முதல் திருமொழி
3783:##
தாள தாமரைத்* தடமணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றிலம் கதியே. (2) 10.1.1
3784:
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேருடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழலவன் அடிநிழல்* தடமன்றி யாமே. 10.1.2
3785:
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றென்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதிடர் கெடவே. 10.1.3
3786:
இடர்கெட எம்மைப் போந்தளியாய்* என்றென்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே. 10.1.4
3787:
தொண்டீர்! வம்மின்* நம்சுடரொளி ஒருதனி முதல்வன்*
அண்ட மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பொருஞ்செந்நெல் விளைய*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே. 10.1.5
3888:
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடியன்றி* மற்றிலம் அரணே. 10.1.6
3789:
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலா*
சுற்று நீர்படைத்து* அதன்வழித் தொன்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே. 10.1.7
3790:
துயர்கெடும் கடிதடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தட மணியொளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரமுடைய* வல்லரக்கர் புக்கழுந்த*
தயரதன் பெற்ற* மரதக மணித் தடத்தினையே. 10.1.8
3791:
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடந்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்லரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே. 10.1.9
3792:
நாமடைந்த நல்லரண்* நமக்கென்று நல்லமரர்*
தீமை செய்யும் வல்லசுரரை* அஞ்சிச் சென்றடைந்தால்*
காமரூபங் கொண்டு* எழுந்தளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்! 10.1.10.
3793:##
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடமாடு-
கூத்தனை* குருகூர்ச் சடகோபன்* குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2) 10.1.11
இரண்டாம் திருமொழி
3794:##
கெடும் இடராயவெல்லாம்* கேசவா வென்ன* நாளும்-
கொடுவினை செய்யும்* கூற்றின் தமர்களும் குறுககில்லார்*
விடமுடை அரவில்பள்ளி* விரும்பினான் சுரும்பலற்றும்*
தடமுடை வயல்* அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே. (2) 10.2.1
3795:
இன்றுபோய்ப் புகுதிராகில்* எழுமையும் ஏதம்சார*
குன்றுநேர் மாடமாடே* குருந்துசேர் செருந்திபுன்னை*
மன்றலர் பொழில்* அனந்தபுரநகர் மாயன்நாமம்*
ஒன்றும் ஓராயிரமாம்* உள்ளுவார்க்கு உம்பரூரே. 10.2.2
3796:
ஊரும்புட் கொடியும் அஃதே* உலகெல்லாம் உண்டுமிழ்ந்தான்*
சேரும் தண்ணனந்தபுரம்* சிக்கெனப் புகுதிராகில்*
தீரும்நோய் வினைகளெல்லாம்* திண்ணநாம் அறியச்சொன்னோம்*
பேரும் ஓராயிரத்துள்* ஒன்றுநீர் பேசுமினே. 10.2.3
3797:
பேசுமின் கூசமின்றிப்* பெரியநீர் வேலைசூழ்ந்து*
வாசமே கமழும் சோலை* வயலணியனந்தபுரம்*
நேசஞ்செய்து உறைகின்றானை* நெறிமையால் மலர்கள்தூவி*
பூசனை செய்கின்றார்கள்* புண்ணியம் செய்தவாறே. 10.2.4
3798:
புண்ணியம் செய்து* நல்ல புனலொடு மலர்கள்தூவி*
எண்ணுமின் எந்தைநாமம்* இப்பிறப்பறுக்கும் அப்பால்*
திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* செறிபொழில் அனந்தபுரத்து*
அண்ணலார் கமலபாதம்* அணுகுவார் அமரராவார். 10.2.5
3799:
அமரராய்த் திரிகின்றார்கட்கு* ஆதிசேர் அனந்தபுரத்து*
அமரர்கோன் அர்ச்சிக்கின்று* அங்ககப்பணி செய்வர்விண்ணோர்*
நமர்களோ! சொல்லக்கேண்மின்* நாமும்போய் நணுகவேண்டும்*
குமரனார் தாதை* துன்பம் துடைத்த கோவிந்தனாரே. 10.2.6
3800:
துடைத்த கோவிந்தனாரே* உலகுயிர் தேவும்மற்றும்*
படைத்த எம்பரமமூர்த்தி* பாம்பணைப் பள்ளிகொண்டான்*
மடைத்தலை வாளைபாயும்* வயலணியனந்தபுரம்*
கடைத்தலை சீய்க்கப்பெற்றால்* கடுவினை களையலாமே. 10.2.7
