முதல் பத்து
முதல் திருமொழி – வாடினேன் வாடி
948:##
வாடினேன்வாடி வருந்தினேன்மனத்தால்* பெருந்துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு* அவர்த்தரும் கலவியேகருதி*
ஓடினேனோடி உய்வதோர்ப்பொருளால்* உணர்வெனும் பெரும்பதந்தெரிந்து*
நாடினேன்நாடி நான்கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.1
949:##
ஆவியே! அமுதே! எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2
950:
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்* தெரிவைமார் உருவமேமருவி*
ஊமனார் கண்ட கனவிலும்பழுதாய்* ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்*
காமனார் தாதை நம்முடையடிகள்* தம்மடைந்தார் மனத்திருப்பர்*
நாமம் நானுய்ய நான்கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். 1.1.3
951:
வென்றியே வேண்டி வீழ்பொருட்கிரங்கி* வேற்கணார் கலவியே கருதி*
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்* என்செய்கேன்? நெடுவிசும்பணவும்*
பன்றியாய் அன்றுபாரகங்கீண்ட* பாழியான் ஆழியானருளே*
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். 1.1.4
952:
கள்வனேனானேன் படிறுசெய்திருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன்* சிக்கெனத் திருவருள்பெற்றேன்*
உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேன்* உடம்பெலாம் கண்ணநீர்சோர*
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்* நாராயணா என்னும் நாமம். 1.1.5
953:##
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள்! உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6
954:
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்* இன்னதோர்த்தன்மை என்றுணரீர்*
கற்பகம்புலவர் களைகணென்று உலகில்* கண்டவா தொண்டரைப்பாடும்*
சொற்ÛபொருளாளÖர் சொல்லுகேன்வம்மின்* சூழ்புனல் குடந்தையேதொழுமின்*
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்* நாராயணா என்னும் நாமம். 1.1.7
955:
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெருநிலத்தார் உயிர்க்கெல்லாம்*
செற்றமேவேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்* செல்கதிக்கு உய்யுமாறெண்ணி*
நல்துணையாகப்பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம். 1.1.8
956:##
குலம்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படுதுயராயினவெல்லாம்*
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்* அருளொடு பெருநிலமளிக்கும்*
வலந்தரும் மற்றுந்தந்திடும்* பெற்ற தாயினுமாயினசெய்யும்*
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.9
957:##
மஞ்சுலாஞ்சோலை வண்டறை மாநீர்* மங்கையார்வாள் கலிகன்றி*
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை* இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்* துயரிலீர் சொல்லிலும் நன்றாம்*
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.10
இரண்டாம் திருமொழி- வாலிமாவலத்து
958:##
வாலிமாவலத்து ஒருவனதுடல்கெட* வரிசிலைவளைவித்து*
அன்றுஏலநாறு தண்தடம்பொழில் இடம்பெற* இருந்தநல் இமயத்துள்*
ஆலிமாமுகில் அதிர்த்தர அருவரை* அகடுறமுகடேறி*
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்* பிரிதிசென்றடை நெஞ்சே. (2) 1.2.1
959:
கலங்கமாக்கடல் அரிகுலம்பணிசெய்ய* அருவரையணைகட்டி*
இலங்கைமாநகர் பொடிசெய்த அடிகள்தாம்* இருந்தநல் இமயத்து*
விலங்கல்போல் வனவிறல் இருஞ்சினத்தன* வேழங்கள்துயர்க்கூர*
பிலங்கொள்வாளெயிற்று அரியவைதிரிதரு* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.2
960:
துடிகொள்நுண்ணிடை சுரிகுழல் துளங்கெயிற்று* இளங்கொடிதிறத்து*
ஆயர் இடிகொள் வெங்குரலினவிடை அடர்த்தவன்* இருந்த நல்லிமயத்து*
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின்* மணியறை மிசைவேழம்*
பிடியினோடு வண்டிசைசொலத் துயில்கொளும்* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.3
961:
மறங்கொளாளரி உருவென வெருவர* ஒருவனது அகல்மார்வம் திறந்து*
வானவர் மணிமுடி பணிதர* இருந்தநல் இமயத்து*
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திடக்* கிடந்தருகெரிவீசும்*
பிறங்குமா மணியருவியொடு இழிதரு* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.4
962:
கரைசெய்மாக் கடல்கிடந்தவன்*கனைகழல் அமரர்கள்தொழுதேத்த*
அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்தநல் இமயத்து*
வரைசெய்மாக்களிற் இளவெதிர் வளர்முளை* அளைமிகு தேன்தோய்த்து*
பிரசவாரிதன் இளம்பிடிக்கு அருள்செயும்* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.5
963:
பணங்களாயிரமுடய நல்லவரவணைப் பள்ளிகொள்* பரமாவென்று*
இணங்கிவானவர் மணிமுடிபணிதர* இருந்தநல் இமயத்து*
மணங்கொள்மாதவி நெடுங்கொடிவிசும்புற* நிமிர்ந்தவைமுகில்பற்றி*
பிணங்குபூம்பொழில் நுழைந்து வண்டிசைசொலும்* பிரிதிசென்றடை நெஞ்சே!
