பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்*
நன்னுதலீர்! நம்பி நறையூரார்,* – மன்னுலகில் என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்,* மன்னு மடலூர்வன் வந்து. மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடல்
பாசுரம் எண் 2713 முதல் 2790 வரை
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,*
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,*
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலைபோல்,*
மின்னும்மணி மகர குண்டலங்கள் வில்வீச,*
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,*
என்னும் விதானத்தின் கீழால்,*(1)## – இருசுடரை-
மின்னும் விளக்காக ஏற்றி,* மறிகடலும்-
பன்னு திரைக்கவரி வீச,*(2) – நிலமங்கை-
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,*
மன்னிய சேவடியை வான்இயங்கு தாரகைமீன்,*
என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த,*(3)-மழைக்கூந்தல்-
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,*
என்னும் இவையே முலையா வடிவமைந்த,*
அன்ன நடைய அணங்கே,*(4)-அடியிணையைத்-
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,*ஓர்-
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட-
பின்னை,* தன் நாபி வலயத்துப் பேரொளிசேர்,*
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து,* அம்மலர்மேல்-
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க,*(5) மற்றவனும்-
முன்னம் படைத்தனன் நான்மறைகள்,*-அம்மறைதான்-
மன்னும் அறம்பொருள் இன்பம் வீடு என்றுலகில்,*
நன்னெறி மேம்பட்டன நான்கன்றே,*(6)-நான்கினிலும்-
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது,*ஓர்-
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,*
என்னும் இவையே நுகர்ந்துஉடலம் தாம்வருந்தி,*
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும்,*(7)-வெஞ்சுடரோன்-
மன்னும் அழல்நுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,*
இன்னதோர் தன்மையராய் ஈங்குஉடலம் விட்டெழுந்து,*
தொன்னெறிக்கண் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,*
இன்னதோர் காலத்து இனையார் இதுபெற்றார்,*
என்னவும் கேட்டறிவதில்லை*(8)-உளதென்னில்-
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,*
அன்னதோர் இல்லியின் ஊடுபோய்,*(9)-வீடென்னும்-
தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,*
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,* ஆங்கு-
அன்னவரைக் கற்பிப்போம் யாமே?,*(10)-அதுநிற்க;-
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,*
அன்னவர்தாம் கண்டீர்க்கள் ஆயிரக்கண் வானவர்கோன்,*
பொன்னகரம் புக்குஅமரர் போற்றிசைப்ப,*(11)-பொங்கொளிசேர்-
கொன்னவிலும் கோளரிமாத் தான்சுமந்த கோலம்சேர்,*
மன்னிய சிங்காசனத்தின்மேல்,*(12)-வாணொடுங்கண்-
கன்னியரால் இட்ட கவரிப் பொதியவிழ்ந்து,* ஆங்கு
இன்னளம் பூந்தென்றல் இயங்க,*(13)-மருங்கிருந்த-
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,*
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,*
அன்னவர்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,*
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,*
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,*
இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,*
மன்னிய மாமயில்போல் கூந்தல்,*(14)-மழைத்தடங்கண்-
மின்னிடையாரோடும் விளையாடி வேண்டிடத்து,*
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,*
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,*
மன்னும் பவளக்கால் செம்பொன்செய் மண்டபத்துள்,*
அன்ன நடைய அரம்பயர்த்தம் கைவளர்த்த*
இன்னிசையாழ் பாடல் கேட்டு இன்புற்று,*(15)-இருவிசும்பில்-
மன்னும் மழைதவழும் வாணிலா நீண்மதிதோய்,*
மின்னின் ஒளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,*
மன்னும் மணிவிளக்கை மாட்டி,*(16)-மழைக்கண்ணார்-
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,*
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,*
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,*
சின்ன நறுந்தாது சூடி,*(17)-ஓர் மந்தாரம்-
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி,* கற்பகத்தின்-
மன்னு மலர்வாய் மணிவண்டு பின்தொடர*
இன்னிளம் பூந்தென்றல் புகுந்து, ஈங்கிளமுலைமேல்*
நன்னறுஞ் சந்தனச் சேறு அலர்த்த,*(18)-தாங்கருஞ்சீர்-
மின்னிடைமேல் கைவைத்து இருந்து ஏந்திளமுலைமேல்,*
பொன்னரும் பாரம் புலம்ப,*(19)-அகங்குழைந்தாங்கு-
இன்ன உருவின் இமையாத் தடங்கண்ணார்,*
அன்னவர்தம் மானோக்கம் உண்டு ஆங்கு அணிமுறுவல்,*
இன்னமுதம் மாந்தி இருப்பர்,*(20)-இதுவன்றே-
அன்ன அறத்தின் பயனாவது?,* ஒண்பொருளும்-
