காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து*
ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை* தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை* மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே ! |
2578:##
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்-
பரிதிசூடி,* அஞ்சுடர் மதியம் பூண்டு*
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்*
திகழ்பசுஞ் சோதி மரதகக் குன்றம்*
கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்*
பீதக ஆடை முடிபூண் முதலா*
மேதகு பல்கலன் அணிந்து,* சோதி-
வாயவும் கண்ணவும் சிவப்ப,* மீதிட்டுப்-
பச்சை மேனி மிகப் பகைப்ப*
நச்சுவினைக் கவர்தலை அரவினம் அளியேறி*
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து*
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்*
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த*
தாமரை உந்தித் தனிப் பெருநாயக*
மூவுலகு அளந்த சேவடியோயே! (2)
2579:
உலகு படைத்து உண்ட எந்தை,* அறைகழல்-
சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு,* அவாவு-
ஆருயிர் உருகி உக்க,* நேரிய காதல்-
அன்பிலின் பீன் தேறல்,* அமுத-
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு,* ஒருபொருட்கு-
அசைவோர் அசைக,* திருவொடு மருவிய-
இயற்கை,* மாயாப் பெருவிறல் உலகம்-
மூன்றினொடு நல்வீடு பெறினும்,*
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
2580:
குறிப்பில் கொண்டு நெறிப்பட,* உலகம்-
மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை*
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்-
முதல்வன் ஆகி,* சுடர்விளங்க கலத்து*
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர,*
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர-
வரசு* உடல் தடவரை சுழற்றிய,* தனிமாத்-
தெய்வத்து அடியவர்க்கு இனிநாம் ஆளாகவே-
இசையுங்கொல்,* ஊழிதோறூழி ஓவாதே?
2581:
ஊழிதோறூழி ஓவாது* வாழிய-
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ,*
யாவகை உலகமும் யாவரும் இல்லா,*
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து,* இரும்பொருட்கு-
எல்லாம் அரும்பெறல் தனிவித்து,* ஒருதான்-
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை-
ஈன்று,* முக்கண் ஈசனொடு தேவுபல நுதலி*
மூவுலகம் விளைத்த உந்தி,*
மாயக் கடவுள் மாமுதல் அடியே?
2582:
மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி,*
மண்முழுதும் அகப்படுத்து,* ஒண்சுடர் அடிப்போது-
ஒன்றுவிண் செலீஇ,* நான்முகப் புத்தேள்-
நாடு வியந்து உவப்ப,* வானவர் முறைமுறை-
வழிபட நெறீஇ,* தாமரைக் காடு-
மலர்க் கண்ணோடு கனிவாய் உடையதுமாய்*
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன*
கற்பகக் காவு பற்பல வன்ன*
முடிதோள் ஆயிரம் தழைத்த*
நெடியோய்க் கல்லதும் அடியதோ உலகே?
2583:
ஓஓ! உலகினது இயல்வே* ஈன்றோள் இருக்க-
மணை நீராட்டி,* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்-
தளந்து,* தேர்ந்து உலகளிக்கும் முதற்பெருங்-
கடவுள் நிற்ப* புடைப்பல தானறி-
தெய்வம் பேணுதல்,* தனாது-
புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,*
கொல்வன முதலா அல்லன முயலும்,*
இனைய செய்கை இன்பு துன்பளி*
தொல் மாமாயப் பிறவியுள் நீங்கா*
பல் மாமாயத்து அழுந்து மா நளிர்ந்தே.
2584:##
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்*
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா,*
யாவகை உலகமும் யாவரும் அகப்பட,*
நிலம்நீர் தீகால் சுடரிரு விசும்பும்*
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,*
ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும்-
அகப்ப்படக் கரந்து* ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்-
பெருமா மாயனை அல்லது,*
ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே? (2)