964:
கார்கொள்வேங்கைகள் கனவரைதழுவிய* கறிவளர்க்கொடிதுன்னி*
போர்கொள்வேங்கைகள் புனவரைதழுவிய* பூம்பொழில் இமயத்துள்*
ஏர்கொள்பூஞ்சுனைத் தடம்படிந்து இனமலர்* எட்டுமிட்டிமையோர்கள்*
பேர்களாயிரம் பரவிநின்று அடிதொழும்* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.7
965:
இரவுகூர்ந்து இருள்பெருகிய வரைமுழை* இரும்பசி அதுகூர*
அரவமாவிக்கு மகன்பொழில்தழுவிய* அருவரையிமயத்து*
பரமனாதியெம் பனிமுகில் வண்ணனென்று* எண்ணிநின்று இமையோர்கள்*
பிரமேனாடு சென்றடிதொழும் பெருந்தகைப்* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.8
966:
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே! 1.2.9
967:##
கரியமாமுகிற் படலங்கள் கிடந்து* அவைமுழங்கிட*
களிறென்று பெரியமாசுணம் வரையெனப்பெயர்தரு* பிரிதி எம்பெருமானை*
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர்* கலியனது ஒலிமாலை*
அரிய இன்னிசைபாடும் நல்லடியவர்க்கு* அருவினை அடையாவே* 1.2.10
மூன்றாம் திருமொழி – முற்றமூத்து
968:##
முற்றமூத்துக் கோல்துணையா* முன்னடி நோக்கி வளைந்து*
இற்றகால்போல் தள்ளிமெள்ள * இருந்தங்கு இளையாமுன்*
பெற்றதாய்போல் வந்தபேய்ச்சி* பெருமுலையூடு*
உயிரை வற்றவாங்கியுண்டவாயான்* வதரிவணங்குதுமே. 1.3.1
969:
முதுகுபற்றிக் கைத்தலத்தால்* முன்னொருகோல் ஊன்றி*
விதிர்விதிர்த்துக் கண்சுழன்று* மேற்கிளை கொண்டிருமி*
இதுவென்னப்பர் மூத்தவாறென்று* இளையவர் ஏசாமுன்*
மதுவுண்வண்டு பண்கள்பாடும்* வதரிவணங்குதுமே. 1.3.2
970:
உறிகள்போல் மெய்நரம்பெழுந்து* ஊன்தளர்ந்து உள்ளமெள்கி*
நெறியைநோக்கிக் கண்சுழன்று* நின்றுநடுங்காமுன்*
அறிதியாகில் நெஞ்சம் அன்பால்* ஆயிரநாமம் சொல்லி*
வெறிகொள்வண்டு பண்கள்பாடும்* வதரிவணங்குதுமே. 1.3.3
971:
பீளைசோரக் கண்இடுங்கிப்* பித்தெழ மூத்திருமி*
தாள்கள்நோவ தம்மில்முட்டித்* தள்ளி நடவாமுன்*
காளையாகிக் கன்றுமேய்த்துக்* குன்றெடுத்துஅன்றுநின்றான்*
வாளைபாயும்தண்தடஞ்சூழ்* வதரிவணங்குதுமே. 1.3.4
972:
பண்டு காமரானவாறும்* பாவையர் வாயமுதம் உண்டவாரும்*
வாழ்ந்த வாரும்* ஒக்கவுரைத்திருமி*
தண்டுகாலா ஊன்றியூன்றித்* தள்ளிநடவாமுன்*
வண்டுபாடும் தண்துழாயான்* வதரிவணங்குதுமே. 1.3.5
973:
எய்த்தசொல்லோடு இளைத்து ஏங்கி* இருமியிளைத்து*
உடலம் பித்தர்ப்போல சித்தம் வேறாய்ப்* பேசியயராமுன்*
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி* ஆழ்கடலைக் கடைந்த*
மைத்தசோதி எம்பெருமான்* வதரிவணங்குதுமே. 1.3.6
974:
பப்பவப்பர் மூத்தவாறு* பாழ்ப்பது சீத்திரளையொப்ப*
ஐக்கள்போத உந்த* உன்தமர் காண்மினென்று*
செப்புநேர்மென் கொங்கை நல்லார்* தாம்சிரியாத முன்னம்*
வைப்பும் நங்கள் வாழ்வுமானான்* வதரிவணங்குதுமே. 1.3.7
975:
ஈசிபோமின் ஈங்கிரேன்மின்* இருமியிளைத்தீர்*
உள்ளம் கூசியிட்டீர் என்றுபேசும்* குவளையங் கண்ணியர்ப்பால்*
நாசமான பாசம் விட்டு* நன்னெறி நோக்கலுறில்*
வாசம் மல்கு தண்துழாயான்* வதரிவணங்குதுமே. 1.3.8
976:
புலன்கள்நைய மெய்யில்மூத்துப்* போந்திருந்து உள்ளமெள்கி*
கலங்கவைக்கள் போதவுந்திக்* கண்ட பிதற்றாமுன்*
அலங்கலாய தண்துழாய்கொண்டு* ஆயிரநாமம் சொல்லி*
வலங்கொள் தொண்டர் பாடியாடும்* வதரிவணங்குதுமே. 1.3.9
977:##
வண்டு தண்தேன் உண்டுவாழும்* வதரிநெடுமாலை*
கண்டல்வேலி மங்கைவேந்தன்* கலியன் ஒலிமாலை*
கொண்டு தொண்டர் பாடியாடக்* கூடிடில் நீள்விசும்பில்*
அண்டமல்லால் மற்றவர்க்கு* ஓராட்சி அறியோமே. 1.3.10
நான்காம் திருமொழி – ஏனமுனாகி
978:##
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1
979:
கானிடையுருவைச் சுடுசரம்துரந்து* கண்டுமுன் கொடுந்தொழிலுரவோன்*
ஊனுடையகலத்து அடுகணைகுளிப்ப* உயிர்க்கவர்ந்துகந்த எம்மொருவன்*
தேனுடைக்கமலத்து அயனொடுதேவர்* சென்றுசென்று இறைஞ்சிட*
பெருகுவானிடைமுதுநீர்க் கங்கையிங்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.
980:
இலங்கையும்கடலும் அடலருந்துப்பின்* இருநிதிக்கிறைவனும்*
அரக்கர் குலங்களும் கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் *கொழுஞ்சுடர்சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சிமேல்நின்றவிசும்பில்* வெண்துகிற்கொடி எனவிரிந்து*
வலந்தருமணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3
981:
துணிவினி உனக்குச் சொல்லுவன்மனமே!* தொழுதெழு தொண்டர்கள்தமக்கு*
பிணியொழித்தமரர் பெருவிசும்பருளும்* பேரருளாளன் எம்பெருமான்*
அணிமலர்க்குழலார் அரம்பையர்த்துகிலும்* ஆரமும்வாரிவந்து*
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.
982:
பேயிடைக்கிருந்துவந்த மற்றவள்தன்* பெருமுலைசுவைத்திட*
பெற்றதாயிடைக்கு இருத்தலஅஞ்சுவனென்று தளர்ந்திட* வளர்ந்தவெந்தலைவன்*
சேய்முகட்டு உச்சியண்டமுஞ்சுமந்த* செம்பொன்செய் விலங்கலி இலங்கு,*
வாய்முகட்டிழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5
983:
தேரணங்கல்குல் செழுங்கையற்கண்ணி திறத்து* ஒருமறத்தொழில்புரிந்து*
பாரணங்கிமிலேறு ஏழுமுன்னடர்த்த* பனிமுகில்வண்ணன் எம்பெருமான்*
காரணந்தன்னால் கடும்புனல்கயத்த* கருவரை பிளவெழக்குத்தி*
வாரணங்கொணர்ந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.6
984:
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7
985:
மான்முனிந்தொருகால் வரிசிலைவளைத்த* மன்னவன் பொன்னிறத்துரவோன்*
ஊன்முனிந்த அவனதுடல்இருபிளவா* உகிர்நுதிமடுத்து*
அயனரனைத் தான்முனிந்திட்ட* வெந்திறல்சாபம் தவிர்த்தவன்*
தவம்புரிந்துயர்நட மாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.
