என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா*
அன்பே தகளி அளித்தானை* – நன்புகழ்சேர்- சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்* பூதத்தார் பொன்னங்கழல். |
2182:##
அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*
இன்புருகு சிந்தை இடுதிரியா,* – நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1
2183:
ஞானத்தால் நன்குணர்ந்து* நாரணன்தன் நாமங்கள்,*
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால்,* – வானத்-
தணியமரர்* ஆக்குவிக்கும் அஃதன்றே,* நங்கள்-
பணியமரர் கோமான் பரிசு? 2
2184:
பரிசு நறுமலரால்* பாற்கடலான் பாதம்,*
புரிவார் புகழ்பெறுவர் போலாம்,* – புரிவார்கள்-
தொல்லமரர் கேள்வித்* துலங்கொளிசேர் தோற்றத்து*
நல்லமரர் கோமான் நகர். 3
2185:
நகரிழைத்து நித்திலத்து* நாண்மலர் கொண்டு,* ஆங்கே-
திகழும் அணிவயிரம் சேர்த்து,* – நிகரில்லாப்-
பைங்கமலம் ஏந்திப்* பணிந்தேன் பனிமலராள்,*
அங்கம்வலம் கொண்டான் அடி. 4
2186:
அடிமூன்றில் இவ்வுலகம்* அன்றளந்தாய் போலும்*
அடிமூன்று இரந்து அவனி கொண்டாய்,* – படிநின்ற-
நீரோத மேனி* நெடுமாலே* நின்னடியை-
ஆரோத வல்லார் அறிந்து? 5
2187:
அறிந்து ஐந்தும் உள்ளடக்கி* ஆய்மலர்கொண்டு,* ஆர்வம்-
செறிந்த மனத்தராய்ச் செவ்வே,* – அறிந்து அவன்தன்-
பேரோதி ஏத்தும்* பெருந்தவத்தோர் காண்பரே,*
காரோத வண்ணன் கழல். 6
2188:
கழலெடுத்து வாய்மடித்துக்* கண்சுழன்று,* மாற்றார்-
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச,* தழலெடுத்த-
போராழி ஏந்தினான்* பொன்மலர்ச் சேவடியை*
ஓராழி நெஞ்சே! உகந்து. 7
2189:
உகந்துன்னை வாங்கி* ஒளிநிறங்கொள் கொங்கை*
அகம்குளிர உண்ணென்றாள் ஆவி,* உகந்து-
முலையுண்பாய் போலே* முனிந்துண்டாய்,* நீயும்-
அலைபண்பால் ஆனமையால் அன்று. 8
2190:
அன்றுஅது கண்டு அஞ்சாத* ஆய்ச்சி உனக்கிரங்கி,*
நின்று முலைதந்த இந்நீர்மைக்கு,* அன்று-
வரன்முறையால் நீயளந்த* மாகடல்சூழ் ஞாலம்,*
பெருமுறையால் எய்துமோ பேர்த்து? 9
2191:
பேர்த்தனை* மாசகடம் பிள்ளையாய்,* மண்ணிரந்து-
காத்தனை* பல்லுயிரும் காவலனே,* ஏத்திய-
நாவுடையேன் பூவுடையேன்* நின்னுள்ளி நின்றமையால்*
காவடியேன் பட்ட கடை. 10
2192:
கடைநின்று அமரர் கழல்தொழுது,* நாளும்-
இடைநின்ற இன்பத்தராவர்,* புடைநின்ற-
நீரோத மேனி* நெடுமாலே,* நின்னடியை-
ஆரோத வல்லார் அவர்? 11
2193:
அவரிவர் என்றில்லை* அரவணையான் பாதம்,*
எவர்வணங்கி ஏத்தாதார் எண்ணில்,* பலரும்-
செழுங்கதிரோன் ஒண்மலரோன்* கண்ணுதலோன் அன்றே*
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12
2194:
தொடரெடுத்த மால்யானை* சூழ் கயம்புக்கு அஞ்சிப்*
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,*அன்று இடரடுக்க-
ஆழியான்* பாதம் பணிந்தன்றே,* வானவர்கோன்-
பாழிதான் எய்திற்றுப் பண்டு? 13
2195:
பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* – எண்திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14
2196:
திரிந்தது வெஞ்சமத்துத்* தேர்கடவி,* அன்று-
