வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழி குறையலூர் வாழ்வேந்தன*- வாழியரோ- மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள்* மங்கையர்கோன்- தூயோன் சுடர்மான வேல்! . |
சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்*
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக்கீழ்* ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகுய்யவே* சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே. |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை
2672:
ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,*
ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை-
இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்-
இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை-
ஒன்றிய ஈரெயிற்று அழல்வாய் வாளியின்-
அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,*
முப்புரி நூலொடு மானுரியிலங்கு-
மார்வினின்,* இருபிறப்பு ஒருமாணாகி,*
ஒருமுறை ஈரடி, மூவுலகு அளந்தனை,*
நால்திசை நடுங்க அஞ்சிறைப் பறவை-
ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி-
ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ-
நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
அகத்தினுள் செறுத்து,* நான்குடன் அடக்கி-
முக்குணத்து இரண்டவை அகற்றி,* ஒன்றினில்-
ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்பறுப்போர்-
அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்-
ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்-
அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,*
ஏழுலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,*
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,*
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*
அறுபதமுரலும் கூந்தல் காரணம்*
ஏழ்விடை அடங்கச் செற்றனை,* அறுவகைச்-
சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
ஓதியை ஆகத் திருத்தினை,* அறமுதல்-
நான்கு அவையாய் மூர்த்தி மூன்றாய்*
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து-
நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை-
வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்-
திகழ்வன முடுத்த,* கற்போர் புரிசைக்-
கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்-
இளம்பிறை துவக்கும்,* ## செல்வம் மல்கு தென்-
திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்-
வணங்க,* ஆடரவமளியில் அறிதுயில்-
அமர்ந்த பரம,* நின் அடியிணை பணிவன்-
வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)
இடங்கொண்ட நெஞ்சதிணங்கிக் கிடப்பன்* என்றும் பொன்னித்-
தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண்பூங்குடந்தை*
விடங்கொண்ட வெண்பல் கருந்துத்தி செங்கண் தழலுமிழ்வாய்*
படங்கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப்பாதங்களே.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்