இரண்டாம் திருவந்தாதி


இரண்டாம் திருவந்தாதி தனியன்
திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா*

அன்பே தகளி அளித்தானை* – நன்புகழ்சேர்-

சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்*

பூதத்தார் பொன்னங்கழல்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

2182:##

அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*

இன்புருகு சிந்தை இடுதிரியா,* – நன்புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*

ஞானத் தமிழ்புரிந்த நான். (2)                      1

 

2183:

ஞானத்தால் நன்குணர்ந்து* நாரணன்தன் நாமங்கள்,*

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால்,* – வானத்-

தணியமரர்* ஆக்குவிக்கும் அஃதன்றே,* நங்கள்-

பணியமரர் கோமான் பரிசு?                              2

 

2184:

பரிசு நறுமலரால்* பாற்கடலான் பாதம்,*

புரிவார் புகழ்பெறுவர் போலாம்,* – புரிவார்கள்-

தொல்லமரர் கேள்வித்* துலங்கொளிசேர் தோற்றத்து*

நல்லமரர் கோமான் நகர்.                                3

 

2185:

நகரிழைத்து நித்திலத்து* நாண்மலர் கொண்டு,* ஆங்கே-

திகழும் அணிவயிரம் சேர்த்து,* – நிகரில்லாப்-

பைங்கமலம் ஏந்திப்* பணிந்தேன் பனிமலராள்,*

அங்கம்வலம் கொண்டான் அடி.                                 4

 

2186:

அடிமூன்றில் இவ்வுலகம்* அன்றளந்தாய் போலும்*

அடிமூன்று இரந்து அவனி கொண்டாய்,* – படிநின்ற-

நீரோத மேனி* நெடுமாலே* நின்னடியை-

ஆரோத வல்லார் அறிந்து?                                5

 

2187:

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி* ஆய்மலர்கொண்டு,* ஆர்வம்-

செறிந்த மனத்தராய்ச் செவ்வே,* – அறிந்து அவன்தன்-

பேரோதி ஏத்தும்* பெருந்தவத்தோர் காண்பரே,*

காரோத வண்ணன் கழல்.                                  6

 

2188:

கழலெடுத்து வாய்மடித்துக்* கண்சுழன்று,* மாற்றார்-

அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச,* தழலெடுத்த-

போராழி ஏந்தினான்* பொன்மலர்ச் சேவடியை*

ஓராழி நெஞ்சே! உகந்து.                                 7

 

2189:

உகந்துன்னை வாங்கி* ஒளிநிறங்கொள் கொங்கை*

அகம்குளிர உண்ணென்றாள் ஆவி,* உகந்து-

முலையுண்பாய் போலே* முனிந்துண்டாய்,* நீயும்-

அலைபண்பால் ஆனமையால் அன்று.                           8

 

2190:

அன்றுஅது கண்டு அஞ்சாத* ஆய்ச்சி உனக்கிரங்கி,*

நின்று முலைதந்த இந்நீர்மைக்கு,* அன்று-

வரன்முறையால் நீயளந்த* மாகடல்சூழ் ஞாலம்,*

பெருமுறையால் எய்துமோ பேர்த்து?                          9

 

2191:

பேர்த்தனை* மாசகடம் பிள்ளையாய்,* மண்ணிரந்து-

காத்தனை* பல்லுயிரும் காவலனே,* ஏத்திய-

நாவுடையேன் பூவுடையேன்* நின்னுள்ளி நின்றமையால்*

காவடியேன் பட்ட கடை.                                 10

 

2192:

கடைநின்று அமரர் கழல்தொழுது,* நாளும்-

இடைநின்ற இன்பத்தராவர்,* புடைநின்ற-

நீரோத மேனி* நெடுமாலே,* நின்னடியை-

ஆரோத வல்லார் அவர்?                                   11

 

2193:

அவரிவர் என்றில்லை* அரவணையான் பாதம்,*

எவர்வணங்கி ஏத்தாதார் எண்ணில்,* பலரும்-

செழுங்கதிரோன் ஒண்மலரோன்* கண்ணுதலோன் அன்றே*

தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து?                     12

 