3801:
கடுவினை களையலாகும்* காமனைப் பயந்தகாளை*
இடவகை கொண்டதென்பர்* எழிலணியனந்தபுரம்*
படமுடையரவில் பள்ளி* பயின்றவன் பாதம்காண*
நடமினோ நமர்களுள்ளÖர்!* நாம் உமக்கறியச் சொன்னோம். 10.2.8
3802:
நாம் உமக்கு அறியச்சொன்ன* நாள்களும் நணியவான*
சேமம் நன்குடைத்துக்கண்டீர்* செறிபொழிலனந்தபுரம்*
தூமநல் விரைமலர்கள்* துவளற ஆய்ந்துகொண்டு*
வாமனன் அடிக்கென்று எத்த* மாய்ந்தறும் வினைகள்தாமே. 10.2.9
3803:
மாய்ந்தறும் வினைகள்தாமே* மாதவா என்ன* நாளும்-
ஏய்ந்தபொன் மதிள்* அனந்தபுர நகரெந்தைக்கென்று*
சாந்தொடு விளக்கம்தூபம்* தாமரை மலர்கள்நல்ல*
ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்* அந்தமில் புகழினாரே. 10.2.10.
3804:##
அந்தமில் புகழ்* அனந்தபுர நகர் ஆதிதன்னை*
கொந்தலர் பொழில்* குருகூர் மாறன் சொல்லாயிரத்துள்*
ஐந்தினோடு ஐந்தும்வல்லார்* அணைவர்போய் அமருலகில்*
பைந்தொடி மடந்தையர்தம்* வேய்மரு தோளிணையே. (2) 10.2.11
மூன்றாம் திருமொழி
3805:
வேய்மரு தோளிணை மெலியு மாலோ!*
மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்கா*
காமரு குயில்களும் கூவு மாலோ!*
கணமயில் அவைகலந்து ஆலு மாலோ*
ஆமருவின நிரை மேய்க்க நீபோக்கு*
ஒருபகல் ஆயிரம் ஊழியாலோ*
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி யாலோ!*
தகவிலை தகவிலையே நீ கண்ணா! (2) 10.3.1
3806:
தகவிலை தகவிலையே நீ கண்ணா!*
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா*
சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச்-
சூழ்ந்து* அதுகனவென நீங்கி யாங்கே*
அகவுயிர் அகமகந்தோறும் உள்புக்கு*
ஆவியின் பரமல்ல வேட்கை அந்தோ*
மிகமிக இனி உன்னைப் பிரிவையாமால்*
வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே. 10.3.2
3807:
வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*
வெவ்வுயிர் கொண்டு எனதாவி வேமால்*
யாவரும் துணையில்லை யான் இருந்து*
உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*
போவதன்று ஒருபகல் நீயகன்றால்*
பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா*
சாவது இவ்வாய்க்குலத் தாய்ச்சியோமாய்ப் பிறந்த*
இத் தொழுத்தையோம் தனிமை தானே. 10.3.3
3808:
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-
துயரமும்* நினைகிலை கோவிந்தா* நின்-
தொழுத்தனிற் பசுக்களையே விரும்பித்*
துறந்து எம்மையிட்டு அவை மேய்க்கப் போதி*
பழுத்த நல்லமுதின் இன்சாற்று வெள்ளம்*
பாவியேன் மனமகந்தோறும் உள்புக்கு-
அழுத்த* நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி*
நினைதொறும் ஆவிவேமால். 10.3.4
3809:
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*
பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!*
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப்*
பெருமத மாலையும் வந்தின் றாலோ!*
மணிமிகு மார்வினின் முல்லைப் போது*
என்வனமுலை கமழ்வித்து உன்வாயமுதம்தந்து*
அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய். 10.3.5
3810:
அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*
ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்*
பிடித்தது நடு உனக்கு அரிவையரும் பலர்
அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*
வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா*
மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே*
வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*
வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கே. 10.3.6
3811:
வேம் எமதுயிர் அழல் மெழுகிலுக்கு*
வெள்வளை மேகலை கழன்று வீழ*
தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத்*
தொணைமுலை பயந்து என தோள்கள் வாட*
மாமணி வண்ணா! உன்செங்கமல வண்ணா*
