இராமானுச நூற்றந்தாதி


இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்*

பொன்னங் கழற்கமலப் போதிரண்டும்* என்னுடைய-

சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு*

என்னுக் கடவுடையேன் யான்?

கட்டளைக் கலித்துறை
நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர்பால்*

சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணைமேல்*

உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் *அன்பால்-

இயம்பும் கலித்துறை* அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

சோமாசியாண்டான் அருளியதென்பர்

சொல்லின் தொகைகொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும்*

நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் எந்தன் நாவினுள்ளே*

அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்-

வெல்லும் பரம* இராமானுச! இதென் விண்ணப்பமே.

வேதப்பிரான்பட்டர் அருளியதென்பர்
இனியென் குறை நமக்கு எம்பெருமானார் திருநாமத்தால்*

முனிதந்த நூற்றெட்டுச் சாவித்திரி என்னும் நுண்பொருளை*

கனிதந்த செஞ்சொல் கலித்துறை அந்தாதி பாடித்தந்தான்*

புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே.

திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த இராமாநுச நூற்றந்தாதி

3893:##

பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ்மலிந்த-

பாமன்னு மாறன்* அடிபணிந்து உய்ந்தவன்* பல்கலையோர்-

தாம்மன்ன வந்த இராமனுசன்* சரணாரவிந்தம்-

நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே. (2) 1

 

3894:##

கள்ளார் பொழில் தென்னரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சிற்-

கொள்ளா* மனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்-

விள்ளாத அன்பன் இராமானுசன்* மிக்க சீலமல்லால்-

உள்ளாது என் நெஞ்சு* ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே. (2) 2

 

3895:

பேரியல் நெஞ்சே! அடிபணிந்தேன் உன்னை* பேய்ப்பிறவிப்-

பூரியரோடு உள்ள சுற்றம் புலத்தி* பொருவருஞ்சீர்-

ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்புசெய்யும்*

சீரிய பேறுடையார்* அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே. 3

 

3896:

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி* மருள்சுரந்த-

முன்னைப் பழவினை வேரறுத்து* ஊழி முதல்வனையே-

பன்னப் பணித்த இராமானுசன்* பரன் பாதமும் என்-

சென்னித் தரிக்க வைத்தான்* எனக்கேதும் சிதைவில்லையே. 4

 

3897:

எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று* இசையகில்லா-

மனக்குற்ற மாந்தர்* பழிக்கில் புகழ்* அவன் மன்னியசீர்-

தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா*

இனக்குற்றம் காணகில்லார்,* பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5

 

3898:

இயலும் பொருளும் இசையத் தொடுத்து,* ஈன் கவிகள் அன்பால்-

மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,* மதியின்மையால்-

பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்*

முயல்கின்றனன்* அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே. 6

 

3899:##

மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-

குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி* அல்லா-

வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தமன்றே. (2) 7

 

3900:

வருத்தும் புறவிருள் மாற்ற,* எம் பொய்கைப்பிரான் மறையின்-

குருத்தின் பொருளையும்* செந்தமிழ் தன்னையும் கூட்டி* ஒன்றத்-

திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே*

இருத்தும் பரமன்* இராமானுசன் எம் இறையவனே. 8

 

3901:

இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட* ஞானமென்னும்-

நிறைவிளக்கு ஏற்றிய* பூதத் திருவடி தாள்கள்,* நெஞ்சத்து-

உறையவைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்*

மறையினைக் காத்து* இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே. 9

 

3902:

மன்னிய பேரிருள் மாண்டபின்* கோவலுள் மாமலராள்-

தன்னொடு மாயனை* கண்டமை காட்டும்* தமிழ்த்தலைவன்-

பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்*

சென்னியிற் சூடும்* திருவுடையார் என்றும் சீரியரே. 10

 

3903:

சீரிய நான்மறைச் செம்பொருள்* செந்தமிழால் அளித்த-

பாரியலும் புகழ்* பாண்பெருமாள்,* சரணாம் பதுமத்-

தாரியல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்*

காரிய வண்மை,* என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே. 11

 

3904:

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்* இணையடிப்போது-

அடங்கும் இதயத்து இராமானுசன்,* அம்பொற் பாதமென்றும்-

கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யா*

திடங்கொண்ட ஞானியர்க்கே* அடியேன் அன்பு செய்வதுவே. 12

 

3905:

செய்யும் பசுந்துளபத் தொழில் மாலையும்* செந்தமிழில்-

பெய்யும் மறைத்தமிழ் மாலையும்* பேராத சீரரங்கத்து-

ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி* ஆதரியா-

மெய்யன்* இராமானுசன் சரணே கதி வேறெனக்கே. 13

 

3906:

கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்-

கொதிக்க* தவம்செய்யும் கொள்கை அற்றேன்,*கொல்லி காவலன் சொல்-

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே*

துதிக்கும் பரமன்* இராமானுசன் என்னைச் சோர்விலனே. 14

 

3907:

சோராத காதல் பெருஞ்சுழிப்பால்,* தொல்லை மாலையொன்றும்-

பாராதவனை* பல்லாண்டென்று காப்பிடும்* பான்மையன்தாள்-

பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கியசீர்*

சாரா மனிசரைச் சேரேன்* எனக்கென்ன தாழ்வினியே? 15

 

3908:##

தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து* தலமுழுதும் கலியே-

ஆள்கின்ற நாள் வந்து* அளித்தவன் காண்மின்* அரங்கர்மௌலி-

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்*

வாழ்கின்ற வள்ளல்* இராமானுசன் என்னும் மாமுனியே. (2) 16

 

3909:

முனியார் துயரங்கள் முந்திலும்* இன்பங்கள் மொய்த்திடினும்-

கனியார் மனம்* கண்ண மங்கை நின்றானைக்* கலைபரவும்-

தனியானைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு* உலகில்-

இனியானை* எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே. 17

 

3910:

எய்தற்கு அரிய மறைகளை* ஆயிரம் இன்தமிழால்-

செய்தற்கு உலகில் வரும்* சடகோபனைச்* சிந்தையுள்ளே-

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்*

உய்தற்கு உதவும்* இராமானுசன் எம் உறுதுணையே. 18

 

3911:

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்* உயர்குருவும்-

வெறிதரு பூமகள் நாதனும்* மாறன் விளங்கியசீர்-

நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்*

அறிதர நின்ற,* இராமானுசன் எனக்கு ஆரமுதே. 19

 

3912:

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,* அமுதத் திருவாய்-

ஈரத் தமிழின்* இசை உணர்ந்தோர்கட்கு* இனியவர்தம்-

சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை* நெஞ்சால்-

வாரிப் பருகும்* இராமானுசன் என்தன் மாநிதியே. 20

 

3913:

நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்-

துதிகற்று உலகில் துவள்கின்றிலேன்* இனி தூய்நெறிசேர்-

எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்*

கதிபெற்றுடைய* இராமானுசன் என்னைக் காத்தனனே. 21

 

3914:

கார்த்திகை யானும் கரிமுகத் தானும்* கனலும்முக்கண்-

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு* மூவுலகும்-

பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த*

தீர்த்தனை ஏத்தும்* இராமானுசன் என்தன் சேமவைப்பே. 22

 

3915:

வைப்பாய வான்பொருள் என்று,* நல்லன்பர் மனத்தகத்தே-

எப்போதும் வைக்கும் இராமானுசனை* இருநிலத்தில்-

ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து*

முப்போதும் வாழ்த்துவன்* என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே! 23

  

3916:

மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,*அதனால்-

எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,* இன்று கண்டுயர்ந்தேன்-

பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்*

கைத்த மெய்ஞ்ஞானத்து* இராமானுசன் என்னும் கார்தன்னையே. 24

 

3917:

காரேய் கருணை இராமானுச,* இக் கடலிடத்தில்-

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை* அல்லலுக்கு-

நேரே உறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபின்* உன்-

சீரே உயிர்க்குயிராய்,* அடியேற்கு இன்று தித்திக்குமே. 25

 

3918:

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-

மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-

எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*

அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே. 26

 

3919:

கொள்ளக் குறைவற்று இலங்கி* கொழுந்து விட்டு ஓங்கிய உன்-

வள்ளல் தனத்தினால்* வல்வினையேன் மனம் நீபுகுந்தாய்*

வெள்ளைச் சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கிதென்று*

தள்ளுற்று இரங்கும்* இராமானுச! என் தனிநெஞ்சமே! 27

 

3920:

நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்* நங்கள்-

பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்* பாதம்நண்ணா-

வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்*

கொஞ்சிப் பரவகில்லாது* என்ன வாழ்வு இன்று கூடியதே! 28

 

3921:

கூட்டும் விதியென்று கூடுங்கொலோ,* தென் குருகைப்பிரான்-

பாட்டென்னும்* வேதப் பசுந்தமிழ் தன்னைத்,* தன் பத்தியென்னும்-

வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்*

ஈட்டங்கள் தன்னை,* என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே? 29

 

3922:

இன்பம் தருபெருவீடு வந்து எய்திலென்?* எண்ணிறந்த-

துன்பம் தரு நிரயம்பல சூழிலென்?* தொல்லுலகில்-

மன்பல்லுயிர்க்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த*

அன்பன் அனகன்* இராமானுசன் என்னை ஆண்டனனே. 30

 

3923:##

ஆண்டுகள் நாள் திங்களாய்* நிகழ்காலம் எல்லாம் மனமே!-

ஈண்டு* பல்யோனிகள் தோறும் உழல்வோம்* இன்றோர் எண்ணின்றியே-

காண்தகு தோளண்ணல் தென்னத்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்*

பூண்டவன்பாளன்* இராமானுசனைப் பொருந்தினமே. (2) 31

 

3924:

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,* நல்ல-

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்* செறுகலியால்-

வருந்திய ஞாலத்தை* வண்மையினால் வந்தெடுத்தளித்த-

அருந்தவன்* எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே. 32

  

3925:

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-

படையொடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-

புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-

இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே. 33

 

3926:

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை,* நினைப்பரிய-

பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,* என் பெய்வினைதென்-

புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்*

நலத்தைப் பொறுத்தது* இராமானுசன் தன் நயப்புகழே. 34

 

3927:

நயவேன் ஒருதெய்வம் நானிலத்தே* சில மானிடத்தைப்-

புயலே என* கவி போற்றி செய்யேன்* பொன் அரங்கமென்னில்-

மயலே பெருகும் இராமனுசன்* மன்னு மாமலர்த்தாள்-

அயரேன்* அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? 35

 

3928:

அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்* அன்று ஆரணச்சொல்-

கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப*, பின்னும் காசினியோர்-

இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு* அவர்பின்-

படரும் குணன்,* எம் இராமானுசன் தன் படியிதுவே. 36

 

3929:

படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்*

குடிகொண்ட கோயில் இராமானுசன் குணங் கூறும்,* அன்பர்-

கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்*

அடிகண்டு கொண்டுகந்து* என்னையும் ஆளவர்க்கு ஆக்கினரே. 37

 

3930:

ஆக்கி அடிமை நிலைப்பித்தனை* என்னை இன்று,அவமே-

போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு* புண்ணியர்தம்-

வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்*

நோக்கில் தெரிவரிதால்,* உரையாய் இந்த நுண்பொருளே. 38

 

3931:

பொருளும் புதல்வரும் பூமியும்* பூங்குழலாரும் என்றே-

மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே!* மற்றுளார்தரமோ-

இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே*

தெருளும் தெருள்தந்து* இராமானுசன் செய்யும் சேமங்களே. 39

 

3932:

சேமநல் வீடும் பொருளும் தருமமும்* சீரியநற்-

காமமும் என்றிவை நான்கென்பர்* நான்கினும் கண்ணனுக்கே-

ஆமது காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்*

வாமனன் சீலன்* இராமானுசன் இந்த மண்மிசையே. 40

 

3933:

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து* எங்கள் மாதவனே-

கண்ணுற நிற்கிலும் காணகில்லா,* உலகோர்கள் எல்லாம்-

அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே*

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு,* நாரணற்கு ஆயினரே. 41

 

