மற்றொன்றும் வேண்டா மனமே! மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,* உற்ற திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப்பொடி எம் பெருமானை,* எப்பொழுதும் பேசு. |
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை
872:
காவலில் புலனை வைத்துக்* கலிதனைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ! நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே! (2) (1)
873:
பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே! (2) (2)
874:
வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம்,*
ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்கமா நகர் உளானே! (3)
875:
மொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்,*
இத்தனை அடியரானார்க்கு* இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே! (4)
876:
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து,*
தண்துழாய் மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடி யாடி,*
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்* தொழும்பர் சோறு உகக்குமாறே! (5)
877:
மறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*
புறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*
புறம்சுவர் கோலம் செய்து* புள்கவ்வக் கிடக்கின்றீரே! (6)
878:
புலையறம் ஆகிநின்ற* புத்தொடு சமண மெல்லாம்,*
கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோதாம்,*
தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியங் காண்மின் ஐயா,*
சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான். (7)
879:
வெறுப்பொடு சமணர் முண்டர்* விதியில் சாக்கியர்கள்,* நின்பால்-
பொறுப்பரியனகள் பேசில்* போவதே நோயதாகி*
குறிப்பெனக் கடையும் ஆகில்* கூடுமேல் தலையை* ஆங்கே,-
அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்கமா நகருளானே! (8)
880:
மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானிடங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்* ஒருவன் என்று உணர மாட்டீர்,*
அற்றமேல் ஒன்று அறீயீர்* அவனல்லால் தெய்வ மில்லை,*
கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே. (9)
881:
நாட்டினான் தெய்வம் எங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே,*
காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,*
கேட்டிரே நம்பிமீர்காள்!* கெருட வாகனனும் நிற்க,*
சேட்டை தன் மடிய கத்துச்* செல்வம் பார்த்து இருக்கின் றீரே. (10)
882:
ஒருவில்லால் ஓங்கு முந்நீர்* அடைத்து உலகங்கள் உய்ய,*
செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்,*
மருவிய பெரிய கோயில்* மதிள் திருவரங்கம் என்னா,*
கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே. (11)
883:
நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க,*
நரகமே சுவர்க்க மாகும்* நாமங்கள் உடைய நம்பி,*
அவனதூர் அரங்கம் என்னாது* அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,*
கவலையுள் படுகின்றார் என்று* அதனுக்கே கவல்கின்றேனே! (12)
884:
எறியுநீர் வெறிகொள் வேலை* மாநிலத்து உயிர்களெல்லாம்,*
வெறிகொள் பூந்துளவ மாலை* விண்ணவர் கோனை ஏத்த,*
அறிவிலா மனிதர் எல்லாம்* அரங்கமென்று அழைப்பராகில்,*
பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து ஒழியுமன்றே? (13)
885:
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை,*
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா,*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே. (2) (14)
886:
மெய்யர்க்கே மெய்யனாகும்* விதியிலா என்னைப் போல,*
பொய்யர்க்கே பொய்யனாகும்* புட்கொடி உடைய கோமான்,*
உய்யப்போம் உணர்வினார்கட்கு* ஒருவன் என்றுணர்ந்த பின்னை,*
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்* அழகனூர் அரங்க மன்றே? (15)
887:
சூதனாய்க் கள்வனாகித்* தூர்த்தரோடு இசைந்த காலம்,*
மாதரார் கயற்கண் என்னும்* வலையுள் பட்டு அழுந்துவேனை,*
போதரே என்று சொல்லிப்* புந்தியில் புகுந்து,* தன்பால்-
ஆதரம் பெருக வைத்த* அழகனூர் அரங்கம் அன்றே? (16)
888:
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்* விதியிலேன் மதியொன்றில்லை,*
இரும்புபோல் வலிய நெஞ்சம்* இறையிறை உருகும் வண்ணம்*
சுரும்பமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*
கரும்பினைக் கண்டு கொண்டேன்* கண்ணிணை களிக்கு மாறே! (17)
889:
இனிதிரைத் திவலை மோத* எறியும்தண் பரவை மீதே,*
தனிகிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
கனியிருந்து அனைய செவ்வாய்க்* கண்ணணைக் கண்ட கண்கள்,*
பனியரும்பு உதிருமாலோ* எஞ்செய்கேன் பாவி யேனே! (18)
890:
குடதிசை முடியை வைத்துக்* குணதிசை பாதம் நீட்டி,*
வடதிசை பின்பு காட்டித்* தென்திசை இலங்கை நோக்கி,*
கடல்நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு,*
உடலெனக்கு உருகுமாலோ* எஞ்செய்கேன் உலகத்தீரே! (2) (19)
891:
பாயும் நீர் அரங்கந்தன்னுள்* பாம்பணைப் பள்ளி கொண்ட,*
மாயனார் திருநன் மார்பும்* மரகத உருவும் தோளும்,*
தூய தாமரைக் கண்களும்* துவரிதழ் பவள வாயும்,*
ஆயசீர் முடியும் தேசும்* அடியரோர்க்கு அகலலாமே? (20)
892:
பணிவினால் மனமதொன்றிப்* பவளவாய் அரங்கனார்க்கு,*
துணிவினால் வாழமாட்டாத்* தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*
அணியனார் செம்பொனாய* அருவரை அனைய கோயில்,*
மணியனார் கிடந்தவாற்றை* மனத்தினால் நினைக்கலாமே? (21)
893:
பேசிற்றே பேசல் அல்லால்* பெருமை ஒன்று உணரலாகாது,*
ஆசற்றார் தங்கட்கல்லால்* அறியலா வானுமல்லன்,*
மாசற்றார் மனத்துளானை* வணங்கி நாம் இருப்பதல்லால்,*
பேசத்தான் ஆவதுண்டோ?* பேதை நெஞ்சே!நீ சொல்லாய். (22)
894:
கங்கையில் புனிதமாய* காவிரி நடுவு பாட்டு,*
பொங்குநீர் பரந்து பாயும்* பூம்பொழில் அரங்கம் தன்னுள்,*
எங்கள் மால் இறைவன் ஈசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையேன் ஏழையேனே! (23)
895:
வெள்ளநீர் பரந்து பாயும்* விரிபொழில் அரங்கம் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்* கமலநன் முகமும் கண்டு*
உள்ளமே! வலியை போலும்* ஒருவன் என்று உணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்* கள்ளத்தே கழிக்கின்றாயே! (24)
896:
குளித்து மூன்றனலை ஓம்பும்* குறிகொள் அந்தணமை தன்னை,*
ஒளித்திட்டேன் என்கணில்லை* நின்கணும் பத்தன் அல்லேன்,*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக்கு அருள்செய் கண்டாய்* அரங்கமா நகர் உளானே! (25)
897:
போதெல்லாம் போது கொண்டுன்* பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்* திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்சம் அன்பு* கலந்திலேன் அது தன்னாலே,*
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே!* எஞ்செய்வான் தோன்றினேனே! (26)
898:
குரங்குகள் மலையை நூக்கக்* குளித்துத்தாம் புரண்டிட்டோடி,*
தரங்க நீரடைக்கலுற்ற* சலமிலா அணிலம் போலேன்,*
மரங்கள்போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே* அளியத்தேன் அயர்க்கின்றேனே! (27)
899:
உம்பரால் அறியலாகா* ஒளியுளார் ஆனைக்காகி,*
செம்புலால் உண்டு வாழும்* முதலைமேல் சீறி வந்தார்,*
நம்பரமாயதுண்டே?* நாய்களோம் சிறுமை யோரா,*
எம்பிராற்கு ஆட்செய்யாதே* எஞ்செய்வான் தோன்றினேனே! (28)
900:
ஊரிலேன் காணி இல்லை* உறவு மற்றொருவர் இல்லை,*
பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ணனே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைகண் அம்மா!* அரங்கமா நகரு ளானே! (29)
901:
மனத்திலோர் தூய்மை இல்லை* வாயிலோர் இன்சொல் இல்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!* பொன்னிசூழ் திருவரங்கா,*
எனக்கினி கதியென் சொல்லாய்* என்னை ஆளுடைய கோவே! (30)
902:
தவத்துளார் தம்மில் அல்லேன் * தனம் படத்தாரில் அல்லேன்,*