மென் மலரடி நோவ நீபோய்*
ஆமகிழ்ந்து உகந்தவை மேய்க்கின்று உன்னோடு*
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 10.3.7
3812:
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கென்று*
ஆழும் என்னாருயிர் ஆன்பின் போகேல்*
கசிகையும் வேட்கையும் உள்கலந்து*
கலவியும் நலியும் என்கை கழியேல்*
வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும்*
கைகளும் பீதக உடையும் காட்டி*
ஒசிசெய் நுண்ணிடையிள வாய்ச்சியர்*
நீயுகக்கும் நல்லவரொடும் உழிதராயே. 10.3.8
3813:
உகக்கு நல்லவரொடும் உழிதந்து*
உன்தன் திருவுள்ளம் இடர்கெடுந்தோறும்* நாங்கள்-
வியக்க இன்புறுதும் எம்பெண்மை யாற்றோம்*
எம்பெருமான்! பசு மேய்க்கப் போகேல்*
மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டு*
நின்று உழிதருவர் கஞ்ச னேவ*
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*
அவத்தங்கள் விளையும் என்சொற்கொள் அந்தோ! 10.3.9
3814:
அவத்தங்கள் விளையும் என்சொற்கொளந்தோ!*
அசுரர்கள் வங்கையர் கஞ்சனேவ*
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்*
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்-
உவர்த்தலை* உடன்திரி கிலையும் என்றென்று-
ஊடுற* என்னுடை ஆவி வேமால்*
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே! 10.3.10.
3815:##
செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு*
அத்திருவடி திருவடி மேல்* பொருநல்-
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்*
வண்சட கோபன் சொல்லாயிரத்துள்*
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*
அவனொடும் பிரிவதற்கு இரங்கி* தையல்-
அங்கவன் பசுநிரை மேய்ப் பொழிப்பான்-
உரைத்தன* இவையும் பத்து அவற்றின் சார்வே. (2) 10.3.11
நான்காம் திருமொழி
3816:##
சார்வே தவநெறிக்குத்* தாமோதரன் தாள்கள்*
கார்மேக வண்ணன்* கமல நயனத்தன்*
நீர்வானம் மண்எரி காலாய்* நின்ற நேமியான்*
பேர் வானவர்கள்* பிதற்றும் பெருமையனே. (2) 10.4.1
3817:
பெருமையனே வானத்து இமையோர்க்கும்* காண்டற்-
கருமையனே* ஆகத்தணை யாதார்க்கு* என்றும்-
திருமெய் உரைகின்ற* செங்கண்மால்* நாளும்-
இருமை வினைகடிந்து* இங்கு என்னையாள்கின்றானே. 10.4.2
3818:
ஆள்கின்றான் ஆழியான்* ஆரால் குறைவுடையம்?*
மீள்கின்றதில்லைப்* பிறவித் துயர்கடிந்தோம்*
வாள்கெண்டை ஒண்கண்* மடப்பின்னை தன்கேள்வன்*
தாள்கண்டு கொண்டு* என் தலைமேல் புனைந்தேனே. 10.4.3
3819:
தலைமேல் புனைந்தேன்* சரணங்கள்* ஆலின்-
இலைமேல் துயின்றான்* இமையோர் வணங்க*
மலைமேல்தான் நின்று* என்மனத்துள் இருந்தானை*
நிலைபேர்க்கலாகாமை* நிச்சித்திருந்தேனே. 10.4.4
3820:
நிச்சித்திருந்தேன்* என்னெஞ்சம் கழியாமை*
கைச்சக்கரத்தண்ணல்* கள்வம் பெரிதுடையன்*
மெச்சப்படான் பிறர்க்கு* மெய்போலும் பொய்வல்லன்*
நச்சப்படும் நமக்கு* நாகத் தணையானே. 10.4.5
3821:
நாகத் தணையானை* நாள்தோறும் ஞானத்தால்*
ஆகத்தணைப் பார்க்கு* அருள்செய்யும் அம்மானை*
மாகத்து இளமதியம்* சேரும் சடையானை*
பாகத்து வைத்தான் தன்* பாதம் பணிந்தேனே. 10.4.6
3822:
பணிநெஞ்சே! நாளும்* பரம பரம்பரனை*
பிணிஒன்றும் சாரா* பிறவி கெடுத்தாளும்*
மணிநின்ற சோதி* மதுசூதன் என்னம்மான்*
அணிநின்ற செம்பொன்* அடலாழி யானே. 10.4.7
3823:
ஆழியான் ஆழி* அமரர்க்கும் அப்பாலான்*
ஊழியான் ஊழி படைத்தான்* நிரைமேய்த்தான்*
பாழியந் தோளால்* வரையெடுத்தான் பாதங்கள்*
வாழி என்நெஞ்சே!* மறவாது வாழ்கண்டாய். 10.4.8
3824:
கண்டேன் கமல மலர்ப்பாதம்* காண்டலுமே*
விண்டே யொழிந்த* வினையாயின வெல்லாம்*
தொண்டேசெய்து என்றும்* தொழுது வழியொழுக*
பண்டே பரமன் பணித்த* பணிவகையே. 10.4.9
3825:
வகையால் மனமொன்றி* மாதவனை* நாளும்-
புகையால் விளக்கால்* புதுமலரால் நீரால்*
திசைதோறு அமரர்கள்* சென்று இறைஞ்ச நின்ற*
தகையான் சரணம்* தமர்கட்கு ஓர்பற்றே. 10.4.10.
