திருப்பள்ளியெழுச்சி


திருப்பள்ளியெழுச்சி தனியன்கள்

திருமலையாண்டான் அருளியது

தமேவமத்வா பரவாஸுதேவம்

ரங்கேசயம் ராஜவதர்கணீயம்

ப்ராபோதகீம் யோக்ருத ஸíக்திமாலாம்

பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

திருமலை நம்பிகள் அருளியது

மண்டங் குடியென்பர் மாமரையோர்,* மன்னியசீர்த்

தொண்டரடிப்பொடி தொன்னகரம்,* – வண்டு

திணர்த்தவயல் தென்னரங்கத்து அம்மானைப்,* பள்ளி

உணர்த்தும் பிரானுதித்த வூர்.

 

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

917:##

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்*

 கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்,*

மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*

 வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி,*

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*

 இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,*

அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*

 அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. (2)  (1)

 

918:

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*

 கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,*

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் அன்னம்*

 ஈன்பனி நனைந்த தம் இருசிறகு உதறி,*

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*

 வெள்ளெயிறுறவதன் விடத்தனுக்கு அனுங்கி,*

அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (2)

 

919:

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்*

 துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,*

படரொளி பசுத்தனன் பனிமதி இவேனா*

 பாயிறுள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*

மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*

 வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,*

அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (3)

 

920:

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*

 வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,*

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*

 இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*

வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*

 மாமுனி வேள்வியைக் காத்து,* அவ பிரதம்-

ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (4)

 

921:

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*

 போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,*

கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*

 களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*

அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*

 அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா*

இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*

 எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.   (5)

 

922:

இரவியர் மணிநெடும்  தேரொடும் இவரோ?*

 இறையவர் பதினொரு விடையரும் இவரோ?*

மருவிய மயிலினன் அறுமுகன் இவேனா?*

 மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி,*

புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்*

 குமரதண்டம் புகுந் தீண்டிய வெள்ளம்,*

அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (6)

 

923:

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*

 அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?*

இந்திரன் ஆனையும் தானும் வந்து இவேனா?*

 எம்பெருமான் உன் கோயிலின் வாசல்,*

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*

 இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*

அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ?*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (7)

 

924:

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*

 மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,*

எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*

 ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,*

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*

 தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி,*

அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  (8)

 

925:##

ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே*

 யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,*

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*

 கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*

மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*

 சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,*

ஆதலில் அவர்க்கு நாளோலக்கம் அருள*

 அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. (2)  (9)

 

926:##

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*

 கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவேனா?*

துடியிடையார் சுரி குழல் பிழிந்துதறித்*

 துகிலுடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து*

 தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்-

அடியனை,* அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-

 ஆட்படுத்தாய்!* பள்ளி எழுந்து அருளாயே! (2)  (10)

 

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.