தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர், கருச்சந்தும் கார் அகிலும் கமழ் கோங்கும் மணநாறும், திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே. |
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து*, தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க,- உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும்*, மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது. |
தீநிலாய மூன்றுமாய்ச்* சிறந்த கால் இரண்டுமாய்,*
மீநிலாயது ஒன்றுமாகி* வேறு வேறு தன்மையாய்,*
நீநிலாய வண்ண நின்னை* யார் நினைக்க வல்லரே?* (2) (1)
ஆறும் ஆறும் ஆறுமாய்* ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,*
ஏறுசீர் இரண்டு மூன்றும்* ஏழும் ஆறும் எட்டுமாய்,*
வேறுவேறு ஞானமாகி* மெய்யினொடு பொய்யுமாய்*,
ஊேறாடு ஓசையாய ஐந்தும்* ஆய ஆய மாயனே! (2)*
ஐந்துமைந்தும் ஐந்துமாகி* அல்லவற்றுள் ஆயுமாய்,*
ஐந்து மூன்றும் ஒன்றுமாகி* நின்ற ஆதி தேவனே,*
ஐந்துமைந்தும் ஐந்துமாகி* அந்தரத்து அணைந்து நின்று,*
ஐந்து ஐந்துமாய நின்னை* யாவர் காண வல்லரே?* (3)
மூன்று முப்பது ஆறினோடு* ஓர் ஐந்துமைந்தும் ஐந்துமாய்,*
மூன்று மூர்த்தி ஆகி மூன்று* மூன்று மூன்று மூன்றுமாய்*,
தோன்று சோதி மூன்றுமாய்த்* துளக்கமில் விளக்கமாய்*,
ஏன்று என் ஆவியுள் புகுந்தது* என்கொலோ? எம் ஈசனே!* (4)
நின்று இயங்கும் ஒன்றலா* உருக்கள் தோறும் ஆவியாய்,*
ஒன்றி உள்கலந்து நின்ற* நின்ன தன்மை இன்னதென்று,*
என்றும் யார்க்கும் எண்ணிறந்த* ஆதியாய்! நின் உந்திவாய்,*
அன்று நான்முகன் பயந்த* ஆதி தேவன் அல்லையே?* (5)
நாகமேந்து மேரு வெற்பை* நாகமேந்து மண்ணினை,*
நாகமேந்து மாகமாகம்* மாகமேந்து வார் புனல்,*
மாகமேந்து மங்குல் தீ ஓர்* வாயு வைந்தும் ஐந்து காத்து,*
ஏகமேந்தி நின்ற நீர்மை,* நின்கணே இயன்றதே.* (6)
ஒன்றிரண்டு மூர்த்தியாய்* உறக்கமோடு உணர்ச்சியாய்,*
ஒன்றிரண்டு காலமாகி* வேலை ஞாலம் ஆயினாய்,*
ஒன்றிரண்டு தீயுமாகி* ஆயனாய மாயனே*
ஒன்றிரண்டு கண்ணினானும்* உன்னை ஏத்த வல்லனே?* (7)
ஆதியான வானவர்க்கும்* அண்டமாய அப்புறத்து,*
ஆதியான வானவர்க்கும்* ஆதியான ஆதி நீ,*
ஆதியான வான வாணர்* அந்த காலம் நீயுரைத்தி,*
ஆதியான காலம் நின்னை* யாவர் காண வல்லரே?* (8)
தாது உலாவு கொன்றைமாலை* துன்னு செஞ்சடைச் சிவன்,*
நீதியால் வணங்கு பாத!* நின்மலா! நிலாய சீர்*
வேதவாணர் கீதவேள்வி* நீதியான வேள்வியார்,*
நீதியால் வணங்குகின்ற* நீர்மை நின்கண் நின்றதே* (9)
##தன்னுளே திரைத்தெழும்* தரங்க வெண் தடங் கடல்*
தன்னுளே திரைத்தெழுந்து* அடங்குகின்ற தன்மைபோல்,*
நின்னுளே பிறந்து இறந்து* நிற்பவும் திரிபவும்,*
நின்னுளே அடங்குகின்ற* நீர்மை நின்கண் நின்றதே.* (2) (10)
சொல்லினால் தொடர்ச்சி நீ* சொலப்படும் பொருளும்நீ,*
சொல்லினால் சொலப்படாது* தோன்றுகின்ற சோதிநீ,*
சொல்லினால் படைக்க* நீ படைக்க வந்து தோன்றினார்,*
சொல்லினால் சுருங்க* நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
உலகு தன்னை நீபடைத்தி* உள்ளொடுக்கி வைத்தி,*மீண்டு-
உலகு தன்னுளே பிறத்தி* ஓரிடத்தை அல்லையால்*
உலகு நின்னொடு ஒன்றி நிற்க* வேறு நிற்றி ஆதலால்,*
உலகில் நின்னை உள்ளசூழல்* யாவர் உள்ள வல்லரே?* (12)
இன்னை என்று சொல்லலாவது* இல்லை யாதும் இட்டு இடைப்*
பின்னை கேள்வன் என்பர் உன்* பிணக்குணர்ந்த பெற்றியோர்*
பின்னையாய கோலமோடு* பேரும் ஊரும் ஆதியும்,*
நின்னையார் நினைக்கவல்லர்* நீர்மையால் நினைக்கிலே!* (13)
தூய்மை யோகம் ஆயினாய்* துழாயலங்கல் மாலையாய்,*
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற* ஆதி தேவ,* நின்-
நாமதேயம் இன்னதென்ன* வல்லம் அல்லவாகிலும்,*
சாமவேத கீதனாய* சக்ரபாணி யல்லையே?* (14)