986:
கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்கு* உரைகடல் உலகுடன் அனைத்தும்*
உண்ட மாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த* உம்பரும் ஊழியுமானான்*
அண்டமூடறுத்து அன்றந்தரத்திழிந்து* அங்கவனியாள் அலமர*
பெருகும்மண்டுமாமணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே.
987:##
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானை*
கருங்கடல்முந்நீர் வண்ணனையெண்ணிக்* கலியன்வாய் ஒலி செய்த பனுவல்*
வரஞ்செய்த ஐந்துமைந்தும்வல்லார்கள்* வானவர் உலகுடன் மருவி*
இருங்கடல் உலகமாண்டு வெண்குடைக்கீழ்* இமையவர் ஆகுவர்தாமே. 1.4.10
ஐந்தாம் திருமொழி – கலையும் கரியும்
988:##
கலையும்கரியும் பரிமாவும்* திரியும்கானம் கடந்துபோய்*
சிலையும்கணையும் துணையாகச்சென்றான்* வென்றிச்செறுக்களத்து*
மலைகொண்டு அலைநீரணைகட்டி* மதிள்நீரிலங்கை வாளரக்கர் தலைவன்*
தலைபத்தறுத்துகந்தான்* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.1
989:
கடம்சூழ்கரியும் பரிமாவும்* ஒலிமாந்தேரும் காலாளும்*
உடஞ்சூழ்ந்தெழுந்த கடியிலங்கை* பொடியவடிவாய்ச் சரம்துரந்தான்*
இடம்சூழ்ந்தெங்கும் இருவிசும்பில்* இமையோர்வணங்க மணம்கமழும்*
தடம்சூழ்ந்தெங்கும் அழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.2
990:
உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*
நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.3
991:
ஊராங்குடந்தை உத்தமன்* ஒருகாலிருகால் சிலைவளைய*
தேராவரக்கர் தேர்வெள்ளம் செற்றான்* வற்றாவருபுனல்சூழ் பேரான்*
பேராயிரமுடையான்* பிறங்குசிறை வண்டறைகின்ற தாரான்*
தாராவயல்சூழ்ந்த* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.4
992:
அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய்விட்டலற* அவள்மூக்கு அயில்வாளால் விடுத்தான்*
விளங்குசுடராழி* விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்*
கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக்* கல்லொன்றேந்தி இனநிரைக்காத்தடுத்தான்*
தடம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.5
993:
தாயாய்வந்த பேயுயிரும்* தயிரும்விழுதும் உடனுண்ட வாயான்*
தூயஅரியுருவிற் குறளாய்ச்சென்று* மாவலையை ஏயானிரப்ப*
மூவடிமண் இன்றே தாவென்று* உலகேழும் தாயான்*
காயாமலர்வண்ணன்* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.6
994:
ஏேனார் அஞ்ச வெஞ்சமத்துள்* அரியாய்ப் பரியவிரணியனை*
ஊனாரகலம் பிளவெடுத்த* ஒருவன்தானே இருசுடராய்*
வானாய்த் தீயாய் மாருதமாய்* மலையாய் அலைநீருலகனைத்தும் தானாய்*
தானுமானான்தன்* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.7
995:
வெந்தார் என்பும் சுடுநீறும்* மெய்யில்பூசிக் கையகத்து*
ஓர்சந்தார் தலைகொண்டு உலகேழும் திரியும்* பெரியோன்தாஞ்சென்று*
என்எந்தாய்! சாபம்தீரென* இலங்கமுதநீர்த் திருமார்பில் தந்தான்*
சந்தார் பொழில்சூழ்ந்த* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.8
996:
தொண்டாமினமும் இமையோரும்* துணைநூல்மார்பின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய்என்று* அணையும்கோயில் அருகெல்லாம்*
வண்டார்ப்பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல்பாய*
தண்டாமரைகள் முகமலர்த்தும்* சாளக்கிராமம் அடைநெஞ்சே! 1.5.9
997:##
தாராவாரும் வயல்சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
காரார்ப்புறவின் மங்கைவேந்தன்* கலியனொலி செய்தமிழ்மாலை*
ஆரார் உலகத்து அறிவுடையார்* அமரர்நன்னாட்டு அரசாள*
பேராயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே. 1.5.10
ஆறாம் திருமொழி – வாணிலாமுறுவல்
998:##
வாணிலாமுறுவல் சிறுநுதல் பெருந்தோள்* மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழையெனக்கருதிப்* பேதையேன் பிறவிநோயறுப்பான்*
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர்க்கலவியின் திறத்தை நாணினேன்*
வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.1
999:
சிலம்படியுருவிற் கருநெடுங்கண்ணார்* திறத்தனாய்!அறத்தையேமறந்து*
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப்* போக்கினேன் பொழுதினைவாளா*
அலம்புரிதடக்கை ஆயனே!மாயா!* வானவர்க்கரசனே!*
வானோர் நலம்புரிந்திறைஞ்சும் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துளெந்தாய்!