3934:

ஆயிழையார் கொங்கை தங்கும்* அக் காதல் அளற்றழுந்தி-

மாயும் என் ஆவியை* வந்தெடுத்தான் இன்று* மாமலராள்-

நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்-

தூயவன்* தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே. 42

 

3935:

சுரக்கும் திருவும் உணர்வும்* சொலப்புகில் வாயமுதம்-

பரக்கும் இருவினை பற்றற ஓடும்* படியிலுள்ளÖர்-

உரைக்கின்றனன் உமக்கு யான் அறஞ் சீறும் உறுகலியை*

துரக்கும் பெருமை* இராமானுசன் என்று சொல்லுமினே. 43

 

3936:

சொல்லார் தமிழொரு மூன்றும்* சுருதிகள் நான்குமெல்லை-

இல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்* எண்ணருஞ்சீர்-

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு*

அல்லார் அகலிடத்தோர்,* எது பேறென்று காமிப்பரே. 44

 

3937:

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,* அப் பேறளித்தற்கு-

ஆறொன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி,* என்று இப்பொருளைத்-

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்*

கூறும் பரமன்று* இராமானுச மெய்ம்மை கூறிடிலே. 45

 

3938:

கூறும் சமயங்கள் ஆறும் குலைய* குவலயத்தே-

மாறன் பணித்த மறையுணர்ந்தோனை* மதியிலியேன்-

தேறும் படி என் மனம் புகுந்தானை* திசையனைத்தும்-

ஏறும் குணனை* இராமானுசனை இறைஞ்சினமே. 46

 

3939:

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று* இவ்வுலகத்து-

அறம் செப்பும்* அண்ணல் இராமானுசன்,* என் அருவினையின்-

திறம்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே*

நிறைந்து ஒப்பற இருந்தான்,* எனக்காரும் நிகரில்லையே! 47

 

3940:

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு* நின் அருளின்கண் அன்றிப்-

புகல் ஒன்றுமில்லை* அருட்கும் அஃதேபுகல்* புன்மையிலோர்-

பகரும் பெருமை இராமானுச! இனி நாம்பழுதே*

அகலும் பொருளென்* பயன் இருவோமுக்கும் ஆனபின்னே? 48

 

3941:

ஆனது செம்மை அறநெறி* பொய்ம்மை அறுசமயம்-

போனது பொன்றி* இறந்தது வெங்கலி* பூங்கமலத்-

தேனதி பாய்வயல் தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத்*

தானதில் மன்னும்* இராமானுசன் இத்தலத்து உதித்தே. 49

 

3942:##

உதிப்பன உத்தமர் சிந்தையுள்* ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்-

கொதித்திட* மாறி நடப்பன* கொள்ளைவன் குற்றமெல்லாம்-

பதித்த என் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்*

எதித்தலை நாதன்* இராமானுசன் தன் இணையடியே. 50

 

3943:

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய்* அன்று பாரதப்போர்-

முடியப்* பரிநெடுந் தேர் விடுங்கோனை* முழுதுணர்ந்த-

அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆளவந்து* இப்-

படியில் பிறந்தது* மற்றில்லை காரணம் பார்த்திடிலே. 51

 

3944:

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,* இப் பார்முழுதும்-

போர்த்தான் புகழ்கொண்டு* புன்மையின் ஏனிடைத்தான் புகுந்து*

தீர்த்தான் இருவினை தீர்த்து * அரங்கன் செய்ய தாளிணையோடு-

ஆர்த்தான்* இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே. 52

 

3945:

அற்புதன் செம்மை இராமானுசன்,* என்னை ஆளவந்த-

கற்பகம் கற்றவர்* காமுறு சீலன்* கருதரிய-

பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்*

நற்பொருள் தன்னை,* இந் நானிலத்தே வந்து நாட்டினனே. 53

 

3946:

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,* நாரணனைக்-

காட்டிய வேதம் களிப்புற்றது,* தென் குருகைவள்ளல்-

வாட்டமிலா வண் தமிழ்மறை வாழ்ந்தது* மண்ணுலகில்-

ஈட்டிய சீலத்து* இராமானுசன் தன் இயல்வுகண்டே. 54

 