2194:

தொடரெடுத்த மால்யானை* சூழ் கயம்புக்கு அஞ்சிப்*

படரெடுத்த பைங்கமலம் கொண்டு,*அன்று இடரடுக்க-

ஆழியான்* பாதம் பணிந்தன்றே,* வானவர்கோன்-

பாழிதான் எய்திற்றுப் பண்டு?                           13

 

2195:

பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-

கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* – எண்திசையும்-

பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*

தீர்த்தகரர் ஆமின் திரிந்து.                         14

 

2196:

திரிந்தது வெஞ்சமத்துத்* தேர்கடவி,* அன்று-

பிரிந்தது சீதையை மான் பின்போய்,* – புரிந்ததுவும்-

கண்பள்ளி கொள்ள* அழகியதே,* நாகத்தின்-

தண்பள்ளி கொள்வான் தனக்கு.                              15

 

2197:

தனக்கடிமை பட்டது* தானறியானேலும்*

மனத்தடைய வைப்பதாம் மாலை,* – வனத்திடரை-

ஏரியாம் வண்ணம்* இயற்றும் இதுவல்லால்,*

மாரியார் பெய்கிற்பார் மற்று?                             16

 

2198:

மற்றார் இயலாவர்* வானவர்கோன் மாமலரோன்,*

சுற்றும் வணங்கும் தொழிலானை,* – ஒற்றைப்-

பிறையிருந்த* செஞ்சடையான் பிஞ்சென்று,* மாலைக்-

குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.                    17

 

2199:

கொண்டது உலகம்* குறளுருவாய்க் கோளரியாய்,*

ஒண்திறலோன் மார்வத் துகிர்வைத்தது* – உண்டதுவும்-

தான்கடந்த ஏழுலகே* தாமரைக்கண் மாலொருநாள்,*

வான்கடந்தான் செய்த வழக்கு.                        18

 

2200:

வழக்கன்று கண்டாய்* வலிசகடம் செற்றாய்,*

வழக்கொன்று நீமதிக்க வேண்டா,* – குழக்கன்று-

தீவிளவின் காய்க்கெறிந்த* தீமை திருமாலே,*

பார்விளங்கச் செய்தாய் பழி.                              19

 

2201:

பழிபாவம் கையகற்றிப்* பல்காலும் நின்னை,*

வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ,* – வழுவின்றி-

நாரணன்தன் நாமங்கள்* நன்குணர்ந்து நன்கேத்தும்,*

காரணங்கள் தாமுடையார் தாம்.                        20

 

2202:

தாமுளரே* தம்முள்ளம் உள்ளுளதே,* தாமரையின்-

பூவுளதே* ஏத்தும் பொழுதுண்டே,* – வாமன்-

திருமருவு* தாள்மரூவு சென்னியரே,* செவ்வே-

அருநரகம் சேர்வது அரிது.                             21

 

2203:

அரியது எளிதாகும்* ஆற்றலால் மாற்றி,*

பெருக முயல்வாரைப் பெற்றால்,* – கரியதோர்-

வெண்கோட்டு மால்யானை* வென்று முடித்தன்றே,*

தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து?                        22

 

2204:

தாழ்ந்துவரம் கொண்டு* தக்க வகைகளால்*

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்,* – தாழ்ந்த-

விளங்கனிக்குக்* கன்றெறிந்து வேற்றுருவாய்,* ஞாலம்-

அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன்.                             23

 

2205:

அவன்கண்டாய் நன்னெஞ்சே!* ஆரருளும் கேடும்,*

அவன்கண்டாய் ஐம்புலனாய் நின்றான்,* – அவன்கண்டாய்-

காற்றுத்தீ நீர் வான்* கருவரைமண் காரோத,*

சீற்றத்தீ யாவானும் சென்று.                            24

 

2206:

சென்றது இலங்கைமேல்* செவ்வேதன் சீற்றத்தால்,*

கொன்றது இராவணனைக் கூறுங்கால்,* – நின்றதுவும்-

வேயோங்கு தண்சாரல்* வேங்கடமே,* விண்ணவர்தம்-

வாயோங்கு* தொல்புகழான் வந்து.                           25

 

2207:

வந்தித்து அவனை* வழிநின்ற ஐம்பூதம்*

ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய்,* – உந்திப்-

படியமரர் வேலையான்* பண்டு அமரர்க்கீந்த,*

படியமரர் வாழும் பதி.                               26

 

2208:

பதியமைந்து நாடிப்* பருத்தெழுந்த சிந்தை,*

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி* – கதிமிகுத்தங்-

கோல்தேடி ஓடும்* கொழுந்ததே போன்றதே,*

மால்தேடி ஓடும் மனம்.                                  27

 

2209:

மனத்துள்ளான் வேங்கடத்தான்* மாகடலான்,* மற்றும்-

நினைப்பரிய* நீள் அரங்கத்துள்ளான்,* – எனைப்பலரும்-

தேவாதி தேவன்* எனப்படுவான்,* முன்னொருனாள்-

மாவாய் பிளந்த மகன்.                                 28

 

2210:

மகனாகக் கொண்டெடுத்தாள்* மாண்பாய கொங்கை,*

அகனார உண்பன் என்றுண்டு,* – மகனைத்தாய்-

தேறாத வண்ணம்* திருத்தினாய்,* தென்னிலங்கை-

நீறாக எய்தழித்தாய் நீ.                             29

 

2211:

நீயன்று உலகளந்தாய்* நீண்ட திருமாலே,*

நீயன்று உலகிடந்தாய் என்பரால்,* – நீயன்று-

காரோதம் முன்கடைந்து* பின்னடைத்தாய் மாகடலை,*

பேரோத மேனிப் பிரான்.                                   30

 

2212:

பிரானென்று நாளும்* பெரும்புலரி என்றும்,*

குராநல் செழும்போது கொண்டு,* – வராகத்து-

அணியுருவன்* பாதம் பணியும் அவர் கண்டீர்,*

மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.                         31

 

2213:

மகிழ்ந்தது சிந்தை* திருமாலே,* மற்றும்-

மகிழ்ந்தது உன் பாதமே போற்றி,* – மகிழ்ந்தது-

அழலாழி சங்கம்* அவைபாடி ஆடும்,*

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.                         32

 

2214:

துணிந்தது சிந்தை* துழாயலங்கல்,* அங்கம்-

அணிந்தவன்* பேர்உள்ளத்துப் பல்கால்,* – பணிந்ததுவும்-

வேய்பிறங்கு சாரல்* விறல் வேங்கடவனையே,*

வாய்திறங்கள் சொல்லும் வகை.                             33

 

2215:

வகையால் அவனி* இரந்தளந்தாய் பாதம்,*

புகையால் நறுமலாரால் முன்னே,* – மிகவாய்ந்த-

அன்பாக்கி ஏத்தி* அடிமைப்பட்டேன் உனக்கு,*

என் பாக்கியத்தால் இனி.                                  34

 

2216:

இனிதென்பர் காமம்* அதனிலும் ஆற்ற,*

இனிதென்பர் தண்ணீரும் எந்தாய்,* – இனிதென்று-

காமநீர் வேளாது* நின்பெருமை வேட்பரேல்,*

சேம நீர் ஆகும் சிறிது.                                35

 

2217:

சிறியார் பெருமை* சிறிதின் கணெய்தும்,*

அறியாரும் தாமறியார் ஆவர்,* – அறியாமை-

மண்கொண்டு மண்ணுண்டு* மண்ணுமிழ்ந்த மாயனென்று,*

எண்கொண்டேன் நெஞ்சே! இரு.                                  36

 

2218:

இருந்தண் கமலத்து* இருமலரின் உள்ளே,*

திருந்து திசைமுகனைத் தந்தாய்,* – பொருந்தியநின்-

பாதங்கள் ஏத்திப்* பணியாவேல்,* பல்பிறப்பும்-

ஏதங்கள் எல்லாம் எமக்கு.                                 37

 