1000:
சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*
காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*
வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.3
1001:
வம்புலாங்கூந்தல் மனைவியைத்துறந்து* பிறர்பொருள் தாரம் என்றிவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன்தமர்ப்பற்றி எற்றிவைத்து*
எரிஎழுகின்ற செம்பினால்இயன்ற பாவையைப்* பாவீ! தழுவெனமொழிவதற்க்குஅஞ்சி*
நம்பனே! வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.4
1002:
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோதுஉற்றென்னு* இரந்தவர்க்கு இல்லையேயென்று*
நெடுஞ்சொலால்மறுத்த நீசனேன்அந்தோ!* நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*
கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்* படுவதோர் கொடுமிறைக்குஅஞ்சி*
நடுங்கிநான்வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.5
1003:
கோடியமனத்தால் சினத்தொழில்புரிந்து* திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு*
ஓடியும்உழன்றும் உயிர்களேகொன்றேன்* உணர்விலேன் ஆதலால்*
நமனார்ப்பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன்* பரமனே! பாற்கடல்கிடந்தாய்!*
நாடிநான்வந்து உன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.6
1004:
நெஞ்சினால்நினைந்தும் வாயினால்மொழிந்தும்* நீதியல்லாதன செய்தும்*
துஞ்சினார்செல்லும் தொல்நெறிகேட்டே* துளங்கினேன் விளங்கனிமுனிந்தாய்!*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்பிரியா* வானவா! தானவர்க்கென்றும் நஞ்சனே!*
வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.7
1005:
ஏவினார்க்கலியார் நலிகவென்று* என்மேல் எங்ஙனே வாழுமாறு?*
ஐவர்கோவினார்செய்யும் கொடுமையைமடித்தேன்* குறுங்குடி நெடுங்கடல்வண்ணா!*
பாவினார்இஞ்சொல் பன்மலர்க்கொண்டு* உன்பாதமேபரவி நான்பணிந்து*
என்நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்! 1.6.8
1006:
ஊனிடைச்சுவர்வைத்து என்புதூண்நாட்டி* உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல்*
தானுடைக்குரம்பைப் பிரியும்போது* உந்தன்சரணமேசரணம் என்றுஇருந்தேன்*
தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!* திரைகொள்மா நெடுங்கடற்கிடந்தாய்!*
நானுடைத் தவத்தால் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துளெந்தாய்! 1.6.9
1007:##
ஏதம்வந்து அணுகா வண்ணநாமெண்ணி* எழுமினோ தொழுதுமென்று*
இமையோர் நாதன்வந்துஇறைஞ்சும்* நைமிசாரணியத்தெந்தையைச் சிந்தையுள்வைத்து*
காதலேமிகுத்த கலியன்வாயொலிசெய்* மாலைதாம் கற்றுவல்லார்கள்*
ஓதநீர்வையகம்ஆண்டு வெண்குடைக்கீழ்* உம்பரும்ஆகுவர் தாமே. 1.6.10
ஏழாம் திருமொழி – அங்கண்ஞலமஞ்ச
1008:##
அங்கண் ஞாலமஞ்ச* அங்கோராளரியாய்*
அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால்* போழ்ந்த புனிதனிடம்*
பைங்கணானைக் கொம்புகொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ்ச் செங்கணாளியிட்டிறைஞ்சும்* சிங்கவேள்குன்றமே. 1.7.1
1009:
அலைத்தபேழ்வாய்* வாளெயிற்றோர்க் கோளரியாய்*
அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த* கூருகிறாளனிடம்*
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல்* வன்துடிவாய்கடுப்ப*
சிலைக்கைவேடர் தெழிப்பறாத* சிங்கவேள்குன்றமே. 1.7.2
1010:
ஏய்ந்தபேழ்வாய்* வாளெயிற்றோர்க்கோளரியாய்*
அவுணன் வாய்ந்தவாகம் வள்ளுகிரால்* வகிர்ந்தவம்மானதனிடம்*
ஓய்ந்தமாவும் உடைந்தகுன்றும்* அன்றியும் நின்றழலால்*
தேய்ந்தவேயுமல்லதில்லாச்* சிங்கவேள்குன்றமே. 1.7.3
1011:
எவ்வும் வெவ்வேல் பொன்பெயரோன்& ஏதலினின்னுயிரை வவ்வி*
ஆகம்வள்ளுகிரால்* வகிர்ந்தவம்மானதிடம்*
கவ்வுநாயும்கழுகும்* உச்சிபோதொடுகால்சுழன்று*
தெய்வமல்லால் செல்லவொண்ணாச்* சிங்கவேள்குன்றமே. 1.7.4
1012:
மென்றபேழ்வாய்* வாளெயிற்றோர்க்கோளரியாய்*
அவுணன் பொன்றவாகம்வள்ளுகிரால்* போழ்ந்த புனிதனிடம்*
நின்றசெந்தீ மொண்டுசூறை* நீள்விசும்பூடிரிய*
சென்றுகாண்டற்கரியகோயில்* சிங்கவேள்குன்றமே. 1.7.5
1013:
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய்* எயிற்றொடுஇதுஎவ்வுருவென்று*
இரிந்துவானோர் கலங்கியோட* இருந்தவம்மானதிடம்*
நெரிந்தவேயின் முழையுள்நின்று* நீணெறிவாயுழுவை*
திரிந்தவானைச்சுவடுபார்க்கும்* சிங்கவேள்குன்றமே. 1.7.6
1014:
முனைத்தசீற்றம் விண்சுடப்போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்துமஞ்சஆளரியாய்* இருந்தவம்மானதிடம்*
கனைத்ததீயும் கல்லுமல்லா* வில்லுடைவேடருமாய்*
தினைத்தனையும் செல்லவொண்ணாச்* சிங்கவேள்குன்றமே. 1.7.7
1015:
நாத்தழும்ப நான்முகனும்* ஈசனுமாய் முறையால் ஏத்த*
அங்கோராளரியாய்* இருந்தவம்மானதிடம்*
காய்த்தவாகை நெற்று ஒலிப்பக்* கல்லதர்வேய்ங்கழைபோய்*
தேய்த்ததீயால் விண்சிவக்கும்* சிங்கவேள்குன்றமே. 1.7.8
1016:
நல்லைநெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம்பெருமான்*
அல்லிமாதர் புல்கநின்ற* ஆயிரம் தோளனிடம்,
நெல்லிமல்கிக் கல்லுடைப்பப்* புல்லிலையார்த்து*
அதர்வாய்ச் சில்லிசில்லென்று ஒல்லறாத* சிங்கவேள்குன்றமே. 1.7.9
1017:##
செங்கணாளி இட்டிறைஞ்சும்* சிங்கவேள்குன்றுடைய*
எங்களÖசன் எம்பிரானை* இருந்தமிழ் நூற்புலவன்*
மங்கையாளன் மன்னுதொல்சீர்* வண்டறைதார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல்மாலை* வல்லவர் தீதிலரே. 1.7.10
எட்டாம் திருமொழி-கொங்கலர்ந்த
1018:##
கொங்கலர்ந்த மலர்க்குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*
சங்குதங்கு தடங்கடல் * துயில்கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்குபுள்ளினை வாய்பிளந்த* புராணர் தம்மிடம்*
பொங்குநீர்ச் செங்கயல் திளைக்கும்சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! 1.8.1
1019:##
பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*
பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.2
1020:
நின்றமாமருது இற்றுவீழ* நடந்த நின்மலன் நேமியான்*
என்றும்வானவர் கைதொழும்* இணைத்தாமரையடி எம்பிரான்*
கன்றிமாரி பொழிந்திடக்* கடிதானிரைக்கு இடர்நீக்குவான்*
சென்றுகுன்றமெடுத்தவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.3
1021:
பார்த்தற்காய் அன்றுபாரதம் கைசெய்திட்டு* வென்றபரஞ்சுடர்*
கோத்துஅங்குஆயர்தம்பாடியில்* குரவைபிணைந்த எம்கோவலன்*