அங்கம் ஆறும் வேதநான்கும்* ஆகிநின்று அவற்றுளே,*
தங்குகின்ற தன்மையாய்!* தடங்கடல் பணத்தலை,*
செங்கண் நாகணைக் கிடந்த* செல்வமல்கு சீரினாய்,*
சங்கவண்ணம் அன்னமேனி* சார்ங்கபாணி யல்லையே?* (15)
தலைக்கணத் துகள் குழம்பு* சாதி சோதி தோற்றமாய்,*
நிலைக்கணங்கள் காணவந்து* நிற்றியேலும் நீடு இரும்*
கலைக்கணங்கள் சொற்பொருள்* கருத்தினால் நினைக்கொணா,*
மலைக்கணங்கள் போல் உணர்த்தும்* மாட்சி நின்தன் மாட்சியே.* (16)
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி* நாலுமூர்த்தி நன்மைசேர்,*
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி* எண்ணில் மூர்த்தியாய்*
நாகமூர்த்தி சயனமாய்* நலங்கடல் கிடந்து,*மேல்-
ஆகமூர்த்தி யாயவண்ணம்* என்கொல்? ஆதி தேவனே!* (17)
விடத்த வாய் ஓராயிரம்* ஈராயிரம் கண் வெந்தழல்,*
விடுத்து வீள்விலாத போகம்* மிக்கசோதி தொக்கசீர்,*
தொடுத்து மேல் விதானமாய* பௌவ நீர் அரவணை*
படுத்த பாயல் பள்ளிகொள்வது* என்கொல்? வேலை வண்ணணே!* (18)
புள்ளாதாகி வேதநான்கும்* ஓதினாய் அதன்றியும்,*
புள்ளின் வாய் பிளந்து* புட்கொடிப் பிடித்த பின்னரும்,*
புள்ளையூர்தி யாதலால்* அதென்கொல்? மின்கொள் நேமியாய்,!*
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல்* காதலித்ததே. (19)
கூசமொன்றும் இன்றி* மாசுணம் படுத்து வேலைநீர்,*
பேசநின்ற தேவர் வந்து* பாட முன் கிடந்ததும்,*
பாசம் நின்ற நீரில்வாழும்* ஆமையான கேசவா,*
ஏச அன்று நீகிடந்தவாறு* கூறு தேறவே.* (20)
அரங்கனே! தரங்க நீர்* கலங்க அன்று குன்று சூழ்,*
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய்,*
நெருங்கநீ கடைந்த போது* நின்ற சூரர் என்செய்தார்?*
குரங்கை ஆளுகந்த எந்தை!* கூறுதேற வேறிதே.* (21)
பண்டும் இன்றும் மேலுமாய்* ஓர் பாலனாகி ஞாலமேழும்,*
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற* ஆதி தேவனே,!*
வண்டு கிண்டு தண் துழாய்* அலங்கலாய்! கலந்தசீர்,*
புண்டரீக பாவை சேரும்* மார்ப!பூமி நாதனே!* (22)
வான் நிறத்து ஓர் சீயமாய்* வளைந்த வாள் எயிற்றவன்,*
ஊன் நிறத்து உகிர்த்தலம்* அழுத்தினாய்! உலாயசீர்,*
நால்நிறத்த வேதநாவர்* நல்ல யோகினால் வணங்கு,*
பால்நிறக் கடல்கிடந்த* பற்பநாபன் அல்லையே?* (23)
கங்கைநீர் பயந்த பாத* பங்கயத்து எம் அண்ணலே,*
அங்கையாழி சங்குதண்டு* வில்லும் வாளும் ஏந்தினாய்,*
சிங்கமாய தேவதேவ!* தேனுலாவு மென்மலர்,*
மங்கை மன்னி வாழுமார்ப!* ஆழிமேனி மாயனே! (24)
வரத்தினில் சிரத்தை மிக்க* வாளெயிற்று மற்றவன்,*
உரத்தினில் கரத்தை வைத்து* உகிர்த்தலத்தை ஊன்றினாய்,*
இரத்தி நீ இதென்ன பொய்?* இரந்தமண் வயிற்றுளே-
கரத்தி,* உன் கருத்தை* யாவர் காணவல்லர் கண்ணனே! (25)
ஆணினோடு பெண்ணுமாகி* அல்லவோடு நல்லவாய்,*
ஊணொடு ஓசை ஊறுமாகி* ஒன்றலாத மாயையாய்,*
பூணி பேணும் ஆயனாகிப்* பொய்யினோடு மெய்யுமாய்,*
காணிபேணும் மாணியாய்க்* கரந்துசென்ற கள்வனே! (26)
விண்கடந்த சோதியாய்* விளங்கு ஞான மூர்த்தியாய்,*
பண்கடந்த தேசமேவு* பாவநாச நாதனே,*
எண்கடந்த யோகினோடு* இரந்துசென்று மாணியாய்,*
மண்கடந்த வண்ணம் நின்னை* யார் மதிக்க வல்லரே? (27)
படைத்த பார் இடந்தளந்து* அதுண்டுமிழ்ந்து பௌவநீர்,*
படைத்து அடைத்து அதிற் கிடந்து* முன் கடைந்த பெற்றியோய்,*
மிடைத்த மாலி மாலிமான்* விலங்கு காலனூர் புக,*
படைக்கலம் விடுத்த* பல் படைத் தடக்கை மாயனே! (28)
பரத்திலும் பரத்தையாதி* பௌவ நீர் அணைக் கிடந்து,*
உரத்திலும் ஒருத்திதன்னை* வைத்து உகந்து அதன்றியும்,*
நரத்திலும் பிறத்தி* நாத ஞான மூர்த்தி ஆயினாய்,*
ஒருத்தரும் நினாது தன்மை* இன்னதென்ன வல்லரே! (29)
வானகமும் மண்ணகமும்* வெற்பும் ஏழ்கடல்களும்,*
போனகம் செய்து ஆலிலை* துயின்ற புண்டரீகனே,*
தேனகஞ் செய் தண்ணறும்* மலர்த்துழாய் நன் மாலையாய்,*