அன்ன திறத்ததே ஆதலால்,*(21)-காமத்தின்-
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் ‘மானோக்கின்*
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,*
மன்னும் மடலூரார்‘ என்பதோர் வாசகமும்,*
தென்னுறையில் கேட்டறிவதுண்டு,*(22)-அதனையாம்தெளியோம்;-
மன்னும் வடநெறியே வேண்டினோம்*-வேண்டாதார்-
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின்,*
அன்னதோர் தன்மை அறியாதார்,*(23)-ஆயன்வேய்-
இன்னிசை ஓசைக்கு இரங்காதார்,* மால்விடையின்-
மன்னும் மணிபுலம்ப வாடாதார்,*(24)-பெண்ணைமேல்-
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,*
உன்னி உடலுருகி நையாதார்,*(25)-உம்பர்வாய்த்-
துன்னு மதியுகுத்த தூநிலா நீள்நெருப்பில்,*
தம்முடலம் வேவத் தளராதார்,*(26)-காமவேள்-
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,*
பொன்னொடு வீதி புகாதார்,*(27)-தம் பூவணைமேல்-
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,*
இன்னிள வாடை தடவத்தாம் கண்துயிலும்,*
பொன்னனையார் பின்னும் திருவுறுக*(28)-போர்வேந்தன்-
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,*
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,*
மன்னும் வளநாடு கைவிட்டு,*(29)-மாதிரங்கள்-
மின்னுருவில் விண்தேர் திரிந்து வெளிப்பட்டு*
கன்நிறைந்து தீய்ந்து கழையுடைந்து கால்சுழன்று,*
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,*
கொன்னவிலும் வெங்கானத்தூடு,*(30)-கொடுங்கதிரோன்-
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,*
மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,*
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,*(31)
பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,*
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்-
கன்னி,*தன் இன்னுயிராம் காதலனைக் காணாது,*
தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத்தாஞ்சென்று,*அங்கு-
அன்னவனை நோக்காது அழித்துரப்பி,*(32)-வாளமருள்-
கல்நவில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,*
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?,*(33) பூங்கங்கை-
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன், மின்னாடும்*
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,*
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனை,*
பன்னாகராயன் மடப்பாவை,*(34)-பாவைதன்-
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகல,*
தன்னுடைய கொங்கை முகம் நெரிய,*(35)-தான் அவன்தன்-
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,* தனது-
நல்நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்,*
முன்னுரையில் கேட்டறிவது இல்லையே?,*(36)-சூழ்கடலுள்,-
பொன்னகரம் செற்ற புரந்தரேனாடு ஏரொக்கும்,*
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,*
தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,*
கன்னியரை இல்லாத காட்சியாள்,*(37)-தன்னுடைய-
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,*
மன்னும் மணிவரைத்தோள் மாயவன்,*(38)-பாவியேன்-
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,*
மன்னவன்தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,*
கன்னிதன்பால் வைக்க மற்றவேனாடு எத்தனையோ,*
மன்னிய பேரின்பம் எய்தினாள்,*(39)-மற்றிவைதான்-
என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,*
மன்னும் மலையரயன் பொற்பாவை,*(40)-வாணிலா-
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,*
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,*
பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,*
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான்தரித்து,* ஆங்கு-
அன்ன அருந்தவத்தின் ஊடுபோய்,*(41)-ஆயிரந்தோள்-
மன்னு கரதலங்கள் மட்டித்து,* மாதிரங்கள்-
மின்னி எரி வீச மேலெடுத்த சூழ்கழற்கால்*
பொன்னுலகம் ஏழும் கடந்து உம்பர்மேல் சிலும்ப*
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,*
தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்,*
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,*
அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கு அணைந்திலளே?,*
பன்னி உரைக்குங்கால் பாரதமாம்*(42)-பாவியேற்கு-
என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின்,* இரும்பொழில்சூழ்-
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,*
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,*
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,*(43)-நோக்குதலும்-
மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும்,*
