கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த*
பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு* – வையத்து- அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி* படிவிளங்கச் செய்தான் பரிந்து. |
2082:##
வையம் தகளியா* வார்கடலே நெய்யாக,*
வெய்ய கதிரோன் விளக்காக,* – செய்ய-
சுடராழி யானடிக்கே* சூட்டினேன்சொல் மாலை,*
இடராழி நீங்குகவே என்று. (2) 1
2083:
என்று கடல்கடைந்தது* எவ்வுலகம் நீரேற்றது,*
ஒன்றும் அதனை உணரேன் நான்,* – அன்றுஅது-
அடைத்துடைத்துக்* கண்படுத்த ஆழி,* இதுநீ-
படைத்திடந்து உண்டுமிழ்ந்த பார். 2
2084:
பாரளவும் ஓரடிவைத்து* ஓரடியும் பாருடுத்த,*
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே* – சூருருவில்-
பேயளவு கண்ட* பெருமான்! அறிகிலேன்,*
நீயளவு கண்ட நெறி. 3
2085:
நெறிவாசல் தானேயாய்* நின்றானை,* ஐந்து-
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி,* – அறிவானாம்
ஆலமர நீழல்* அறம் நால்வர்க்கு அன்றுரைத்த,*
ஆலமமர் கண்டத்து அரன். 4
2086:
அரன் நாரணன் நாமம்* ஆன்விடை புள்ðர்த்தி,*
உரைநூல் மறையுறையும் கோயில்,* – வரைநீர்-
கருமம் அழிப்பளிப்புக்* கையதுவேல் நேமி,*
உருவமெரி கார்மேனி ஒன்று. 5
2087:
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர் வண்ணனைநான்,*
இன்று மறப்பேனா ஏழைகாள்* – அன்று-
கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்க மேயான் திசை. 6
2088:
திசையும் திசையுறு தெய்வமும்,* தெய்வத்-
திசையும்* கருமங்கள் எல்லாம்* – அசைவில்சீர்க்-
கண்ணன் நெடுமால்* கடல்கடைந்த,* காரோத-
வண்ணன் படைத்த மயக்கு. 7
2089:
மயங்க வலம்புரி வாய்வைத்து,* வானத்து-
இயங்கும்* எறிகதிரோன் தன்னை,*-முயங்குஅமருள்-
தோராழியால் மறைத்த* என்நீ திருமாலே,*
போராழிக் கையால் பொருது? 8
2090:
பொருகோட்டோர் ஏனமாய்ப்* புக்கிடந்தாய்க்கு,* அன்றுஉன்-
ஒருகோட்டின் மேல் கிடந்ததன்றே,* – விரிதோட்ட-
சேவடியை நீட்டித்* திசைநடுங்க விண்துளங்க,*
மாவடிவின் நீயளந்த மண்? 9
2091:
மண்ணும் மலையும்* மறிகடலும் மாருதமும்,*
விண்ணும் விழுங்கிய அது மெய்யென்பர்,* – எண்ணில்-
அலகளவு கண்ட* சீராழியாய்க்கு,* அன்றுஇவ்-
உலகளவும் உண்டோ உன் வாய்? 10
2092:
வாய்அவனை அல்லது வாழ்த்தாது,* கையுலகம்-
தாயவனை அல்லது தாம்தொழா,* – பேய்முலைநஞ்சு-
ஊணாக உண்டான்* உருவொடு பேரல்லால்,*
காணாகண் கேளா செவி. 11
2093:
செவிவாய்கண் மூக்கு* உடல் என்று ஐம்புலனும்,* செந்தீ-
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும்,* – அவியாத-
