எட்டாம் பத்து


திருவாய்மொழி எட்டாம் பத்து

முதல் திருமொழி

 

3563:##

தேவிமார் ஆவார் திருமகள்பூமி*ஏவமற்றமரர் ஆட்செய்வார்*

மேவிய உலகம் மூன்றவைஆட்சி*வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*

பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்கண்ணதுஓர்* பவளவாய் மணியே*

ஆவியே!அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!*காணுமாறு அருளாய்.    8.1.1

 

3564:

காணுமாறருளாய் என்றென்றே கலங்கிக்* கண்ணநீர் அலமர*

வினையேன் பேணுமாறெல்லாம் பேணி* நின்பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*

காணுமாறு அருளாய் காகுத்தா!கண்ணா!* தொண்டனேன் கற்பகக்கனியே*

பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்* பெருநிலம் எடுத்த பேராளா!    8.1.2

 

3565:

எடுத்தபேராளன் நந்தகோபன்தன்* இன்னுயிர்ச் சிறுவனே*

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குலவிளங்களிறே* அடியனேன் பெரிய அம்மானே*

கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்* கையுகிர் ஆண்ட எங்கடலே,*

அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய்* எங்ஙனம் தேறுவர் உமரே?         8.1.3

 

3566:

உமருகந்துகந்த உருவம்நின்உருவமாகி* உன்தனக்கு அன்பர் ஆனார்*

அவர் உகந்தமர்ந்த செய்கை உன்மாயை* அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்*

அமரதுபண்ணி அகலிடம்புடைசூழ்* அடுபடை அவித்த அம்மானே*

அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே* என்னுடை ஆருயிரேயோ!            8.1.4

 

3567:

ஆருயிரேயோ! அகலிடம்முழுதும்* படைத்திடந்து உண்டு உமிழ்ந்தளந்த*

பேருயிரேயோ!பெரியநீர் படைத்து* அங்குறைந்து அது கடைந்தடைத்து உடைத்த*

சீரியரேயோ! மனிசர்க்குத்தேவர்போல* தேவர்க்கும்தேவாவோ*

ஒருயிரேயோ! உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்துறுகோ?          8.1.5

 

3568:

எங்குவந்துறுகோ என்னையாள்வானே* ஏழ்உலகங்களும் நீயே*

அங்கவர்க்கமைத்த தெய்வமும்நீயே* அவற்றவை கருமமும் நீயே*

பொங்கியபுறம்பால் பொருளுளவேலும்* அவையுமோ நீ இன்னேயானால்*

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே* வான்புலம் இறந்ததும் நீயே.            8.1.6

 

3569:

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே* நிகழ்வதோ நீ இன்னேயானால்*

சிறந்தநின் தன்மை அதுவிதுவுதுவென்று* அறிவொன்றும் சங்கிப்பன்வினையேன்*

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே!* கடலின் உள்அமுதமே*

அமுதில்பிறந்த இன்சுவையே! சுவையதுபயனே!* பின்னைதோள் மணந்தபேராயா!           

 

3570:

மணந்தபேராயா! மாயத்தால்முழுதும்* வல்வினையேனை ஈர்க்கின்ற*

குணங்களை உடையாய்! அசுரர் வன்கையர்கூற்றமே!* கொடிய புள்ளுயர்த்தாய்*

பணங்களாயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!* பாற்கடல் சேர்ப்பா*

வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்* செய்கையும் யானும் நீதானே.     

 

3571:

யானும் நீதானே யாவதோமெய்யே* அருநரகவையும் நீ ஆனால்*

வானுயர் இன்பம் எய்தில்என்* மற்றை நரகமே எய்தில்என்? எனிலும்,*

யானும் நீதானாய் தெளிதொறும்,நன்றும் அஞ்சுவன்* நரகம் நான்அடைதல்*

வானுயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்* அருளுநின் தாள்களைஎனக்கே.         8.1.9

 

3572:

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்பத்தந்த* பேருதவிக்கைம்மாறா*

தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை* அறவிலை செய்தனன் சோதீ,

தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்* துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்*

தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்* தமியனேன் பெரிய அப்பனே!    8.1.10

 

3573:##

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை* உருத்திரன் அப்பனை*

முனிவர்க்குரிய அப்பனை அமரர் அப்பனை* உலகுக்கோர் தனியப்பன் தன்னை*

பெரியவண்குருகூர் வண்சடகோபன்* பேணின ஆயிரத்துள்ளும்*

உரியசொல்மாலை இவையும்பத்திவற்றால்* உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே. 

 

இரண்டாம் திருமொழி  

 

3574:##

நங்கள் வரிவளையாய் அங்காளோ* நம்முடை ஏதலர் முன்பு நாணி*

நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்* நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*

சங்கம் சரிந்தன சாயிழந்தேன்* தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்*

வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்* வேங்கடவாணணை வேண்டிச்சென்றே. (2)  

3575:

வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்* என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்*

ஈண்டிதுரைக்கும்படியை அந்தோ* காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*

காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்* விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்*

ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்* எத்தனைகாலம் இளைக்கின்றேனே!        8.2.2

 

3576:

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன்* கண்டு கொண்மின்*

ஞாலம் அறியப் பழிசுமந்தேன்* நன்னுதலீர்! இனி நாணித்தான்என்*

நீலமலர் நெடுஞ்சோதிசூழ்ந்த* நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட*

