சிறிய திருமடல் தனியன்
முள்ளிச் செழுமலரோதாரன் முளைமதியம் *
கொல்லிக்கு என்னுள்ளம் கொதியாமே — வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி * மருவாளன் தந்தான் மடல். |
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்
பாசுரம் எண் 2673 முதல் 2712 வரை.
#
காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை *
சீரார் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேராற்று *
பேரார மார்பின் பெருமா மழைக்கூந்தல் *
நீராரவேலி நிலமங்கை என்னும் * இப்
பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே*(1) (2) — அம்மூன்றும்
ஆராயில்தானே அறம்பொருள் இன்பமென்று *
ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார் *
சீரார் இருகலையும் எய்துவர்*(2)–சிக்கெனமற்று
ஆரானும் உண்டென்பார் என்பதுதான் அதுவும் *
ஓராமையன்றே? உலகத்தார் சொல்லும் சொல் *
ஓராமையாமாறு அது உரைக்கேன் கேளாமே *
காரார் புரவியேழ் பூண்ட தனியாழி *
தேரார் நிரைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு *
ஆராவமுதம் அங்கெய்தி*(3)–அதில் நின்றும்
வாராதொழிவது ஒன்றுண்டே * அதுநிற்க
ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே? *
ஏரார் இளமுலையீர் என்தனக்கு உற்றதுதான் *
காரார் குழலெடுத்துக்கட்டி*(4)–கதிர்முலையை
வாரார வீக்கி மணிமேகலை திருத்தி *
ஆரார் அயில்வேற்கண் அஞ்சனத்தின் நீரணிந்து *
சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன் நான் *
நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றொருவன் *
பாரோர்களெல்லாம் மகிழப் பறைகறங்க *
சீரார் குடம் இரண்டேந்தி*(5)–செழுந்தெருவே
ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு *
ஏரார் இளமுலையார் என்னையரும் எல்லாரும் *
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என்வல்வினையால் *
காரார் மணிநிறமும் கைவளையும் காணேன் நான் *
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்*(6)–அறிவழிந்து
தீரா உடம்பொடு பேதுறுருவேன் கண்டிரங்கி*
ஏரார் கிளிக்கிளவி எம்மனைதான் வந்து என்னை*
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு*(7)–செங்குறிஞ்சித்
தாரார் நறுமாலை சாத்தற்கு* தான்பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள்*(8)–அதனாலும்
தீராது என்சிந்தை நோய் தீராது என்பேதுறவு*
வாராதுமாமை அதுகண்டு மற்றாங்கே*
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்*
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்*
ஆரானும் மெய்ப்படுவன் என்றார்*(9)–அதுகேட்டுக்
காரார் குழர்க்கொண்டை கட்டுவிச்சி கட்டேறி*
சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா*
வேரா விதிர்விதிரா மெய்சிலிர் ஆக்கைமோவா*
பேராயிரமுடையான் என்றாள்*(10)–பேர்த்தேயும்
காரார் திருமேனி காட்டினாள்*–கையதுவும்
சீரார் வலம்புரியே என்றாள்*(11)–திருத்துழாய்த்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா*
நீரேதும் அஞ்சேன்மின் நும்மகளை நோய்செய்தான்*
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்*
கூரார் வேற்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ*
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டதுதான்*
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது*–மற்று
ஆராலே கன்மாரி காத்ததுதான்*(12)–ஆழிநீர்
ஆரால் கடைந்திடப் பட்டது*–அவன் காண்மின்
ஊரா நிரை மேய்த்து உலகெல்லாம் உண்டுமிழ்ந்தும்*
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*
சீரார் கலயல்குல் சீரடிச் செந்துவர்வாய்*
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிகொண்டு*
ஏரார் இடைநோவ எத்தனையோர் போதுமாய்*
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதனை*
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு*
நாரார் உறியேற்றி நன்கமைய வைத்ததனை*
போரார் வேற்கண்மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்*
ஓராதவன்போல் உறங்கி அறிவுற்று*
தாரார் தடந்தோள்கள் உள்ளவும் கைநீட்டி*
ஆராத வெண்ணை விழுங்கி*(13)–அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே*
ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டவளும்*
வாராத்தான் வைத்தது காணாள்*(14)–வயிறடித்துஇங்கு
ஆரார் புகுதுவார்? ஐயர் இவரல்லால்*
நீராம் இதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்*
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே*
தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப*