உவர்த்தநீர் போல என்தன் * உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,*
துவர்த்த செவ்வாயினார்க்கே * துவக்கறத் துரிசனானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய் * அரங்கமா நகரு ளானே! (31)
903:
ஆர்த்து வண்டலம்பும் சோலை * அணிதிருவரங்கந் தன்னுள்,*
கார்த்திரள் அனைய மேனிக் * கண்ணனே! உன்னைக் காணும்,*
மார்க்கம் ஒன்றறிய மாட்டா * மனிசரில் துரிசனாய,*
மூர்க்கனேன் வந்து நின்றேன், * மூர்க்கனேன் மூர்க்கனேனே. (32)
904:
மெய்யெல்லாம் போக விட்டு * விரிகுழலாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட * போட்கனேன் வந்து நின்றேன்,*
ஐயனே! அரங்கனே! உன் * அருளென்னும் ஆசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே. (33)
905:
உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வொன்றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டேன்,*
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடனிருந்து அறிதி என்று,*
வெள்கிப் போயென்னுள்ளே நான் * விலவறச் சிரித்திட்டேனே! (34)
906:
தாவியன்று உலகமெல்லாம் * தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
சேவியேன் உன்னை அல்லால் * சிக்கெனச் செங்கண் மாலே,*
ஆவியே! அமுதே! என்தன் * ஆருயிர் அனைய எந்தாய்,*
பாவியேன் உன்னை அல்லால் * பாவியேன் பாவியேனே. (35)
907:
மழைக்கன்று வரை முனேந்தும் * மைந்தனே!மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது* ஒழிவதே,உன்னை அன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி! * அரங்கமா நகரு ளானே! (36)
908:
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் * திருவரங்கங்கத்துள் ஓங்கும்,*
ஒளியுளார் தாமே அன்றே * தந்தையும் தாயும் ஆவார்,*
எளியதோர் அருளும் அன்றே * என்திறத்து எம்பிரானார்,*
அளியன்நம் பையல் என்னார் * அம்மவோ கொடிய வாறே! (37)
909:
மேம்பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து,*
ஆம்பரிசறிந்து கொண்டு * ஐம்புலன் அகத்தடக்கி,*
காம்புறத் தலை சிரைத்துன் * கடைத்தலை யிருந்து,வாழும்*
சோம்பரை உகத்தி போலும் * சூழ்புனல் அரங்கத் தானே! (2) (38)
910:
அடிமையில் குடிமை இல்லா * அயல் சதுப்பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட * குக்கரில் பிறப்ப ரேலும்,*
முடியினில் துளபம் வைத்தாய்! * மொய்கழற்கு அன்பு செய்யும்,*
அடியரை உகத்தி போலும் * அரங்கமா நகரு ளானே! (39)
911:
திருமறு மார்வ! நின்னைச் * சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்தராகில் * மாநிலத்து உயிர்களெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயனது உய்யார் * அரங்கமா நகரு ளானே! (40)
912:
`வானுளார் அறியலாகா * வானவா!‘ என்பர் ஆகில்,*
`தேனுலாந் துளப மாலைச் * சென்னியாய்!‘ என்பர் ஆகில்,*
ஊனமாயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும்,*
போனகம் செய்த சேடம் * தருவரேல் புனித மன்றே? (41)
913:
`பழுதிலா ஒழுகல் ஆற்றுப் * பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்களாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!‘ * என்றுநிந்னோடு ஒக்க,*
வழிபட அருளினாய் போல் * மதிள் திருவரங்கத் தானே! (42)
913:
அமரவோர் அங்கமாறும் * வேதமோர் நான்கும் ஓதி,*
தமர்களில் தலைவ ராய * சாதி அந்தணர்களேலும்,*
நுமர்களைப் பழிப்ப ராகில் * நொடிப்பதோர் அளவில்,* ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்கமா நகரு ளானே! (43)
915:
பெண்ணுலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி * தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ * களைகணாக் கருது மாறே! (2) (44)
916:
வளவெழும் தவள மாட * மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற * கண்ணனை அரங்க மாலை,*
துவளத் தொண்டாய தொல்சீர்த் * தொண்டரடிப்பொடி சொல்,*
இளையபுன் கவிதை யேலும் * எம்பிறார் கினிய வாறே! (2) (45)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.