கோலவளையொடு மாமைகொள்வான்* எத்தனைகாலம் கூடச்சென்றே?      8.2.3

 

3577:

கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?* கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்*

பாடற்றொழிய இழந்துவைகல்* பல்வளையார்முன் பரிசழிந்தேன்*

மாடக்கொடிமதிள் தென்குளந்தை* வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்*

ஆடல்பறவை உயர்த்தவெல்போர்* ஆழிவலவினை ஆதரித்தே.            8.2.4

 

3578:

ஆழிவலவினை ஆதரிப்பும்* ஆங்கவன் நம்மில் வரவும் எல்லாம்*

தோழியர்காள்! நம்முடையமேதான்?* சொல்லுவதோ இங்கு அரியதுதான்*

ஊழிதோறூழி ஒருவனாக* நன்குணர்வார்க்கும் உணரலாகா*

சூழலுடைய சுடர்கொளாதித்* தொல்லையஞ்சோதி நினைக்குங்காலே.          8.2.5

 

3579:

தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்* என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்*

எல்லையிலாதன கூழ்ப்புச்செய்யும்* அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*

அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல் சொல்லீர்*

வல்லிவளவயல்சூழ் குடந்தை* மாமலர்க்கண் வளர்க்கின்றமாலே.            8.2.6

 

3580:

மாலரிகேசவன் நாரணன்* சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்என்றென்று*

ஓலமிட என்னைப் பண்ணிவிட்டிட்டு* ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*

ஏலமலர் குழல் அன்னைமீர்காள்!* என்னுடைத் தோழியர்க்காள்! என்செய்கேன்?*

காலம்பலசென்றும் காண்பதாணை* உங்களோடு எங்கள் இடையில்லையே.            8.2.7

 

3581:

இடையில்லையான் வளர்த்தகிளிகாள்* பூவைகள்காள்!குயில்காள்!மயில்காள்*

உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்* ஒன்றும் ஒழியவொட்டாது கொண்டான்*

அடையும் வைகுந்தமும் பாற்கடலும்* அஞ்சனவெற்பும் அவைநணிய*

கடையறப்பாசங்கள் விட்டபின்னைஅன்றி* அவன்அவை காண்கொடானே.            8.2.8

 

3582:

காண்கொடுப்பானல்லன் ஆர்க்கும் தன்னை* கைசெயப்பாலதோர் மாயந்தன்னால்*

மாண்குறள் கோலவடிவுகாட்டி* மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*

சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த* தேவபிராற்கு என் நிரைவினோடு*

நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்* என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்.   

3583:

என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்!* யான் இனிச்செய்வதென்? என் நெஞ்சுஎன்னை*

நின்னிடையேன் அல்லேன்என்றுநீங்கி* நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*

பன்னெடுஞ்சூழ்சுடர் ஞாயிற்றோடு* பான்மதி ஏந்தி ஓர்க்கோலநீல*

நன்னெடுங்குன்றம் வருவதொப்பான்* நான்மலர்ப் பாதம் அடைந்ததுவே.      8.2.10

 

3584:##

பாதம் அடைவதன் பாசத்தாலே* மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு*

கோதில்புகழ்க்கண்ணன் தன்னடிமேல்*  வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*

தீதில் அந்தாதியோர் ஆயிரத்துள்* இவையுமோர் பத்து இசையோடும் வல்லார்*

ஆதுமோர் தீதிலராகி*  அங்கும்இங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (2)    

 

மூன்றாம் திருமொழி

 

3585:##

அங்கும் இங்கும்* வானவர் தானவர்*

யாவரும் எங்கும் இனையைஎன்று* உன்னைஅறியகிலாதுஅலற்றி*

அங்கம்சேரும்* பூமகள் மண்மகள் ஆய்மகள்*

சங்குசக்கரக் கையவன் என்பர்* சரணமே. (2)    8.3.1

 

3586:

சரணமாகிய* நான்மறை நூல்களும் சாராதே*

மரணம் தோற்றம்* வன்பிணி மூப்பென்றிவை மாய்த்தோம்*

கரணப்பல்படை* பற்றறவோடும் கனலாழி*

அரணத்தின் படையேந்திய* ஈசற்கு ஆளாயே.  8.3.2

 

3587:

ஆளும் ஆளார் ஆழியும்* சங்கும் சுமப்பார்தாம்*

வாளும் வில்லும் கொண்டு* பின் செல்வார் மற்றில்லை*

தாளும் தோளும்* கைகளையாரத் தொழக்காணேன்*

நாளும் நாளும் நாடுவன்* அடியேன் ஞாலத்தே. 8.3.3

 

3588:

ஞாலம் போனகம்பற்றி* ஓர்முற்றா உருவாகி*

ஆலம்பேரிலை* அன்னவசஞ்செய்யும் அம்மானே*

காலம்பேர்வதுஓர்* காரிருள் ஊழி ஒத்துளதால்*

உன்கோலங்காரெழில்* காணலுற்று ஆழும் கொடியேற்கே.            8.3.4

 

3589:

கொடியார்மாடக்* கோளுரகத்தும் புளிங்குடியும்*

மடியாதின்னே* நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*

அடியார் அல்லல்தவிர்த்த* அசைவோ?அன்றேல்*

இப்படிதான் நீண்டுதாவிய* அசைவோ?பணியாயே.  8.3.5

 

