மூன்றாம் திருவந்தாதி


மூன்றாம் திருவந்தாதி தனியன்
குருகை காவலப்பன் அருளிச் செய்தது
சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்*

காரார் கருமுகிலைக் காணப்புக்கு,* – ஓராத்

திருக்கண்டேன்என்றுரைத்த சீரான் கழலே,*

உரைக்கண்டாய் நெஞ்சே! உகந்து.

.

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

2282:##

திருக்கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்* புரி சங்கம் கைக்கண்டேன்,*

என்னாழி வண்ணன்பால் இன்று. (2)  1

 

2283:

இன்றே கழல்கண்டேன்* ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,*

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,* – அன்று

திருக்கண்டு கொண்ட* திருமாலே,* உன்னை

மருக்கண்டு கொண்டென் மனம்.                                2

 

2284:

மனத்துள்ளான்* மாகடல் நீருள்ளான்,* மலராள்

தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,* – சினத்துச்

செருநருகச் செற்றுகந்த* தேங்கோத வண்ணன்,*

வருநரகம் தீர்க்கும் மருந்து.                        3

 

2285:

மருந்தும் பொருளும்* அமுதமும் தானே,*

திருந்திய செங்கண்மால் ஆங்கே,* – பொருந்தியும்

நின்றுலகம் உண்டுமிழ்ந்தும்* நீரேற்றும் மூவடியால்,*

அன்றுலகம் தாயோன் அடி.                                  4

 

2286:

அடிவண்ணம் தாமரை* அன்று உலகம் தாயோன்,*

படிவண்ணம் பார்க்கடல்* நீர் வண்ணம்,* – முடிவண்ணம்

ஓராழி வெய்யோன்* ஒளியும் அஃதன்றே*

ஆராழி கொண்டாற்கு அழகு?                                 5

 

2287:

அழகன்றே ஆழியாற்கு* ஆழிநீர் வண்ணம்,*

அழகன்றே அண்டம் கடத்தல்,* – அழகன்றே

அங்கைநீர் ஏற்றாற்கு* அலர்மேலோன் கால்கழுவ,*

கங்கைநீர் கான்ற கழல்?                               6

 

2288:

கழல்தொழுதும் வாநெஞ்சே!* கார்கடல்நீர் வேலை,*

பொழிலளந்த புள்ðர்திச் செல்வன்,* – எழிலளந்தங்கு

எண்ணற்கரியானை* எப்பொருட்கும் சேயானை,*

நண்ணற் கரியானை நாம்.                                 7

 

2289:

நாமம் பலசொல்லி* நாராயணாவென்று,*

நாமும் கையால் தொழுதும் நன்னெஞ்சே! வா* மருவி

மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,*

கண்ணனையே காண்க நங்கண்.                             8

 

2290:

கண்ணும் கமலம்* கமலமே கைத்தலமும்,*

மண்ணளந்த பாதமும் மற்றவையே,* எண்ணில்

கருமா முகில்வண்ணன்* கார்கடல் நீர்வண்ணன்,*

திருமா மணிவண்ணன் தேசு.                              9

 

2291:

தேசும் திறலும்* திருவும் உருவமும்,*

மாசில் குடிப்பிறப்பும்* மற்றவையும் – பேசில்*

வலம் புரிந்த வான்சங்கம்* கொண்டான் பேரோத,*

நலம்புரிந்து சென்றடையும் நன்கு.                       10

 

2292:

நன்கோதும்* நால் வேதத்துள்ளான்* நறவிரியும்

பொங்கோ தருவிப் புனல்வண்ணன்,* – சங்கோதப்

பாற்கடலான்* பாம்பணையின் மேலான்,* பயின்றுரைப்பார்

நூற்கடலான் நுண்ணறிவினான்.                           11

 

2293:

அறிவென்னும் தாள்கொளுவி* ஐம்புலனும் தம்மில்,*

செறிவென்னும் திண்கதவம் செம்மி,* – மறையென்றும்

நன்கோதி* நன்குணர்வார் காண்பரே,* நாள்தோறும்

பைங்கோத வண்ணன் படி.                                  12

 

2294:

படிவட்டத் தாமரை* பண்டுலகம் நீரேற்று,*

அடிவட்டத்தால் அளப்ப* நீண்ட முடிவட்டம்,*

ஆகாய மூடறுத்து* அண்டம்போய் நீண்டதே,*

மாகாயமாய் நின்ற மாற்கு.                             13

 

2295:

மாற்பால் மனம்சுழிப்ப* மங்கையர்தோள் கைவிட்டு,*

நூற்பால்* மனம்வைக்க நொய்விதாம்,* நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான்* விண்ணோர் முடிதோயும்,*