3826:##
பற்றென்று பற்றிப்* பரம பரம்பரனை*
மல்திண்தோள் மாலை* வழுதி வளநாடன்*
சொல் தொடையந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்*
கற்றார்க்கு ஓர்பற்றாகும்* கண்ணன் கழலிணையே. (2) 10.4.11
ஐந்தாம் திருமொழி
3827:##
கண்ணன் கழலிணை* நண்ணும் மனமுடையீர்*
எண்ணும் திருநாமம்* திண்ணம் நாரணமே. (2) 10.5.1
3828:
நாரணன் எம்மான்* பாரணங்காளன்*
வாரணம் தொலைத்த* காரணன் தானே. 10.5.2
3829:
தானே உலகெல்லாம்* தானே படைத்திடந்து*
தானே உண்டுமிழ்ந்து* தானே ஆள்வானே. 10.5.3
3830:
ஆள்வான் ஆழிநீர்* கோள்வாய் அரவணையான்*
தாள்வாய் மலரிட்டு* நாள்வாய் நாடீரே. 10.5.4
3831:
நாடீர் நாள்தோறும்* வாடா மலர்கொண்டு*
பாடீர் அவன்நாமம்* வீடே பெறலாமே. 10.5.5
3832:##
மேயான் வேங்கடம்* காயா மலர்வண்ணன்*
பேயார் முலையுண்ட* வாயான் மாதவனே. (2) 10.5.6
3833:
மாதவன் என்றென்று* ஓத வல்லீரேல்*
தீதொன்றும் அடையா* ஏதம் சாராவே. 10.5.7
3834:
சாரா ஏதங்கள்* நீரார் முகில்வண்ணன்*
பேர் ஆர் ஓதுவார்* ஆரார் அமரரே. 10.5.8
3835:
அமரர்க்கு அரியானை* தமர்கட்கு எளியானை*
அமரத் தொழுவார்கட்கு* அமரா வினைகளே. 10.5.9
3836:
வினைவல் இருளென்னும்* முனைகள் வெருவிப்போம்*
சுனை நன் மலரிட்டு* நினைமின் நெடியானே. 10.5.10.