3590:

பணியாஅமரர்* பணிவும் பண்பும் தாமேயாம்*

அணியார் ஆழியும்* சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*

தணியா வெந்நோய்* உலகில் தவிர்ப்பான்*

திருநீல மணியார்மேனியோடு* என்மனம் சூழவருவாரே.   8.3.6

 

3591:

வருவார் செல்வார்* வண்பரிசாரத்து இருந்த*

என்திருவாழ்மார்வற்கு* என்திறம் சொல்லார் செய்வதுஎன்*

உருவார் சக்கரம்* சங்குசுமந்து இங்குஉம்மோடு*

ஒருபாடுழல்வான்* ஓரடியானும் உளனென்றே. 8.3.7

 

3592:

என்றேல் என்னை* உன்ஏரார்க்கோலத்திருந்த் அடிக்கீழ்*

நின்றே ஆட்செய்ய* நீகொண்டருள நினைப்பதுதான்*

குன்றேழ் பாரேழ்* சூழ்கடல்ஞாலம் முழுவேழும்*

நின்றே தாவிய* நீள்கழல் ஆழித் திருமாலே!      8.3.8

 

3593:

திருமால் நான்முகன்* செஞ்சடையான் என்றுஇவர்கள்*

எம்பெருமான் தன்மையை* யார் அறிகிற்பார் பேசியென்*

ஒருமாமுதல்வா!* ஊழிப்பிரான் என்னை ஆளுடை*

கருமாமேனியன்!என்பன்* என்காதல் கலக்கவே.         8.3.9

 

3594:

கலக்கம் இல்லா* நல்தவமுனிவர் கரைகண்டோர்*

துளக்கம் இல்லா* வானவர் எல்லாம் தொழுவார்கள்*

மலக்கம் எய்த* மாகடல்தன்னைக் கடைந்தானை*

உலக்க நாம் புகழ்கிற்பது* என்செய்வது உரையீரே.    8.3.10

 

3595:##

உரையா வெந்நோய்தவிர* அருள் நீள்முடியானை*

வரையார்மாட* மன்னு குருகூர்ச் சடகோபன்*

உரையேய் சொல்தொடை* ஓராயிரத்துள் இப்பத்தும்*

நிரையே வல்லார்* நீடு உலகத்துப் பிறவாரே. (2)          8.3.11

 

நான்காம் திருமொழி

  

3596:##

வார்கடா அருவி யானை மாமலையின்* மருப்பிணைக் குவடிறுத்துருட்டி*

ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து* அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

போர்கடா அரசர் புறக்கிட* மாடமீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*

சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே.(2)

 

3597:

எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்* இமையவர் அப்பன் என்அப்பன்*

பொங்குமூவுலகும் படைத்தளித்தழிக்கும்* பொருந்துமூவுருவம் எம்அருவன்*

செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு-

அங்கு அமர்க்கின்ற* ஆதியான் அல்லால்* யாவர்மற்றுஎன்அமர் துணையே? 8.4.2

 

3598:

என்னமர்பெருமான் இமையவர்பெருமான்* இருநிலம் இடந்த எம்பெருமான்*

முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள* என்னைஆள்கின்ற எம்பெருமான்*

தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்று ஆற்றங்கரைமீபால்-

நின்றஎம்பெருமான்* அடியல்லால் சரணம் நினைப்பிலும்* பிறிதில்லை எனக்கே.  

 

3599:

பிறிதில்லை எனக்குப் பெரியமூவுலகும்* நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த*

குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த* கோலமாணிக்கம் என்எம்மான்*

செறிகுலைவாழைகமுகு தெங்கனிசூழ்* திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறுஅறிய*

மெய்ம்மையே நின்ற எம்பெருமான்* அடியிணை அல்லதோர் அரணே.       8.4.4

 

3600:

அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை* அது பொருளாகிலும்*

அவனை அல்லது என்ஆவி அமர்ந்தணைகில்லாது* ஆதலால் அவன் உறைகின்ற*

நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த* நறும்புகை விசும்பொளி மறைக்கும்*

நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.8.4.5

 

3601:

எனக்கு நல்அரணை எனதுஆருயிரை* இமையவர் தந்தைதாய் தன்னை*

தனக்கும் தன் தன்மை அறிவரியானைத்* தடங்கடல்பள்ளி அம்மானை*

மனக்கொள்சீர் மூவாயிரவர்* வண்சிவனும் அயனும்தானும் ஒப்பார்வாழ்*

கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே.

 

3602:

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட* அத்திருவடி என்றும்*

திருச்செய்ய கமலக்கண்ணும்* செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

திருச்செய்யகமல உந்தியும்* செய்யகமல மார்பும் செய்யவுடையும்*

திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்* திகழ என் சிந்தையுளானே.8.4.7

 

3603:

திகழ என்சிந்தைஉள் இருந்தானைச்* செழுநிலத்தேவர் நான்மறையோர்*

திசை கைகூப்பி ஏத்தும்* திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறங்கரையானை*

புகர்கொள்வானவர்கள் புகலிடந்தன்னை* அசுரர்வங்கையர் வெங்கூற்றை*

புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்* படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!8.4.8

 

3604:

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்* பிரமபரம்பரன் சிவபெருமான் அவனே*

இடைப்புக்கோர் உருவும் ஒழிவில்லைஅவனே* புகழ்வில்லையாவையும் தானே*

கொடைப்பெரும்புகழார் இனையர் தன்னானார்* கூறியவிச்சையோடு ஒழுக்கம்*

நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.     