பிரிந்தது சீதையை மான் பின்போய்,* – புரிந்ததுவும்-
கண்பள்ளி கொள்ள* அழகியதே,* நாகத்தின்-
தண்பள்ளி கொள்வான் தனக்கு. 15
2197:
தனக்கடிமை பட்டது* தானறியானேலும்*
மனத்தடைய வைப்பதாம் மாலை,* – வனத்திடரை-
ஏரியாம் வண்ணம்* இயற்றும் இதுவல்லால்,*
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16
2198:
மற்றார் இயலாவர்* வானவர்கோன் மாமலரோன்,*
சுற்றும் வணங்கும் தொழிலானை,* – ஒற்றைப்-
பிறையிருந்த* செஞ்சடையான் பிஞ்சென்று,* மாலைக்-
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17
2199:
கொண்டது உலகம்* குறளுருவாய்க் கோளரியாய்,*
ஒண்திறலோன் மார்வத் துகிர்வைத்தது* – உண்டதுவும்-
தான்கடந்த ஏழுலகே* தாமரைக்கண் மாலொருநாள்,*
வான்கடந்தான் செய்த வழக்கு. 18
2200:
வழக்கன்று கண்டாய்* வலிசகடம் செற்றாய்,*
வழக்கொன்று நீமதிக்க வேண்டா,* – குழக்கன்று-
தீவிளவின் காய்க்கெறிந்த* தீமை திருமாலே,*
பார்விளங்கச் செய்தாய் பழி. 19
2201:
பழிபாவம் கையகற்றிப்* பல்காலும் நின்னை,*
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ,* – வழுவின்றி-
நாரணன்தன் நாமங்கள்* நன்குணர்ந்து நன்கேத்தும்,*
காரணங்கள் தாமுடையார் தாம். 20
2202:
தாமுளரே* தம்முள்ளம் உள்ளுளதே,* தாமரையின்-
பூவுளதே* ஏத்தும் பொழுதுண்டே,* – வாமன்-
திருமருவு* தாள்மரூவு சென்னியரே,* செவ்வே-
அருநரகம் சேர்வது அரிது. 21
2203:
அரியது எளிதாகும்* ஆற்றலால் மாற்றி,*
பெருக முயல்வாரைப் பெற்றால்,* – கரியதோர்-
வெண்கோட்டு மால்யானை* வென்று முடித்தன்றே,*
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22
2204:
தாழ்ந்துவரம் கொண்டு* தக்க வகைகளால்*
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்,* – தாழ்ந்த-
விளங்கனிக்குக்* கன்றெறிந்து வேற்றுருவாய்,* ஞாலம்-
அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன். 23
2205:
அவன்கண்டாய் நன்னெஞ்சே!* ஆரருளும் கேடும்,*
அவன்கண்டாய் ஐம்புலனாய் நின்றான்,* – அவன்கண்டாய்-
காற்றுத்தீ நீர் வான்* கருவரைமண் காரோத,*
சீற்றத்தீ யாவானும் சென்று. 24
2206:
சென்றது இலங்கைமேல்* செவ்வேதன் சீற்றத்தால்,*
கொன்றது இராவணனைக் கூறுங்கால்,* – நின்றதுவும்-
வேயோங்கு தண்சாரல்* வேங்கடமே,* விண்ணவர்தம்-
வாயோங்கு* தொல்புகழான் வந்து. 25
2207:
வந்தித்து அவனை* வழிநின்ற ஐம்பூதம்*
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய்,* – உந்திப்-
படியமரர் வேலையான்* பண்டு அமரர்க்கீந்த,*
படியமரர் வாழும் பதி. 26
2208:
பதியமைந்து நாடிப்* பருத்தெழுந்த சிந்தை,*
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி* – கதிமிகுத்தங்-
கோல்தேடி ஓடும்* கொழுந்ததே போன்றதே,*
மால்தேடி ஓடும் மனம். 27
2209:
மனத்துள்ளான் வேங்கடத்தான்* மாகடலான்,* மற்றும்-
நினைப்பரிய* நீள் அரங்கத்துள்ளான்,* – எனைப்பலரும்-
தேவாதி தேவன்* எனப்படுவான்,* முன்னொருனாள்-
மாவாய் பிளந்த மகன். 28
2210:
மகனாகக் கொண்டெடுத்தாள்* மாண்பாய கொங்கை,*
அகனார உண்பன் என்றுண்டு,* – மகனைத்தாய்-