ஞானமும் வேள்வியும்* நல்லறமும் என்பரே,*
ஏனமாய் நின்றாற்கு இயல்வு. 12
2094:
இயல்வாக ஈன்துழாயான் அடிக்கே செல்ல,*
முயல்வார் இயலமரர் முன்னம்,* – இயல்வாக-
நீதியால் ஓதி* நியமங்களால் பரவ,*
ஆதியாய் நின்றார் அவர். 13
2095:
அவரவர் தாம்தாம்* அறிந்தவாறு ஏத்தி,*
இவரிவர் எம்பெருமான் என்று,* – சுவர்மிசைச்-
சார்த்தியும்* வைத்தும் தொழுவர்,* உலகளந்த-
மூர்த்தி உருவே முதல். 14
2096:
முதலாவார் மூவரே* அம் மூவருள்ளும்*
முதலாவான்* மூரிநீர் வண்ணன்,* – முதலாய-
நல்லான் அருளல்லால்* நாமநீர் வையகத்து,*
பல்லார் அருளும் பழுது 15
2097:
பழுதே பலபகலும்* போயினவென்று,* அஞ்சி-
அழுதேன்* அரவணைமேல் கண்டு தொழுதேன்*
கடலோதம் காலலைப்பக்* கண்வளரும்,* செங்கண்
அடலோத வண்ணர் அடி. 16
2098:
அடியும் படிகடப்பத்* தோள்திசைமேல் செல்ல,*
முடியும் விசும்பளந்தது என்பர்,* – வடியுகிரால்-
ஈர்ந்தான்* இரணியனதாகம்,* இருஞ்சிறைப்புள்-
ஊர்ந்தான்* உலகளந்த நான்று 17
2099:
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு,* உறிவெண்ணெய்-
தோன்ற உண்டான்* வென்றி சூழ்களிற்றை ஊன்றி,*
பொருதுடைவு கண்டானும்* புள்ளின்வாய் கீண்டானும்,*
மருதிடைபோய் மண்ணளந்த மால். 18
2100:
மாலும் கருங்கடலே!* என்நோற்றாய்,* வையகமுண்டு-
ஆலின் இலைத்துயின்ற ஆழியான்,* – கோலக்-
கருமேனிச்* செங்கண்மால் கண்படையுள்,* என்றும்-
திருமேனி நீதீண்டப் பெற்று! 19
2101:
பெற்றார் தளைகழலப்* போர்ந்தோர் குறளுருவாய்,*
செற்றார் படிகடந்த செங்கண்மால்,* – நல்தாமரை-
மலர்ச் சேவடியை* வானவர்கை கூப்பி,*
நிரைமலர்கொண்டு* ஏத்துவரால் நின்று. 20
2102:
நின்று நிலமங்கை* நீரேற்று மூவடியால்,*
சென்று திசையளந்த செங்கண்மாற்கு,* – என்றும்-
படையாழி புள்ðர்த்தி* பாம்பணையான் பாதம்,*
அடையாழி நெஞ்சே! அறி. 21
2103:
அறியும் உலகெல்லாம்* யானேயும் அல்லேன்,*
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய்,* – வெறிகமழும்-
காம்பேய் மென்தோளி* கடைவெண்ணெய் உண்டாயை,*
தாம்பே கொண்டார்த்த தழும்பு. 22
2104:
தழும்பிருந்த சார்ங்கநாண்* தோய்ந்த மாமங்கை,*
தழும்பிருந்த தாள்சகடம் சாடி,* – தழும்பிருந்த-
பூங்கோதையாள் வெருவப்* பொன்பெயரோன் மார்பிடந்த,*
வீங்கோத வண்ணர் விரல். 23
2105:
விரலோடுவாய் தோய்ந்த வெண்ணெய்கண்டு,* ஆய்ச்சி-
உரலோடு* உறப்பிணித்த ஞான்று* – குரலோவாது-
ஏங்கி நினைந்து* அயலார் காண இருந்திலையே?,*
ஓங்கோத வண்ணா! உரை. 24
2106:
உரைமேல் கொண்டு* என்னுள்ளம் ஓவாது* எப்போதும்-
வரைமேல்* மரகதமே போல,* – திரைமேல்-
கிடந்தானைக்* கீண்டானை,* கேழலாய்ப் பூமி-