3837:##
நெடியான் அருள் சூடும்* படியான் சடகோபன்*
நொடி ஆயிரத்திப்பத்து* அடியார்க்கு அருள் பேறே. (2) 10.5.11
ஆறாம் திருமொழி
3838:##
அருள்பெறுவார் அடியார்* தம் அடியனேற்கு* ஆழியான்-
அருள்தருவான் அமைகின்றான்* அதுநமது விதிவகையே*
இருள்தருமா ஞாலத்துள்* இனிப்பிறவி யான்வேண்டேன்*
மருளொழி நீமடநெஞ்சே!* வாட்டாற்றான் அடிவணங்கே. (2) 10.6.1
3839:
வாட்டாற்றான் அடிவணங்கி* மாஞாலப் பிறப்பறுப்பான்*
கேட்டாயே மடநெஞ்சே!* கேசவன் எம் பெருமானை*
பாட்டாய பலபாடிப்* பழவினைகள் பற்றறுத்து*
நாட்டாரோடு இயல்வொழிந்து* நாரணனை நண்ணினமே. 10.6.2
3840:
நண்ணினம் நாரயணனை* நாமங்கள் பலசொல்லி*
மண்ணுலகில் வளம்மிக்க* வாட்டாற்றான் வந்துஇன்று*
விண்ணுலகம் தருவானாய்* விரைகின்றான் விதிவகையே*
எண்ணின வாறாகா* இக்கருமங்கள் என்னெஞ்சே! 10.6.3
3841:
என்னெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இருந்தமிழ்நூலிவைமொழிந்து*
வன்னெஞ்சத் திரணியனை* மார்விடந்த வாட்டாற்றான்*
மன்னஞ்சப் பாரதத்துப்* பாண்டவர்க்காப் படை தொட்டான்*
நல்நெஞ்சே! நம்பெருமான்* நமக்கு அருள்தான் செய்வானே. 10.6.4
3842:
வானேற வழிதந்த* வாட்டாற்றான் பணிவகையே*
நான்ஏறப் பெறுகின்றேன்* நரகத்தை நகுநெஞ்சே*
தேனேறு மலர்த்துளவம்* திகழ்பாதன்* செழும்பறவை-
தானேறித் திரிவான்* தாளிணை என்தலைமேலே. 10.6.5
3843:
தலைமேல தாளிணைகள்* தாமரைக்கண் என்னம்மான்*
நிலைபேரான் என்நெஞ்சத்து* எப்பொழுதும் எம்பெருமான்*
மலைமாடத்து அரவணைமேல்* வாட்டாற்றான் மதமிக்க*
கொலையானை மருப்பொசித்தான்* குரைகழல்கள் குறுகினமே. 10.6.6
3844:
குரைகழல்கள் குறுகினம்* நம் கோவிந்தன் குடிகொண்டான்*
திரைகுழுவு கடல்புடைசூழ்* தென்னாட்டுத் திலதமன்ன*
வரைகுழுவு மணிமாட* வாட்டாற்றான் மலரடிமேல்*
விரைகுழுவு நறுந்துளவம்* மெய்ந்நின்று கமழுமே. 10.6.7
3845:
மெய்ந்நின்று கமழ்துளவ* விரையேறு திருமுடியன்*
கைந்நின்ற சக்கரத்தன்* கருதுமிடம் பொருதுபுனல்*
மைந்நின்ற வரைபோலும்* திருவுருவ வாட்டாற்றாற்கு*
எந்நன்றி செய்தேனா* என்னெஞ்சில் திகழவதுவே? 10.6.8
3846:
திகழ்கின்ற திருமார்பில்* திருமங்கை தன்னோடும்*
திகழ்கின்ற திருமாலார்* சேர்விடம்தண் வாட்டாறு*
புகழ்கின்ற புள்ðர்தி* போரரக்கர் குலம்கெடுத்தான்*
இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே. 10.6.9
3847:
பிரியாதுஆட் செய்யென்று* பிறப்பறுத்தாள் ஆளறக்கொண்டான்*
அரியாகி இரணியனை* ஆகங்கீண்டான் அன்று*
பெரியார்க்கு ஆட்பட்டக்கால்* பெறாதபயன் பெறுமாறு*
வரிவாள் வாயரவணைமேல்* வாட்டாற்றான் காட்டினனே. 10.6.10.