கூன் அகம் புகத் தெறித்த* கொற்ற வில்லி அல்லையே? (30)
காலநேமி காலனே!* கணக்கிலாத கீர்த்தியாய்,*
ஞாலமேழும் உண்டுபண்டு ஓர்* பாலனாய பண்பனே,*
வேலை வேவ வில் வளைத்த* வெல் சினத்த வீர,* நின்-
பாலராய பத்தர் சித்தம்* முத்தி செய்யும் மூர்த்தியே! (31)
குரக்கினப் படைகொடு* குரை கடலின் மீதுபோய்*
அரக்கர் அங்கு அரங்க* வெஞ்சரம் துரந்த ஆதி நீ,*
இரக்க மண் கொடுத்தவற்கு* இருக்க ஒன்றுமின்றியே,*
பரக்க வைத்து அளந்துகொண்ட* பற்ப பாதன் அல்லையே? (32)
மின் நிறத்து எயிற்றரக்கன்* வீழ வெஞ் சரம் துரந்து,*
பின்னவற்கு அருள் புரிந்து* அரசளித்த பெற்றியோய்,*
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை* பின்னைகேள்வ! மன்னுசீர்,*
பொன்னிறத்த வண்ணானாய* புண்டரீகன் அல்லையே? (33)
ஆதியாதி ஆதி நீ* ஓரண்டம் ஆதி ஆதலால்,*
சோதியாத சோதிநீ* அதுண்மையில் விளங்கினாய்,*
வேதமாகி வேள்வியாகி* விண்ணினோடு மண்ணுமாய்*
ஆதியாகி ஆயனாய* மாயமென்ன மாயமே? (34)
அம்புலாவும் மீனுமாகி* ஆமையாகி ஆழியார்,*
தம்பிரானுமாகி மிக்க அன்பு* மிக்கு அதன்றியும்*
கொம்பராவு நுண்மருங்குல்* ஆயர்மாதர் பிள்ளையாய்*
எம்பிரானும் ஆயவண்ணம்* என்கொலோ எம் ஈசனே! (35)
ஆடகத்த பூண்முலை* யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்*
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி* கள்ள தாய பேய்மகள்*
வீடுவைத்த வெய்ய கொங்கை* ஐயபால் அமுதுசெய்து,*
ஆடகக்கை மாதர் வாய்* அமுதம் உண்டது என்கொலோ? (36)
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து *எதிர்ந்த பூங்குருந்தம்-
சாய்த்து,* மா பிளந்த கைத் தலத்த* கண்ணன் என்பரால்*
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு* வெண்ணெய் உண்டு,*பின்-
பேய்ச்சி பாலை உண்டு* பண்டு ஓர் ஏனமாய வாமனா! (37)
கடங்கலந்த வன்கரி* மருப்பொசித்து ஓர் பொய்கைவாய்,*
விடங்கலந்த பாம்பின்மேல்* நடம்பயின்ற நாதனே*
குடங்கலந்த கூத்தனாய* கொண்டல்வண்ண! தண்டுழாய்,*
வடங்கலந்த மாலைமார்ப!* காலநேமி காலனே! (38)
வெற்பெடுத்து வேலைநீர்* கலக்கினாய் அதன்றியும்,*
வெற்பெடுத்து வேலைநீர்* வரம்புகட்டி வேலைசூழ்,*
வெற்பெடுத்த இஞ்சி சூழ்* இலங்கை கட்டழித்த நீ*
வெற்பெடுத்து மாரிகாத்த* மேக வண்ணன் அல்லையே! (39)
ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று* அதன்றி ஆயர் பிள்ளையாய்,*
ஆனைமேய்த்தி ஆனை உண்டி* அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனைகாத்து மையரிக் கண்* மாதரார் திறத்து,முன்*
ஆனையன்று சென்று அடர்த்த* மாயம் என்ன மாயமே? (40)
ஆயனாகி ஆயர் மங்கை* வேய தோள் விரும்பினாய்,*
ஆய!நின்னை யாவர் வல்லர்* அரம்பரத்தொடு இம்பராய்,*
மாய!மாய மாயைகொல்* அதன்றி நீ வகுத்தலும்,*
மாயமாயம் ஆக்கினாய்* உன் மாயமுற்றும் மாயமே. (41)
வேறிசைந்த செக்கர்மேனி* நீரணிந்த புன்சடை,*
கீறு திங்கள் வைத்தவன்* கை வைத்தவன் கபால்மிசை,*
ஊறு செங்குருதியால்* நிறைத்த காரணந் தனை*
ஏறு சென்று அடர்த்த ஈச!* பேசு கூசம் இன்றியே. (42)
வெஞ்சினத்த வேழவெண்* மருப்பொசித்து உருத்தமா,*
கஞ்சனைக் கடிந்து* மண் அளந்துகொண்ட காலனே,*
வஞ்சனத்து வந்த பேய்ச்சி* ஆவி பாலுள் வாங்கினாய்,*
அஞ்சனத்த வண்ணானாய* ஆதிதேவன் அல்லையே? (43)
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை* பாசியின் பசும்புறம்,*
போலும் நீர்மை பொற்புடைத் தடத்து* வண்டு விண்டுலாம்,*
நீல நீர்மை என்றிவை* நிறைந்த காலம் நான்குமாய்,*
மாலின் நீர்மை வையகம்* மறைத்தது என்ன நீர்மையே? (44)
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்* மண்ணுளே மயங்கி நின்று,*
எண்ணுமெண்ணம் அகப்படாய் கொல்* என்ன மாயை, நின்தமர்*
கண்ணுளாய்கொல் சேயைகொல்* அனந்தன் மேல் கிடந்த எம்-
புண்ணியா,* புனந்துழாய்* அலங்கலம் புனிதனே! (45)