3947:

கண்டவர் சிந்தை கவரும்* கடிபொழில் தென்னரங்கன்*

தொண்டர் குலாவும் இராமானுசனை,* தொகையிறந்த-

பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்*

கொண்டலை மேவித் தொழும்,* குடியாம் எங்கள் கோக்குடியே. 55

 

3948:

கோக்குல மன்னரை மூவெழு கால்,* ஒரு கூர்மழுவால்-

போக்கிய தேவனை* போற்றும் புனிதன்* புவனமெங்கும்-

ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்தபின்* என்-

வாக்கு உரையாது,* என் மனம் நினையாது இனி மற்றொன்றையே. 56

 

3949:

மற்றொரு பேறு மதியாது,* அரங்கன் மலரடிக்கு ஆள்-

உற்றவரே* தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*

நற்றவர் போற்றும் இராமானுசனை* இந் நானிலத்தே-

பெற்றனன்* பெற்றபின் மற்றறியேன் ஒரு பேதைமையே. 57

 

3950:

பேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி* பிரமம் நன்றென்று-

ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று* உயிர்கள் மெய்விட்டு-

ஆதிப் பரனொடு ஒன்றாமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்*

வாதில் வென்றான்,* எம் இராமானுசன் மெய்ம்மதிக்கடலே. 58

 

3951:

கடலளவாய திசை எட்டினுள்ளும்* கலியிருளே-

மிடைதரு காலத்து இராமானுசன்,* மிக்க நான்மறையின்-

சுடரொளியால் அவ் விருளைத் துரத்திலனேல்* உயிரை-

உடையவன்,* நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே. 59

 

3952:

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,* திருவாய் மொழியின்-

மணந்தரும்* இன்னிசை மன்னும் இடந்தொறும்* மாமலராள்-

புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்*

குணந்திகழ் கொண்டல்* இராமானுசன் எம் குலக்கொழுந்தே. 60

 

3953:

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,* நிரயத்து-

அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும்,* அருமுனிவர்-

தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தொல் புகழ்* சுடர்மிக்கு-

எழுந்தது,* அத்தால் நல்ல அதிசயங் கண்ட திருநிலமே. 61

 

3954:

இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி*  இன்று யான் இறையும்-

வருந்தேன் இனி எம் இராமானுசன்,* மன்னு மாமலர்த்தாள்-

பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா*

பெருந்தேவரைப் பரவும்,* பெரியோர் தம் கழல்பிடித்தே. 62

 

3955:

பிடியைத் தொடரும் களிறென்ன* யான் உன் பிறங்கியசீர்-

அடியைத் தொடரும் படி நல்க வேண்டும்* அறுசமயச்-

செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து* இப்-

படியைத் தொடரும்* இராமானுச! மிக்க பண்டிதனே! 63

 

3956:

பண்தரு மாறன் பசுந்தமிழ்* ஆனந்தம் பாய்மதமாய்-

விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்* மெய்ம்மை-

கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே-

மண்டி வந்தேன்றது* வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே. 64

 

3957:

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு* என்றும் மறையவர்தம்-

தாழ்வற்றது* தவம் தாரணி பெற்றது* தத்துவநூல்-

கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு* அந்-

நாழற்றது,* நம் இராமானுசன் தந்த ஞானத்திலே. 65

 

3958:

ஞானம் கனிந்த நலங்கொண்டு* நாள்தொறும் நைபவர்க்கு-

வானம் கொடுப்பது மாதவன்* வல்வினையேன் மனத்தில்-

ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு* அத்-

தானம் கொடுப்பது* தன் தகவென்னும் சரண்கொடுத்தே. 66

 

3959:

சரணம் அடைந்த தருமனுக்கா* பண்டு நூற்றுவரை-

மரணம் அடைவித்த மாயவன் தன்னை* வணங்கவைத்த-

கரணம் இவை உமக்கன்று என்றி இராமானுசன்* உயிர்கட்கு-

அரண் அங்கு அமைத்திலனேல்,* அரணார் மற்று இவ்வாருயிர்க்கே? 67

 