3848:##
காட்டித்தன் கனைகழல்கள்* கடுநரகம் புகலொழித்த*
வாட்டாற்று எம்பெருமானை* வளங்குருகூர்ச் சடகோபன்*
பாட்டாய தமிழ்மாலை* ஆயிரத்துள் இப்பத்தும்-
கேட்டு* ஆரார் வானவர்கள்* செவிக்கினிய செஞ்சொல்லே. (2) 10.6.11
ஏழாம் திருமொழி
3849:##
செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்* திருமாலிருஞ்சோலை*
வஞ்சக் கள்வன் மாமாயன்* மாயக் கவியாய் வந்து* என்-
நெஞ்சும் உயிரும் உள்கலந்து* நின்றார் அறியா வண்ணம்* என்-
நெஞ்சும் உயிரும் அவையுண்டு* தானே யாகி நிறைந்தானே. (2) 10.7.1
3850:
தானே ஆகி நிறைந்து* எல்லாவுலகும் உயிரும் தானேயாய்*
தானே யானென்பானாகித்* தன்னைத் தானே துதித்து* எனக்குத்-
தேனே பாலே கன்னலே அமுதே* திருமாலிருஞ்சோலை*
கோனே யாகி நின்றொழிந்தான்* என்னை முற்றும் உயிருண்டே. 10.7.2
3851:
என்னை முற்றும் உயிருண்டு* என்மாயவர் ஆக்கை இதனுள்புக்கு*
என்னை முற்றும் தானேயாய்* நின்ற மாய அம்மான் சேர்*
தென்னன் திருமாலிருஞ்சோலைத்* திசைகை கூப்பிச் சேர்ந்தயான்*
இன்னும் போவேனே கொலோ!* என்கொல் அம்மான் திருவருளே? 10.7.3
3852:
என்கொல் அம்மான் திருவருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கென்னுடலம் கைவிடான்* ஞாலத் தூடே நடந்துழக்கி*
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே. 10.7.4
3853:
நண்ணா அசுரர் நலிவெய்த* நல்ல அமரர் பொலிவெய்த*
எண்ணாதனகள் எண்ணும்* நன்முனிவர் இன்பம் தலைசிறப்ப*
பண்ணார் பாடலின் கவிகள்* யானாய்த் தன்னைத் தான்பாடி*
தென்னா வென்னும் என்னம்மான்* திருமாலிருஞ்சோலையானே. 10.7.5
3854:
திருமாலிருஞ்சோலை யானேயாகிச்* செழு மூவுலகும்* தன்-
ஒருமா வயிற்றினுள்ளே வைத்து* ஊழி ஊழி தலையளிக்கும்*
திருமால்என்னை ஆளுமால்* சிவனும் பிரமனும்காணாது*
அருமால் எய்தி அடிபரவ* அருளை ஈந்த அம்மானே. 10.7.6
3855:
அருளை ஈ எனம்மானே! என்னும்* முக்கண் அம்மானும்*
தெருள்கொள் பிரமனம்மானும்* தேவர் கோனும் தேவரும்*
இருள்கள் கடியும் முனிவரும்* ஏத்தும் அம்மான் திருமலை*
மருள்கள் கடியும் மணிமலை* திருமாலிருஞ்சோலை மலையே. 10.7.7
3856:##
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுடலே*
அருமாமாயத்து எனதுயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8
3857:
ஊழி முதல்வன் ஒருவனேயென்னும்* ஒருவன் உலகெல்லாம்*
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து* காத்துக் கெடுத்துழலும்*
ஆழி வண்ணன் என்னம்மான்* அந்தண் திருமாலிருஞ்சோலை*
வாழி மனமே கைவிடேல்* உடலும் உயிரும் மங்கவொட்டே. 10.7.9
3858:
மங்க வொட்டு உன் மாமாயை* திருமாலிருஞ்சோலைமேய*
நங்கள் கோனே! யானேநீயாகி* என்னை அளித்தானே*
பொங்கைம் புலனும் பொறியைந்தும்* கருமேந்திரியும் ஐம்பூதம்*
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி* மானாங்கார மனங்களே. 10.7.10.
3859:##
மானாங்கார மனம்கெட* ஐவர் வன்கையர் மங்க*
தானாங்கார மாய்ப்புக்குத்* தானே தானே யானானை*
தேனாங் காரப் பொழில்குருகூர்* சடகோபன் சொல்லாயிரத்துள்*
மானாங்காரத்திவை பத்தும்* திருமாலிரும் சோலைமலைக்கே. (2) 10.7.11
எட்டாம் திருமொழி
3860:##
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணியுந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2) 10.8.1
3861:
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேனென்று* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*
காரேழ் கடலேழ்* மலையேழ் உலகுண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே. 10.8.2
3862:
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதோர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதாயின வாறே. 10.8.3
3863:
எளிதாயினவாறென்று* என்கண்கள் களிப்ப*
களிதாகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளிதாவிய சோலைகள்சூழ்* திருப்பேரான்*
தெளிதாகிய* சேண்விசும்பு தருவானே. 10.8.4
3864:
வானே தருவான்* எனக்கா என்னோடுஒட்டி*
ஊனேய் குரம்பை* இதனுள் புகுந்து* இன்று-
தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேனேய் பொழில்* தென்திருப்பேர் நகரானே. 10.8.5
3865:
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*
பொருப்பே உறைகின்றபிரான்* இன்றுவந்து*
இருப்பேன் என்று* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதமுண்டு களித்தேனே. 10.8.6
3866:
உண்டு களித்தேற்கு* உம்பர்என் குறை* மேலைத்-
தொண்டு களித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில்சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்பக்* கண்ணுள்நின்று அகலானே. 10.8.7
3867:
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழிசையின் சுவைதானே*
வண்ணநன் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே. 10.8.8
3868:
இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை எந்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்றென்னத் திகழ்மாடங்கள்சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்கருள்செய்ய* உணர்த்தலுற்றேனே. 10.8.9
3869:##
உற்றேன் உகந்து பணிசெய்து* உனபாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்வாழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2) 10.8.10.