தோடு பெற்ற தண்டுழாய்* அலங்கல் ஆடு சென்னியாய்,*
கோடுபற்றி ஆழியேந்தி* அஞ்சிறைப் புள்ðர்தியால்,*
நாடு பெற்ற நன்மை நண்ணம்* இல்லையேனும் நாயினேன்,*
வீடு பெற்று இறப்பொடும்* பிறப்பறுக்கும் ஆ சொலே. (46)
காரொடு ஒத்த மேனி நங்கள்* கண்ண! விண்ணின் நாதனே,*
நீர் இடத்து அராவணை* கிடத்தி என்பர் அன்றியும்*
ஓர் இடத்தை அல்லை எல்லை* இல்லையென்பர் ஆதலால்,*
சேர்விடத்தை நாயினேன்* தெரிந்து இறைஞ்சு மாசொலே. (47)
குன்றில்நின்று வானிருந்து* நீள்கடல் கிடந்து,*மண்-
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு* அது ஒன்று இடந்து பன்றியாய்,*
நன்று சென்ற நாள் அவற்றுள்* நல்லுயிர் படைத்து அவர்க்கு,*
அன்று தேவு அமைத்து அளித்த* ஆதிதேவன் அல்லயே? (48)
கொண்டை கொண்ட கோதைமீது* தேனுலாவு கூனிகூன்,*
உண்டை கொண்டு அரங்கவோட்டி* உள்மகிழ்ந்த நாதனூர்,*
நண்டையுண்டு நாரை பேர* வாளை பாய நீலமே,*
அண்டை கொண்டு கெண்டை மேயும்* அந்தணீர் அரங்கமே. (2) (49)
வெண் திரைக் கருங்கடல்* சிவந்து வேவ முன்னோர்நாள்,*
திண் திறல் சிலைக்கை வாளி* விட்ட வீரர் சேருமூர்,*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்,*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னுசீர் அரங்கமே. (50)
சரங்களைத் துரந்து* வில் வளைத்து இலங்கை மன்னவன்,*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன்னிடம்,*
பரந்து பொன் நிரந்து நுந்தி* வந்து அலைக்கும் வார்புனல்,*
அரங்கமென்பர் நான்முகத்து * அயன்பணிந்த கோயிலே. (51)
பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்ந்து வந்ததை*,
பற்றி உற்று மற்றதன்* மருப்பொசித்த பாகனூர்,*
சிற்று எயிற்று முற்றல் மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்,*
அற்ற பற்றர் சுற்றி வாழும்* அந்தணீர் அரங்கமே. (52)
மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முக்கணான்,*
கூடு சேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து-
ஓட* வாணன் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால்,*
பீடுகோயில் கூடுநீர்* அரங்கமென்ற பேர் அதே. (53)
இலைத் தலை சரந் துரந்து* இலங்கை கட்டழித்தவன்,*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்,*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு,*
அலைத்தொழுகு காவிரி* அரங்கமேய அண்ணலே. (54)
மன்னு மாமலர்க் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்,*
பின்னும் ஆயர் பின்னைதோள்* மணம் புணர்ந்தது அன்றியும்,*
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்,*
பொன்னி சூழ் அரங்கமேய* புண்டரீகன் அல்லையே? (55)
இலங்கை மன்னனை தொடைந்து* பைந்தலை நிலத்துக,*
கலங்க அன்று சென்று கொன்று* வென்றிகொண்ட வீரனே,*
விலங்கு நூலர் வேத நாவர்* நீதியான கேள்வியார்,*
வலங்கொளக் குடந்தையுள்* கிடந்தமாலும் அல்லையே? (56)
சங்கு தங்கு முன்கை நங்கை* கொங்கை தங்கல் உற்றவன்,*
அங்கம் மங்க அன்றுசென்று* அடர்த்து எறிந்த ஆழியான்,*
கொங்கு தங்கு வார்குழல்* மடந்தைமார் குடைந்த நீர்,*
பொங்குதண் குடந்தையுள்* கிடந்த புண்டரீகனே! (57)
மரங்கெட நடந்து அடர்த்து* மத்த யானை மத்தகத்து,*
உரங்கெடப் புடைத்து* ஓர் கொம்பொசித்து உகந்த உத்தமா,*
துரங்கம் வாய் பிளந்து* மண்ணளந்த பாத,* வேதியர்-
வரங்கொளக் குடந்தையுள்* கிடந்தமாலும் அல்லையே? (58)
சாலிவேலி தண்வயல்* தடங்கிடங்கு பூம்பொழில்,*
கோலமாட நீடு* தண் குடந்தை மேய கோவலா,*
காலநேமி வக்கரன்* கரன் முரன் சிரம் அவை,*
காலனோடு கூட* வில் குனித்த விற்கை வீரனே! (59)
##செழுங்கொழும் பெரும் பனி பொழிந்திட,* உயர்ந்தவேய் –
விழுந்து உலர்ந்து எழுந்து* விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று*
