திருமாலை


திருமாலை தனியன்
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே! மதிளரங்கர்,

கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,* உற்ற

திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப்பொடி எம்

பெருமானை,* எப்பொழுதும் பேசு.

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை

 872:

காவலில் புலனை வைத்துக்* கலிதனைக் கடக்கப் பாய்ந்து,*

நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,*

மூவுலகு உண்டு உமிழ்ந்த* முதல்வ! நின் நாமம் கற்ற,*

ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே! (2)   (1)

 

873:

பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*

அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*

இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*

அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே! (2)   (2)

 

874:

வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*

பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*

பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம்,*

ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்கமா நகர் உளானே!    (3)

 

875:

மொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்துடைய பேரால்,*

கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்,*

இத்தனை அடியரானார்க்கு* இரங்கும் நம் அரங்கனாய*

பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே!   (4)

 

876:

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியதோர் இடும்பை பூண்டு*

உண்டிராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து,*

தண்துழாய் மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடி யாடி,*

தொண்டு பூண்டமுதம் உண்ணாத்* தொழும்பர் சோறு உகக்குமாறே!   (5)

 

877:

மறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*

புறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*

அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*

புறம்சுவர் கோலம் செய்து* புள்கவ்வக் கிடக்கின்றீரே!   (6)

 

 

 

878:

புலையறம் ஆகிநின்ற* புத்தொடு சமண மெல்லாம்,*

கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோதாம்,*

தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியங் காண்மின் ஐயா,*

சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான்.    (7)

 

879:

வெறுப்பொடு சமணர் முண்டர்* விதியில் சாக்கியர்கள்,* நின்பால்-

பொறுப்பரியனகள் பேசில்* போவதே நோயதாகி*

குறிப்பெனக் கடையும் ஆகில்* கூடுமேல் தலையை* ஆங்கே,-

அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்கமா நகருளானே!    (8)

 

880:

மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானிடங்காள்,*

உற்றபோது அன்றி நீங்கள்* ஒருவன் என்று உணர மாட்டீர்,*

அற்றமேல் ஒன்று அறீயீர்* அவனல்லால் தெய்வ மில்லை,*

கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே.   (9)

 

881:

நாட்டினான் தெய்வம் எங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே,*

காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,*

கேட்டிரே நம்பிமீர்காள்!* கெருட வாகனனும் நிற்க,*

சேட்டை தன் மடிய கத்துச்* செல்வம் பார்த்து இருக்கின் றீரே.   (10)

882:

ஒருவில்லால் ஓங்கு முந்நீர்* அடைத்து உலகங்கள் உய்ய,*

செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்,*

மருவிய பெரிய கோயில்* மதிள் திருவரங்கம் என்னா,*

கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே.   (11)

 

883:

நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க,*

நரகமே சுவர்க்க மாகும்* நாமங்கள் உடைய நம்பி,*

அவனதூர் அரங்கம் என்னாது* அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,*

கவலையுள் படுகின்றார் என்று* அதனுக்கே கவல்கின்றேனே!   (12)

 

884:

எறியுநீர் வெறிகொள் வேலை* மாநிலத்து உயிர்களெல்லாம்,*

வெறிகொள் பூந்துளவ மாலை* விண்ணவர் கோனை ஏத்த,*

அறிவிலா மனிதர் எல்லாம்* அரங்கமென்று அழைப்பராகில்,*

பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து ஒழியுமன்றே?   (13)

 

885:

வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை,*

கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை,*

அண்டர்கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா,*

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே. (2)  (14)

 

886:

மெய்யர்க்கே மெய்யனாகும்* விதியிலா என்னைப் போல,*

பொய்யர்க்கே பொய்யனாகும்* புட்கொடி உடைய கோமான்,*

உய்யப்போம் உணர்வினார்கட்கு* ஒருவன் என்றுணர்ந்த பின்னை,*

ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்* அழகனூர் அரங்க மன்றே?   (15)

 

887:

சூதனாய்க் கள்வனாகித்* தூர்த்தரோடு இசைந்த காலம்,*

மாதரார் கயற்கண் என்னும்* வலையுள் பட்டு அழுந்துவேனை,*

போதரே என்று சொல்லிப்* புந்தியில் புகுந்து,* தன்பால்-

ஆதரம் பெருக வைத்த* அழகனூர் அரங்கம் அன்றே?   (16)

 

888:

விரும்பி நின்று ஏத்த மாட்டேன்* விதியிலேன் மதியொன்றில்லை,*

இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறையிறை உருகும் வண்ணம்*

சுரும்பமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*

கரும்பினைக் கண்டு கொண்டேன்* கண்ணிணை களிக்கு மாறே!    (17)

 

889:

இனிதிரைத் திவலை மோத* எறியும்தண் பரவை மீதே,*

தனிகிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்,*

கனியிருந்து அனைய செவ்வாய்க்* கண்ணணைக் கண்ட கண்கள்,*

பனியரும்பு உதிருமாலோ* எஞ்செய்கேன் பாவி யேனே!    (18)