தேறாத வண்ணம்* திருத்தினாய்,* தென்னிலங்கை-
நீறாக எய்தழித்தாய் நீ. 29
2211:
நீயன்று உலகளந்தாய்* நீண்ட திருமாலே,*
நீயன்று உலகிடந்தாய் என்பரால்,* – நீயன்று-
காரோதம் முன்கடைந்து* பின்னடைத்தாய் மாகடலை,*
பேரோத மேனிப் பிரான். 30
2212:
பிரானென்று நாளும்* பெரும்புலரி என்றும்,*
குராநல் செழும்போது கொண்டு,* – வராகத்து-
அணியுருவன்* பாதம் பணியும் அவர் கண்டீர்,*
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31
2213:
மகிழ்ந்தது சிந்தை* திருமாலே,* மற்றும்-
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி,* – மகிழ்ந்தது-
அழலாழி சங்கம்* அவைபாடி ஆடும்,*
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32
2214:
துணிந்தது சிந்தை* துழாயலங்கல்,* அங்கம்-
அணிந்தவன்* பேர்உள்ளத்துப் பல்கால்,* – பணிந்ததுவும்-
வேய்பிறங்கு சாரல்* விறல் வேங்கடவனையே,*
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33
2215:
வகையால் அவனி* இரந்தளந்தாய் பாதம்,*
புகையால் நறுமலாரால் முன்னே,* – மிகவாய்ந்த-
அன்பாக்கி ஏத்தி* அடிமைப்பட்டேன் உனக்கு,*
என் பாக்கியத்தால் இனி. 34
2216:
இனிதென்பர் காமம்* அதனிலும் ஆற்ற,*
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய்,* – இனிதென்று-
காமநீர் வேளாது* நின்பெருமை வேட்பரேல்,*
சேம நீர் ஆகும் சிறிது. 35
2217:
சிறியார் பெருமை* சிறிதின் கணெய்தும்,*
அறியாரும் தாமறியார் ஆவர்,* – அறியாமை-
மண்கொண்டு மண்ணுண்டு* மண்ணுமிழ்ந்த மாயனென்று,*
எண்கொண்டேன் நெஞ்சே! இரு. 36
2218:
இருந்தண் கமலத்து* இருமலரின் உள்ளே,*
திருந்து திசைமுகனைத் தந்தாய்,* – பொருந்தியநின்-
பாதங்கள் ஏத்திப்* பணியாவேல்,* பல்பிறப்பும்-
ஏதங்கள் எல்லாம் எமக்கு. 37
2219:
எமக்கென்று இருநிதியம்* ஏமாந்திராதே,*
தமக்கென்றும் சார்வம் அறிந்து,* – நமக்கென்றும்-
மாதவனே என்னும்* மனம்படைத்து* மற்றவன்பேர்-
ஓதுவதே* நாவினால் ஓத்து. 38
2220:
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,* உத்தமன்பேர்-
ஏத்தும்* திறம் அறிமின் ஏழைகாள்,* ஓத்ததனை-
வல்லீரேல்* நன்று அதனை மாட்டீரேல்,* மாதவன்பேர்-
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39
2221:
சுருக்காக வாங்கிச்* சுலாவி நின்று* ஐயார்-
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர்,* – திருப்பொலிந்த-
ஆகத்தான்* பாதம் அறிந்தும், அறியாத*
போகத்தால் இல்லை பொருள். 40
2222:
பொருளால் அமருலகம்* புக்கியலல் ஆகாது*
அருளால் அறமருளும் அன்றே,* – அருளாலே-
மாமறையோர்க்கு ஈந்த* மணிவண்ணன் பாதமே,*
நீமறவேல் நெஞ்சே! நினை. 41
2223:
நினைப்பன் திருமாலை* நீண்டதோள் காண,*
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார்,* – மனைப்பால்-
பிறந்தார் பிறந்தெய்தும்* பேரின்பம் எல்லாம்,*
துறந்தார் தொழுதாரத் தோள். 42
2224:
தோளிரண்டு எட்டேழும்* மூன்று முடியனைத்தும்,*
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான்,* – தாளிரண்டும்,-