இடந்தானை* ஏத்தி எழும். 25
2107:
எழுவார் விடைகொள்வார்* ஈன்துழாயானை,*
வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,*
வினைச்சுடரை நந்துவிக்கும்* வேங்கடமே,* வானோர்-
மனச்சுடரைத் தூண்டும் மலை. 26
2108:
மலையால் குடைகவித்து* மாவாய் பிளந்து,*
சிலையால் மராமரமேழ் செற்று,* – கொலையானைப்-
போர்க்கோடு ஒசித்தனவும்* பூங்குருந்தம் சாய்த்தனவும்*
காக்கோடு பற்றியான் கை. 27
2109:
கைய வலம்புரியும் நேமியும்,* கார்வண்ணத்-
தைய! மலர்மகள்* நின்னாகத்தாள்,* – செய்ய-
மறையான் நின் உந்தியான்* மாமதிள் மூன்றெய்த*
இறையான் நின் ஆகத்து இறை. 28
2110:
இறையும் நிலனும்* இருவிசும்பும் காற்றும்,*
அறைபுனலும் செந்தீயும் ஆவான்,* – பிறைமருப்பின்-
பைங்கண்மால் யானை* படுதுயரம் காத்தளித்த,*
செங்கண்மால் கண்டாய் தெளி. 29
2111:
தெளிதாக* உள்ளத்தைச் செந்நிறீஇ,* ஞானத்-
தெளிதாக* நன்குணர்வார் சிந்தை,* – எளிதாகத்-
தாய்நாடு கன்றேபோல்* தண்துழாயான் அடிக்கே,*
போய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30
2112:
புரியொருகை பற்றி* ஓர் பொன்னாழி ஏந்தி,*
அரியுருவும் ஆளுருவுமாகி,* – எரியுருவ-
வண்ணத்தான் மார்ப்பிடந்த* மாலடியை அல்லால்,* மற்று-
எண்ணத்தான் ஆமோ இமை? 31
2113:
இமையாத கண்ணால்* இருளகல நோக்கி,*
அமையாப் பொறிபுலன்கள்* ஐந்தும் நமையாமல்,*
ஆகத் தணைப்பார்* அணைவரே,* ஆயிரவாய்-
நாகத் தணையான் நகர். 32
2114:
நகர மருள்புரிந்து* நான்முகற்கு, பூமேல்*
பகர மறைபயந்த பண்பன், – பெயரினையே*
புந்தியால் சிந்தியாது* ஓதி உருவெண்ணும்,*
அந்தியாலாம் பயனங்கென்? 33
2115:
என்னொருவர் மெய்யென்பர்* ஏழுலகுண்டு* ஆலிலையில்-
முன்னொருவன் ஆய முகில்வண்ணா,* – நின்னுருகிப்-
பேய்த்தாய் முலைதந்தாள்* பேர்ந்திலளால்,* பேரமர்க்கண்-
ஆய்த்தாய்* முலைதந்த ஆறு? 34
2116:
ஆறிய அன்பில்* அடியார்தம் ஆர்வத்தால்,*
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,*
நெடியோய்! அடி* அடைதற்கன்றே,* ஈரைந்து-
முடியான் படைத்த முரண்? 35
2117:
முரணை வலிதொலைதற்கு ஆமன்றே,* முன்னம்-
தரணி* தனதாகத் தானே* – இரணியனைப்-
புண்நிரந்த வள்ளுகிரால்* பொன்னாழிக் கையால்* நீ-
மண்ணிரந்து கொண்ட வகை? 36
2118:
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்,* நாளும்-
புகைவிளக்கும்* பூம்புனலும் ஏந்தி,* – திசைதிசையின்-
வேதியர்கள்* சென்றிறைஞ்சும் வேங்கடமே,* வெண்சங்கம்-
ஊதியவாய்* மால்உகந்த ஊர். 37
2119:
ஊரும் வரியரவம்* ஒண்குறவர் மால்யானை,*
பேர எறிந்த பெருமணியை,* – காருடைய-
மின்னென்று* புற்றடையும் வேங்கடமே,* மேலசுரர்-