எழுந்திருந்து தேன் பொருந்து* பூம்பொழில் தழைக்கொழும்*
செழுந்தடங் குடந்தையுள்* கிடந்தமாலும் அல்லையே? (2) (60)
##நடந்தகால்கள் நொந்தவோ* நடுங்க ஞாலம் ஏனமாய்,*
இடந்த மெய் குலுங்கவோ?* விலங்கு மால்வரைச் சுரம்*
கடந்த கால் பரந்த* காவிரிக் கரைக் குடந்தையுள்,*
கிடந்தவாறு எழுந்திருந்து* பேசு வாழி கேசனே! (2) (61)
கரண்டம் ஆடு பொய்கையுள்* கரும் பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளை பாய்* குறுங்குடி நெடும் தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டு கூறு செய்து உகந்த* சிங்கம் என்பது உன்னையே (2) (62)
நன்று இருந்து யோகநீதி* நண்ணுவார்கள் சிந்தையுள்,*
சென்று இருந்து தீவினைகள்* தீர்த்த தேவ தேவனே,*
குன்று இருந்த மாடநீடு* பாடகத்தும் ஊரகத்தும்,*
நின்று இருந்து வெஃகணை* கிடந்தது என்ன நீர்மையே? (63)
நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெஃகணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே. (64)
நிற்பதும் ஓர் வெற்பகத்து* இருப்பும் விண் கிடப்பதும்,*
நற் பெருந்திரைக் கடலுள்* நானிலாத முன்னெலாம்,*
அற்புதன் அனந்த சயனன்* ஆதிபூதன் மாதவன்,*
நிற்பதும் இருப்பதும்* கிடப்பதும் என் நெஞ்சுளே. (65)
இன்று சாதல் நின்று சாதல்* அன்றி யாரும் வையகத்து,*
ஒன்றி நின்று வாழ்தலின்மை* கண்டும் நீசர் என்கொலோ,*
அன்று பார் அளந்த பாத* போதை உன்றி வானின்மேல்,*
சென்றுசென்று தேவராய்* இருக்கிலாத வண்ணமே? (66)
சண்ட மண்டலத்தினூடு* சென்றுவீடு பெற்றுமேல்*
கண்டு வீடிலாத காதல்* இன்பம் நாளும் எய்துவீர்,*
புண்டரீக பாத* புண்யகீர்த்தி நும் செவி மடுத்து*
உண்டு, நும் உறுவினைத்* துயருள் நீங்கி உய்ம்மினோ. (67)
முத்திறத்து வாணியத்து* இரண்டில் ஒன்றும் நீசர்கள்,*
மத்தராய் மயங்குகின்றது* இட்டு அதில் இறந்து போந்து,*
எத்திறத்தும் உய்வதோர்* உபாயமில்லை உய்குறில்,*
தொத்திறத்த தண்துழாய்* நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ. (68)
காணிலும் உருப் பொலார்* செவிக்கு இனாத கீர்த்தியார்,*
பேணிலும் வரம் தரும்* மிடுக்கிலாத தேவரை,*
ஆணம் என்று அடைந்து வாழும்* ஆதர்காள்! எம் ஆதிபால்,*
பேணி நும் பிறப்பெனும்* பிணக்கு அறுக்க கிற்றிரே. (69)
குந்தமோடு சூலம்வேல்கள்* தோமரங்கள் தண்டுவாள்*,
பந்தமான தேவர்கள்* பரந்து வானகம் உற,*
வந்த வாணன் ஈரைஞ்நூறு* தோள்களைத் துணித்த நாள்,*
அந்தவந்த ஆகுலம்* அமரரே அறிவரே. (70)
வண்டுலாவு கோதைமாதர்* காரணத்தினால் வெகுண்டு*
இண்ட வாணன் ஈரைஞ்நூறு* தோள்களைத் துணித்த நாள்,*
முண்டன் நீறன் மக்கள் வெப்பு* மோடி அங்கி ஓடிடக்,-
கண்டு,* நாணி வாணனுக்கு இரங்கினான்* எம் மாயனே. (71)
போதில் மங்கை பூதலக் கிழத்தி* தேவி அன்றியும்,*
போது தங்கு நான்முகன்* மகன் அவன் மகன் சொலில்*
மாது தங்கு கூறன் ஏற* ஊர்தியென்று வேதநூல்,*
ஓதுகின்றது உண்மை* அல்லது இல்லை மற்றுரைக்கிலே (72)
மரம் பொதச் சரந்துரந்து* வாலி வீழ முன்னொர்நாள்,*
உரம் பொதச் சரந்துரந்த* உம்பராளி எம்பிரான்,*
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு* அலாது வானம் ஆளிலும்,*
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும்* யார்க்கும் இல்லையே. (73)
அறிந்து அறிந்து வாமனன்* அடியணை வணங்கினால்,*
செறிந்து எழுந்த ஞானமோடு* செல்வமும் சிறந்திடும்,*
மறிந்து எழுந்த தெண்திரையுள்* மன்னு மாலை வாழ்த்தினால்,*
பறிந்து எழுந்து தீவினைகள்* பற்றறுதல் பான்மையே. (74)
ஒன்றி நின்று நல்தவம்செய்து,* ஊழி ஊழிதோறெலாம்,*
நின்றுநின்று அவன் குணங்கள்* உள்ளியுள்ளம் தூயராய்,*
சென்று சென்று தேவதேவர்* உம்பர் உம்பர் உம்பராய்,*
அன்றி எங்கள் செங்கண்மாலை* யாவர்காண வல்லரே? (75)
புன்புல வழியடைத்து* அரக்கு இலச்சினை செய்து,*