2219:

எமக்கென்று இருநிதியம்* ஏமாந்திராதே,*

தமக்கென்றும் சார்வம் அறிந்து,* – நமக்கென்றும்-

மாதவனே என்னும்* மனம்படைத்து* மற்றவன்பேர்-

ஓதுவதே* நாவினால் ஓத்து.                              38

 

2220:

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,* உத்தமன்பேர்-

ஏத்தும்* திறம் அறிமின் ஏழைகாள்,* ஓத்ததனை-

வல்லீரேல்* நன்று அதனை மாட்டீரேல்,* மாதவன்பேர்-

சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.                              39

 

2221:

சுருக்காக வாங்கிச்* சுலாவி நின்று* ஐயார்-

நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர்,* – திருப்பொலிந்த-

ஆகத்தான்* பாதம் அறிந்தும், அறியாத*

போகத்தால் இல்லை பொருள்.                                 40

 

2222:

பொருளால் அமருலகம்* புக்கியலல் ஆகாது*

அருளால் அறமருளும் அன்றே,* – அருளாலே-

மாமறையோர்க்கு ஈந்த* மணிவண்ணன் பாதமே,*

நீமறவேல் நெஞ்சே! நினை.                               41

 

2223:

நினைப்பன் திருமாலை* நீண்டதோள் காண,*

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார்,* – மனைப்பால்-

பிறந்தார் பிறந்தெய்தும்* பேரின்பம் எல்லாம்,*

துறந்தார் தொழுதாரத் தோள்.                         42

 

2224:

தோளிரண்டு எட்டேழும்* மூன்று முடியனைத்தும்,*

தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான்,* – தாளிரண்டும்,-

ஆர்தொழுவார் பாதம்* அவைதொழுவது அன்றே,*என்-

சீர்கெழுதோள்* செய்யும் சிறப்பு?                            43

 

2225:

சிறந்தார்க்கு எழுதுணையாம்* செங்கண்மால் நாமம்,*

மறந்தாரை மானிடமா வையேன்,* அறம்தாங்கும்-

மாதவனே என்னும்* மனம்படைத்து,* மற்றவன்பேர்-

ஓதுவதே* நாவினால் உள்ளு.                               44

 

2226:

உளதென்று இறுமாவார்* உண்டில்லை என்று,*

தளர்தல் அதனருகும் சாரார்,* – அளவரிய-

வேதத்தான் வேங்கடத்தான்* விண்ணோர் முடிதோயும்,*

பாதத்தான் பாதம் பயின்று.                           45

 

2227:

பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* பன்னாள்-

பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,* – பயின்றது-

அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே*

மணிதிகழும் வண்தடக்கை மால்.                         46

 

2228:

மாலை அரியுருவன்* பாத மலரணிந்து,*

காலை தொழுதெழுமின் கைகோலி,* – ஞாலம்-

அளந்திடந்து உண்டுமிழ்ந்த* அண்ணலை மற்றல்லால்*

உளங்கிடந்தவாற்றால் உணர்ந்து.                         47

 

2229:

உணர்ந்தாய் மறைநான்கும்* ஓதினாய் நீதி*

மணந்தாய் மலர்மகள்தோள் மாலே!* – மணந்தாய்போய்-

வேயிருஞ் சாரல்* வியலிரு ஞாலம்சூழ்,*

மாயிருஞ் சோலை மலை.                                  48

 

2230:

மலையேழும்* மாநிலங்கள் ஏழும் அதிர,*

குலைசூழ் குரைகடல்கள் ஏழும்,* – முலைசூழ்ந்த-

நஞ்சுரத்துப் பெண்ணை* நவின்றுண்ட நாவனென்று,*

அஞ்சாது என்நெஞ்சே! அழை.                               49

 

2231:

அழைப்பன் திருமாலை* ஆங்கவர்கள் சொன்ன,*

பிழைப்பில் பெரும்பெயரே பேசி,* – ‘இழைப்பரிய-

ஆயவனே! யாதவனே!* என்றவனை யார்முகப்பும்,*

மாயவனே என்று மதித்து.                               50

 