என்னென்ற மால திடம். 38
2120:
இடந்தது பூமி* எடுத்தது குன்றம்,*
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச,* – கிடந்ததும்-
நீரோத மாகடலே* நின்றதுவும் வேங்கடமே,*
பேரோத வண்ணர் பெரிது. 39
2121:
பெருவில் பகழிக்* குறவர்கைச் செந்தீ*
வெருவிப் புனம்துறந்த வேழம்,* – இருவிசும்பில்-
மீன்வீழக்* கண்டஞ்சும் வேங்கடமே,* மேலசுரர்-
கோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40
2122:
குன்றனைய குற்றஞ் செயினும்* குணங்கொள்ளும்*
இன்று முதலாக என்னெஞ்சே,* – என்றும்-
புறனுரையே ஆயினும்* பொன்னாழிக் கையான்*
திறனுரையே சிந்தித் திரு 41
2123:
திருமகளும் மண்மகளும்* ஆய்மகளும் சேர்ந்தால்*
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்,* – திருமகள்மேல்-
பாலோதம் சிந்தப்* பட நாகணைக் கிடந்த,*
மாலோத வண்ணர் மனம்? 42
2124:
மனமாசு தீரும்* அறுவினையும் சாரா,*
தனமாய தானேகை கூடும்,* – புனமேய-
பூந்துழாயான் அடிக்கே* போதொடு நீரேந்தி,*
தாம்தொழா நிற்பார் தமர். 43
2125:
தமர்உகந்தது எவ்வுருவம்* அவ்வுருவம் தானே,*
தமர்உகந்தது எப்பேர் மற்றப்பேர்,* – தமர்உகந்து-
எவ்வண்ணம் சிந்தித்து* இமையாது இருப்பரே,*
அவ்வண்ணம் ஆழியானாம். 44
2126:
ஆமே யமரர்க்கு* அறிய? அதுநிற்க,*
நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே,* – பூமேய-
மாதவத்தோன் தாள்பணிந்த* வாளரக்கன் நீள்முடியை,*
பாதமத்தால் எண்ணினான் பண்பு. 45
2127:
பண்புரிந்த நான்மறையோன்* சென்னிப் பலியேற்ற,*
வெண்புரிநூல் மார்பன் வினைதீர,* – புண்புரிந்த-
ஆகத்தான்* தாள்பணிவார் கண்டீர்,* அமரர்தம்-
போகத்தால் பூமி ஆள்வார். 46
2128:
வாரி சுருக்கி* மதக்களிறு ஐந்தினையும்,*
சேரி திரியாமல் செந்நிறீஇ,* – கூரிய-
மெய்ஞ்ஞானத்தால்* உணர்வார் காண்பரே,* மேலொருநாள்-
கைந்நாகம் காத்தான் கழல். 47
2129:
கழலொன்று எடுத்து* ஒருகை சுற்றியோர் கைமேல்,*
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச,* – அழலும்-
செருவாழி ஏந்தினான்* சேவடிக்கே செல்ல,*
மருவாழி நெஞ்சே! மகிழ். 48
2130:
மகிழல கொன்றேபோல்* மாறும் பல்யாக்கை,*
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால்,* – முகில்விரிந்த-
சோதிபோல் தோன்றும்* சுடர்ப்பொன் நெடுமுடி,* எம்-
ஆதி காண்பார்க்கும் அரிது. 49
2131:
அரிய புலனைந்து அடக்கி* ஆய்மலர்கொண்டு,* ஆர்வம்-
புரியப் பரிசினால் புல்கில்,* – பெரியனாய்-
மாற்றாது* வீற்றிருந்த மாவலிபால்,* வண்கைநீர்-
ஏற்றானைக் காண்பது எளிது. 50
2132:
எளிதில் இரண்டடியும்* காண்பதற்கு,* என்னுள்ளம்-