3870:##
நில்லா அல்லல்* நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர்வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல்லார் தமிழ்* ஆயிரத்துள் இவைபத்தும்-
வல்லார்* தொண்டராள்வது* சூழ்பொன் விசும்பே. (2) 10.8.11
ஒன்பதாம் திருமொழி
3871:##
சூழ்விசும் பணிமுகில்* தூரியம் முழக்கின*
ஆழ்கடல் அலைதிரை* கையெடுத்து ஆடின*
ஏழ்பொழிலும்* வளமேந்திய என்னப்பன்*
வாழ்புகழ் நாரணன்* தமரைக் கண்டுகந்தே. (2) 10.9.1
3872:
நாரணன் தமரைக் கண்டுகந்து* நல்நீர்முகில்*
பூரண பொற்குடம்* பூரித்து உயர்விண்ணில்*
நீரணி கடல்கள்* நின்றார்த்தன* நெடுவரைத்-
தோரணம் நிரைத்து* எங்கும் தொழுதனருலகே. 10.9.2
3873:
தொழுதனர் உலகர்கள்* தூபநல் மலர்மழை-
பொழிவனர்* பூழியன்று அளந்தவன் தமர்முன்னே*
எழுமினென்று இருமருங்கிசைத்தனர்* முனிவர்கள்*
வழியிது வைகுந்தற்கு என்று* வந்து எதிரே. 10.9.3
3874:
எதிரெதிர் இமையவர்* இருப்பிடம் வகுத்தனர்*
கதிரவரவரவர்* கைந்நிரை காட்டினர்*
அதிர்குரல் முரசங்கள்* அலைகடல் முழக்கொத்த*
மதுவிரி துழாய்முடி* மாதவன் தமர்க்கே. 10.9.4
3875:
மாதவன் தமரென்று* வாசலில் வானவர்*
போதுமின் எமதிடம்* புகுதுக வென்றலும்*
கீதங்கள் பாடினர்* கின்னரர் கெருடர்கள்*
வேதநல் வாயவர்* வேள்வியுள் மடுத்தே. 10.9.5
3876:
வேள்வியுள் மடுத்தலும்* விரைகமழ் நறும்புகை*
காளங்கள் வலம்புரி* கலந்துஎங்கும் இசைத்தனர்*
ஆளுமின்கள் வானகம்* ஆழியான் தமர் என்று*
வாளொண் கண்மடந்தையர்* வாழ்த்தினர் மகிழ்ந்தே. 10.9.6
3877:
மடந்தையர் வாழ்த்தலும்* மருதரும் வசுக்களும்*
தொடர்ந்து எங்கும்* தோத்திரம் சொல்லினர்* தொடுகடல்-
கிடந்த எங்கேசவன்* கிளரொளி மணிமுடி*
குடந்தை எங்கோவலன்* குடியடி யார்க்கே. 10.9.7
3878:
குடியடியார் இவர்* கோவிந்தன் தனக்கென்று*
முடியுடை வானவர்* முறைமுறை எதிர்கொள்ள*
கொடியணி நெடுமதிள்* கோபுரம் குறுகினர்*
வடிவுடை மாதவன்* வைகுந்தம் புகவே. 10.9.8
3879:
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9
3880:
விதிவகை புகுந்தனரென்று* நல்வேதியர்*
பதியினில் பாங்கினில்* பாதங்கள் கழுவினர்*
நிதியும் நற்சுண்ணமும்* நிறைகுட விளக்கமும்*
மதிமுக மடந்தையர்* ஏந்தினர் வந்தே. 10.9.10.
