் சலசயனத்து-
உறையும்* இறையடியல்லது* ஒன்று இறையும் அறியேனே*. 7.9.3
1631:
வானார் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தானாகிய தலைவன் அவன்* அமரர்க்கதிபதியாம்*
தேனார்பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆனாயனது* அடியல்லது* ஒன்று அறியேன் அடியேனே*. 7.9.4
1632:
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதேத்தும் இடம்* எறிநீர்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அந்தாமரை யடியாய்!* உனதடியேற்கு அருள் புரியே*. 7.9.5
1633:
முழுநீலமும் மலராம்பலும்* அரவிந்தமும் விரவி*
கழுநீரொடு மடவாரவர்* கண்வாய் முக மலரும்*
செழுநீர்வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழுநீர் மையதுடையார்* அடி தொழுவார் துயரிலரே*. 7.9.6
1634:##
சேயோங்கு * தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-
மாயா* எனக்குரையாய் இது* மறை நான்கினுளாயோ?*
தீயோம் புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ?* உனதடியார் மனத்தாயோ?* அறியேனே*. (2) 7.9.7
1635:
மையார் வரிநீலம்* மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உனகழலே* தொழுது எழுவேன்* கிளிமடவார்-
செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐவாய் அரவணைமேல்* உறை அமலா! அருளாயே*. 7.9.8
1636:##
கருமாமுகில் உருவா!* கனல் உருவா! புனல் உருவா*
பெருமால் வரை உருவா!* பிறவுருவா! நினதுருவா!*
திருமாமகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அருமா கடலமுதே!* உனது அடியே சரணாமே*. (2) 7.9.9
1637:##
சீரார் நெடுமறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏரார்முகில் வண்ணன்தனை* இமையோர் பெருமானை*
காரார் வயல் மங்கைக்கிறை* கலியனொலி மாலை*
பாரார் இவை பரவித்தொழப்* பாவம் பயிலாவே*. (2) 7.9.10
பத்தாம் திருமொழி
1638:
பெரும் புறக்கடலை அடலேற்றினைப்*
பெண்ணை ஆணை* எண்ணில் முனிவர்க்கருள்-
தருந்தவத்தை முத்தின் திரள் கோவையைப்*
பத்த ராவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை*
அமுதம் பொதியின் சுவை*
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. (2) 7.10.1
1639:
மெய்ந்நலத் தவத்தைத் திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினைக் கையில் ஓர்‘சங்குடை*
மைந்நிறக்கடலைக் கடல் வண்ணனை* மாலை-
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை*
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளையாய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.2
1640:
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*
வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்*
பான்மையைப் பனிமா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வடமாமலை-
உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.3
1641:
பேய்முலைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்*
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவலிடைகழி மைந்தனை*
அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை*
இலங்கும் சுடர்ச் சோதியை*
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.4
1642:
ஏற்றினை இமயத்துள் எம் மீசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை,*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனைக்*
கையிலாழி ஒன்றேந்திய கூற்றினை*
குரு மாமணிக் குன்றினை*
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.5
1643:
துப்பனைத் துரங்கம் படச்சீறிய தோன்றலை*
சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை*
திருமங்கை மணாளனைத்*
தேவனைத் திகழும் பவளத்தொளி ஒப்பனை*
உலகேழினை ஊழியை*
ஆழியேந்திய கையனை அந்தணர் கற்பினை*
கழுநீர் மலரும் வயல்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.6
1644:
திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*
தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை*
விளங்கும் சுடர்ச் சோதியை*
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*
அரியைப் பரிகீறிய அப்பனை*
அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*
களி வண்டறையும் பொழில்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.7
1645:
வெஞ்சினக் களிற்றை விளங்காய் விழக்*
கன்று வீசிய ஈசனை* பேய்மகள்-
துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை*
நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.8
1646:
பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற-
விண்ணினை* விளங்கும் சுடர்ச் சோதியை*
வேள்வியை விளக்கினொளி தன்னை*
மண்ணினை மலையை அலை நீரினை*
மாலை மாமதியை மறையோர் தங்கள்-
கண்ணினை* கண்கள் ஆரளவும் நின்று*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*. 7.10.9
1647:##
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*
காதலால் கலி கன்றி உரைசெய்த*
வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றிவை*
வல்லராய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவராய் மகிழ் வெய்துவர்*
மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றேந்திய-
கண்ணா!* நின் தனக்கும் குறிப்பாகில்-
கற்கலாம்* கவியின் பொருள் தானே*. (2) 7.10.10