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே,* – களியில்-
பொருந்தாதவனைப்* பொரலுற்று,* அரியாய்-
இருந்தான் திருநாமம் எண். 51
2133:
எண்மர் பதினொருவர்* ஈரறுவர் ஓரிருவர்,*
வண்ண மலரேந்தி வைகலும்,* – நண்ணி-
ஒரு மாலையால் பரவி* ஓவாது,* எப்போதும்-
திருமாலைக் கைதொழுவர் சென்று. 52
2134:##
சென்றால் குடையாம்* இருந்தால் சிங்காசனமாம்,*
நின்றால் மரவடியாம் நீள்கடலுள்,* – என்றும்-
புணையாம் மணிவிளக்காம்* பூம்பட்டாம் புல்கும்-
அணையாம்,* திருமாற்கு அரவு. (2) 53
2135:
அரவம் அடல்வேழம்* ஆன்குருந்தம் புள்வாய்*
குரவை குடம்முலை மல்குன்றம்,* – கரவின்றி-
விட்டிறுத்து மேய்த்தொசித்துக்* கீண்டு கோத்தாடி,* உண்-
டட்டெடுத்த செங்கண் அவன். 54
2136:
அவன் தமர்* எவ்வினையர் ஆகிலும்,* எங்கோன்-
அவன்தமரே* என்று ஒழிவது அல்லால்,* – நமன்தமரால்-
ஆராயப் பட்டு* அறியார் கண்டீர்,* அரவணைமேல்-
பேராயற்கு ஆட்பட்டார் பேர். 55
2137:
பேரே வரப்பிதற்றல்* அல்லால் எம் பெம்மானை,*
ஆரே அறிவார்? அதுநிற்க,* – நேரே-
கடிக்கமலத்து உள்ளிருந்தும்* காண்கிலான்,* கண்ணன்-
அடிக்கமலம் தன்னை அயன். 56
2138:
அயல்நின்ற வல்வினையை* அஞ்சினேன் அஞ்சி,*
உயநின் திருவடியே சேர்வான்,* – நயநின்ற-
நன்மாலை கொண்டு* ‘நமோநாரணா‘ என்னும்,*
சொன்மாலை கற்றேன் தொழுது. 57
2139:
தொழுது மலர்க்கொண்டு* தூபம்கை ஏந்தி,*
எழுதும் எழுவாழி நெஞ்சே,* – பழுதின்றி-
மந்திரங்கள் கற்பனவும்* மாலடியே கைதொழுவான்,*
அந்தரம் ஒன்றில்லை அடை. 58
2140:
அடைந்த அருவினையோடு* அல்லல்நோய் பாவம்,*
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில்,* – நுடங்கிடையை-
முன்னிலங்கை வைத்தான்* முரணழிய,* முன்னொருநாள்-
தன்வில் அங்கை வைத்தான் சரண். 59
2141:
சரணா மறைபயந்த* தாமரையானோடு,*
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம்,* – அரணாய-
பேராழி கொண்ட* பிரானன்றி மற்றறியாது,*
ஓராழி சூழ்ந்த உலகு. 60
2142:
உலகும்* உலகிறந்த ஊழியும்,* ஒண்கேழ்-
விலகு கருங்கடலும் வெற்பும்,* – உலகினில்-
செந்தீயும்* மாருதமும் வானும்,* திருமால்தன்-
புந்தியிலாய புணர்ப்பு. 61
2143:
புணர்மருதின் ஊடுபோய்ப்* பூங்குருந்தம் சாய்த்து,*
மணமருவ மால் விடையேழ் செற்று,* – கணம்வெருவ-
ஏழுலகும் தாயினவும்* எண்திசையும் போயினவும்,*
சூழரவப் பொங்கணையான் தோள். 62
2144:
தோளவனை அல்லால் தொழா,* என் செவியிரண்டும்,*
கேளவனது இன்மொழியே கேட்டிருக்கும்,* – நாநாளும்-
கோணா கணையான்* கூரைகழலே கூறுவதே,*
நாணாமை நள்ளேன் நயம். 63
2145:
நயவேன் பிறர்பொருளை* நள்ளேன் கீழாரோடு,*
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்,* – வியவேன்-
திருமாலை அல்லது* தெய்வம் என்றேத்தேன்,*
வருமாறு என் நம்மேல் வினை? 64
2146:
வினையால் அடர்ப்படார்* வெந்நரகில் சேரார்,*
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* – நினைதற்-
கரியானைச்* சேயானை,* ஆயிரம்பேர்ச் செங்கண்-
கரியானைக்* கைதொழுதக் கால். 65
2147:
காலை எழுந்து* உலகம் கற்பனவும்,* கற்றுணர்ந்த-
மேலைத் தலைமறையோர்* வேட்பனவும்,* – வேலைக்கண்-
ஓராழியான் அடியே* ஓதுவதும் ஓர்ப்பனவும்,*
பேராழி கொண்டான் பெயர். 66
2148:
பெயரும் கருங்கடலே நோக்கும்ஆறு,* ஒண்பூ-
உயரும்* கதிரவனே நோக்கும்,* –உயிரும்-
தருமனையே நோக்கும்* ஒண்தாமரையாள் கேள்வன்,*
ஒருவனையே நோக்கும் உணர்வு. 67
2149:
உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறூழி,*
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை?,* உணர்வாரார்-
விண்ணகத்தாய்!* மண்ணகத்தாய்!* வேங்கடத்தாய்!* நால்வேதப்-
பண்ணகத்தாய்!* நீகிடந்த பால்? 68
2150:
பாலன் தனதுருவாய்* ஏழுலகுண்டு,* ஆலிலையின்-
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர்,* – ஆலன்று-
வேலை நீருள்ளதோ* விண்ணதோ மண்ணதோ?*
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69
2151:
சொல்லுந் தனையும்* தொழுமின் விழுமுடம்பு,*
செல்லுந் தனையும் திருமாலை,* – நல்லிதழ்த்-
தாமத்தால் வேள்வியால்* தந்திரத்தால் மந்திரத்தால்,*
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70
2152:
நன்று பிணிமூப்புக்* கையகற்றி நான்கூழி,*
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,* என்றும்-
விடலாழி நெஞ்சமே!* வேண்டினேன் கண்டாய்,*
அடலாழி கொண்டான் மாட்டுஅன்பு. 71
2153:
அன்புஆழியானை* அணுகென்னும், நா அவன்தன்*
பண்பாழித் தோள்பரவி ஏத்தென்னும்,* முன்பூழி-
காணானைக்* காணென்னும் கண்செவி கேளென்னும்*
பூணாரம் பூண்டான் புகழ். 72
2154:
புகழ்வாய் பழிப்பாய்* நீ பூந்துழாயானை,*
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* – திகழ்நீர்க்-
கடலும் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*
உடலும் உயிரும் ஏற்றான். 73
2155:
ஏற்றான் புள்ðர்த்தான்* எயிலெரித்தான் மார்விடந்தான்*
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* – கூற்றொருபால்-
மங்கையான்* பூமகளான் வார்சடையான்,* நீண்முடியான்-
கங்கையான்* நீள்கழலான் காப்பு. 74
2156:
காப்பு உன்னையுன்னக்* கழியும் அருவினைகள்,*
ஆப்பு உன்னையுன்ன அவிழ்ந்தொழியும்* – மூப்புன்னைச்-
