சிறிய திருமடல்



சிறிய திருமடல் தனியன்
முள்ளிச் செழுமலரோதாரன் முளைமதியம் *

கொல்லிக்கு என்னுள்ளம் கொதியாமே — வள்ளல்

திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி *

மருவாளன் தந்தான் மடல்.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்

பாசுரம் எண் 2673 முதல் 2712 வரை.

 

#

காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை *

சீரார் சுடர்ச்சுட்டி செங்கலுழிப் பேராற்று *                       

பேரார மார்பின் பெருமா மழைக்கூந்தல் *

நீராரவேலி நிலமங்கை என்னும் * இப்                              

பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே*(1) (2) — அம்மூன்றும்

ஆராயில்தானே அறம்பொருள் இன்பமென்று *                               

ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார் *

சீரார் இருகலையும் எய்துவர்*(2)–சிக்கெனமற்று                 

ஆரானும் உண்டென்பார் என்பதுதான் அதுவும் *

ஓராமையன்றே? உலகத்தார் சொல்லும் சொல் *                            

ஓராமையாமாறு அது உரைக்கேன் கேளாமே *

காரார் புரவியேழ் பூண்ட தனியாழி *                         

தேரார் நிரைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு *

ஆராவமுதம் அங்கெய்தி*(3)–அதில் நின்றும்                        

வாராதொழிவது ஒன்றுண்டே * அதுநிற்க

ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே? *                         

ஏரார் இளமுலையீர் என்தனக்கு உற்றதுதான் *

காரார் குழலெடுத்துக்கட்டி*(4)–கதிர்முலையை                      

வாரார வீக்கி மணிமேகலை திருத்தி *

ஆரார் அயில்வேற்கண் அஞ்சனத்தின் நீரணிந்து *                     

சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன் நான் *

நீரார் கமலம்போல் செங்கண்மால் என்றொருவன் *                     

பாரோர்களெல்லாம் மகிழப் பறைகறங்க *

சீரார் குடம் இரண்டேந்தி*(5)–செழுந்தெருவே                       

ஆரார் எனச்சொல்லி ஆடும் அதுகண்டு *

ஏரார் இளமுலையார் என்னையரும் எல்லாரும் *                            

வாராயோ என்றார்க்குச் சென்றேன் என்வல்வினையால் *

காரார் மணிநிறமும் கைவளையும் காணேன் நான் *                     

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன்*(6)–அறிவழிந்து

தீரா உடம்பொடு பேதுறுருவேன் கண்டிரங்கி*                       

ஏரார் கிளிக்கிளவி எம்மனைதான் வந்து என்னை*

சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு*(7)–செங்குறிஞ்சித்                 

தாரார் நறுமாலை சாத்தற்கு* தான்பின்னும்

நேராதன ஒன்று நேர்ந்தாள்*(8)–அதனாலும்              

தீராது என்சிந்தை நோய் தீராது என்பேதுறவு*

வாராதுமாமை அதுகண்டு மற்றாங்கே*                             

ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்*

பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்*                          

ஆரானும் மெய்ப்படுவன் என்றார்*(9)–அதுகேட்டுக்

காரார் குழர்க்கொண்டை கட்டுவிச்சி கட்டேறி*                        

சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா*

வேரா விதிர்விதிரா மெய்சிலிர் ஆக்கைமோவா*                           

பேராயிரமுடையான் என்றாள்*(10)–பேர்த்தேயும்

காரார் திருமேனி காட்டினாள்*–கையதுவும்                    

சீரார் வலம்புரியே என்றாள்*(11)–திருத்துழாய்த்

தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா*                    

நீரேதும் அஞ்சேன்மின் நும்மகளை நோய்செய்தான்*

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்*                               

கூரார் வேற்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ*

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டதுதான்*                            

ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது*–மற்று

ஆராலே கன்மாரி காத்ததுதான்*(12)–ஆழிநீர்                   

ஆரால் கடைந்திடப் பட்டது*–அவன் காண்மின்

ஊரா நிரை மேய்த்து உலகெல்லாம் உண்டுமிழ்ந்தும்*                      

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*

சீரார் கலயல்குல் சீரடிச் செந்துவர்வாய்*                       

வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிகொண்டு*

ஏரார் இடைநோவ எத்தனையோர் போதுமாய்*                          

சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதனை*

வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு*                       

நாரார் உறியேற்றி நன்கமைய வைத்ததனை*

போரார் வேற்கண்மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்*                   

ஓராதவன்போல் உறங்கி அறிவுற்று*

தாரார் தடந்தோள்கள் உள்ளவும் கைநீட்டி*                   

ஆராத வெண்ணை விழுங்கி*(13)–அருகிருந்த

மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே*                   

ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டவளும்*

வாராத்தான் வைத்தது காணாள்*(14)–வயிறடித்துஇங்கு           

ஆரார் புகுதுவார்? ஐயர் இவரல்லால்*

நீராம் இதுசெய்தீர் என்றோர் நெடுங்கயிற்றால்*                        

ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே*

தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப*                       

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்*(15)–அன்றியும்

நீரார் நெடுங்கயத்தை சென்றலைக்க நின்றுரப்பி*                 

ஓராயிரம் பணவெங் கோவியல் நாகத்தை*

வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து*                          

சீரார் திருவடியால் பாய்ந்தான்*(16)–தன்சீதைக்கு

நேராவான் என்றோர் நிசாசரிதான் வந்தாளை*                           

கூரார்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்*

ஈராவிடுத்து அவட்கு மூத்தோனை*(17)–வெந்நரகம்                 

சேராவகையே சிலைகுனித்தான்*–செந்துவர்வாய்

வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா*                     

ஏரார் தடந்தோள் இராவணனை*(18)–ஈரைந்து

சீரார் சிரமறுத்து செற்றுகந்த செங்கண்மால்*                    

போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை*

கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு*(19)–குடல் மாலை                   

சீரார் திருமார்பின் மேல்கட்டி*–செங்குருதி

சோராக் கிடந்தானை குங்குமத்தோள் கொட்டி*                        

ஆரா எழுந்தான் அரியுருவாய்*(20) அன்றியும்

பேர் வாமனனாகிய காலத்து* மூவடிமண்                      

தாராய் எனக்கென்று வேண்டிச் சலத்தினால்*

நீரேற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை*(21)                     

ஆராதபோரில் அசுரர்களும் தானுமாய்*

காரார் வரைநட்டு நாகம் கயிறாக*                            

பேராமல் தாங்கிக் கடைந்தான்*(22)–திருத்துழாய்

தாரர்ந்த மார்வன் தடமால் வரைபோலும்*                      

போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி*

நீரார் மலர்க்கமலம் கொண்டு ஓர் நெடும்கையால்*                           

நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்*

வாராய்!  என்னாரிடரை நீக்காய்*(23)–எனவெகுண்டு                   

தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூராக*

ஈரா அதனை இடர்க்கடிந்தான் எம்பெருமான்*                         

பேராயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளை*

தீரா நோய் செய்தான் எனஉரைத்தாள்*(24)–சிக்கெனமற்று            

ஆரானுமல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்*

போரார் வேற்கண்ணீர் அவனாகில் பூந்துழாய்*                         

தாராதொழியுமே தன்னடிச்சி அல்லளே*–மற்று

ஆரானுமல்லனே என்றொழிந்தாள்*(25)–நான் அவனைக்                     

காரார் திருமேனி கண்டதுவே காரணமா*

பேராபிதற்றாத் திரிதருவன்*(26)–பின்னையும்                      

ஈராப் புகுதலும் இவ்வுடலைத் தண்வாடை*

சோராமறுக்கும் வகையறியேன்*(27)–சூழ்குழலார்                

ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை*

வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்*                   

வாராய் மட நெஞ்சே வந்து*(28)–மணிவண்ணன்

சீரார் திருத்துழாய் மாலை நமக்கு அருளி*                      

தாரான் தருமென்று இரண்டத்தில் ஒன்றதனை*

ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்*                          

ஆராயுமேலும் பணிகேட்டு அதன்றெனிலும்*

போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு*                           

காரார் கடல் வண்ணன் பின்போன நெஞ்சமும்*

வாராதே என்னை மறந்ததுதான்*(29)–வல்வினையேன்              

ஊரார் உகப்பதே ஆயினேன்*(30)–மற்றெனக்கு இங்கு

ஆராய்வார் இல்லை அழல் வாய் மெழுகு போல்*                           

நீராய் உருகும் என்னாவி*(31)–நெடுங்கண்கள்

ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*–உத்தமன்தன்                  

பேராயினவே பிதற்றுவன்*(32)–பின்னையும்

காரார் கடல் போலும் காமத்தராயினார்*                         

ஆரேபொல்லாமை அறிவார் அதுநிற்க*(33)

ஆரானுமாதானும் அல்லலவள் காணீர்*                              

வாரார் வனமுலை வாசவதத்தை என்று*

ஆரானும் சொல்லப்படுவாள்*(34)–அவளும்தன்                          

பேராயமெல்லாம் ஒழியப் பெருந்தெருவே*

தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*                       

ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*(35)–மற்றெனக்கு இங்கு

ஆரானும் கற்பிப்பார் நாயகரே*–நான்அவனைக்                   

காரார் திருமேனி காணும் அளவும்போய்*

சீரார் திருவேங்கடமே திருக்கோவ-                             

லூரே*(2)–மதிட்கச்சி ஊரகமே பேரகமே*

பேரா மருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே*                        

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர்*

ஆராமம் சூழ்ந்த அரங்கம்*(36)(2)–கணமங்கை                    

காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்*

சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்*                    

காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*

ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*                        

சீராரும் மாலிரும்சோலை திருமோகூர்*(37)

பாரோர் புகழும் வதரி வடமதுரை*                            

ஊராயவெல்லாம் ஒழியாமே நான்அவனை*

ஓரானை கொம்பொசித்து ஓரானை கோள்விடுத்த-                        

சீரானை* செங்கண் அடியானை தேன்துழாய்த்-

தாரானை*–தாமரைபோல் கண்ணானை*(38)                             

எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி*(39)–பெருந்தெருவே

ஊரார் இகழிலும் ஊராதொழியேன் நான்*                              

வாரார் பூம் பெண்ணை மடல்.(40)(2)

 

ஊராதொழியேன் உலகரிய ஒண்ணுதலீர்*

சீரார் முலைத்தடங்கள் சேரளவும்*–பாரெல்லாம்

அன்றோங்கி நின்றளந்தான் நின்ற திருநரையூர்*

மன்றோங்க ஊர்வன் மடல்.