 

3605:

அமர்ந்த நாதனை அவர்அவராகி* அவர்க்கருள் அருளும் அம்மானை*

அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்* திருச்சிற்றாற்றங்கரையானை*

அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்* தம்பதி அவனிதேவர் வாழ்வு*

அமர்ந்தமாயோனை முக்கணம்மானை* நான்முகனை அமர்ந்தேனே.        8.4.10

 

3606:##

தேனைநன்பாலைக் கன்னலைஅமுதைத்* திருந்துலகுண்ட அம்மானை*

வானநான்முகனை மலர்ந்தண்கொப்பூழ்* மலர்மிசைப் படைத்தமாயோனை*

கோனை வண்குருகூர் வண்சடகோபன்* சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்*

வானின்மீதேற்றி அருள்செய்துமுடிக்கும்* பிறவிமாமாயக் கூத்தினையே.8.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

3607:##

மாயக்கூத்தா!வாமனா!*வினையேன்கண்ணா! கண்கைகால்*

தூயசெய்ய மலர்களாச்*சோதிச்செவ்வாய் முகிழதா*

சாயல்சாமத் திருமேனி* தண்பாசடையா*

தாமரைநீள் வாசத்தடம்போல் வருவானே!*ஒருநாள் காண வாராயே.(2)           8.5.1

 

3608:

`காணவாராய்என்றென்று* கண்ணும்வாயும் துவர்ந்து*

அடியேன் நாணி நன்னாட்டு அலமந்தால்*இரங்கி ஒருநாள் நீஅந்தோ,

காணவாராய் கருநாயிறுதிக்கும்*கருமாமாணிக்க*

நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி* முடிசேர் சென்னி அம்மானே!            8.5.2

 

3609:

`முடிசேர் சென்னி அம்மா!*நின்மொய்பூந்தாமத் தண்துழாய்*

கடிசேர் கண்ணிப் பெருமானே!‘* என்றென்று ஏங்கி அழுதக்கால்*

படிசேர்மகரக் குழைகளும்*பவளவாயும் நால்தோளும்*

துடிசேர் இடையும் அமைந்தது ஓர்* தூநீர் முகில்போல் தோன்றாயே.         8.5.3

 

3610:

தூநீர் முகில்போல் தோன்றும்* நின்சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்*

தேநீர்க்கமலக் கண்களும்* வந்து என்சிந்தை நிறைந்தவா*

மாநீர்வெள்ளிமலை தன்மேல்* வண்கார் நீல முகில்போல*

தூநீர்க்கடலுள் துயில்வானே!* எந்தாய்! சொல்லமாட்டேனே.            8.5.4

 

3611:

சொல்லமாட்டேன் அடியேன்* உன்துளங்குசோதித் திருப்பாதம்*

எல்லையில் சீரிள ஞாயிறு* இரண்டுபோல் என்னுள்ளவா!*

அல்லல் என்னும் இருள்சேர்தற்கு* உபாயம் என்னே?ஆழிசூழ்*

மல்லல் ஞால முழுதுண்ட மாநீர்க்* கொண்டல் வண்ணனே!            8.5.5

 

3612:

`கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!* வினையேன் கண்ணா! கண்ணா*

என்அண்டவாணா!என்றுஎன்னை* ஆளக் கூப்பிட்டழைத்தக்கால்*

விண்தன்மேல்தான் மண்மேல்தான்* விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்*

தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.            8.5.6

 

3613:

வந்து தோன்றாயன்றேல்* உன்வையம்தாய மலரடிக்கீழ்*

முந்தி வந்து யான்நிற்ப*  முகப்பே கூவிப் பணிகொள்ளாய்*

செந்தண்கமலக் கண்கைகால்* சிவந்தவாயோர் கருநாயிறு*

அந்தம் இல்லாக் கதிர்பரப்பி* அலர்ந்ததொக்கும் அம்மானே!            8.5.7

 

3614:

ஒக்கும் அம்மான் உருவமென்று* உள்ளம் குழைந்து நாணாளும்*

தொக்க மேகப் பல்குழாங்கள்* காணுந்தோறும் தொலைவன்நான்*

தக்க ஐவர் தமக்காய்அன்று* ஈரைம்பதின்மர் தாள்சாய*

புக்கநல்தேர்த் தனிப்பாகா!* வாராய் இதுவோ பொருத்தமே?            8.5.8

 

3615:

`இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்!* ஏறும் இருஞ்சிறைப்புள்*

அதுவே கொடியா உயர்த்தானே!‘* என்றென்று ஏங்கி அழுதக்கால்*

எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்*

மதுவார் சோலை* உத்தர மதுரைப் பிறந்த மாயனே? 8.5.9

 

3616:

பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!* நீயின்னே*

சிறந்தகால் தீநீர்வான்* மண்பிறவுமாய பெருமானே*

கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுளெங்கும் கண்டுகொள்*

இறந்து நின்ற பெருமாயா!* உன்னை எங்கே காண்கேனே? 8.5.10

 

3617:##

`எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை* யான்?’என்றென்று*

அங்கே தாழ்ந்த சொற்களால்*  அந்தண் குருகூர்ச் சடகோபன்*

செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்*

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்* எல்லியும் காலையே. (2)            8.5.11