சிந்திப்பார்க்கு* இல்லை திருமாலே,* நின்னடியை-
வந்திப்பார்* காண்பர் வழி. 75
2157:
வழிநின்று* நின்னைத் தொழுவார்,* வழுவா-
மொழிநின்ற மூர்த்தியரே யாவர்,* – பழுதொன்றும்-
வாராத வண்ணமே* விண்கொடுக்கும்,* மண்ணளந்த-
சீரான் திருவேங்கடம். 76
2158:
வேங்கடமும்* விண்ணகரும் வெஃகாவும்,* அஃகாத-
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்,* – நான்கிடத்தும்-
நின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*
என்றால் கெடுமாம் இடர். 77
2159:
இடர் ஆர் படுவார்?* எழுநெஞ்சே,* வேழம்-
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* – படமுடை-
பைந்நாகப் பள்ளியான்* பாதமே கைதொழுதும்,*
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78
2160:
கொண்டானை அல்லால்* கொடுத்தாரை யார்பழிப்பார்,*
‘மண்தா‘ எனவிரந்து மாவலியை,* ஒண்தாரை-
நீரங்கை தோய* நிமிர்ந்திலையே,* நீள்விசும்பில்-
ஆரங்கை தோய அடுத்து? 79
2161:
அடுத்த கடும்பகைஞர்க்கு* ஆற்றேன் என்றோடி,*
படுத்த பெரும்பாழி சூழ்ந்த* – விடத்தரவை,*
வல்லாளன் கைக்கொடுத்த* மாமேனி மாயவனுக்கு,*
அல்லாதும் ஆவரோ ஆள்? 80
2162:
ஆளமர் வென்றி* அடுகளத்துள் அஞ்ஞான்று,*
வாளமர் வேண்டி வரைநட்டு,* – நீளரவைச்-
சுற்றிக் கடைந்தான்* பெயரன்றே,* தொன்னரகைப்-
பற்றிக் கடத்தும் படை? 81
2163:
படையாரும் வாள்கண்ணார்* பாரசிநாள்,* பைம்பூந்-
தொடையலோடு ஏந்திய தூபம்,* – இடையிடையின்-
மீன்மாய* மாசூணும் வேங்கடமே,* மேலொருநாள்-
மான்மாய* எய்தான் வரை. 82
2164:
வரைகுடைதோள் காம்பாக* ஆநிரைகாத்து,* ஆயர்-
நிரைவிடையேழ்* செற்றவாறு என்னே,* – உரவுடைய-
நீராழி உள்கிடந்து* நேரா நிசாசரர்மேல்,*
பேராழி கொண்ட பிரான்? 83
2165:
பிரான்! உன் பெருமை* பிறர் ஆரறிவார்?,*
உராய் உலகளந்த ஞான்று,* – வராகத்-
தெயிற்றளவு* போதாவாறு என்கொலோ,* எந்தை-
அடிக்களவு போந்த படி? 84
2166:
படிகண்டு அறிதியே* பாம்பணையினான்,* புட்-
கொடி கண்டறிதியே? கூறாய்,* – வடிவில்-
பொறியைந்தும் உள்ளடக்கிப்* போதொடு நீரேந்தி,*
நெறிநின்ற நெஞ்சமே! நீ. 85
2167:
நீயும் திருமகளும் நின்றாயால்,* குன்றெடுத்துப்-
பாயும்* பனிமறைத்த பண்பாளா,* – வாயில்-
கடைகழியா உள்புகாக்* காமர்பூங் கோவல்*
இடைகழியே பற்றி இனி. 86
2168:
இனியார் புகுவார்* எழுநரக வாசல்?*
முனியாது மூரித்தாள் கோமின்,* – கனிசாயக்-
கன்றெறிந்த தோளான்* கனைகழலே காண்பதற்கு,*
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87
2169:
நாடிலும்* நின்னடியே நாடுவன்,* நாடோறும்-
பாடிலும்* நின்புகழே பாடுவன்,* சூடிலும்-