ஆர்தொழுவார் பாதம்* அவைதொழுவது அன்றே,*என்-
சீர்கெழுதோள்* செய்யும் சிறப்பு? 43
2225:
சிறந்தார்க்கு எழுதுணையாம்* செங்கண்மால் நாமம்,*
மறந்தாரை மானிடமா வையேன்,* அறம்தாங்கும்-
மாதவனே என்னும்* மனம்படைத்து,* மற்றவன்பேர்-
ஓதுவதே* நாவினால் உள்ளு. 44
2226:
உளதென்று இறுமாவார்* உண்டில்லை என்று,*
தளர்தல் அதனருகும் சாரார்,* – அளவரிய-
வேதத்தான் வேங்கடத்தான்* விண்ணோர் முடிதோயும்,*
பாதத்தான் பாதம் பயின்று. 45
2227:
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* பன்னாள்-
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,* – பயின்றது-
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால். 46
2228:
மாலை அரியுருவன்* பாத மலரணிந்து,*
காலை தொழுதெழுமின் கைகோலி,* – ஞாலம்-
அளந்திடந்து உண்டுமிழ்ந்த* அண்ணலை மற்றல்லால்*
உளங்கிடந்தவாற்றால் உணர்ந்து. 47
2229:
உணர்ந்தாய் மறைநான்கும்* ஓதினாய் நீதி*
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே!* – மணந்தாய்போய்-
வேயிருஞ் சாரல்* வியலிரு ஞாலம்சூழ்,*
மாயிருஞ் சோலை மலை. 48
2230:
மலையேழும்* மாநிலங்கள் ஏழும் அதிர,*
குலைசூழ் குரைகடல்கள் ஏழும்,* – முலைசூழ்ந்த-
நஞ்சுரத்துப் பெண்ணை* நவின்றுண்ட நாவனென்று,*
அஞ்சாது என்நெஞ்சே! அழை. 49
2231:
அழைப்பன் திருமாலை* ஆங்கவர்கள் சொன்ன,*
பிழைப்பில் பெரும்பெயரே பேசி,* – ‘இழைப்பரிய-
ஆயவனே! யாதவனே!* என்றவனை யார்முகப்பும்,*
மாயவனே என்று மதித்து. 50
2232:
மதிக்கண்டாய் நெஞ்சே!* மணிவண்ணன் பாதம்,*
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை,* – மதிக்கண்டாய்-
பேராழி நின்று* பெயர்ந்து கடல்கடைந்த*
நீராழி வண்ணன் நிறம். 51
2233:
நிறங்கரியன் செய்ய* நெடுமலராள் மார்வன்,*
அறம்பெரியன் ஆர் அதறிவார்?* – மறம்புரிந்த-
வாளரக்கன் போல்வானை* வானவர்கோன் தானத்து,*
நீளிருக்கைக்கு உய்த்தான் நெறி. 52
2234:
நெறியார் குழற்கற்றை* முன்னின்று பின்தாழ்ந்து,*
அறியாது இளங்கிரி என்றெண்ணி,* – பிறியாது-
பூங்கொடிகள் வைகும்* பொருபுனல் குன்றென்றும்,*
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53
2235:
வெற்பென்று இருஞ்சோலை* வேங்கடம் என்றிவ்விரண்டும்*
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல்,* – நிற்பென்று-
உளங்கோயில்* உள்ளம் வைத்து உள்ளினேன்,* ‘வெள்ளத்-
திளங்கோயில் கைவிடேல்‘ என்று. 54
2236:
என்றும் மறந்தறியேன்* ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,*
நின்று நினைப்பொழியா நீர்மையால்,* – வென்றி-
அடலாழி கொண்ட* அறிவனே,* இன்பக்-
கடலாழி நீயருளிக் காண். 55
2237:
காணக் கழிகாதல்* கைமிக்குக் காட்டினால்,*
நாணப் படுமென்றால் நாணுமே?* – பேணிக்-
கருமாலைப்* பொன்மேனி காட்டாமுன் காட்டும்,*
திருமாலை நங்கள் திரு. 56
2238:
திருமங்கை நின்றருளும்* தெய்வம் நா வாழ்த்தும்,*
கருமம் கடைப்பிடிமின் கண்டீர்,* – உரிமையால்-
ஏத்தினோம் பாதம்* இருந்தடக்கை எந்தைபேர்,*
நால்திசையும் கேட்டீரே நாம்? 57
2239:
நாம்பெற்ற நன்மையும்* நாமங்கை நன்னெஞ்சத்து*
ஓம்பி இருந்தெம்மை ஓதுவித்து,* – வேம்பின்-
பொருள்நீர்மை ஆயினும்* பொன்னாழி பாடென்று,*
அருள்நீர்மை தந்த அருள். 58
2240:
அருள் புரிந்த சிந்தை* அடியார்மேல் வைத்து,*
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது,* – இருள்திரிந்து-
நோக்கினேன் நோக்கி* நினைந்தேன் அதொண்கமலம்,*
ஓக்கினேன் என்னையும் அங்கோர்ந்து. 59
2241:
ஓருருவன் அல்லை* ஒளியுருவம் நின்னுருவம்,*
ஈருருவன் என்பர் இருநிலத்தோர்,* ஓருருவம்-
ஆதியாம் வண்ணம்* அறிந்தார் அவர்கண்டீர்,*
நீதியால் மண்காப்பார் நின்று. 60
2242:
நின்றதோர் பாதம்* நிலம்புதைப்ப நீண்டதோள்*
சென்றளந்தது என்பர் திசையெல்லாம்,* – அன்று-
கருமாணியாய் இரந்த* கள்வனே,* உன்னைப்-
பிரமாணித்தார்* பெற்ற பேறு. 61
2243:
பேறொன்று முன்னறியேன்* பெற்றறியேன் பேதைமையால்,*
மாறென்று சொல்லிவணங்கினேன்,* ஏறின்-
பெருத்தெருத்தம் கோடொசியப்* பெண்நசையின் பின் போய்,*
எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62
2244:
ஏறேழும்* வென்றடர்த்த எந்தை,* எரியுருவத்து-
ஏறேறிப் பட்ட இடுசாபம்* – பாறேறி-
உண்டதலை வாய்நிறையக்* கோட்டங்கை ஒண்குருதி,*
கண்டபொருள் சொல்லின் கதை. 63
2245:
கதையும் பெரும்பொருளும் கண்ணா!* நின் பேரே,-
இதயம்* இருந்தவையே ஏத்தில்,* – கதையும்-
திருமொழியாய் நின்ற* திருமாலே* உன்னைப்,-
பருமொழியால் காணப் பணி. 64
2246:
பணிந்தேன் திருமேனி* பைங்கமலம் கையால்*
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,* – துணிந்தேன்*
புரிந்தேத்தி* உன்னைப் புகலிடம்பார்த்து,* ஆங்கே-
இருந்தேத்தி* வாழும் இது. 65
2247:
இது கண்டாய் நன்னெஞ்சே!* இப்பிறவி யாவது,*
இதுகண்டாய் எல்லாம் நாமுற்றது,* – இதுகண்டாய்-
நாரணன் பேரோதி* நரகத் தருகணையா,*
காரணமும் வல்லையேல் காண். 66
2248:
கண்டேன் திருமேனி* யான்கனவில்,* ஆங்கவன்கைக்-
கண்டேன்* கனலும் சுடராழி கண்டேன்*
உறுநோய் வினையிரண்டும்* ஓட்டுவித்து,* பின்னும்-
மறுநோய் செறுவான் வலி. 67
2249:
வலிமிக்க வாளெயிற்று* வாளவுணர் மாள*
வலிமிக்க வாள்வரை மத்தாக,* வலிமிக்க-
வாள்நாகம் சுற்றி* மறுகக் கடல்கடைந்தான்,*
கோள்நாகம் கொம்பொசித்த கோ. 68
2250:
கோவாகி மாநிலம் காத்து,* நங்கண் முகப்பே*
மாவேகிச் செல்கின்ற மன்னவரும்* – பூவேகும்-
செங்கமல நாபியான்* சேவடிக்கே ஏழ்பிறப்பும்,*
தண்கமல மேய்ந்தார் தமர். 69
2251:
தமருள்ளம் தஞ்சை* தலையரங்கம் தண்கால்,*
தமருள்ளும் தண்பொருப்பு வேலை,* – தமருள்ளும்-
மாமல்லை கோவல்* மதிட்குடந்தை என்பரே,*
ஏவல்ல எந்தைக் கிடம். 70
2252:
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப,* எரிகான்று-
அடங்கார்* ஒடுங்குவித்த தாழி,* – விடங்காலும்-
தீவாய் அரவணைமேல்* தோன்றல் திசையளப்பான்,*
பூவார் அடிநிமிர்ந்த போது. 71
2253:
போதறிந்து வானரங்கள்* பூஞ்சுனைபுக்கு,* ஆங்கலர்ந்த-
போதரிந்து* கொண்டேத்தும் போது,* உள்ளம் போது-
மணி வேங்கடவன்* மலரடிக்கே செல்ல,*
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து. 72