 

ஆறாம் திருமொழி

 

3618:##

எல்லியும் காலையும்* தன்னை நினைந்தெழ*

நல்ல அருள்கள்* நமக்கேதந்து அருள்செய்வான்*

அல்லியந் தண்ணந்துழாய்* முடிஅப்பனூர்*

செல்வர்கள் வாழும்* திருக்கடித் தானமே. (2)     8.6.1

 

3619:

திருக்கடித் தானமும்* என்னுடைச் சிந்தையும்*

ஒருக்கடுத்துஉள்ளே* உறையும்பிரான் கண்டீர்*

செருக்கடுத்துஅன்று* திகைத்த அரக்கரை*

உருக்கெடவாளி* பொழிந்த ஒருவனே.      8.6.2

 

3620:

ஒருவர் இருவர் ஓர்* மூவரென நின்று*

உருவுகரந்து* உள்ளுந்தோறும் தித்திப்பான்*

திருவமர் மார்வன்* திருக்கடித்தானத்தை*

மருவியுறைகின்ற* மாயப்பிரானே.            8.6.3

 

3621:

மாயப்பிரான்* எனவல்வினை மாய்ந்தற*

நேசத்தினால் நெஞ்சம்* நாடு குடிகொண்டான்*

தேசத்தமரர்* திருக்கடித்தானத்தை*

வாசப்பொழில்மன்னு* கோயில்கொண்டானே. 8.6.4

 

3622:

கோயில் கொண்டான்தன்* திருக்கடித் தானத்தை*

கோயில்கொண்டான்* அதேனாடும் என்னெஞ்சகம்*

கோயில்கொள்* தெய்வமெல்லாம் தொழ*

வைகுந்தம் கோயில்கொண்ட* குடக்கூத்த அம்மானே.           8.6.5

 

3623:

கூத்தஅம்மான்* கொடியேனிடர் முற்றவும்*

மாய்த்தஅம்மான்* மதுசூத வம்மானுறை*

பூத்தபொழில்தண்* திருக்கடித் தானத்தை*

ஏத்தநில்லா* குறிக்கொண்டமின் இடரே.  8.6.6

 

3624:

கொண்டமின் இடர்கெட* உள்ளத்துக் கோவிந்தன்*

மண்விண் முழுதும்* அளந்தஒண்தாமரை*

மண்ணவர் தாம்தொழ* வானவர் தாம்வந்து*

நண்ணு திருக்கடித்தான நகரே.        8.6.7

 

3625:

தான நகர்கள்* தலைசிறந்து எங்கெங்கும்*

வானின் நிலம்கடல்* முற்றும் எம்மாயற்கே*

ஆனவிடத்தும் என் நெஞ்சும்*

திருக்கடித்தான நகரும்* தனதாயப் பதியே.       8.6.8

 

3626:

தாயப்பதிகள்* தலைசிறந்து எங்கெங்கும்*

மாயத்தினால் மன்னி* வீற்றிருந்தானுறை*

தேசத்தமரர்* திருக்கடித்தானத்துள்*

ஆயர்க்கதிபதி* அற்புதன்தானே.     8.6.9

 

3627:##

அற்புதன் நாராயணன்* அரி வாமனன்*

நிற்பது மேவி* இருப்பது என்நெஞ்சகம்*

நற்புகழ் வேதியர்* நான்மறை நின்றதிர்*

கற்பகச் சோலைத்* திருக்கடித் தானமே.  8.6.10

 

3628:##

சோலை திருக்கடித்தானத்து* உறைதிருமாலை*

மதிள்குருகூர்ச்* சடகோபன் சொல்*

பாலோடு அமுதன்ன* ஆயிரத்து இப்பத்தும்*

மேலை வைகுந்தத்து* இருத்தும் வியந்தே. (2)     8.6.11

 

ஏழாம் திருமொழி

 

3629:##

இருத்தும் வியந்து என்னைத்* தன் பொன்னடிக்கீழ் என்று*

அருத்தித்து எனைத்தோர்* பலநாள் அழைத்தேற்கு*

பொருத்தமுடை* வாமனன்தான் புகுந்து*

என்தன் கருத்தையுற* வீற்றிருந்தான் கண்டுகொண்டே. (2)             8.7.1

 

3630:

இருந்தான் கண்டுகொண்டு* எனதுஏழை நெஞ்சாளும்*

திருந்தாத ஓரைவரைத்* தேய்ந்தறமன்னி*

பெருந்தாள் களிற்றுக்கு* அருள்செய்த பெருமான்*

தருந்தான் அருள்தான்* இனியான் அறியேனே. 8.7.2

 

3631:

அருள்தான் இனியான் அறியேன்* அவன்என்னுள்*

இருள்தான்அற* வீற்றிருந்தான் இதுவல்லால்*

பொருள் தானெனின்* மூவுலகும் பொருளல்ல*

மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.            8.7.3

 

3632:

மாயமயக்கு மயக்கான்* என்னை வஞ்சித்து*

ஆயன் அமரர்க்கு* அரியே எனதம்மான்*

தூய சுடர்ச்சோதி* தனதென்னுள் வைத்தான்*

தேசம் திகழும்* தன்திருவருள் செய்தே.    8.7.4

 

3633:

திகழும்தன் திருவருள் செய்து* உலகத்தார்-

புகழும் புகழ்* தானதுகாட்டித் தந்து*என்னுள்-

திகழும்* மணிக்குன்றமொன்றே ஒத்துநின்றான்*

புகழும் புகழ்* மற்றெனக்கும் ஓர்பொருளே?        8.7.5

 

3634:

பொருள்மற்றெனக்கும் ஓர்பொருள்தன்னில்* சீர்க்கத் தருமேல்*

பின்னையார்க்குஅவன்* தன்னைக் கொடுக்கும்?*

கருமாணிக்கக் குன்றத்துத்* தாமரைபோல்*

திருமார்பு கால்கண்கை* செவ்வாய் உந்தியானே.      8.7.6

 

3635:

செவ்வாயுந்தி* வெண்பல் சுடர்க்குழை தன்னோடு*

எவ்வாய்ச் சுடரும்* தம்மில்முன்வளாய்க் கொள்ள*

செவ்வாய் முறுவலோடு* எனதுள்ளத்துஇருந்த*

அவ்வாயன்றி* யான் அறியேன் மற்றருளே.        8.7.7

 

3636:

அறியேன் மற்றருள்* என்னையாளும் பிரானார்*

வெறிதே அருள்செய்வர்* செய்வார்கட்கு உகந்து*

சிறியேனுடைச்* சிந்தையுள் மூவுலகும்*

தன்நெறியா வயிற்றில்கொண்டு* நின்றொழிந்தாரே.           8.7.8

 

3637:

வயிற்றில் கொண்டு* நின்றொழிந்தாரும் யவரும்*

வயிற்றில் கொண்டு* நின்று ஒருமூவுலகும்*

தம் வயிற்றில் கொண்டு* நின்றவண்ணம் நின்றமாலை*

வயிற்றில் கொண்டு* மன்னவைத்தேன் மதியாலே.    8.7.9

 

3638:

வைத்தேன் மதியால்* எனதுள்ளத்தகத்தே*

எய்த்தே ஒழிவேனல்லேன்* என்றும் எப்பொதும்*

மொய்த்தேய்திரை* மோது தண்பாற் கடலுளால்*

பைத்தேய் சுடர்ப்பாம்பணை* நம்பரனையே.    8.7.10

 

3639:##

சுடர்ப்பாம்பணை நம்பரனைத்* திருமாலை*

அடிச்சேர்வகை* வண்குருகூர்ச் சடகோபன்*

முடிப்பான் சொன்னவாயிரத்து* இப்பத்தும் சன்மம்விட*

தேய்ந்தற நோக்கும்* தன்கண்கள் சிவந்தே. (2) 8.7.11

 

எட்டாம் திருமொழி

 

3640:##

கண்கள் சிவந்து பெரியவாய்* வாயும் சிவந்து கனிந்து*

உள்ளே வெண்பல் இலகு சுடரிலகு* விலகு மகர குண்டலத்தன்*

கொண்டல் வண்ணன் சுடர்முடியன்* நான்கு தோளன் குனிசார்ங்கன்*

ஒண் சங்கதை வாளாழியான்* ஒருவன் அடியேன் உள்ளானே. (2)            8.8.1

 

3641:

அடியேனுள்ளான் உடலுள்ளான்* அண்டத்தகத்தான் புறத்துள்ளான்*

படியேயிது என்றுரைக்கலாம் படியன்* அல்லன் பரம்பரன்*

கடிசேர் நாற்றத்துள்ளாலை* இன்பத் துன்பக் கழிநேர்மை*

ஒடியா இன்பப் பெருமையோன்* உணர்விலும்பர் ஒருவனே.            8.8.2

 

3652:

உணர்விலும்பர் ஒருவனை* அவனது அருளால் உறல்பொருட்டு*

என்உணர்வினுள்ளே இருத்தினேன்* அதுவும் அவனது இன்னருளே*

உணர்வும் உயிரும் உடம்பும்* மற்ற உலப்பிலனவும் பழுதேயாம்*

உணர்வைப் பெறவூர்ந்திறவேறி* யானும் தானாய் ஒழிந்தானே.             8.8.3

 

3643:

யானும் தானாய் ஒழிந்தானை* யாதும் யவர்க்கும் முன்னோனை*

தானும் சிவனும் பிரமனுமாகிப்* பணைத்த தனிமுதலை*

தேனும் பாலும் கன்னலும்* அமுதுமாகித் தித்தித்து*

என் ஊனில் உயிரில் உணர்வினில்* நின்ற ஒன்றை உணர்ந்தேனே.              8.8.4

 

3644:

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு* அதனுள் நேர்மை அதுவிதுவென்று*

ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது* உணர்ந்தும் மேலும் காண்பரிது*

சென்று சென்று பரம்பரமாய்* யாதுமின்றித் தேய்ந்தற்று*

நன்று தீதென்று அறிவரிதாய்* நன்றாய் ஞானம் கடந்ததே.             8.8.5

 

3645:

நன்றாய் ஞானம் கடந்துபோய்* நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து*

ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்* உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து*

சென்றாங்கு இன்ப துன்பங்கள்* செற்றுக் களைந்து பசையற்றால்*

அன்றே அப்போதேவீடு* அதுவே வீடு வீடாமே.  8.8.6

 

3646:

அதுவே வீடு வீடு பேற்று* இன்பந்தானும் அதுதேறி*

எதுவே தானும் பற்றின்றி* யாது மிலிகளாகிற்கில்*

அதுவே வீடு வீடு பேற்று* இன்பந்தானும் அதுதேறாது*

`எதுவே வீடு ஏது இன்பம்?’என்று* எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே.             8.8.7

