திருவாசிரியம்


திருவாசிரியம் தனியன்
அருளாளப் பெருமான் எம்பெருமானாரருளிச் செய்தது
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து*

ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானை*

தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை*

மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே !

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்
ஆசிரியப்பா

2578:##

 செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்-

 பரிதிசூடி,* அஞ்சுடர் மதியம் பூண்டு*

 பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்*

 திகழ்பசுஞ் சோதி மரதகக் குன்றம்*

 கடலோன் கைமிசைக் கண் வளர்வதுபோல்*

 பீதக ஆடை முடிபூண் முதலா*

 மேதகு பல்கலன் அணிந்து,* சோதி-

 வாயவும் கண்ணவும் சிவப்ப,* மீதிட்டுப்-

 பச்சை மேனி மிகப் பகைப்ப*

 நச்சுவினைக் கவர்தலை அரவினம் அளியேறி*

 எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து*

 சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்*

 தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த*

 தாமரை உந்தித் தனிப் பெருநாயக*

 மூவுலகு அளந்த சேவடியோயே!  (2)

 

2579:

 உலகு படைத்து உண்ட எந்தை,* அறைகழல்-

 சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு,* அவாவு-

 ஆருயிர் உருகி உக்க,* நேரிய காதல்-

 அன்பிலின் பீன் தேறல்,* அமுத-

 வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு,* ஒருபொருட்கு-

 அசைவோர் அசைக,* திருவொடு மருவிய-

 இயற்கை,* மாயாப் பெருவிறல் உலகம்-

 மூன்றினொடு நல்வீடு பெறினும்,*

 கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?

 

2580:

 குறிப்பில் கொண்டு நெறிப்பட,* உலகம்-

 மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை*

 மெய்பெற நடாய தெய்வம் மூவரில்-

 முதல்வன் ஆகி,* சுடர்விளங்க கலத்து*

 வரைபுரை திரைபொர பெருவரை வெருவர,*

 உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர-

 வரசு* உடல் தடவரை சுழற்றிய,* தனிமாத்-

 தெய்வத்து அடியவர்க்கு இனிநாம் ஆளாகவே-

 இசையுங்கொல்,* ஊழிதோறூழி ஓவாதே?

 

2581:

 ஊழிதோறூழி ஓவாது* வாழிய-

 என்று யாம்தொழ இசையுங் கொல்லோ,*

 யாவகை உலகமும் யாவரும் இல்லா,*

 மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து,* இரும்பொருட்கு-

 எல்லாம் அரும்பெறல் தனிவித்து,* ஒருதான்-

 ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை-

 ஈன்று,* முக்கண் ஈசனொடு தேவுபல நுதலி*

 மூவுலகம் விளைத்த உந்தி,*

 மாயக் கடவுள் மாமுதல் அடியே?

 

2582:

 மாமுதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி,*

 மண்முழுதும் அகப்படுத்து,* ஒண்சுடர் அடிப்போது-

 ஒன்றுவிண் செலீஇ,* நான்முகப் புத்தேள்-

 நாடு வியந்து உவப்ப,* வானவர் முறைமுறை-

 வழிபட நெறீஇ,* தாமரைக் காடு-

 மலர்க் கண்ணோடு கனிவாய் உடையதுமாய்*

 இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன*

 கற்பகக் காவு பற்பல வன்ன*

 முடிதோள் ஆயிரம் தழைத்த*

 நெடியோய்க் கல்லதும் அடியதோ உலகே?

 

2583:

 ஓஓ! உலகினது இயல்வே* ஈன்றோள் இருக்க-

 மணை நீராட்டி,* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்-

 தளந்து,* தேர்ந்து உலகளிக்கும் முதற்பெருங்-

 கடவுள் நிற்ப* புடைப்பல தானறி-

 தெய்வம் பேணுதல்,* தனாது-

 புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,*

 கொல்வன முதலா அல்லன முயலும்,*

 இனைய செய்கை இன்பு துன்பளி*

 தொல் மாமாயப் பிறவியுள் நீங்கா*

 பல் மாமாயத்து அழுந்து மா நளிர்ந்தே.

 

2584:##

 நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்*

 தளிரொளி இமையவர் தலைவனும் முதலா,*

 யாவகை உலகமும் யாவரும் அகப்பட,*

 நிலம்நீர் தீகால் சுடரிரு விசும்பும்*

 மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,*

 ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும்-

 அகப்ப்படக் கரந்து* ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்-

 பெருமா மாயனை அல்லது,*

 ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே?  (2)

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்