3960:

ஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்?* மாயன் அன்று ஐவர்தெய்வத்-

தேரினில் செப்பிய கீதையின்* செம்மைப் பொருள்தெரியப்-

பாரினில் சொன்ன இராமானுசனை பணியும் நல்லோர்*

சீரினில் சென்று பணிந்தது,* என் ஆவியும் சிந்தையுமே. 68

 

 3961:

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,* முன்னாள்-

அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,* அவை என்தனக்கு அன்றருளால்-

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்* தான் அதுதந்து*

எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே. 69

 

3962:

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,* எண்ணில் பல்குணத்த-

உன்னையும் பார்க்கில்* அருள் செய்வதே நலம்* அன்றி என்பால்-

பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை*

தன்னை என் பார்ப்பர்?* இராமானுச! உன்னைச் சார்ந்தவரே? 70

 

3963:

சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,* அன்பு தான்மிகவும்-

கூர்ந்தது* அத் தாமரைத் தாள்களுக்கு* உன்தன் குணங்களுக்கே-

தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை* அதனால்-

பேர்ந்தது* வண்மை இராமானுச! எம் பெருந்தகையே. 71

 

3964:

கைத்தனன் தீய சமயக் கலகரை* காசினிக்கே-

உய்த்தனன்* தூய மறைநெறி தன்னை,* என்று உன்னி உள்ளம்-

நெய்த்தவன் போடிருந்து ஏத்தும் நிறை புகழோருடனே*

வைத்தனன் என்னை* இராமானுசன் மிக்க வண்மைசெய்தே. 72

 

3965:

வண்மையினாலும் தன் மா தகவாலும்* மதிபுரையும்-

தண்மையினாலும் இத் தாரணியோர்கட்கு* தான்சரணாய்-

உண்மை நல் ஞானம் உரைத்த இராமானுசனை* உன்னும்-

திண்மை அல்லால் எனக்கில்லை,* மற்றோர் நிலை தேர்ந்திடிலே. 73

 

3966:

தேரார் மறையின் திறமென்று* மாயவன் தீயவரைக்-

கூராழி கொண்டு குறைப்பது* கொண்டல் அனையவண்மை-

ஏரார் குணத்து எம் இராமானுசன்* அவ்வெழில் மறையில்-

சேராதவரைச் சிதைப்பது,* அப்போது ஒரு சிந்தைசெய்தே. 74

 

3967:

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்* திருவரங்கர்-

கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி,* நங்கண் முகப்பே-

மெய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்* நின்புகழே-

மொய்த்தலைக்கும் வந்து* இராமானுச! என்னை முற்றுநின்றே. 75

 

3968:##

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,* நிறை வேங்கடப்பொற்-

குன்றமும்* வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*

உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*

என்தனக்கும் அது,* இராமானுச! இவை ஈந்தருளே. (2) 76

 

3969:

ஈந்தனன் ஈயாத இன்னருள்* எண்ணில் மறைக்குறும்பைப்-

பாய்ந்தனன்* அம்மறைப் பல்பொருளால்,* இப் படியனைத்தும்-

ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை* வேர்பறியக்-

காய்ந்தனன்* வண்மை இராமானுசற்கு என் கருத்தினியே? 77

  

3970:

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி* கருதரிய-

வருத்தத்தினால் மிக வஞ்சித்து* நீயிந்த மண்ணகத்தே-

திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்* என்நெஞ்சில்-

பொருத்தப் படாது,* எம் இராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே. 78

 

3971:

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,* இந்தப் பூதலத்தே-

மெய்மைப் புரக்கும் இராமானுசன் நிற்க,* வேறுநம்மை-

உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே*

ஐயப்படா நிற்பர்* வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே. 79

 

3972:

நல்லார் பரவும் இராமானுசன்,* திரு நாமம் நம்ப-

வல்லார் திறத்தை* மறவாதவர்கள் எவர்,*அவர்க்கே-

எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*

சொல்லால் மனத்தால்* கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே. 80

 

3973:

சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,* தொண்டு பட்டவர்பால்-

சார்வின்றி நின்ற எனக்கு,* அரங்கன் செய்ய தாளிணைகள்-

பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச!* இனிஉன்-

சீர் ஒன்றிய கருணைக்கு,* இல்லை மாறு தெரிவுறிலே. 81

 

3974:

தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,* வெந் தீவினையால்-

உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,* ஒருபொழுதில்-

பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியேனா!*

தெரிவுற்ற கீர்த்தி,* இராமானுசன் என்னும் சீர்முகிலே. 82

 

3975:

சீர்கொண்டு பேரறம் செய்து,* நல்வீடு செறிதும் என்னும்*

பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,* உன் பதயுகமாம்-

ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்* உன்னுடைய-

கார்கொண்ட வண்மை* இராமானுச! இது கண்டுகொள்ளே. 83

 

3976:

கண்டுகொண்டேன் எம் இராமானுசன் தன்னை* காண்டலுமே-

தொண்டு கொண்டேன்* அவன் தொண்டர் பொற்றாளில்* என் தொல்லை வெந்நோய்-

விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை* வாய்மடுத்து இன்று-

உண்டு கொண்டேன்,* இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே. 84

 

3977:

ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,* அதன் உச்சிமிக்க-

சோதியை* நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*

பேதைமை தீர்த்த இராமானுசனைத் தொழும்பெரியோர்*

பாதமல்லால் என்தன் ஆருயிர்க்கு* யாதொன்றும் பற்றில்லையே. 85

 

3978:

பற்றா மனிசரைப் பற்றி,* அப்பற்று விடாதவரே-

உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,* ஒள்ளியநூல்-

கற்றார் பரவும் இராமானுசனை* கருதும் உள்ளம்-

பெற்றார் எவர்,* அவர் எம்மை நின்றாளும் பெரியவரே. 86

  

3979:

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்* தன்குணங்கட்கு-

உரியசொல் என்றும்* உடையவன் என்றென்று* உணர்வில்மிக்கோர்-

தெரியும் வண்கீர்த்தி இராமானுசன்* மறை தேர்ந்துலகில்-

புரியும் நல்ஞானம்* பொருந்தாதவரைப் பொரும் கலியே. 87

 

3980:

கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* கலைப்பெருமான்-

ஒலிமிக்க பாடலை உண்டு* தன்னுள்ளம் தடித்து,* அதனால்-

வலிமிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்*

புலிமிக்கது என்று,* இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.  88

 

3981:

போற்றரும் சீலத்து இராமானுச,* நின் புகழ்தெரிந்து-

சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில்,* உன் சீர்தனக்கோர்-

ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்தியன்றி-

ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே. 89

 

3982:

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,* இந் நீணிலத்தே-

எனையாள வந்த இராமானுசனை* இருங்கவிகள்-

புனையார் புனையும் பெரியவர் தாள்களில்* பூந்தொடையல்-

வனையார்* பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே. 90

 

3983:

மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,* அவப்பொருளாம்-

இருள்சுரந்து எய்த்த* உலகிருள் நீங்கத்,* தன் ஈண்டியசீர்-

அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்-

பொருள் சுரந்தான்,* எம் இராமானுசன் மிக்க புண்ணியனே. 91

 

3984:

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,* அடி போற்றிசெய்யும்-

நுண்ணருங் கேள்வி* நுவன்றுமிலேன்,* செம்மை நூற்புலவர்க்கு-

எண்ணருங் கீர்த்தி இராமானுச! இன்று நீபுகுந்து* என்-

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்* நின்ற இக் காரணம் கட்டுரையே. 92

 

3985:

கட்டப் பொருளை மறைப்பொருள் என்று* கயவர்சொல்லும்-

பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,* என் பெருவினையைக்-

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி*

வெட்டிக் களைந்த* இராமானுசன் என்னும் மெய்த்தவனே. 93

 

3986:

தவம்தரும் செல்வம் தகவும் தரும்,* சலியாப்பிறவிப்-

பவம்தரும்* தீவினை பாற்றித் தரும்,* பரந்தாமம் என்னும்-

திவம்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*

உவந்தருந்தேன்,* அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே. 94

 

3987:

உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்குஉயவே-

பண்ணும் பரனும் பரிவிலனாம்படி* பல்லுயிர்க்கும்-

விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமானுசன்*

மண்ணின் தலத்து உதித்து* உய்மறை நாலும் வளர்த்தனனே. 95

  

3988:

வளரும் பிணிகொண்ட வல்வினையால்,* மிக்க நல்வினையில்-

கிளரும் துணிவு கிடைத்தறியாது* முடைத்தலையூன்-

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*

உளர் எம் இறைவர்* இராமானுசன் தன்னை உற்றவரே. 96

 

3989:

தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,* மன்னு தாமரைத்தாள்-

தன்னை உற்றாட்செய்ய* என்னை உற்றான் இன்று* தன்தகவால்-

தன்னையுற்றார் அன்றித் தன்மை உற்றாரில்லை என்றறிந்து*

தன்னை உற்றாரை* இராமானுசன் குணம் சாற்றிடுமே. 97

 

3990:##

இடுமே இனிய சுவர்க்கத்தில்* இன்னம் நரகிலிட்டுச்-

சுடுமே? அவற்றை* தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-

நடுமே? இனி நம் இராமானுசன் நம்மை நம்வசத்தே*

விடுமே? சரணமென்றால்,* மனமே! நையல் மேவுதற்கே? (2) 98

 

3991:

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்* தாழ்சடையோன்-

சொற்கற்ற சோம்பரும்* சூனிய வாதரும்* நான்மறையும்-

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்* நீள்நிலத்தே-

பொற்கற்பகம்,* எம் இராமானுச முனி போந்தபின்னே. 99

 

3992:

போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு* உனதடிப் போதில் ஒண்சீ-

ராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி,* நின் பாலதுவே-

ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றியொன்றும்*

மாந்த கில்லாது,* இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே. 100

 

3993:

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு* மதிமயங்கித்-

துயக்கும் பிறவியில்* தோன்றிய என்னை* துயரகற்றி-

உயக்கொண்டு நல்கும் இராமானுச! என்றது உன்னையுன்னி*

நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,* நல்லவர் என்றும்நைந்தே. 101

 

3994:

நையும் மனம் உன் குணங்களை உன்னி,* என் நாஇருந்துஎம்-

ஐயன் இராமானுசன்* என்று அழைக்கும்* அருவினையேன்-

கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்*

வையம் இதனில்,* உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? 102

 

3995:

வளர்ந்த வெங்கோப மடங்கல் ஒன்றாய்,* அன்று வாளவுணன்-

கிளர்ந்த* பொன்னாகம் கிழித்தவன்* கீர்த்திப் பயிரெழுந்து-

விளைந்திடும் சிந்தை இராமானுசன் என்தன் மெய்வினைநோய்*

களைந்து நல் ஞானம் அளித்தனன்* கையில் கனியென்னவே. 103

 

3996:

கையில் கனியென்னக்* கண்ணனைக் காட்டித் தரிலும்,*உன்தன்-

மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,*நிரயத்-

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ*

செய்யில் தரிப்பன்* இராமானுச! என் செழுங்கொண்டலே! 104

 

 3997:##

செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-

விழுந்திருப்பார் நெஞ்சில்* மேவு நல்ஞானி,* நல் வேதியர்கள்-

தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்*

எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2) 105

 

3998:##

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்-

பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து-

இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து* இன்று அவன்வந்து-

இருப்பிடம்* என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2) 106

 

3999:##

இன்புற்ற சீலத்து இராமானுச,* என்றும் எவ்விடத்தும்-

என்புற்ற நோய்* உடல் தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய-

துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு* உன் தொண்டர்கட்கே-

அன்புற்று இருக்கும் படி,* என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 107

 

4000:##

அங்கயல்பாய் வயல் தென்னரங்கன்,* அணி ஆகமன்னும்-

பங்கய மாமலர்* பாவையைப் போற்றுதும்* பத்தியெல்லாம்-

தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நம்தலை மிசையே*

பொங்கிய கீர்த்தி* இராமானுசன் அடிப் பூமன்னவே. (2) 108

 

எம்பெருமானார் திருவடிகளே சரணம்

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்