சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்*
காரார் கருமுகிலைக் காணப்புக்கு,* – ஓராத் ‘திருக்கண்டேன்‘ என்றுரைத்த சீரான் கழலே,* உரைக்கண்டாய் நெஞ்சே! உகந்து. . |
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
2282:##
திருக்கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்* புரி சங்கம் கைக்கண்டேன்,*
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1
2283:
இன்றே கழல்கண்டேன்* ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,*
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,* – அன்று
திருக்கண்டு கொண்ட* திருமாலே,* உன்னை
மருக்கண்டு கொண்டென் மனம். 2
2284:
மனத்துள்ளான்* மாகடல் நீருள்ளான்,* மலராள்
தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,* – சினத்துச்
செருநருகச் செற்றுகந்த* தேங்கோத வண்ணன்,*
வருநரகம் தீர்க்கும் மருந்து. 3
2285:
மருந்தும் பொருளும்* அமுதமும் தானே,*
திருந்திய செங்கண்மால் ஆங்கே,* – பொருந்தியும்
நின்றுலகம் உண்டுமிழ்ந்தும்* நீரேற்றும் மூவடியால்,*
அன்றுலகம் தாயோன் அடி. 4
2286:
அடிவண்ணம் தாமரை* அன்று உலகம் தாயோன்,*
படிவண்ணம் பார்க்கடல்* நீர் வண்ணம்,* – முடிவண்ணம்
ஓராழி வெய்யோன்* ஒளியும் அஃதன்றே*
ஆராழி கொண்டாற்கு அழகு? 5
2287:
அழகன்றே ஆழியாற்கு* ஆழிநீர் வண்ணம்,*
அழகன்றே அண்டம் கடத்தல்,* – அழகன்றே
அங்கைநீர் ஏற்றாற்கு* அலர்மேலோன் கால்கழுவ,*
கங்கைநீர் கான்ற கழல்? 6
2288:
கழல்தொழுதும் வாநெஞ்சே!* கார்கடல்நீர் வேலை,*
பொழிலளந்த புள்ðர்திச் செல்வன்,* – எழிலளந்தங்கு
எண்ணற்கரியானை* எப்பொருட்கும் சேயானை,*
நண்ணற் கரியானை நாம். 7
2289:
நாமம் பலசொல்லி* நாராயணாவென்று,*
நாமும் கையால் தொழுதும் நன்னெஞ்சே! வா* மருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,*
கண்ணனையே காண்க நங்கண். 8
2290:
கண்ணும் கமலம்* கமலமே கைத்தலமும்,*
மண்ணளந்த பாதமும் மற்றவையே,* எண்ணில்
கருமா முகில்வண்ணன்* கார்கடல் நீர்வண்ணன்,*
திருமா மணிவண்ணன் தேசு. 9
2291:
தேசும் திறலும்* திருவும் உருவமும்,*
மாசில் குடிப்பிறப்பும்* மற்றவையும் – பேசில்*
வலம் புரிந்த வான்சங்கம்* கொண்டான் பேரோத,*
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10
2292:
நன்கோதும்* நால் வேதத்துள்ளான்* நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன்,* – சங்கோதப்
பாற்கடலான்* பாம்பணையின் மேலான்,* பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவினான். 11
2293:
அறிவென்னும் தாள்கொளுவி* ஐம்புலனும் தம்மில்,*
செறிவென்னும் திண்கதவம் செம்மி,* – மறையென்றும்
நன்கோதி* நன்குணர்வார் காண்பரே,* நாள்தோறும்
பைங்கோத வண்ணன் படி. 12
2294:
படிவட்டத் தாமரை* பண்டுலகம் நீரேற்று,*
அடிவட்டத்தால் அளப்ப* நீண்ட முடிவட்டம்,*
ஆகாய மூடறுத்து* அண்டம்போய் நீண்டதே,*
மாகாயமாய் நின்ற மாற்கு. 13
2295:
மாற்பால் மனம்சுழிப்ப* மங்கையர்தோள் கைவிட்டு,*
நூற்பால்* மனம்வைக்க நொய்விதாம்,* நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான்* விண்ணோர் முடிதோயும்,*