ஏத்துவார் தம்மனத்துள்ளான்* இடவெந்தைமேவிய எம்பிரான்*
தீர்த்தநீர்த் தடஞ்சோலைசூழ்* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.4
1022:
வண்கையான் அவுணர்க்குநாயகன்* வேள்வியில்சென்றுமாணியாய்*
மண்கையால் இரந்தான்* மராமரமேழும் எய்தவலத்தினான்*
எண்கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவியவெம்பிரான்*
திண்கைம்மா துயர்த்தீர்த்தவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.5
1023:
எண்திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன்வயிற்றில்பெய்து*
பண்டுஓராலிலைப் பள்ளிகொண்டவன்* பான்மதிக்கு இடர்த்தீர்த்தவன்*
ஒண்திறல் அவுணன் உரத்துகிர் வைத்தவன்* ஒள்ளெயிற்றொடு*
திண்திறலரியாயவன்* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.6
1024:
பாருநீர் எரிகாற்றினொடு* ஆகாசமும் இவையாயினான்*
பேருமாயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்*
காரும்வார் பனிநீள்விசும்பிடைச்* சோருமா முகில்தோய்தர*
சேரும்வார்ப்பொழில்சூழ்* எழில்திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.7
1025:
அம்பரமனல் கால்நிலம்* சலமாகிநின்ற அமரர்க்கோன்*
வம்புலா மலர்மேல்* மலிமடமங்கை தன்கொழுநன்அவன்*
கொம்பினன்ன இடைமடக்குறமாதர்* நீளிதணந்தொறும்*
செம்புநம்மவைகாவல்கொள்* திருவேங்கடம் அடைநெஞ்சமே! 1.8.8
1026:##
பேசுமின்திருநாமம்எட்டெழுத்தும்* சொல்லிநின்று பின்னரும்*
பேசுவார்த்தம்மை உய்யவாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாசமாமலர் நாறுவார்ப்பொழில்* சூழ்தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2) 1.8.9
1027:##
செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்துறைசெல்வனை*
மங்கையர்த்தலைவன் கலிகன்றி* வண்தமிழ்ச் செஞ்சொல்மாலைகள்*
சங்கையின்றித்தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்கமாகடல்வையம் காவலராகி* வானுலகாள்வரே! 1.8.10
ஒன்பதாம் திருமொழி – தாயேதந்தை
1028:##
தாயேதந்தையென்றும்* தாரமே கிளைமக்களென்றும்*
நோயேபட்டொழிந்தேன்* உன்னைக்காண்பதோர் ஆசையினால்*
வேயேய்பூம்பொழில்சூழ்* விரையார் திருவேங்கடவா!*
நாயேன் வந்துஅடைந்தேன்* நல்கிஆளென்னைக்கொண்டருளே. 1.9.1
1029:
மானேய் கண்மடவார்* மயக்கில்பட்டு மாநிலத்து*
நானே நானாவித* நரகம்புகும் பாவம்செய்தேன்*
தேனேய் பூம்பொழில்சூழ்* திருவேங்கடமாமலை*
என்ஆனாய் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.2
1030:
கொன்றேன் பல்லுயிரைக்* குறிக்கோள் ஒன்றிலாமையினால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிதாக உரைத்தறியேன்*
குன்றேய் மேகமதிர்* குளிர்மாமலை வேங்கடவா!*
அன்றே வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.3
1031:
குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*
நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4
1032:
எப்பாவம்பலவும்* இவையேசெய்து இளைத்தொழிந்தேன்*
துப்பா! நின்னடியே* தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பார் திண்வரைசூழ்* திருவேங்கடமாமலை*
என்அப்பா! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.5