 

3647:

எய்த்தார் எய்த்தார் எய்த்தாரென்று* இல்லத்தாரும் புறத்தாரும்-

மொய்த்து* ஆங்கல் அறிமுயங்கத்* தாம்போகும் போது*

உன்மத்தர்போல் பித்தேயேறி அநுராகம் பொழியும்போது* எம் பெம்மானோடு-

ஒத்தேசென்று* அங்குள்ளம்கூடக்* கூடிற்றாகில் நல்லுறைப்பே.            8.8.8

 

3648:

கூடிற்றாகில் நல்லுறைப்புக்* கூடாமையைக் கூடினால்*

ஆடல் பறவை உயர்கொடி* எம்மாயன் ஆவதது அதுவே*

வீடைப் பண்ணி ஒருபரிசே* எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்*

ஓடித் திரியும் யோகிகளும்* உளருமில்லை அல்லரே.  8.8.9

 

3649:

உளருமில்லை அல்லராய்* உளராயில்லை ஆகியே*

உளரெம்மொருவர் அவர்வந்து* என்உள்ளத்துள்ளே உறைகின்றார்*

வளரும் பிறையும் தேய்பிறையும்போல்* அசைவும் ஆக்கமும்*

வளரும் சுடரும் இருளும்போல்* தெருளும் மருளும் மாய்த்தோமே.            8.8.10

 

3650:##

தெருளும் மருளும் மாய்த்துத்* தன்திருந்து செம்பொற் கழலடிக்கீழ்*

அருளியிருத்தும் அம்மானாம்* அயனாம் சிவனாம்*

திருமாலால் அருளப்பட்ட சடகோபன்* ஓராயிரத்துள் இப்பத்தால்*

அருளி அடிக்கீழ் இருத்தும்* நம்மண்ணல் கருமாணிக்கமே. (2)            8.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3651:##

கருமாணிக்க மலைமேல்* மணித்தடந்தாமரைக் காடுகள்போல்*

திருமார்வு வாய்கண்கை* உந்திகாலுடை ஆடைகள் செய்யபிரான்*

திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்* அன்னைமீர் இதற்கு என்செய்கேனா. (2)

 

3652:

அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?* அணிமேருவின் மீதுலவும்*

துன்னுசூழ் சுடர் ஞாயிறும்* அன்றியும் பல்சுடர்களும்போல்*

மின்னு நீள்முடியாரம் பல்கலன்* தானுடை எம்பெருமான்*

புன்னையம் பொழில்சூழ்* திருப்புலியூர் புகழும்இவளே.8.9.2

 

3653:

புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*

எங்கும்திகழுமெரியோடு செல்வதொப்பச்*  செழுங்கதிராழிமுதல்*

புகழும் பொருபடை ஏந்திப்* போர்புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்*

திகழு மணிநெடு மாடநீடு* திருப்பூலியுர் வளமே.8.9.3

 

3654:

ஊர்வளங்கிளர் சோலையும்* கரும்பும் பெருஞ்செந்நெலும் சூழ்ந்து*

ஏர் வளங்கிளர் தண்பணைக்* குட்டநாட்டுத் திருப்பூலியுர்*

சீர்வளங்கிளர் மூவுலகுண்டுமிழ்* தேவபிரான்*

பேர்வளங்கிளர்ந்தன்றிப் பேச்சிலள்* இன்று இப்புனையிழையே.8.9.4

 

3655:

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும்* புதுக்கணிப்பும்*

நினையும் நீர்மையதன்று இவட்குஇது* நின்று நினைக்கப்புக்கால்*

சுனையினுள் தடந்தாமரை மலரும்* தண் திருப்புலியுர்*

முனைவன் மூவுலகாளி* அப்பன் திருவருள் மூழ்கினளே.8.9.5

 

3656:

திருவருள் மூழ்கி வைகலும்* செழுநீர்நிறக் கண்ணபிரான்*

திருவருள்களும் சேர்ந்தமைக்கு* அடையாளம் திருந்தவுள*

திருவருள் அருளால் அவன்* சென்று சேர்தண் திருப்பூலியுர்*

திருவருள் கமுகொண் பழத்தது* மெல்லியல் செவ்விதழே.8.9.6

 

 

3657:

மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க* வீங்கிளந்தாள்கமுகின்*

மல்லிலை மடல்வாழை* ஈங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து*

புல்லிலைத் தெங்கினூடு* கால் உலவும்தண் திருப்பூலியுர்*

மல்லலம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்* இம் மடவரலே. 8.9.7

 

3658:

மடவரல் அன்னைமீர்கட்கு* என்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ*

வடமொழி மறைவாணர்* வேள்வியுள் நெய்யழல்வான் புகைபோய்*

திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்* தண் திருப்பூலியுர்*

படவர அணையான் தன்நாமம் அல்லால்* பரவாள் இவளே. 8.9.8

 

3659:

பரவாள் இவள் நின்று இராப்பகல்* பனிநீர்நிறக் கண்ணபிரான்*

விரவாரிசை மறை வேதியரொலி* வேலையின் நின்றொலிப்ப*

கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்* தீவிகை நின்றலரும்*

புரவார் கழனிகள் சூழ்* திருப்புலியூர்ப் புகழன்றிமற்றே. 8.9.9

 