பாதத்தான் பாதம் பணிந்து. 14
2296:
பணிந்துயர்ந்த பௌவப்* படுதிரைகள் மோத,*
பணிந்த பணிமணிகளாலே அணிந்து,* அங்கு
அனந்தனணைக்* கிடக்கும் அம்மான்,* அடியேன்
மனந்தனணைக் கிடக்கும் வந்து. 15
2297:##
வந்துதைத்த வெண்திரைகள்* செம்பவளம் வெண்முத்தம்*
அந்தி விளக்கும் அணிவிளக்காம்,* – எந்தை
ஒருவல்லித் தாமரையாள்* ஒன்றியசீர் மார்வன்,*
திருவல்லிக்கேணியான் சென்று. (2) 16
2298:
சென்றநாள் செல்லாத* செங்கண்மால் எங்கள்மால்,*
என்ற நாளெந்நாளும் நாளாகும்,* – என்றும்
இறவாத எந்தை* இணையடிக்கே ஆளாய்,*
மறவாது வாழ்த்துக என்வாய். 17
2299:
வாய்மொழிந்து வாமனனாய்* மாவலிபால்,* மூவடிமண்
நீயளந்து கொண்ட* நெடுமாலே,* – தாவியநின்
எஞ்சா இணையடிக்கே* ஏழ்பிறப்பும் ஆளாகி,*
அஞ்சாது இருக்க அருள். 18
2300:
அருளாது ஒழியுமே* ஆலிலைமேல்,* அன்று
தெருளாத* பிள்ளையாய்ச் சேர்ந்தான்,* இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே* செம்மலர்தூய்க் கைதொழுது,*
முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19
2301:
முன்னுலகம்* உண்டுமிழ்ந்தாய்க்கு,* அவ்வுலகம் ஈரடியால்*
பின்னளந்து கோடல் பெரிதொன்றே?* – என்னே
திருமாலே!* செங்கண் நெடியானே,* எங்கள்
பெருமானே! நீயிதனைப் பேசு. 20
2302:
பேசுவார்* எவ்வளவு பேசுவர்,* அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான்,* – தேசுடைய
சக்கரத்தான்* சங்கினான் சார்ங்கத்தான்,* பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. 21
2303:
வடிவார் முடிகோட்டி* வானவர்கள்,* நாளும்
கடியார் மலர்தூவிக்* காணும் – படியானை,*
செம்மையால் உள்ளுருகிச்* செவ்வனே நெஞ்சமே,*
மெய்ம்மையே காண விரும்பு. 22
2304:
விரும்பி விண் மண்ணளந்த* அஞ்சிறைய வண்டார்*
சுரும்பு தொளையில் சென்றூத,* அரும்பும்
புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,*
மனம்துழாய் மாலாய் வரும். 23
2305:
வருங்கால் இருநிலனும்* மால்விசும்பும் காற்றும்,*
நெருங்கு தீ* நீருருவு மானான்,* – பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான்* சூழ்கழலே,* நாளும்
தொடராழி* நெஞ்சே! தொழுது. 24
2306:
தொழுதால் பழுதுண்டே* தூநீர் உலகம்,*
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி,* – விழுதுண்ட-
வாயானை* மால்விடையேழ் செற்றானை,* வானவர்க்கும்
சேயானை* நெஞ்சே! சிறந்து? 25
2307:
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*
நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* – உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும்* வேளுக்கைப் பாடியுமே,*
தாம்கடவார் தண் துழாயார். 26
2308:
ஆரே துயர் உழந்தார்* துன்புற்றார் ஆண்டையார்,*
காரே மலிந்த கருங்கடலை,* நேரே
கடைந்தானைக்* காரணனை, நீரணைமேல்* பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? 27
2309:
அடைந்த அரவணைமேல்* ஐவர்க்காய்,* அன்று
மிடைந்தது* பாரத வெம்போர்,* – உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே* அம்மனே, வாளெயிற்றுப்*
பேய்ச்சிபால் உண்ட பிரான். 28
2310:
பேய்ச்சிபால் உண்ட* பெருமானைப் பேர்ந்தெடுத்து,*
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே,* வாய்த்த
இருளார் திருமேனி* இன்பவளச் செவ்வாய்,*
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29
2311:
சேர்ந்த திருமால்* கடல்குடந்தை வேங்கடம்*
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு,* – வாய்ந்த
மறைபாடகம் அனந்தன்* வண்துழாய்க் கண்ணி,*
இறைபாடி ஆய இவை. 30
2312:
இவையவன் கோயில்* இரணியனது ஆகம்,*
அவைசெய்த அரியுருவம் ஆனான்,* – செவிதெரியா
நாகத்தான்* நால் வேதத்துள்ளான்,* நறவேற்றான்*
பாகத்தான் பாற்கடலுளான். 31
2313:
பாற்கடலும் வேங்கடமும்* பாம்பும் பனிவிசும்பும்,*
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல்,* – பாற்பட்டு
இருந்தார் மனமும்* இடமாகக் கொண்டான்,*
குருந்தொசித்த கோபாலகன். 32
2314:
பாலகனாய்* ஆலிலைமேல் பைய,* உலகெல்லாம்
மேலொருநாள்*உண்டவனே மெய்ம்மையே,* – மாலவனே-
மந்தரத்தால்* மாநீர்க் கடல்கடைந்து,* வானமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று. 33
2315:
அன்று இவ்வுலகம்* அளந்த அசைவேகொல்,*
நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* – அன்று
கிடந்தானைக்* கேடில்சீரானை,*முன் கஞ்சைக்
கடந்தானை* நெஞ்சமே! காண். 34
2316:
காண்காண் என* விரும்பும் கண்கள்,* கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி,* – பாண்கண்
தொழில்பாடி* வண்டறையும் தொங்கலான்,* செம்பொற்
கழல்பாடி* யாம்தொழுதும் கை. 35
2317:
கைய கனலாழி* கார்க்கடல்வாய் வெண்சங்கம்,*
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள்,* செய்ய
படைபரவ பாழி* பனிநீர் உலகம்,*
அடியளந்த மாயன் அவற்கு. 36
2318:
அவற்கடிமைப் பட்டேன்* அகத்தான் புறத்தான்,*
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்,* துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும்* பன்மணி பூணாரம்,*
திகழும் திருமார்வன் தான். 37
2319:
தானே தனக்கு உவமன்* தன்னுருவே எவ்வுருவும்,*
தானே தவ உருவும் தாரகையும்,* – தானே
எரிசுடரும் மால்வரையும்* எண்திசையும்,* அண்டத்து
இருசுடரு மாய இறை. 38
2320:
இறையாய் நிலனாகி* எண்டிசையும் தானாய்,*
மறையாய் மறைப்பொருளாய் வானாய்* – பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி* விளங்கொலிநீர் வேங்கடத்தான்,*
உள்ளத்தினுள்ளே உளன். 39
2321:
உளன்கண்டாய் நல்நெஞ்சே!* உத்தமனென்றும்
உளன்கண்டாய்,* உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய்,*
விண்ணொடுங்கக் கோடுயரும்* வீங்கருவி வேங்கடத்தான்,*
மண்ணொடுங்கத் தானளந்த மன். 40
2322:
மன்னு மணிமுடிநீண்டு* அண்டம்போய் எண்திசையும்,*
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே,* – மின்னை
உடையாகக் கொண்டு* அன்றுலகளந்தான்,*குன்றும்
குடையாக* ஆகாத்த கோ. 41
2323:
கோவலனாய்* ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,*
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,* மேவி
அரியுருவமாகி* இரணியனது ஆகம்,*
தெரியுகிரால் கீண்டான் சினம். 42
2324:
சினமா மதகளிற்றின்* திண்மருப்பைச் சாய்த்து,*
புனமேய பூமி அதனை,* – தனமாகப்
பேரகலத்து உள்ளொடுக்கும்* பேரார மார்வனார்,*
ஓரகலத்து உள்ளது உலகு. 43
2325:
உலகமும்* ஊழியும் ஆழியும்,* ஒண்கேழ்
அலர்கதிரும்* செந்தீயும் ஆவான்,*- பலகதிர்கள்
பாரித்த* பைம்பொன் முடியான் அடியிணைக்கே,*
பூரித்தென் நெஞ்சே புரி. 44
2326:
புரிந்து மதவேழம்* மாப்பிடியோடு ஊடி,*
திரிந்து சினத்தால் பொருது,*- விரிந்தசீர்
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்* வேங்கடமே,* மேலொருநாள்
மண்கோட்டுக்* கொண்டான் மலை. 45
2327:
மலைமுகடுமேல் வைத்து* வாசுகியைச் சுற்றி,*
தலைமுகடு தானொருகை பற்றி,*- அலைமுகட்டு
அண்டம்போய் நீர்தெறிப்ப* அன்று கடல்கடைந்தான்,*
பிண்டமாய் நின்ற பிரான். 46
2328:
நின்ற பெருமானே!* நீரேற்று,* உலகெல்லாம்
சென்ற பெருமானே!* செங்கண்ணா,* – அன்று
துரகவாய் கீண்ட* துழாய்முடியாய்,* நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ. 47
2329:
நீயன்றே நீரேற்று* உலகம் அடியளந்தாய்,*
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய்* – நீயன்றே
மாவாயுரம் பிளந்து* மாமருதினூடுபோய்,*
தேவாசுரம் பொருதாய் செற்று? 48
2330:
செற்றதுவும்* சேரா இரணியனை* சென்றேற்றுப்
பெற்றதுவும்* மாநிலம், பின்னைக்காய்* – முற்றல்
முரியேற்றின்* முன்நின்று மொய்ம்பொழித்தாய்,* மூரிச்
சுரியேறு* சங்கினாய்! சூழ்ந்து. 49
2331:
சூழ்ந்த துழாயலங்கல்* சோதி மணிமுடிமால்,*
தாழ்ந்த அருவித் தடவரைவாய்,* – ஆழ்ந்த
மணிநீர்ச்சுனை வளர்ந்த* மாமுதலை கொன்றான்,*
அணிநீல வண்ணத் தவன். 50
2332:
அவனே அருவரையால்* ஆநிரைகள் காத்தான்,*
அவனே அணிமருதம் சாய்த்தான்,* – அவனே
கலங்காப் பெருநகரம்* காட்டுவான் கண்டீர்,*
இலங்கா புரமெரித்தான் எய்து. 51
2333:
எய்தான் மராமரம்* ஏழும் இராமனாய்,*
எய்தான் அம்மான் மரிய ஏந்திழைக்காய்,* – எய்ததுவும்
தென்னிலங்கைக்கோன் வீழ* சென்று குறளுருவாய்*
முன்னிலம் கைக்கொண்டான் முயன்று. 52
2334:
முயன்று தொழுநெஞ்சே!* மூரிநீர் வேலை,*
இயன்றமரத்தாலிலையின் மேலால்,* – பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து* மாயக் குழவியாய்,*
தண்ணலங்கல் மாலையான் தாள். 53
2335:
தாளால் சகடம்* உதைத்துப் பகடுந்தி,*
கீளா மருதிடைபோய்க் கேழலாய்,* – மீளாது
மண்ணகலம் கீண்டு* அங்கோர் மாதுகந்த மார்வற்கு,*
பெண்ணகலம் காதல் பெரிது. 54
2336:
பெரியவரைமார்பில்* பேராரம் பூண்டு,*
கரிய முகிலிடைமின் போல,* – திரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே,* மற்றவன்தன்
நீள் நெடுங்கண் காட்டும் நிறம். 55
2337:
நிறம்வெளிது செய்து* பசிது கரிதென்று,*
இறையுருவம் யாமறியோம் எண்ணில்,* – நிறைவுடைய
நாமங்கை தானும்* நலம்புகழ வல்லளே,*
பூமங்கை கேள்வன் பொலிவு? 56
2338:
பொலிந்திருண்ட கார்வானில்* மின்னேபோல் தோன்றி,*
மலிந்து திருவிருந்த மார்வன்,* – பொலிந்து
கருடன்மேல் கொண்ட* கரியான் கழலே,*
தெருடன்மேல் கண்டாய் தெளி. 57
2339:
தெளிந்த சிலாதலத்தின்* மேலிருந்த மந்தி,*
அளிந்த கடுவனையே நோக்கி,* – விளங்கிய
வெண்மதியம் தாவென்னும்* வேங்கடமே,* மேலொருநாள்