பன்னு கரதலமும் கண்களும்,*(44)-பங்கயத்தின்-
பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்,*
மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,*
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,*
துன்னு வெயில்விரித்த சூளா மணி இமைப்ப,*
மன்னும் மரகதக் குன்றின் மருங்கே,*(45)-ஓர்-
இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,*
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,*
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,*
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலமிரண்டாய்,*
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே,*
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,*
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு*
மன்னும் மறிகடலும் ஆர்க்கும்,*(46)-மதியுகுத்த-
இன்னிலாவின் கதிரும் என்தனக்கே எய்தாகும்.*
தன்னுடைய தன்மை தவிரத்தான் என்கொலோ,?*
தென்னன் பொதியில் செழுஞ்சாந்தின் தாதளைந்து,*
மன்னி இவ்வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,*
இன்னிளம் பூந்தென்றலும் வீசும் எரியெனக்கே,*
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,*
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,*
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர்வாளாம் என்செய்கேன்*
கல்நவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,*
கொல்நவிலும் பூங்கணைகள் கோத்துப் பொதவணைந்து,*
தன்னுடைய தோள்கழிய வாங்கி,*(47)-தமியேன்மேல்-
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்,*
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,*(48)-பேதையேன்-
கல்நவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,*
நல்நறு வாசம் மற்றாரானும் எய்தாமே,*
மன்னும் வறுநிலத்து வாளாங்கு குத்ததுபோல்,*
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,*
மன்னு மலர்மங்கை மைந்தன்,*(49) கணபுரத்துப்-
பொன்மலைபோல் நின்றவன்தன் பொன்னகலம் தோயாவேல்*
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி,*
முன்னிருந்து மூக்கின்று, மூவாமைக் காப்பதோர்*
மன்னும் மருந்தறிவீர் இல்லையே?*(50)-மால்விடையின்-
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்*
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு,*(51) மாலைவாய்-
தன்னுடைய நாவொழியாது ஆடும் தனிமணியின்,*
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,*
கொல்நவிலும் எஃகில் கொடிதாய் நொடிதாகும்,*
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?,*(52) இதுவிளைத்த-
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்பன்*-மாமதிகோள்-
முன்னம் விடுத்த முகில்வண்ணன்*(53)-காயாவின்-
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன்*-வண்ணம்போல்-
அன்ன கடலை மலையிட்டு அணைகட்டி,*
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,*
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து*
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை,*(54)-ஆயிரங்கண்-
மன்னவன் வானமும் வானவர்தம் பொன்னுலகும்,*
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை*
பின்னோர் அரியுருவமாகி எரிவிழித்து,*
கொல்நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே,*(55)-வல்லாளன்-
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,*
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி,*(56)-அவனுடைய-
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த*
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,*
மன்னிவ்வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,*
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,*
கொல்நவிலும் கூர்நுதிமேல் வைத்தெடுத்த கூத்தனை,*
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்*
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்*
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,* ஆங்கு-
இன்னமுதம் வானவரை ஊட்டி,* அவருடைய-
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை,*(57)மற்றன்றியும்,-
தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கோர்,*
மன்னும் குறளுருவின் மாணியாய்,*(58)-மாவலிதன்-
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து,* போர்வேந்தர்-
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,*
‘என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,*
மன்னா! தரு‘கென்று வாய்திறப்ப,*(59)-மற்றவனும்-
‘என்னால் தரப்பட்டது‘ என்றலுமே,* அத்துணைக்கண்-
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ,(60) மேலெடுத்த-