நன்புல வழிதிறந்து* ஞான நற்சுடர் கொளÖஇ,*
என்பில் எள்கி நெஞ்சுருகி* உள் கனிந்து எழுந்ததோர்,*
அன்பில் அன்றி ஆழியானை* யாவர் காண வல்லரே? (76)
எட்டும் எட்டும் எட்டுமாய்* ஓரேழும் ஏழும் ஏழுமாய்,*
எட்டு மூன்றும் ஒன்றுமாகி* நின்ற ஆதி தேவனை,*
எட்டினாய பேதமோடு* இறைஞ்சி நின்று அவன்பெயர்,*
எட்டெழுத்தும் ஓதுவார்கள்* வல்லர் வானம் ஆளவே. (77)
சோர்விலாத காதலால்* தொடக்கறா மனத்தராய்,*
நீர் அராவு அணைக் கிடந்த* நின்மலன் நலங்கழல்,*
ஆர்வமோடு இறைஞ்சி நின்று* அவன்பெயர் எட்டெழுத்தும்,*
வாரமாக ஓதுவார்கள்* வல்லர் வானம் ஆளவே. (78)
பத்தினோடு பத்துமாய்* ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்,*
பத்தினால் திசைக்கண் நின்ற* நாடுபெற்ற நன்மையாய்,*
பத்தினாய தோற்றமோடு* ஓர் ஆற்றல் மிக்க ஆதிபால்,*
பத்தராம் அவர்க்கலாது* முத்தி முற்றல் ஆகுமே? (79)
வாசியாகி நேசமின்றி* வந்து எதிர்ந்த தேனுகன்,*
நாசமாகி நாளுலப்ப* நன்மை சேர் பனங் கனிக்கு,*
வீசி மேல் நிமிர்த்த தோளில்* இல்லை ஆக்கினாய், கழற்கு*
ஆசையாம் அவர்க்கலால்* அமரர் ஆகலாகுமே? (80)
கடைந்து பாற்கடல் கிடந்து* கால நேமியைக் கடிந்து,*
உடைந்த வாலி தன் தந்தனக்கு* உதவ வந்து இராமனாய்,*
மிடைந்த ஏழ் மரங்களும்* அடங்க வெய்து, வேங்கடம்*
அடைந்தமால பாதமே* அடைந்து நாளும் உய்ம்மினோ (81)
எத்திறத்தும் ஒத்து நின்று* உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்,*
முத்திறத்து மூரி நீர்* அராவணைத் துயின்ற,* நின்-
பத்து உறுத்த சிந்தையோடு* நின்று பாசம் விட்டவர்க்கு,*
எத்திறத்தும் இன்பம் இங்கும்* அங்கும் எங்கும் ஆகுமே. (82)
மட்டு உலாவு தண்துழாய்* அலங்கலாய்! புலன் கழல்,*
விட்டு வீள்வு இலாத போகம்* விண்ணில் நண்ணி ஏறினும்,*
எட்டினோடு இரண்டெனும்* கயிற்றினால் மனந்தனைக்-
கட்டி,* வீடிலாது வைத்த காதல்* இன்பம் ஆகுமே. (83)
பின்பிறக்க வைத்தனன் கொல்* அன்றி நின்று தன்கழற்கு,*
அன்பு உறைக்க வைத்த நாள்* அறிந்தனன் கொல் ஆழியான்,*
தன் திறத்தொர் அன்பிலா* அறிவிலாத நாயினேன்,*
என்திறத்தில் என்கொல்* எம்பிரான் குறிப்பில் வைத்ததே? (84)
நச்சு அராவணைக் கிடந்த* நாத! பாத போதினில்,*
வைத்த சிந்தை வாங்குவித்து* நீங்குவிக்க நீயினம்,*
மெய்த்தன் வல்லை ஆதலால்* அறிந்தனன் நின் மாயமே,*
உய்த்து நின் மயக்கினில்* மயக்கல் என்னை மாயனே! (85)
சாடு சாடு பாதனே!* சலங்கலந்த பொய்கைவாய்,*
ஆடராவின் வன்பிடர்* நடம் பயின்ற நாதனே,*
கோடு நீடு கைய! செய்ய* பாதம் நாளும் உள்ளினால்,*
வீடனாக மெய் செயாத* வண்ணமென்கொல்? கண்ணனே! (86)
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின்* நாதனோடு போதின் மேல்,*
நற்றவத்து நாதனோடு* மற்றுமுள்ள வானவர்,*
கற்ற பெற்றியால் வணங்கு* பாத!நாத! வேத,*நின்-
பற்றலால் ஓர் பற்று* மற்றது உற்றிலேன் உரைக்கிலே. (87)
வெள்ளை வேலை வெற்பு நாட்டி* வெள் எயிற்று அராவு அளாய்,*
அள்ளலாய்க் கடைந்த* அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்,*
உள்ள நோய்கள் தீர் மருந்து* வானவர்க்கு அளித்த,* எம்-
வள்ளலாரை அன்றி* மற்றோர் தெய்வம் நான் மதிப்பனே? (88)
பார் மிகுத்த பாரம் முன்* ஒழிச்சுவான் அருச்சனன்,*
தேர் மிகுத்து மாயமாக்கி* நின்று கொன்று வென்றிசேர்,*
மா ரதர்க்கு வான்கொடுத்து* வையம் ஐவர் பாலதாம்,*
சீர்மிகுத்த நின்னலால் ஓர்* தெய்வம் நான் மதிப்பனே? (89)
குலங்களாய ஈர் இரண்டில்* ஒன்றிலும் பிறந்திலேன்,*
நலங்களாய நற்கலைகள்* நாவிலும் நவின்றிலேன்,*
புலன்கள் ஐந்தும் வென்றிலேன்* பொறியிலேன் புனித,* நின்-
இலங்கு பாதம் அன்றி* மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே! (90)
பண் உலாவு மென்மொழிப்* படைத் தடங்கணாள் பொருட்டு*
எண்ணிலா அரக்கரை* நெருப்பினால் நெருக்கினாய்,*