மண்மதியில்* கொண்டுகந்தான் வாழ்வு. 58
2340:
வாழும் வகையறிந்தேன்* மைபோல் நெடுவரைவாய்,*
தாழும் அருவிபோல் தார்கிடப்ப,* – சூழும்
திருமா மணிவண்ணன்* செங்கண்மால்,* எங்கள்
பெருமான்* அடிசேரப் பெற்று. 59
2341:
பெற்றம் பிணைமருதம்* பேய்முலை மாச்சகடம்,*
முற்றக்காத்தூடு போயுண்டுதைத்து,* – கற்றுக்
குணிலை* விளங்கனிக்குக் கொண்டெறிந்தான்,* வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60
2342:##
பண்டெல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,*
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்,* – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை* வண்பூங் கடிகை,*
இளங்குமரன் தன் விண்ணகர். (2) 61
2343:
விண்ணகரம் வெஃகா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
2344:
தாழ்சடையும் நீள்முடியும்* ஒண்மழுவும் சக்கரமும்,*
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,*- சூழும்
திரண்ட அருவி பாயும்* திருமலைமேல் எந்தைக்கு,*
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து. 63
2345:
இசைந்த அரவமும்* வெற்பும் கடலும்,*
பசைந்தங்க அமுது படுப்ப,* – அசைந்து
கடைந்த வருத்தமோ* கச்சி வெஃகாவில்,*
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64
2346:
அங்கற்கு இடரின்றி* அந்திப் பொழுதத்து,*
மங்க இரணியனது ஆகத்தை,*- பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த* அம்மான் அவனே,*
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65
2347:
காய்ந்திருளை மாற்றிக்* கதிரிலகு மாமணிகள்,*
ஏய்ந்த பணக்கதிர்மேல்* வெவ்வுயிர்ப்ப,* – வாய்ந்த
மதுகைடவரும்* வயிறுருகி மாண்டார்,*
அது கேடவர்க்கிறுதி ஆங்கே. 66
2348:
ஆங்கு மலரும்* குவியுமால் உந்திவாய்,*
ஓங்கு கமலத்தின் ஒண்போது,* – ஆங்கைத்
திகிரி சுடரென்றும்* வெண்சங்கம்,* வானில்
பகருமதி என்றும் பார்த்து. 67
2349:
பார்த்த கடுவன்* சுனைநீர் நிழற்கண்டு,*
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து,* – கார்த்த
களங்கனிக்குக்* கைநீட்டும் வேங்கடமே,* மேனாள்
விளங்கனிக்குக்* கன்றெறிந்தான் வெற்பு. 68
2350:
வெற்பென்று* வேங்கடம் பாடும்,* வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல்,* மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த* நீள்கடல் நீராடுவான்,*
பூண்டநா ளெல்லாம் புகும். 69
2351:
புகுமதத்தால்* வாய்பூசிக் கீழ்தாழ்ந்து,* அருவி
உகுமதத்தால்* கால்கழுவிக் கையால்,*- மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு* விறல் வேங்கடவனையே,*
கண்டு வணங்கும் களிறு. 70
2352:
களிறு முகில்குத்தக்* கையெடுத்தோடி,*
ஒளிறு மருப்பொசிகை* யாளி பிளிறி-
விழ,* கொன்று நின்றதிரும்* வேங்கடமே,* மேனாள்
குழக்கன்று* கொண்டெறிந்தான் குன்று. 71
2353:
குன்றொன்றினாய* குறமகளிர் கோல்வளைக்கை,*
சென்று விளையாடும்* தீங்கழைபோய்,* – வென்று
விளங்குமதி கோள்விடுக்கும்* வேங்கடமே,* மேலை
இளங்குமரர் கோமான் இடம். 72
2354:
இடம்வலம் ஏழ்பூண்ட* இரவித் தேரோட்டி,*
வடமுக வேங்கடத்து மன்னும்,* – குடம்நயந்த