2232:

மதிக்கண்டாய் நெஞ்சே!* மணிவண்ணன் பாதம்,*

மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை,* – மதிக்கண்டாய்-

பேராழி நின்று* பெயர்ந்து கடல்கடைந்த*

நீராழி வண்ணன் நிறம்.                                  51

 

2233:

நிறங்கரியன் செய்ய* நெடுமலராள் மார்வன்,*

அறம்பெரியன் ஆர் அதறிவார்?* – மறம்புரிந்த-

வாளரக்கன் போல்வானை* வானவர்கோன் தானத்து,*

நீளிருக்கைக்கு உய்த்தான் நெறி.                            52

 

2234:

நெறியார் குழற்கற்றை* முன்னின்று பின்தாழ்ந்து,*

அறியாது இளங்கிரி என்றெண்ணி,* – பிறியாது-

பூங்கொடிகள் வைகும்* பொருபுனல் குன்றென்றும்,*

வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு.                          53

 

2235:

வெற்பென்று இருஞ்சோலை* வேங்கடம் என்றிவ்விரண்டும்*

நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல்,* – நிற்பென்று-

உளங்கோயில்* உள்ளம் வைத்து உள்ளினேன்,* ‘வெள்ளத்-

திளங்கோயில் கைவிடேல்என்று.                             54

 

2236:

என்றும் மறந்தறியேன்* ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,*

நின்று நினைப்பொழியா நீர்மையால்,* – வென்றி-

அடலாழி கொண்ட* அறிவனே,* இன்பக்-

கடலாழி நீயருளிக் காண்.                              55

 

2237:

காணக் கழிகாதல்* கைமிக்குக் காட்டினால்,*

நாணப் படுமென்றால் நாணுமே?* – பேணிக்-

கருமாலைப்* பொன்மேனி காட்டாமுன் காட்டும்,*

திருமாலை நங்கள் திரு.                              56

 

2238:

திருமங்கை நின்றருளும்* தெய்வம் நா வாழ்த்தும்,*

கருமம் கடைப்பிடிமின் கண்டீர்,* – உரிமையால்-

ஏத்தினோம் பாதம்* இருந்தடக்கை எந்தைபேர்,*

நால்திசையும் கேட்டீரே நாம்?                             57

 

2239:

நாம்பெற்ற நன்மையும்* நாமங்கை நன்னெஞ்சத்து*

ஓம்பி இருந்தெம்மை ஓதுவித்து,* – வேம்பின்-

பொருள்நீர்மை ஆயினும்* பொன்னாழி பாடென்று,*

அருள்நீர்மை தந்த அருள்.                              58

 

2240:

அருள் புரிந்த சிந்தை* அடியார்மேல் வைத்து,*

பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது,* – இருள்திரிந்து-

நோக்கினேன் நோக்கி* நினைந்தேன் அதொண்கமலம்,*

ஓக்கினேன் என்னையும் அங்கோர்ந்து.                           59

 

2241:

ஓருருவன் அல்லை* ஒளியுருவம் நின்னுருவம்,*

ஈருருவன் என்பர் இருநிலத்தோர்,* ஓருருவம்-

ஆதியாம் வண்ணம்* அறிந்தார் அவர்கண்டீர்,*

நீதியால் மண்காப்பார் நின்று.                           60

 

2242:

நின்றதோர் பாதம்* நிலம்புதைப்ப நீண்டதோள்*

சென்றளந்தது என்பர் திசையெல்லாம்,* – அன்று-

கருமாணியாய் இரந்த* கள்வனே,* உன்னைப்-

பிரமாணித்தார்* பெற்ற பேறு.                            61

 

2243:

பேறொன்று முன்னறியேன்* பெற்றறியேன் பேதைமையால்,*

மாறென்று சொல்லிவணங்கினேன்,* ஏறின்-

பெருத்தெருத்தம் கோடொசியப்* பெண்நசையின் பின் போய்,*

எருத்திருந்த நல்லாயர் ஏறு.                            62

 