3881:##
வந்தவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தமில் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்தலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்களாயிரத்து* இவைவல்லார் முனிவரே. 10.9.11
பத்தாம் திருமொழி
3882:##
முனியே!நான்முகனே!* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*
தனியேனாருயிரே!* எந்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகலொட்டேன்* ஒன்றும்மாயஞ் செய்யேல் என்னையே. (2)
3883:
மாயம்செய்யேல் என்னை* உன்திருமார்வத்து மாலைநங்கை*
வாசம்செய் பூங்குழலாள்* திருவாணை நின்னாணை கண்டாய்*
நேசம்செய்து உன்னோடு என்னை* உயிர் வேறின்றி ஒன்றாகவே*
கூசஞ்செய்யாது கொண்டாய்* என்னைக்கூவிக் கொள்ளாய் வந்தந்தோ!
3884:
கூவிக்கொள்ளாய் வந்தந்தோ!* என்பொல்லாக் கருமாணிக்கமே!*
ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு* நின்னலால் அறிகின்றி லேன்யான்*
மேவித்தொழும் பிரமன் சிவன்* இந்திரன் ஆதிக்கெல்லாம்*
நாவிக் கமல முதற்கிழங்கே!* உம்பர் அந்ததுவே. 10.10.3
3885:
உம்பரந்தண் பாழேயோ!* அதனுள்மிசை நீயேயோ*
அம்பர நற்சோதி!* அதனுள் பிரமன் அரன் நீ*
உம்பரும் யாதவரும் படைத்த* முனிவன் அவன்நீ*
எம்பரம் சாதிக்கலுற்று* என்னைப்போர விட்டிட்டாயே. 10.10.4
3886:
போரவிட்டிட்டு என்னை* நீபுறம்போக்கலுற்றால்* பின்னையான்-
ஆரைக்கொண்டு எத்தையந்தோ!* எனதென்பதென்? யானென்பதென்?*
தீர இரும்புண்ட நீரதுபோல* என்ஆருயிரை-
ஆரப்பருக* எனக்கு ஆராவமுதானாயே. 10.10.5
3887:
எனக்கு ஆராவமுதாய்* எனதாவியை இன்னுயிரை*
மனக்காராமை மன்னி உண்டிட்டாய்* இனியுண்டொழியாய்*
புனக்காயாநிறத்த* புண்டரீகக்கண் செங்கனிவாய்*
உனக்கேற்கும் கோலமலர்ப்பாவைக்கு* அன்பா! என்அன்பேயோ! 10.10.6
3888:##
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய* என் அன்பேயோ*
நீலவரை இரண்டு பிறைகவ்வி* நிமிர்ந்த தொப்ப*
கோல வராகமொன்றாய்* நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்*
நீலக் கடல்கடைந்தாய்!* உன்னைப்பெற்று இனிப் போக்குவேனா? (2)
3889:
பெற்றினிப் போக்குவேனா* உன்னை என் தனிப்பேருயிரை*
உற்ற இருவினையாய்* உயிராய்ப் பயனாய் அவையாய்*
முற்றஇம் மூவுலகும்* பெருந்தூறாய்த் தூற்றில்புக்கு*
முற்றக் கரந்தொளித்தாய்!* என்முதல் தனிவித்தேயோ! 10.10.8
3890:
முதல்தனி வித்தேயோ!* முழுமூவுலகாதிக் கெல்லாம்*
முதல்தனி உன்னையுன்னை* எனைநாள் வந்து கூடுவன்நான்?*
முதல்தனி அங்குமிங்கும்* முழுமுற்றுறுவாழ் பாழாய்*
முதல்தனி சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த* முடிவிலீயோ! 10.10.9
3891:##
சூழ்ந்த கன்றாழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநன் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாவறச் சூழ்ந்தாயே! (2) 10.10.10.
3892:##
அவாவறச் சூழ்* அரியை அயனை அரனை அலற்றி*
அவாவற்று வீடுபெற்ற* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாவில் அந்தாதிகளால்* இவையாயிரமும்* முடிந்த-
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார்* பிறந்தார் உயர்ந்தே. (2) 10.10.11
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்