கூத்தனாய் நின்றான்* குரைகழலே கூறுவதே,*
நாத்தன்னால் உள்ள நலம். 73
2355:
நலமே வலிதுகொல்* நஞ்சூட்டு வன்பேய்,*
நிலமே புரண்டுபோய் வீழ,* – சலமேதான்
வெங்கொங்கை உண்டானை* மீட்டாய்ச்சி ஊட்டுவான்,*
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74
2356:
சார்ந்தகடு தேய்ப்பத்* தடாவிய கோட்டுச்சிவாய்*
ஊர்ந்தியங்கும் வெண்மதியின்* ஒண்முயலை,* – சேர்ந்து
சினவேங்கை பார்க்கும்* திருமலையே,* ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு. 75
2357:
பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து
நெருப்பிடையே* நிற்கவும் நீர் வேண்டா* – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76
2358:
ஆய்ந்த அருமறையோன்* நான்முகத்தோன் நன்குறங்கில்*
வாய்ந்த குழவியாய் வாளரக்கன்,* – ஏய்ந்த
முடிப்போது* மூன்றேழன்றெண்ணினான்,* ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண். 77
2359:
அரணாம் நமக்கென்றும்* ஆழி வலவன்,*
முரணாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,* – சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை* ஏதுபிறப் பென்னாதே,*
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
2360:
ஓர்த்த மனத்தராய்* ஐந்தடக்கி ஆராய்ந்து,*
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம்,* – கார்த்த
விரையார் நறுந்துழாய்* வீங்கோத மேனி,*
நிரையார மார்வனையே நின்று. 79
2361:
நின்று எதிராய* நிரைமணித்தேர் வாணன்தோள்,*
ஒன்றிய ஈரைஞ்நுறுடன் துணிய,* – வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி* அரவணையான் சேவடிக்கே*
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80
2362:
நெஞ்சால்* நினைப்பரியனேலும்* நிலைபெற்று என்
நெஞ்சமே! பேசாய்* நினைக்குங்கால்,*- நெஞ்சத்துப்
பேராது நிற்கும்* பெருமானை என்கொலோ,*
ஓராது நிற்பது உணர்வு? 81
2363:
உணரில் உணர்வரியன்* உள்ளம் புகுந்து*
புணரிலும் காண்பரியன் உண்மை,* – இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும்* தண்துழாய்க் கோமானை,*
எங்கணைந்து காண்டும் இனி? 82
2364:
இனியவன் மாயன்* என உரைப்பரேலும்,*
இனியவன் காண்பரியனேலும்,* – இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு* விண்கடந்த பைங்கழலான்,*
உள்ளத்தின் உள்ளே உளன். 83
2365:
உளனாய* நான்மறையின் உட்பொருளை,* உள்ளத்
துளனாகத்* தேர்ந்து உணர்வரேலும்,* – உளனாய
வண்தாமரை நெடுங்கண்* மாயவனை யாவரே,*
கண்டார் உகப்பர் கவி? 84
2366:
கவியினார் கைபுனைந்து* கண்ணார் கழல்போய்,*
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* – புவியினார்
போற்றி உரைக்கப்* பொலியுமே,* பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்? 85
2367:
எழில்கொண்டு* மின்னுக் கொடியெடுத்து,* வேகத்
தொழில்கொண்டு* தான்முழங்கித் தோன்றும்,* – எழில் கொண்ட
நீர்மேகம் அன்ன* நெடுமால் நிறம்போல,*
கார்வானம் காட்டும் கலந்து. 86
2368:
கலந்து மணியிமைக்கும் கண்ணா,*நின் மேனி
மலர்ந்து* மரகதமே காட்டும்,* – நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும்* தண்துழாய்க் கோமானை,*