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,* அங்கு-
ஒன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,*
மன்னி இவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,*
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை,*(61)-தாமரைமேல்-
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,*
பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,*
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,*
மன்னிய தண்சேறை வள்ளலை,(62)-மாமலர்மேல்-
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,*
என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெருமலையை,*(2)
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
பொன்னை,* மரதகத்தைப் புட்குழி எம் போரேற்றை,*
மன்னும் அரங்கத்து எம் மாமணியை,*(63)(2)-வல்லவாழ்-
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,*
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,*
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,*
மன்னும் கடன்மல்லை மாயவனை,*(64)-வானவர்தம்-
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,*
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,*
அன்னத்தை மீனை அரியை அருமறையை,*
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை,*(65)-கோவலூர்-
மன்னும் இடைகழி எம் மாயவனை,* பேயலறப்,-
பின்னும் முலையுண்ட பிள்ளையை,*(66)-அள்ளல்வாய்-
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,*
தென்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை,*(67)
மின்னி மழைதவழும் வேங்கடத்து எம் வித்தகனை,*
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,*
கொல்நவிலும் ஆழிப் படையானை,*(68)-கோட்டியூர்-
அன்ன வுருவின் அரியை,* திருமெய்யத்து-
இன்னமுத வெள்ளத்தை இந்தðர் அந்தணனை,*
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை ஆளரியை,*
மன்னிய பாடகத்து எம் மைந்தனை,*(69)-வெஃகாவில்,-
உன்னிய யோகத்து உறக்கத்தை,* ஊரகத்துள்-
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*
என்னை மனங்கவர்ந்த ஈசனை,*(70)-வானவர்தம்-
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை,*
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை,*
நென்னலை இன்றினை நாளையை,*(71)-நீர்மலைமேல்-
மன்னும் மறைநான்கும் ஆனானை,* புல்லாணித்-
தென்னன் தமிழை வடமொழியை,* நாங்கூரில்-
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை,*(72)-நான்வணங்கும்-
கண்ணனைக் கண்ண புரத்தானை,* தென்னறையூர்-
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,*
கல்நவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது*
என்நிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,*
தன்னருளும் ஆகமும் தாரானேல்,*(73) – தன்னைநான்-
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்,*
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,*
கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்*
தன்னிலைமை எல்லாம் அறிவிப்பன்,*(74)-தான்முனநாள்-
மின்னிடை ஆய்ச்சியர்தம் சேரிக் களவின்கண்,*
துன்னு படல்திறந்து புக்கு,*(75)-தயிர்வெண்ணெய்-
தன்வயிறார விழுங்க,* கொழுங்கயல்கண்-
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்*
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,*
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்*
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,*
முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்*
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,*
தன்னை இகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,*
மன்னு பறைகறங்க மங்கையர்தம் கண்களிப்ப,*
கொல்நவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,*
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்,*
தென்னிலங்கை ஆட்டி அரக்கர் குலப்பாவை,*
மன்னன் இராவணன்தன் நல்தங்கை,*(76)-வாளெயிற்றுத்-
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,*
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,*
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,*
மன்னிய திண்ணெனவும் வாய்த்த மலைபோலும்,*
தன்னிகர் ஒன்றில்லாத தாடகையை,*(77)##மாமுனிக்காகத்-
தென்னுலகம் ஏற்றுவித்த திண்திறலும்* -மற்றிவைதான்-
உன்னி உலவா உலகறிய ஊர்வன்நான்,*
முன்னி முளைத்தெழுந்து ஓங்கி ஒளிபரந்த,*
மன்னியம்பூம் பெண்ணை மடல்.(78) (2)
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்*
தன்னருளும் ஆகமும் தாரானேல்* பின்னைப்போய்-
ஒண்துறை நீர்வேலை உலகறிய ஊர்வன் நான்*
வண்டறை பூம்பெண்ணை மடல்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்