கண்ணலால் ஓர் கண்ணிலேன்* கலந்த சுற்றம் மற்றிலேன்,*
எண்ணிலாத மாய! நின்னை* என்னுள் நீக்கல் என்றுமே. (91)
விடைக் குலங்கள் ஏழடர்த்து* வென்றி வேற்கண் மாதரார்,*
கடிக் கலந்த தோள் புணர்ந்த* காலி ஆய! வேலைநீர்,*
படைத்து அடைத்து அதில் கிடந்து* முன்கடைந்து நின்தனக்கு,*
அடைக்கலம் புகுத்த என்னை* அஞ்சல் என்ன வேண்டுமே. (92)
சுரும்பு அரங்கு தண்துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே,*
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே,*
கரும்பிருந்த கட்டியே!* கடல்கிடந்த கண்ணனே,*
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த* வில்லி இராமனே! (93)
ஊனின் மேய ஆவி நீ* உறக்கமோடு உணர்ச்சி நீ,*
ஆனில் மேய ஐந்தும் நீ* அவற்றுள் நின்ற தூய்மை நீ,*
வானினோடு மண்ணும் நீ* வளங்கடல் பயனும் நீ,
யானும் நீ அதன்றி* எம்பிரானும் நீ இராமனே! (94)
அடக்கரும் புலன்கள்* ஐந்தடக்கி ஆசையாம் அவை,*
தொடக்கு அறுத்து வந்து நின்* தொழிற்கண் நின்ற என்னைநீ,*
விடக் கருதி மெய் செயாது* மிக்கோர் ஆசை ஆக்கிலும்,*
கடல்கிடந்த நின்னலால் ஓர்* கண்ணிலேன் எம் அண்ணலே! (95)
வரம்பிலாத மாய! மாய!* வையமேழும் மெய்ம்மையே,*
வரம்பில் ஊழி ஏத்திலும்* வரம்பிலாத கீர்த்தியாய்,*
வரம்பிலாத பல்பிறப்பு* அறுத்து வந்து நின்கழல்,*
பொருந்துமா திருந்த நீ* வரம் செய் புண்டரீகனே! (96)
வெய்யவாழி சங்குதண்டு* வில்லும் வாளும் ஏந்து சீர்*
கைய, செய்ய போதில் மாது* சேரும் மார்ப நாதனே,*
ஐயிலாய ஆக்கை நோய்* அறுத்துவந்து நின்னடைந்து,*
உய்வதோர் உபாயம் நீ* எனக்கு நல்க வேண்டுமே. (97)
மறம் துறந்து வஞ்சமாற்றி* ஐம்புலன்கள் ஆசையும்-
துறந்து,* நின் கண் ஆசையே தொடர்ந்து* நின்ற நாயினேன்,*
பிறந்து இறந்து பேரிடர்* சுழிக்கணின்று நீங்குமா,*
மறந்திடாது மற்றெனெக்கு* மாய! நல்க வேண்டுமே. (98)
காட்டி நான் செய் வல்வினை* பயன் தனால் மனந்தனை,*
நாட்டி வைத்து நல்லவல்ல* செய்ய எண்ணினார் என,*
கேட்டதன்றி என்னதாவி* பின்னைகேள்வ! நின்னொடும்,*
பூட்டி வைத்த என்னை* நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே! (99)
பிறப்பினோடு பேரிடர்* சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது,*
இறப்ப வைத்த ஞான நீசரை* கரைக் கொடேற்றுமா,*
பெறற்கு அரிய நின்னபாத* பத்தியான பாசனம்,*
பெறற்கு அரிய மாயனே!* எனக்கு நல்க வேண்டுமே. (100)
##இரந்து உரைப்பது உண்டுவாழி* ஏமநீர் நிறத்தமா,*
வரம் தரும் திருக் குறிப்பில்* வைத்ததாகில் மன்னுசீர்,*
பரந்த சிந்தை ஒன்றி நின்று* நின்னபாத பங்கயம்,*
நிரந்தரம் நினைப்பதாக* நீ நினைக்க வேண்டுமே. (2) (101)
விள்விலாத காதலால்* விளங்கு பாத போதில் வைத்து,*
உள்ளுவேன் அது ஊன நோய்* ஒழிக்குமா தெழிக்கு நீர்,*
பள்ளிமாய பன்றியாய* வென்றிவீர, குன்றினால்*
துள்ளுநீர் வரம்பு செய்த* தோன்றல் ஒன்று சொல்லிடே. (102)
திருக் கலந்து சேருமார்ப!* தேவதேவ தேவனே,*
இருக்கலந்த வேதநீதி* ஆகி நின்ற நின்மலா,*
கருக்கலந்த காளமேக* மேனியாய நின்பெயர்,*
உருக்கலந்து ஒழிவிலாது* உரைக்குமாறு உரைசெயே. (103)
கடுங்க வந்தன் வக்கரன்* கரன் முரன் சிரம் அவை,
இடந்து கூறு செய்த* பல்படைத் தடக்கை மாயனே,*
கிடந்து இருந்து நின்று இயங்கு* போதும் நின்ன பொற்கழல்,*
தொடர்ந்து விள்விலாதது ஓர்* தொடர்ச்சி நல்க வேண்டுமே. (104)
மண்ணை உண்டு உமிழ்ந்து* பின் இரந்து கொண்டு அளந்து,*மண்-
கண்ணுள் அல்லது இல்லை என்று* வென்ற காலம் ஆயினாய்,*
பண்ணை வென்ற இன் சொல் மங்கை* கொங்கை தங்கு பங்கயக்-
கண்ண,* நின்ன வண்ணம் அல்லது இல்லை* எண்ணும் வண்ணமே. (105)
கறுத்து எதிர்ந்த காலநேமி* காலனோடு கூட,*
அன்று அறுத்த ஆழி சங்குதண்டு* வில்லும் வாளும் ஏந்தினாய்,*
தொறுக் கலந்த ஊனமஃது* ஒழிக்க அன்று குன்றம் முன்,*