2254:
ஆய்ந்துரைப்பன் ஆயிரம்பேர்* ஆதிநடு வந்திவாய்,*
வாய்ந்த மலர்தூவி வைகலும்,* – ஏய்ந்த-
பிறைக்கோட்டுச் செங்கண்* கரிவிடுத்த பெம்மான்*
இறைக்கு ஆள்படத்துணிந்த யான். 73
2255:
யானே தவம் செய்தேன்* ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,*
யானே தவம் உடையேன் எம்பெருமான்,* – யானே-
இருந்ததமிழ் நன் மாலை* இணையடிக்கே சொன்னேன்,*
பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74
2256:
பெருகு மதவேழம்* மாப்பிடிக்கி முன்னின்று,*
இருகண் இளமூங்கில் வாங்கி,* – அருகிருந்த-
தேன்கலந்து நீட்டும்* திரு வேங்கடம் கண்டீர்,*
வான்கலந்த வண்ணன் வரை. 75
2257:
வரைச் சந்தனக் குழம்பும்* வான்கலனும் பட்டும்,*
விரைப்பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு*
ஆதிக்கண் நின்ற* அறிவன் அடியிணையே*
ஓதிப் பணிவதுறும். 76
2258:
உறுங்கண்டாய் நன்னெஞ்சே!* உத்தமன் நற்பாதம்,*
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால்,* – உறுங்கண்டாய்-
ஏத்திப் பணிந்தவன் பேர்* ஈரைஞ்நூறு எப்பொழுதும்,*
சாற்றி உரைத்தல் தவம். 77
2259:
தவம்செய்து* நான்முகனே பெற்றான்,* தரணி-
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம்,* – சிவந்ததன்-
கையனைத்தும்* ஆரத் தழுவினான்,* கங்கைநீர்-
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78
2260:
பின்னின்று தாயிரப்பக் கேளான்,* பெரும்பணைத்தோள்-
முன்னின்று தானிரப்பாள்* மொய்ம்மலராள்* – சொல் நின்ற-
தோள்நலந்தான்* நேரில்லாத் தோன்றல்,* அவன் அளந்த-
நீள்நிலந்தான்* அத்தனைக்கும் நேர். 79
2261:
நேர்ந்தேன் அடிமை* நினைந்தேன் அதொண்கமலம்,*
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய்,* – ஆர்ந்த-
அடிக்கோலம்* கண்டவர்க்கு என்கொலோ,* முன்னைப்-
படிக்கோலம் கண்ட பகல்? 80
2262:
பகல்கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* – கனவில்-
மிகக்கண்டேன்* மீண்டவனை மெய்யே மிகக்கண்டேன்*
ஊன்திகழும் நேமி* ஒளிதிகழும் சேவடியான்,*
வான்திகழும் சோதி வடிவு. 81
2263:
வடிக்கோல வாள்நெடுங்கண்* மாமலராள்,* செவ்விப்-
படிக்கோலம்* கண்டு அகலாள் பன்னாள்,* – அடிக்கோலி-
ஞாலத்தாள் பின்னும்* நலம்புரிந்தது என்கொலோ,*
கோலத்தால் இல்லை குறை. 82
2264:
குறையாக வெஞ்சொற்கள்* கூறினேன் கூறி,*
மறையாங்கு என உரைத்த மாலை,* – இறையேனும்-
ஈயுங்கொல் என்றே* இருந்தேன் எனைப்பகலும்,*
மாயன்கண் சென்ற வரம். 83
2265:
வரம்கருதித் தன்னை* வணங்காத வன்மை,*
உரம்கருதி மூர்க்கத் தவனை,* – நரம்கலந்த-
சிங்கமாய்க் கீண்ட* திருவன் அடியிணையே,*
அங்கண்மா ஞாலத்து அமுது. 84
2266:
அமுதென்றும் தேனென்றும்* ஆழியான் என்றும்,*
அமுதன்று கொண்டுகந்தான் என்றும்,* – அமுதன்ன-
சொல்மாலை ஏத்தித்* தொழுதேன் சொலப்பட்ட,*
நன்மாலை ஏத்தி நவின்று. 85
2267:
நவின்றுரைத்த நாவலர்கள்* நாண்மலர்கொண்டு,* ஆங்கே-
பயின்றதனால்* பெற்றபயன் என்கொல்,* – பயின்றார்தம்-
மெய்த்தவத்தால்* காண்பரிய மேகமணி வண்ணனை,* யான்-
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86