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்*(15)–அன்றியும்
நீரார் நெடுங்கயத்தை சென்றலைக்க நின்றுரப்பி*
ஓராயிரம் பணவெங் கோவியல் நாகத்தை*
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து*
சீரார் திருவடியால் பாய்ந்தான்*(16)–தன்சீதைக்கு
நேராவான் என்றோர் நிசாசரிதான் வந்தாளை*
கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்*
ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை*(17)–வெந்நரகம்
சேராவகையே சிலைகுனித்தான்*–செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா*
ஏரார் தடந்தோள் இராவணனை*(18)–ஈரைந்து
சீரார் சிரமறுத்து செற்றுகந்த செங்கண்மால்*
போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை*
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு*(19)–குடல் மாலை
சீரார் திருமார்பின் மேல்கட்டி*–செங்குருதி
சோராக் கிடந்தானை குங்குமத்தோள் கொட்டி*
ஆரா எழுந்தான் அரியுருவாய்*(20) அன்றியும்
பேர் வாமனனாகிய காலத்து* மூவடிமண்
தாராய் எனக்கென்று வேண்டிச் சலத்தினால்*
நீரேற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை*(21)
ஆராதபோரில் அசுரர்களும் தானுமாய்*
காரார் வரைநட்டு நாகம் கயிறாக*
பேராமல் தாங்கிக் கடைந்தான்*(22)–திருத்துழாய்
தாரர்ந்த மார்வன் தடமால் வரைபோலும்*
போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி*
நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடும்கையால்*
நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்*
வாராய்! என்னாரிடரை நீக்காய்*(23)–எனவெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூராக*
ஈரா அதனை இடர்க்கடிந்தான் எம்பெருமான்*
பேராயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளை*
தீரா நோய் செய்தான் எனஉரைத்தாள்*(24)–சிக்கெனமற்று
ஆரானுமல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்*
போரார் வேற்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்*
தாராதொழியுமே தன்னடிச்சி அல்லளே*–மற்று
ஆரானுமல்லனே என்றொழிந்தாள்*(25)–நான் அவனைக்
காரார் திருமேனி கண்டதுவே காரணமா*
பேராபிதற்றாத் திரிதருவன்*(26)–பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைத் தண்வாடை*
சோராமறுக்கும் வகையறியேன்*(27)–சூழ்குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை*
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்*
வாராய் மட நெஞ்சே வந்து*(28)–மணிவண்ணன்
சீரார் திருத்துழாய் மாலை நமக்கு அருளி*
தாரான் தருமென்று இரண்டத்தில் ஒன்றதனை*
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்*
ஆராயுமேலும் பணிகேட்டு அதன்றெனிலும்*
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு*
காரார் கடல் வண்ணன் பின்போன நெஞ்சமும்*
வாராதே என்னை மறந்ததுதான்*(29)–வல்வினையேன்
ஊரார் உகப்பதே ஆயினேன்*(30)–மற்றெனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்*
நீராய் உருகும் என்னாவி*(31)–நெடுங்கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*–உத்தமன்தன்
பேராயினவே பிதற்றுவன்*(32)–பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தராயினார்*
ஆரேபொல்லாமை அறிவார் அதுநிற்க*(33)
ஆரானுமாதானும் அல்லலவள் காணீர்*
வாரார் வனமுலை வாசவதத்தை என்று*
ஆரானும் சொல்லப்படுவாள்*(34)–அவளும்தன்
பேராயமெல்லாம் ஒழியப் பெருந்தெருவே*
தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*(35)–மற்றெனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே*–நான்அவனைக்
காரார் திருமேனி காணும் அளவும்போய்*
சீரார் திருவேங்கடமே திருக்கோவ-
லூரே*(2)–மதிட்கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*
பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்*
ஆராமம் சூழ்ந்த அரங்கம்*(36)(2)–கணமங்கை
காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீராரும் மாலிரும்சோலை திருமோகூர்*(37)
பாரோர் புகழும் வதரி வடமதுரை*
ஊராயவெல்லாம் ஒழியாமே நான்அவனை*
ஓரானை கொம்பொசித்து ஓரானை கோள்விடுத்த-
சீரானை* செங்கண் அடியானை தேன்துழாய்த்-
தாரானை*–தாமரைபோல் கண்ணானை*(38)
எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி*(39)–பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊராதொழியேன் நான்*
வாரார் பூம் பெண்ணை மடல்.(40)(2)
ஊராதொழியேன் உலகரிய ஒண்ணுதலீர்*
சீரார் முலைத்தடங்கள் சேரளவும்*–பாரெல்லாம்
அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநரையூர்*
மன்றோங்க ஊர்வன் மடல்.