 

890:

குடதிசை முடியை வைத்துக்* குணதிசை பாதம் நீட்டி,*

வடதிசை பின்பு காட்டித்* தென்திசை இலங்கை நோக்கி,*

கடல்நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு,*

உடலெனக்கு உருகுமாலோ* எஞ்செய்கேன் உலகத்தீரே! (2)   (19)

 

891:

பாயும் நீர் அரங்கந்தன்னுள்* பாம்பணைப் பள்ளி கொண்ட,*

மாயனார் திருநன் மார்பும்* மரகத உருவும் தோளும்,*

தூய தாமரைக் கண்களும்* துவரிதழ் பவள வாயும்,*

ஆயசீர் முடியும் தேசும்* அடியரோர்க்கு அகலலாமே?    (20)

 

892:

பணிவினால் மனமதொன்றிப்* பவளவாய் அரங்கனார்க்கு,*

துணிவினால் வாழமாட்டாத்* தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*

அணியனார் செம்பொனாய* அருவரை அனைய கோயில்,*

மணியனார் கிடந்தவாற்றை* மனத்தினால் நினைக்கலாமே?   (21)

 

893:

பேசிற்றே பேசல் அல்லால்* பெருமை ஒன்று உணரலாகாது,*

ஆசற்றார் தங்கட்கல்லால்* அறியலா வானுமல்லன்,*

மாசற்றார் மனத்துளானை* வணங்கி நாம் இருப்பதல்லால்,*

பேசத்தான் ஆவதுண்டோ?* பேதை நெஞ்சே!நீ சொல்லாய்.   (22)

 

894:

கங்கையில் புனிதமாய* காவிரி நடுவு பாட்டு,*

பொங்குநீர் பரந்து பாயும்* பூம்பொழில் அரங்கம் தன்னுள்,*

எங்கள் மால் இறைவன் ஈசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*

எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையேன் ஏழையேனே!    (23)

 

895:

வெள்ளநீர் பரந்து பாயும்* விரிபொழில் அரங்கம் தன்னுள்,*

கள்ளனார் கிடந்த வாறும்* கமலநன் முகமும் கண்டு*

உள்ளமே! வலியை போலும்* ஒருவன் என்று உணர மாட்டாய்,*

கள்ளமே காதல் செய்துன்* கள்ளத்தே கழிக்கின்றாயே!   (24)

 

896:

குளித்து மூன்றனலை ஓம்பும்* குறிகொள் அந்தணமை தன்னை,*

ஒளித்திட்டேன் என்கணில்லை* நின்கணும் பத்தன் அல்லேன்,*

களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*

அளித்தெனக்கு அருள்செய் கண்டாய்* அரங்கமா நகர் உளானே!    (25)

 

897:

போதெல்லாம் போது கொண்டுன்* பொன்னடி புனைய மாட்டேன்,*

தீதிலா மொழிகள் கொண்டுன்* திருக்குணம் செப்ப மாட்டேன்,*

காதலால் நெஞ்சம் அன்பு* கலந்திலேன் அது தன்னாலே,*

ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே!* எஞ்செய்வான் தோன்றினேனே!    (26)

 

898:

குரங்குகள் மலையை நூக்கக்* குளித்துத்தாம் புரண்டிட்டோடி,*

தரங்க நீரடைக்கலுற்ற* சலமிலா அணிலம் போலேன்,*

மரங்கள்போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*

அரங்கனார்க்கு ஆட்செய்யாதே* அளியத்தேன் அயர்க்கின்றேனே!   (27)

 

899:

உம்பரால் அறியலாகா* ஒளியுளார் ஆனைக்காகி,*

செம்புலால் உண்டு வாழும்* முதலைமேல் சீறி வந்தார்,*

நம்பரமாயதுண்டே?* நாய்களோம் சிறுமை யோரா,*

எம்பிராற்கு ஆட்செய்யாதே* எஞ்செய்வான் தோன்றினேனே!    (28)

 

900:

ஊரிலேன் காணி இல்லை* உறவு மற்றொருவர் இல்லை,*

பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*

காரொளி வண்ணனே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*

ஆருளர்க் களைகண் அம்மா!* அரங்கமா நகரு ளானே!    (29)

 

901:

மனத்திலோர் தூய்மை இல்லை* வாயிலோர் இன்சொல் இல்லை,*

சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா,*

புனத்துழாய் மாலை யானே!* பொன்னிசூழ் திருவரங்கா,*

எனக்கினி கதியென் சொல்லாய்* என்னை ஆளுடைய கோவே!    (30)

 

902:

தவத்துளார் தம்மில் அல்லேன் * தனம் படத்தாரில் அல்லேன்,*

உவர்த்தநீர் போல என்தன் * உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்,*

துவர்த்த செவ்வாயினார்க்கே * துவக்கறத் துரிசனானேன்,*

அவத்தமே பிறவி தந்தாய் * அரங்கமா நகரு ளானே!    (31)

 

903:

ஆர்த்து வண்டலம்பும் சோலை * அணிதிருவரங்கந் தன்னுள்,*

கார்த்திரள் அனைய மேனிக் * கண்ணனே! உன்னைக் காணும்,*

மார்க்கம் ஒன்றறிய மாட்டா * மனிசரில் துரிசனாய,*

மூர்க்கனேன் வந்து நின்றேன், * மூர்க்கனேன் மூர்க்கனேனே.   (32)

 

 

 

 

 

904:

மெய்யெல்லாம் போக விட்டு * விரிகுழலாரில் பட்டு,*

பொய்யெலாம் பொதிந்து கொண்ட * போட்கனேன் வந்து நின்றேன்,*

ஐயனே! அரங்கனே! உன் * அருளென்னும் ஆசை தன்னால்,*

பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே.    (33)

 

905:

உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வொன்றில்லா,*

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டேன்,*

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடனிருந்து அறிதி என்று,*

வெள்கிப் போயென்னுள்ளே நான் * விலவறச் சிரித்திட்டேனே!   (34)

 

906:

தாவியன்று உலகமெல்லாம் * தலைவிளாக் கொண்ட எந்தாய்,*

சேவியேன் உன்னை அல்லால் * சிக்கெனச் செங்கண் மாலே,*

ஆவியே! அமுதே! என்தன் * ஆருயிர் அனைய எந்தாய்,*

பாவியேன் உன்னை அல்லால் * பாவியேன் பாவியேனே.    (35)

 

907:

மழைக்கன்று வரை முனேந்தும் * மைந்தனே!மதுர வாறே,*

உழைக்கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு,*

உழைக்கின்றேற்கு என்னை நோக்காது* ஒழிவதே,உன்னை அன்றே*

அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி! * அரங்கமா நகரு ளானே!    (36)

 

908:

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் * திருவரங்கங்கத்துள் ஓங்கும்,*

ஒளியுளார் தாமே அன்றே * தந்தையும் தாயும் ஆவார்,*

எளியதோர் அருளும் அன்றே * என்திறத்து எம்பிரானார்,*

அளியன்நம் பையல் என்னார் * அம்மவோ கொடிய வாறே!    (37)

 

909:

மேம்பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து,*

ஆம்பரிசறிந்து கொண்டு * ஐம்புலன் அகத்தடக்கி,*

காம்புறத் தலை சிரைத்துன் * கடைத்தலை யிருந்து,வாழும்*

சோம்பரை உகத்தி போலும் * சூழ்புனல் அரங்கத் தானே! (2)   (38)

 

910:

அடிமையில் குடிமை இல்லா * அயல் சதுப்பேதி மாரில்,*

குடிமையில் கடைமை பட்ட * குக்கரில் பிறப்ப ரேலும்,*

முடியினில் துளபம் வைத்தாய்! * மொய்கழற்கு அன்பு செய்யும்,*

அடியரை உகத்தி போலும் * அரங்கமா நகரு ளானே!    (39)

 

911:

திருமறு மார்வ! நின்னைச் * சிந்தையுள் திகழ வைத்து,*

மருவிய மனத்தராகில் * மாநிலத்து உயிர்களெல்லாம்,*

வெருவரக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினைய ரேலும்,*

அருவினைப் பயனது உய்யார் * அரங்கமா நகரு ளானே!    (40)

 

912:

`வானுளார் அறியலாகா * வானவா!என்பர் ஆகில்,*

`தேனுலாந் துளப மாலைச் * சென்னியாய்!என்பர் ஆகில்,*

ஊனமாயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும்,*

போனகம் செய்த சேடம் * தருவரேல் புனித மன்றே?   (41)

 

913:

`பழுதிலா ஒழுகல் ஆற்றுப் * பலசதுப் பேதி மார்கள்,*

இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்களாகில்,*

தொழுமினீர் கொடுமின் கொள்மின்!‘ * என்றுநிந்னோடு ஒக்க,*

வழிபட அருளினாய் போல் * மதிள் திருவரங்கத் தானே!   (42)

 

913:

அமரவோர் அங்கமாறும் * வேதமோர் நான்கும் ஓதி,*

தமர்களில் தலைவ ராய * சாதி அந்தணர்களேலும்,*

நுமர்களைப் பழிப்ப ராகில் * நொடிப்பதோர் அளவில்,* ஆங்கே-

அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்கமா நகரு ளானே!    (43)

 

915:

பெண்ணுலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான்,*

எண்ணிலா வூழி யூழி * தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*

விண்ணுளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த-

கண்ணறா,* உன்னை யென்னோ * களைகணாக் கருது மாறே! (2)   (44)

 

916:

வளவெழும் தவள மாட * மதுரைமா நகரந் தன்னுள்,*

கவளமால் யானை கொன்ற * கண்ணனை அரங்க மாலை,*

துவளத் தொண்டாய தொல்சீர்த் * தொண்டரடிப்பொடி சொல்,*

இளையபுன் கவிதை யேலும் * எம்பிறார் கினிய வாறே! (2)   (45)

 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.