2268:
இன்றா அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்-
சென்று ஆங்கு அளந்த திருவடியை,* – அன்று-
கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*
திருக்கோட்டி எந்தை திறம். 87
2269:
திறம்பிற்று இனியறிந்தேன்* தென்னரங்கத்து எந்தை,*
திறம்பா வழிசென்றார்க்கு அல்லால்,* – திறம்பாச்-
செடிநரகை நீக்கித்* தான் செல்வதன்முன்,* வானோர்-
கடிநகர வாசல் கதவு. 88
2270:
கதவிக் கதஞ்சிறந்த* கஞ்சனை முன்காய்ந்து,*
அதவிப்போர் யானை ஒசித்து,* – பதவியாய்ப்-
பாணியால் நீரேற்றுப்* பண்டொருகால் மாவலியை,*
மாணியாய்க் கொண்டிலையே மண். 89
2271:
மண்ணுலகம் ஆளேனே* வானவர்க்கும் வானவனாய்,*
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே,* – நண்ணித்-
திருமாலை* செங்கண் நெடியானை,* எங்கள்-
பெருமானைக் கைதொழுத பின். 90
2272:
பின்னால் அருநரகம்* சேராமல் பேதுறுவீர்,*
முன்னால் வணங்க முயல்மினோ,* – பன்னூல்-
அளந்தானைக்* கார்க்கடல்சூழ் ஞாலத்தை,* எல்லாம்-
அளந்தான் அவன் சேவடி. 91
2273:
அடியால்முன் கஞ்சனைச் செற்று,* அமரர் ஏத்தும்-
படியான்* கொடிமேல்புள் கொண்டான்,* – நெடியான்தன்-
நாமமே* ஏத்துமின்கள் ஏத்தினால்,* தாம்வேண்டும்-
காமமே* காட்டும் கடிது. 92
2274:
கடிது கொடுநரகம்* பிற்காலும் செய்கை,*
கொடிதென்று அதுகூடா முன்னம்,* – வடிசங்கம்-
கொண்டானைக்* கூந்தல்வாய் கீண்டானை,* கொங்கைநஞ்சு-
உண்டானை* ஏத்துமினோ உற்று. 93
2275:
உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* – பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு. 94
2276:
என்னெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-
வன்னெஞ்சம்* கீண்ட மணிவண்ணன்,* முன்னம்சேய்-
ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகேத்தும்-
ஆழியான்* அத்தியூரான். 95
2277:##
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணிமணியின்-
துத்திசேர்* நாகத்தின் மேல்துயில்வான்,* – மூத்தீ-
மறையாவான்* மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்*
இறையாவான் எங்கள் பிரான். (2) 96
2278:
எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ,*
செங்கண் நெடுமால் திருமார்பா,* – பொங்கு-
படமூக்கின் ஆயிரவாய்ப்* பாம்பணைமேல் சேர்ந்தாய்,*
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97
2279:
கொண்டு வளர்க்கக்* குழவியாய்த் தான்வளர்ந்தது,*
உண்டது உலகேழும் உள்ளொடுங்க,* – கொண்டு-
குடமாடிக்* கோவலனாய் மேவி,* என் நெஞ்சம்-
இடமாகக் கொண்ட இறை. 98
2280:##
இறையெம் பெருமான் அருளென்று,* இமையோர்-
முறைநின்று* மொய்ம்மலர்கள் தூவ,* – அறைகழல-
சேவடியான்* செங்கண் நெடியான்,* குறளுருவாய்-
மாவடிவில்* மண்கொண்டான் மால். (2) 99
2281:##
மாலே!* நெடியானே!* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா!* வியன்துழாய்க் கண்ணியனே,* – மேலால்-
விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-
அளவன்றால்* யானுடைய அன்பு. (2) 100