2244:

ஏறேழும்* வென்றடர்த்த எந்தை,* எரியுருவத்து-

ஏறேறிப் பட்ட இடுசாபம்* – பாறேறி-

உண்டதலை வாய்நிறையக்* கோட்டங்கை ஒண்குருதி,*

கண்டபொருள் சொல்லின் கதை.                               63

 

2245:

கதையும் பெரும்பொருளும் கண்ணா!* நின் பேரே,-

இதயம்* இருந்தவையே ஏத்தில்,* – கதையும்-

திருமொழியாய் நின்ற* திருமாலே* உன்னைப்,-

பருமொழியால் காணப் பணி.                               64

 

2246:

பணிந்தேன் திருமேனி* பைங்கமலம் கையால்*

அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்,* – துணிந்தேன்*

புரிந்தேத்தி* உன்னைப் புகலிடம்பார்த்து,* ஆங்கே-

இருந்தேத்தி* வாழும் இது.                                65

 

2247:

இது கண்டாய் நன்னெஞ்சே!* இப்பிறவி யாவது,*

இதுகண்டாய் எல்லாம் நாமுற்றது,* – இதுகண்டாய்-

நாரணன் பேரோதி* நரகத் தருகணையா,*

காரணமும் வல்லையேல் காண்.                              66

 

2248:

கண்டேன் திருமேனி* யான்கனவில்,* ஆங்கவன்கைக்-

கண்டேன்* கனலும் சுடராழி கண்டேன்*

உறுநோய் வினையிரண்டும்* ஓட்டுவித்து,* பின்னும்-

மறுநோய் செறுவான் வலி.                                 67

 

2249:

வலிமிக்க வாளெயிற்று* வாளவுணர் மாள*

வலிமிக்க வாள்வரை மத்தாக,* வலிமிக்க-

வாள்நாகம் சுற்றி* மறுகக் கடல்கடைந்தான்,*

கோள்நாகம் கொம்பொசித்த கோ.                                68

 

2250:

கோவாகி மாநிலம் காத்து,* நங்கண் முகப்பே*

மாவேகிச் செல்கின்ற மன்னவரும்* – பூவேகும்-

செங்கமல நாபியான்* சேவடிக்கே ஏழ்பிறப்பும்,*

தண்கமல மேய்ந்தார் தமர்.                            69

 

2251:

தமருள்ளம் தஞ்சை* தலையரங்கம் தண்கால்,*

தமருள்ளும் தண்பொருப்பு வேலை,* – தமருள்ளும்-

மாமல்லை கோவல்* மதிட்குடந்தை என்பரே,*

ஏவல்ல எந்தைக் கிடம்.                                   70

 

2252:

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப,* எரிகான்று-

அடங்கார்* ஒடுங்குவித்த தாழி,* – விடங்காலும்-

தீவாய் அரவணைமேல்* தோன்றல் திசையளப்பான்,*

பூவார் அடிநிமிர்ந்த போது.                            71

 

2253:

போதறிந்து வானரங்கள்* பூஞ்சுனைபுக்கு,* ஆங்கலர்ந்த-

போதரிந்து* கொண்டேத்தும் போது,* உள்ளம் போது-

மணி வேங்கடவன்* மலரடிக்கே செல்ல,*

அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து.                             72

 

2254:

ஆய்ந்துரைப்பன் ஆயிரம்பேர்* ஆதிநடு வந்திவாய்,*

வாய்ந்த மலர்தூவி வைகலும்,* – ஏய்ந்த-

பிறைக்கோட்டுச் செங்கண்* கரிவிடுத்த பெம்மான்*

இறைக்கு ஆள்படத்துணிந்த யான்.                          73

 

2255:

யானே தவம் செய்தேன்* ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,*

யானே தவம் உடையேன் எம்பெருமான்,* – யானே-

இருந்ததமிழ் நன் மாலை* இணையடிக்கே சொன்னேன்,*

பெருந்தமிழன் நல்லேன் பெரிது.                           74

 

2256:

பெருகு மதவேழம்* மாப்பிடிக்கி முன்னின்று,*

இருகண் இளமூங்கில் வாங்கி,* – அருகிருந்த-

தேன்கலந்து நீட்டும்* திரு வேங்கடம் கண்டீர்,*

வான்கலந்த வண்ணன் வரை.                             75

 

2257:

வரைச் சந்தனக் குழம்பும்* வான்கலனும் பட்டும்,*

விரைப்பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு*

ஆதிக்கண் நின்ற* அறிவன் அடியிணையே*

ஓதிப் பணிவதுறும்.                                   76

 

2258:

உறுங்கண்டாய் நன்னெஞ்சே!* உத்தமன் நற்பாதம்,*

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால்,* – உறுங்கண்டாய்-

ஏத்திப் பணிந்தவன் பேர்* ஈரைஞ்நூறு எப்பொழுதும்,*

சாற்றி உரைத்தல் தவம்.                                77

 

2259:

தவம்செய்து* நான்முகனே பெற்றான்,* தரணி-

நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம்,* – சிவந்ததன்-

கையனைத்தும்* ஆரத் தழுவினான்,* கங்கைநீர்-

பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.                         78

 

2260:

பின்னின்று தாயிரப்பக் கேளான்,* பெரும்பணைத்தோள்-

முன்னின்று தானிரப்பாள்* மொய்ம்மலராள்* – சொல் நின்ற-

தோள்நலந்தான்* நேரில்லாத் தோன்றல்,* அவன் அளந்த-

நீள்நிலந்தான்* அத்தனைக்கும் நேர்.                         79

 

2261:

நேர்ந்தேன் அடிமை* நினைந்தேன் அதொண்கமலம்,*

ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய்,* – ஆர்ந்த-

அடிக்கோலம்* கண்டவர்க்கு என்கொலோ,* முன்னைப்-

படிக்கோலம் கண்ட பகல்?                                 80

 

2262:

பகல்கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* – கனவில்-

மிகக்கண்டேன்* மீண்டவனை மெய்யே மிகக்கண்டேன்*

ஊன்திகழும் நேமி* ஒளிதிகழும் சேவடியான்,*

வான்திகழும் சோதி வடிவு.                             81

 

2263:

வடிக்கோல வாள்நெடுங்கண்* மாமலராள்,* செவ்விப்-

படிக்கோலம்* கண்டு அகலாள் பன்னாள்,* – அடிக்கோலி-

ஞாலத்தாள் பின்னும்* நலம்புரிந்தது என்கொலோ,*

கோலத்தால் இல்லை குறை.                                 82

 

2264:

குறையாக வெஞ்சொற்கள்* கூறினேன் கூறி,*

மறையாங்கு என உரைத்த மாலை,* – இறையேனும்-

ஈயுங்கொல் என்றே* இருந்தேன் எனைப்பகலும்,*

மாயன்கண் சென்ற வரம்.                                 83

 

2265:

வரம்கருதித் தன்னை* வணங்காத வன்மை,*

உரம்கருதி மூர்க்கத் தவனை,* – நரம்கலந்த-

சிங்கமாய்க் கீண்ட* திருவன் அடியிணையே,*

அங்கண்மா ஞாலத்து அமுது.                             84

 

2266:

அமுதென்றும் தேனென்றும்* ஆழியான் என்றும்,*

அமுதன்று கொண்டுகந்தான் என்றும்,* – அமுதன்ன-

சொல்மாலை ஏத்தித்* தொழுதேன் சொலப்பட்ட,*

நன்மாலை ஏத்தி நவின்று.                               85

 

2267:

நவின்றுரைத்த நாவலர்கள்* நாண்மலர்கொண்டு,* ஆங்கே-

பயின்றதனால்* பெற்றபயன் என்கொல்,* – பயின்றார்தம்-

மெய்த்தவத்தால்* காண்பரிய மேகமணி வண்ணனை,* யான்-

எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?                         86

 

2268:

இன்றா அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்-

சென்று ஆங்கு அளந்த திருவடியை,* – அன்று-

கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*

திருக்கோட்டி எந்தை திறம்.                              87

 

2269:

திறம்பிற்று இனியறிந்தேன்* தென்னரங்கத்து எந்தை,*

திறம்பா வழிசென்றார்க்கு அல்லால்,* – திறம்பாச்-

செடிநரகை நீக்கித்* தான் செல்வதன்முன்,* வானோர்-

கடிநகர வாசல் கதவு.                             88

 

2270:

கதவிக் கதஞ்சிறந்த* கஞ்சனை முன்காய்ந்து,*

அதவிப்போர் யானை ஒசித்து,* – பதவியாய்ப்-

பாணியால் நீரேற்றுப்* பண்டொருகால் மாவலியை,*

மாணியாய்க் கொண்டிலையே மண்.                              89

 

2271:

மண்ணுலகம் ஆளேனே* வானவர்க்கும் வானவனாய்,*

விண்ணுலகம் தன்னகத்து மேவேனே,* – நண்ணித்-

திருமாலை* செங்கண் நெடியானை,* எங்கள்-

பெருமானைக் கைதொழுத பின்.                            90

 

2272:

பின்னால் அருநரகம்* சேராமல் பேதுறுவீர்,*

முன்னால் வணங்க முயல்மினோ,* – பன்னூல்-

அளந்தானைக்* கார்க்கடல்சூழ் ஞாலத்தை,* எல்லாம்-

அளந்தான் அவன் சேவடி.                                 91

 

2273:

அடியால்முன் கஞ்சனைச் செற்று,* அமரர் ஏத்தும்-

படியான்* கொடிமேல்புள் கொண்டான்,* – நெடியான்தன்-

நாமமே* ஏத்துமின்கள் ஏத்தினால்,* தாம்வேண்டும்-

காமமே* காட்டும் கடிது.                                92

 

2274:

கடிது கொடுநரகம்* பிற்காலும் செய்கை,*

கொடிதென்று அதுகூடா முன்னம்,* – வடிசங்கம்-

கொண்டானைக்* கூந்தல்வாய் கீண்டானை,* கொங்கைநஞ்சு-

உண்டானை* ஏத்துமினோ உற்று.                               93

 

2275:

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*

முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* – பற்றிப்-

பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-

இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.                           94

 

2276:

என்னெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-

வன்னெஞ்சம்* கீண்ட மணிவண்ணன்,* முன்னம்சேய்-

ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகேத்தும்-

ஆழியான்* அத்தியூரான்.                                 95

 

2277:##

அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணிமணியின்-

துத்திசேர்* நாகத்தின் மேல்துயில்வான்,* – மூத்தீ-

மறையாவான்* மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்*

இறையாவான் எங்கள் பிரான். (2)                           96

 

2278:

எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ,*

செங்கண் நெடுமால் திருமார்பா,* – பொங்கு-

படமூக்கின் ஆயிரவாய்ப்* பாம்பணைமேல் சேர்ந்தாய்,*

குடமூக்கில் கோயிலாக் கொண்டு.                             97

 

2279:

கொண்டு வளர்க்கக்* குழவியாய்த் தான்வளர்ந்தது,*

உண்டது உலகேழும் உள்ளொடுங்க,* – கொண்டு-

குடமாடிக்* கோவலனாய் மேவி,* என் நெஞ்சம்-

இடமாகக் கொண்ட இறை.                                   98

 

2280:##

இறையெம் பெருமான் அருளென்று,* இமையோர்-

முறைநின்று* மொய்ம்மலர்கள் தூவ,* – அறைகழல-

சேவடியான்* செங்கண் நெடியான்,* குறளுருவாய்-

மாவடிவில்* மண்கொண்டான் மால். (2)                         99

 

2281:##

மாலே!* நெடியானே!* கண்ணனே,* விண்ணவர்க்கு-

மேலா!* வியன்துழாய்க் கண்ணியனே,* – மேலால்-

விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-

அளவன்றால்* யானுடைய அன்பு. (2)                         100

 

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.