பொறுத்த நின் புகழ்க்கலால் ஓர்* நேசமில்லை நெஞ்சமே! (106)
காய்சினத்த காசி மன்னன்* வக்கரன் பவுண்டிரன்,*
மாசினத்த மாலி மா* சுமாலிகேசி தேனுகன்,*
நாசமுற்று வீழநாள்* கவர்ந்த நின் கழற்கலால்,*
நேச பாசம் எத்திறத்தும்* வைத்திடேன் எம் ஈசனே! (107)
கேடில் சீர் வரத்தனாய்* கெடும் வரத்து அயன் அரன்,
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன்* நாடு நண்ணிலும்,*
வீடு அதான போகமெய்தி* வீற்றிருந்த போதிலும்*,
கூடும் ஆசை அல்லது ஒன்று* கொள்வனோ? குறிப்பிலே? (108)
சுருக்கு வாரை இன்றியே* சுருங்கினாய் சுருங்கியும்,*
பெருக்கு வாரை இன்றியே* பெருக்கம் எய்து பெற்றியோய்,*
செருக்குவார்கள் தீக்குணங்கள்* தீர்த்த தேவ தேவனென்று,*
இருக்குவாய் முனிக்கணங்கள்* ஏத்த யானும் ஏத்தினேன். (109)
தூயனாயும் அன்றியும்* சுரும்பு உலாவு தண்துழாய்,*
மாய!நின்னை நாயினேன்* வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்,*
நீயும் நின் குறிப்பினில்* பொறுத்து நல்கு வேலைநீர்*
பாயலோடு பத்தர் சித்தம்* மேய வேலை வண்ணனே! (110)
வைது நின்னை வல்லவா* பழித்தவர்க்கும் மாறில் போர்*
செய்து நின்னை செற்ற தீயில்* வெந்தவர்க்கும் வந்து உன்னை*
எய்தலாகும் என்பர் ஆதலால்* எம்மாய! நாயினேன்,*
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே! (111)
வாள்களாகி நாள்கள் செல்ல* நோய்மை குன்றி மூப்பெய்தி,*
மாளு நாள் அது ஆதலால்* வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*
ஆளதாகும் நன்மையென்று* நன்கு உணர்ந்தது அன்றியும்,*
மீள்விலாத போகம்* நல்க வேண்டும் மால பாதமே. (112)
சலங்கலந்த செஞ்சடைக்* கறுத்த கண்டன் வெண்தலைப்*
புலன் கலங்க உண்ட பாதகத்தன்* வன் துயர் கெட,*
அலங்கல் மார்வில் வாச நீர்* கொடுத்தவன் அடுத்தசீர்,*
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்* எண்ணும் வாழி நெஞ்சமே! (113)
ஈனமாய எட்டும் நீக்கி* ஏதமின்றி மீதுபோய்,*
வானமாள வல்லையேல்* வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*
ஞானமாகி ஞாயிறாகி* ஞாலமுற்றும் ஓர் எயிற்று,*
ஏனமாய் இடந்த மூர்த்தி* எந்தை பாதம் எண்ணியே. (114)
அத்தனாகி அன்னையாகி* ஆளும் எம் பிரானுமாய்,*
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து* நம்மை ஆட்கொள்வான்,*
முத்தனார் முகுந்தனார்* புகுந்து நம் உள் மேவினார்,*
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி* ஏழை நெஞ்சமே! (2) (115)
மாறுசெய்த வாளரக்கன்* நாள் உலப்ப, அன்றிலங்கை*
நீறு செய்து சென்று கொன்று* வென்றி கொண்ட வீரனார்,*
வேறு செய்து தம்முள் என்னை* வைத்திடாமையால்,* நமன்-
கூறுசெய்து கொண்டு இறந்த* குற்றம் எண்ண வல்லனே. (116)
அச்சம் நோயொடு அல்லல்* பல்பிறப்ப ஆய மூப்பு இவை,*
வைத்த சிந்தை வைத்த வாக்கை* மாற்றி வானில் ஏற்றுவான்,*
அச்சுதன் அனந்த கீர்த்தி* ஆதி அந்தம் இல்லவன்,*
நச்சு நாகணைக் கிடந்த* நாதன் வேத கீதனே. (117)
சொல்லினும் தொழிற்கணும்* தொடக்கு அறாத அன்பினும்,*
அல்லும் நன்பகலினோடும்* ஆன மாலை காலையும்,*
வல்லி நாண் மலர்க் கிழத்தி* நாத!பாத போதினை,*
புல்லியுள்ளம் விள்விலாது* பூண்டு மீண்டது இல்லையே. (118)
##பொன்னிசூழ் அரங்கமேய* பூவைவண்ண! மாய!கேள்,*
என்னதாவி என்னும்* வல் வினையின் உள் கொழுந்து எழுந்து,*
உன்ன பாதம் என்ன நின்ற* ஒண்சுடர்க் கொழுமலர்,*
மன்ன வந்து பூண்டு* வாட்டமின்றி எங்கும் நின்றதே. (2) (119)
##இயக்கறாத பல்பிறப்பில்* என்னை மாற்றி இன்று வந்து,*
உயக்கொள் மேக வண்ணன் நண்ணி* என்னில் ஆய தன்னுளே,*
மயக்கினான் தன் மன்னுசோதி* ஆதலால்* என் ஆவிதான்,-
இயக்கு எலாம் அறுத்து* அறாத இன்ப வீடு பெற்றதே. (2) (120)
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.