3660:

அன்றி மற்றோர் உபாயமென்று* இவளந்தன் துழாய்கமழ்தல்*

குன்றமாமணி மாடமாளிகைக்* கோலக் குழாங்கள் மல்கி*

தென்திசைத் திலதம்புரைக்* குட்டநாட்டுத் திருப்பூலியுர்*

நின்ற மாயப்பிரான் திருவருளாம்* இவள் நேர்ப்பட்டதே.8.9.10

 

3661:##

நேர்ப்பட்ட நிறை மூவுலகுக்கும்* நாயகன் தன்னடிமை*

நேர்ப்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்* தொண்டன் சடகோபன் சொல்*

நேர்ப்பட்ட தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பத்தும் நேர்பட்டார்*

அவர் நேர்பட்டார்* நெடுமாற்கு அடிமை செய்யவே. (2)8.9.11

 

பத்தாம் திருமொழி

 

3662:##

நெடுமாற்கடிமை செய்வேன்போல்*  அவனை கருத வஞ்சித்து*

தடுமாற்றற்ற தீக்கதிகள்*  முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*

கொடுமாவினையேன் அவனடியார் அடியே* கூடும் இதுவல்லால்*

விடுமாறென்பதென்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே? (2) 8.10.1

 

3663:

வியன் மூவுலகு பெறினும்போய்த்* தானே தானே ஆனாலும்*

புயல் மேகம்போல் திருமேனியம்மான்* புனைபூங் கழலடிக்கீழ்*

சயமே அடிமை தலைநின்றார்* திருத்தாள் வணங்கி*

இம்மையே பயனே இன்பம் யான்பெற்றது* உறுமோ பாவியேனுக்கே? 8.10.2

 

3664:

உறுமோ பாவியேனுக்கு* இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய*

சிறுமாமேனி நிமிர்த்த* என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*

நறுமாவிரைநாண் மலரடிக்கீழ்ப்*  புகுதல் அன்றி அவனடியார்*

சிறுமா மனிசராய் என்னைஆண்டார்* இங்கே திரியவே.  8.10.3

 

3665:

இங்கே திரிந்தேற்கு இழக்குற்றென்!*  இருமாநிலம் முன்உண்டுமிழ்ந்த*

செங்கோலத்த பவளவாய்ச்*  செந்தாமரைக்கண் என்னம்மான்*

பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்*  புலன்கொள் வடிவு என்மனத்ததாய்*

அங்கேய் மலர்கள் கையவாய்*  வழிபட்டோட அருளிலே?  8.10.4

 

3666:

வழிபட்டோட அருள்பெற்று* மாயன் கோல மலரடிக்கீழ்*

சுழிபட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளத்து* இன்புற்றுஇருந்தாலும்*

இழிபட்டோடும் உடலினில்பிறந்து* தஞ்சீர் யான்கற்று*

மொழிபட்டோடும் கவியமுதம்* நுகர்ச்சி உறுமோ முழுதுமே? 8.10.5

 

3667:

நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழில்*

புகர்ச்செம்முகத்த களிறட்ட* பொன்னாழிக்கை என்னம்மான்*

நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்* நீண்ட அசுரர் உயிரெல்லாம்*

தகர்த்துண்டுழலும் புட்பாகன்* பெரிய தனிமாப் புகழே? 8.10.6

 

3668:

தனிமாப் புகழே எஞ்ஞான்றும்* நிற்கும் படியாத் தான்தோன்றி*

முனிமாப் பிரம முதல்வித்தாய்* உலகம் மூன்றும் முளைப்பித்த*

தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்* புகுதல் அன்றி அவனடியார்*

நனிமாக் கலவி இன்பமே* நாளும் வாய்க்க நங்கட்கே. 8.10.7

 

3669:

நாளும் வாய்க்க நங்கட்கு* நளிர்நீர்க் கடலைப் படைத்து*

தன்தாளும் தோளும் முடிகளும்* சமன் இலாத பலபரப்பி*

நீளும் படர்பூங் கற்பகக்காவும்* நிறைபன்னாயிற்றின்*

கோளுமுடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே. 8.10.8

 

3670:

தமர்கள் கூட்ட வல்வினையை* நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி*

அமர்கொள் ஆழி சங்குவாள்* வில்தண்டாதி பல்படையன்*

குமரன் கோல ஐங்கணைவேள்தாதை* கோதில் அடியார்தம்*

தமர்கள் தமர்கள் தமர்களாம்* சதிரே வாய்க்க தமியேற்கே.8.10.9

 

3671:

வாய்க்க தமியேற்கு* ஊழிதோறூழி ஊழி*மாகாயாம்-

பூக்கொள் மேனி நான்குதோள்* பொன்னாழிக்கை என்னம்மான்*

நீக்கமில்லா அடியார்தம்* அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்*

அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்* நல்ல கோட்பாடே.  8.10.10

 

3672:##

நல்ல கோட்பாட்டு உலகங்கள்* மூன்றினுள்ளும் தான்நிறைந்த*

அல்லிக் கமலக் கண்ணனை* அந்தண் குருகூர்ச் சடகோபன்*

சொல்லப் பட்ட ஆயிரத்துள்* இவையும் பத்தும் வல்லார்கள்*

நல்ல பதத்தால் மனைவாழ்வர்* கொண்ட பெண்டிர் மக்களே. (2)8.10.11