1033:
மன்னாய் நீரெரிகால்* மஞ்சுலாவும் ஆகாசமுமாம்*
புண்ணாராக்கைதன்னுள்* புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண்ணார் நீள்சிகர* விரையார் திருவேங்கடவா!*
அண்ணா! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.6
1034:
தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேனாயினபின்* பிரர்க்கே உழைத்துஏழையானேன்*
கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா!,*
அரியே! வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.7
1035:
நோற்றேன் பல்பிறவி* உன்னைக்காண்பதோர் ஆசையினால்*
ஏற்றேன் இப்பிறப்பே* இடருற்றனன் எம்பெருமான்!*
கோல்தேன் பாய்ந்தொழுகும்* குளிர்சோலைசூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.8
1036:
பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*
மற்றேல் ஒன்றரியேன்* மாயனே! எங்கள்மாதவனே!*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா!,
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.9
1037:
##
கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய* எங்கார்வண்ணனை*
விண்ணோர்த்தாம்பரவும்* பொழில்வேங்கட வேதியனை*
திண்ணார்மாடங்கள்சூழ்* திருமங்கையர்க்கோன்கலியன்*
பண்ணார்ப்பாடல்பத்தும்* பயில்வார்க்கில்லை பாவங்களே. 1.9.10
பத்தாம் பத்து – கண்ணார்கடல்சூழ்
1038:##
கண்ணார் கடல்சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண்ணாகம் பிளக்கச்* சலம்செல உய்த்தாய்!*
விண்ணோர்த்தொழும்* வேங்கட மாமலைமேய*
அண்ணா! அடியேன்* இடரைக்களையாயே. 1.10.1
1039:
இலங்கைப்பதிக்கு* அன்றுஇறையாய*
அரக்கர்க்குலம்கெட்டு அவர்மாளக்* கொடிப்புள்திரித்தாய்!*
விலங்கல்குடுமித்* திருவேங்கடம்மேய*
அலங்கல் துளபமுடியாய்!* அருளாயே. 1.10.2
1040:
நீரார்க்கடலும்* நிலனும் முழுதுண்டு*
ஏராலம்இளந்தளிர்மேல்* துயில் எந்தாய்!*
சீரார்* திருவேங்கடமாமலைமேய*
ஆராவமுதே!* அடியேற்கருளாயே. 1.10.3
1041:
உண்டாய் உறிமேல்* நறுநெய் அமுதாக*
கொண்டாய் குறலாய்* நிலம்ஈரடியாலே*
விண்தோய் சிகரத்* திருவேங்கடம்மேய,
அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே. 1.10.4
1042:
தூணாய் அதனூடு* அரியாய்வந்துதோன்றி*
பேணாஅவுணன்உடலம்* பிளந்திட்டாய்!*
சேணார் திருவேங்கட* மாமலைமேய,*
கோணாகணையாய்!* குறிக்கொள் எனைநீயே. 1.10.5
1043:
மன்னா* இம்மனிசப்பிறவியை நீக்கி*
தன்னாகித்* தன்னினருள் செய்யும்தலைவன்*
மின்னார் முகில்சேர்* திருவேங்கடம்மேய*
என்னானை என்னப்பன்* என்னெஞ்சிலுளானே. 1.10.6
1044:
மானே மடநோக்கி* திறத்து எதிர்வந்த*
ஆனேழ்விடைசெற்ற* அணிவரைத்தோளா!*
தேனே!* திருவேங்கடமாமலை மேய*
கோனே! என்மனம்* குடிகொண்டிருந்தாயே. 1.10.7
1045:
சேயன்அணியன்* எனசிந்தையுள் நின்றமாயன்*
மணிவாளொளி* வெண்டரளங்கள்*
வேய்விண்டுதிர்* வேங்கடமாமலைமேய*
ஆயனடிஅல்லது* மற்றுஅறியேனே. 1.10.8
1046:
வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்!*
இனியான் உன்னை* என்றும் விடேனே. 1.10.9
1047:##
வில்லார்மலி* வேங்கடமாமலைமேய*
மல்லார் திரள்தோள்* மணிவண்ணனம்மானை*
கல்லார் திரள்தோள்* கலியன் சொன்னமாலை,*
வல்லாரவர்* வானவராகுவர்த்தாமே. 1.10.10