பொன்னாழி ஏந்தினான்* பொன்னடியே சூடுவேற்கு,*
என்னாகில் என்னே எனக்கு? 88
2170:
எனக்காவார்* ஆரொருவரே,* எம்பெருமான்-
தனக்காவான்* தானே மற்றல்லால்,* – புனக்காயாம்-
பூமேனி காணப்* பொதியவிழும் பூவைப்பூ,*
மாமேனி காட்டும் வரம். 89
2171:
வரத்தால் வலிநினைந்து* மாதவ!நின் பாதம்,*
சிரத்தால் வணங்கானா மென்றே,* – உரத்தினால்-
ஈரரியாய்* நேர்வலியோனாய இரணியனை,*
ஓரரியாய் நீயிடந்தது ஊன்? 90
2172:
ஊனக் குரம்பையின்* உள்புக்கு இருள்நீக்கி,*
ஞானச் சுடர்கொளÖஇ நாள்தோறும்,* – ஏனத்து-
உருவா உலகிடந்த* ஊழியான் பாதம்,*
மருவாதார்க்கு உண்டாமோ வான்? 91
2173:
வானாகித் தீயாய்* மறிகடலாய் மாருதமாய்*
தேனாகிப் பாலாம் திருமாலே,* – ஆனாய்ச்சி-
வெண்ணெய் விழுங்க* நிறையுமே,* முன்னொருநாள்-
மண்ணை உமிழ்ந்த வயிறு? 92
2174:
வயிறழல வாளுருவி* வந்தானை அஞ்ச*
எயிறிலக வாய்மடுத்தது என்நீ,* – பொறியுகிரால்-
பூவடியை ஈடழித்த* பொன்னாழிக் கையா,* நின்-
சேவடிமேல் ஈடழியச் செற்று? 93
2175:
செற்றெழுந்து தீவிழித்துச்* சென்ற இந்த ஏழுலகும்,*
மற்றிவை ஆவென்று வாயங்காந்து,* முற்றும்-
மறையவற்குக் காட்டிய* மாயவனை அல்லால்,*
இறையேனும் ஏத்தாதென் நா. 94
2176:
நாவாயில் உண்டே* ‘நமோ நாரணா‘ என்று,*
ஓவாது உரைக்கும் உரையுண்டே,* – மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்* வகையுண்டே,* என்னொருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்? 95
2177:
திறம்பாது என்னெஞ்சமே!* செங்கண்மால் கண்டாய்,*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்,* புறந்தான்இம்-
மண்தான்* மறிகடல்தான் மாருதந்தான்,* வான்தானே,-
கண்டாய்* கடைக்கட் பிடி. 96
2178:
பிடிசேர் களிறளித்த பேராளா,* உன்தன்-
அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* – பொடிசேர்-
அனல்கங்கை ஏற்றான்* அவிர்சடைமேல் பாய்ந்த,*
புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்? 97
2179:
பொன்திகழு மேனிப்* புரிசடையம் புண்ணியனும்,*
நின்றுலகம் தாய நெடுமாலும்,* – என்றும்-
இருவரங்கத்தால்* திரிவரேலும்,* ஒருவன்-
ஒருவன் அங்கத்து என்றும் உளன். 98
2180:##
உளன்கண்டாய் நன்னெஞ்சே!* உத்தமன் என்றும்-
உளன்கண்டாய்,* உள்ðவார் உள்ளத்து-உளன்கண்டாய்,*
வெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர். 99
2181:##
ஓரடியும் சாடுதைத்த* ஒண்மலர்ச் சேவடியும்,*
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே!* – ஓரடியில்-
தாயவனைக் கேசவனைத்* தண்துழாய் மாலைசேர்,*
மாயவனையே மனத்து வை. (2) 100