அந்திவான் காட்டும் அது. 87
2369:
அது நன்று இது தீதென்று* ஐயப்படாதே,*
மதுநின்ற தண்துழாய் மார்வன்,* – பொதுநின்ற*
பொன்னங் கழலே தொழுமின்,* முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து. 88
2370:
முடிந்த பொழுதில்* குறவாணர்,* ஏனம்
படிந்துழுசால்* பைந்தினைகள் வித்த,* – தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய்* விண்திறக்கும் வேங்கடமே,* மேலொருநாள்
தீங்குழல்* வாய் வைத்தான் சிலம்பு. 89
2371:
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப,* விண்ணாறு
அலம்பிய சேவடிபோய்,* அண்டம் – புலம்பியதோள்*
எண்திசையும் சூழ* இடம்போதாது என்கொலோ,*
வண்துழாய் மாலளந்த மண்? 90
2372:
மண்ணுண்டும்* பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,*
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்ட* தான் கட்டுண்டு இருந்தான்,*
வயிற்றினோடு ஆற்றா மகன். 91
2373:
மகனொருவர்க்கு அல்லாத* மாமேனி மாயன்,*
மகனாம் அவன்மகன் தன்* காதல் மகனை*
சிறைசெய்த வாணன்தோள்* செற்றான் கழலே*
நிறைசெய்து என் நெஞ்சே! நினை. 92
2374:
நினைத்துலகில் ஆர்தெளிவார்* நீண்ட திருமால்,*
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல்,* – கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய்* மெள்ளத் துயின்றானை,*
உள்ளத்தே வைநெஞ்சே! உய்த்து. 93
2375:
உய்த்துணர்வு என்னும்* ஒளிகொள் விளக்கேற்றி,*
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்,* – மெத்தெனவே
நின்றான் இருந்தான்* கிடந்தான் என் நெஞ்சத்து,*
பொன்றாமை மாயன் புகுந்து. 94
2376:
புகுந்திலங்கும்* அந்திப் பொழுதகத்து,* அரியாய்
இகழ்ந்த* இரணியன தாகம்,*- சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த* திருமால் திருவடியே*
வந்தித்து என்னெஞ்சமே! வாழ்த்து. 95
2377:
வாழ்த்திய வாயராய்* வானோர் மணிமகுடம்*
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* – கேழ்த்த
அடித்தாமரை* மலர்மேல் மங்கை மணாளன்,*
அடித்தாமரையா மலர். 96
2378:
அலரெடுத்த உந்தியான்* ஆங்கெழிலாய,*
மலரெடுத்த மாமேனி மாயன்,* – அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான்* வார்சடையான்* என்றிவர்கட்கு
எண்ணத்தானாமோ இமை? 97
2379:
இமம்சூழ் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும்,* – நமன்சூழ்
நரகத்து* தம்மை நணுகாமல் காப்பான்,*
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98
2380:##
தொட்ட படையெட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* – குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக்* குறித்தெறிந்த சக்கரத்தான்*
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99
2381:##
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான்,* தண்துழாய்த்
தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* – காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும்* வண்தாமரைநெடுங்கண்,*
தேனமரும் பூமேல் திரு. (2) 100