திருவெழுகூற்றிருக்கை


திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்
எம்பெருமானார் அருளிச்செய்தவை
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*

வாழி குறையலூர் வாழ்வேந்தன*- வாழியரோ-

மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள்* மங்கையர்கோன்-

தூயோன் சுடர்மான வேல்!

.

சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்*

ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக்கீழ்*

ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகுய்யவே*

சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை

2672:

ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,*

ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை-

இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்-

இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை-

ஒன்றிய ஈரெயிற்று அழல்வாய் வாளியின்-

அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,*

முப்புரி நூலொடு மானுரியிலங்கு-

மார்வினின்,* இருபிறப்பு ஒருமாணாகி,*

ஒருமுறை ஈரடி, மூவுலகு அளந்தனை,*

நால்திசை நடுங்க அஞ்சிறைப் பறவை-

ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி-

ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-

இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ-

நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-

அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-

அகத்தினுள் செறுத்து,* நான்குடன் அடக்கி-

முக்குணத்து இரண்டவை அகற்றி,* ஒன்றினில்-

ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்பறுப்போர்-

அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்-

ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்-

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,*

ஏழுலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-

அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-

ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-

நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-

ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-

மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,*

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,*

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*

அறுபதமுரலும் கூந்தல் காரணம்*

ஏழ்விடை அடங்கச் செற்றனை,* அறுவகைச்-

சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-

ஓதியை ஆகத் திருத்தினை,* அறமுதல்-

நான்கு அவையாய் மூர்த்தி மூன்றாய்*

இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து-

நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை-

வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-

மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்-

திகழ்வன முடுத்த,* கற்போர் புரிசைக்-

கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்-

இளம்பிறை துவக்கும்,* ## செல்வம் மல்கு தென்-

திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்-

வணங்க,* ஆடரவமளியில் அறிதுயில்-

அமர்ந்த பரம,* நின் அடியிணை பணிவன்-

வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)

 

இடங்கொண்ட நெஞ்சதிணங்கிக் கிடப்பன்* என்றும் பொன்னித்-

தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண்பூங்குடந்தை*

விடங்கொண்ட வெண்பல் கருந்துத்தி செங்கண் தழலுமிழ்வாய்*

படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப்பாதங்களே.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்