பாதத்தான் பாதம் பணிந்து.                          14

 

2296:

பணிந்துயர்ந்த பௌவப்* படுதிரைகள் மோத,*

பணிந்த பணிமணிகளாலே அணிந்து,* அங்கு

அனந்தனணைக்* கிடக்கும் அம்மான்,* அடியேன்

மனந்தனணைக் கிடக்கும் வந்து.                        15

 

2297:##

வந்துதைத்த வெண்திரைகள்* செம்பவளம் வெண்முத்தம்*

அந்தி விளக்கும் அணிவிளக்காம்,* – எந்தை

ஒருவல்லித் தாமரையாள்* ஒன்றியசீர் மார்வன்,*

திருவல்லிக்கேணியான் சென்று. (2)                         16

 

2298:

சென்றநாள் செல்லாத* செங்கண்மால் எங்கள்மால்,*

என்ற நாளெந்நாளும் நாளாகும்,* – என்றும்

இறவாத எந்தை* இணையடிக்கே ஆளாய்,*

மறவாது வாழ்த்துக என்வாய்.                          17

 

2299:

வாய்மொழிந்து வாமனனாய்* மாவலிபால்,* மூவடிமண்

நீயளந்து கொண்ட* நெடுமாலே,* – தாவியநின்

எஞ்சா இணையடிக்கே* ஏழ்பிறப்பும் ஆளாகி,*

அஞ்சாது இருக்க அருள்.                                   18

 

2300:

அருளாது ஒழியுமே* ஆலிலைமேல்,* அன்று

தெருளாத* பிள்ளையாய்ச் சேர்ந்தான்,* இருளாத

சிந்தையராய்ச் சேவடிக்கே* செம்மலர்தூய்க் கைதொழுது,*

முந்தையராய் நிற்பார்க்கு முன்?                           19

 

2301:

முன்னுலகம்* உண்டுமிழ்ந்தாய்க்கு,* அவ்வுலகம் ஈரடியால்*

பின்னளந்து கோடல் பெரிதொன்றே?* – என்னே

திருமாலே!* செங்கண் நெடியானே,* எங்கள்

பெருமானே! நீயிதனைப் பேசு.                           20

 

2302:

பேசுவார்* எவ்வளவு பேசுவர்,* அவ்வளவே

வாச மலர்த்துழாய் மாலையான்,* – தேசுடைய

சக்கரத்தான்* சங்கினான் சார்ங்கத்தான்,* பொங்கரவ

வக்கரனைக் கொன்றான் வடிவு.                             21

 

2303:

வடிவார் முடிகோட்டி* வானவர்கள்,* நாளும்

கடியார் மலர்தூவிக்* காணும் – படியானை,*

செம்மையால் உள்ளுருகிச்* செவ்வனே நெஞ்சமே,*

மெய்ம்மையே காண விரும்பு.                                22

 

2304:

விரும்பி விண் மண்ணளந்த* அஞ்சிறைய வண்டார்*

சுரும்பு தொளையில் சென்றூத,* அரும்பும்

புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,*

மனம்துழாய் மாலாய் வரும்.                             23

 

2305:

வருங்கால் இருநிலனும்* மால்விசும்பும் காற்றும்,*

நெருங்கு தீ* நீருருவு மானான்,* – பொருந்தும்

சுடராழி ஒன்றுடையான்* சூழ்கழலே,* நாளும்

தொடராழி* நெஞ்சே! தொழுது.                            24

 

2306:

தொழுதால் பழுதுண்டே* தூநீர் உலகம்,*

முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி,* – விழுதுண்ட-

வாயானை* மால்விடையேழ் செற்றானை,* வானவர்க்கும்

சேயானை* நெஞ்சே! சிறந்து?                              25

 

2307:

சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*

நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* – உறைந்ததுவும்,

வேங்கடமும் வெஃகாவும்* வேளுக்கைப் பாடியுமே,*

தாம்கடவார் தண் துழாயார்.                           26

 

2308:

ஆரே துயர் உழந்தார்* துன்புற்றார் ஆண்டையார்,*

காரே மலிந்த கருங்கடலை,* நேரே

கடைந்தானைக்* காரணனை, நீரணைமேல்* பள்ளி

அடைந்தானை நாளும் அடைந்து?                           27

 

2309:

அடைந்த அரவணைமேல்* ஐவர்க்காய்,* அன்று

மிடைந்தது* பாரத வெம்போர்,* – உடைந்ததுவும்

ஆய்ச்சிபால் மத்துக்கே* அம்மனே, வாளெயிற்றுப்*

பேய்ச்சிபால் உண்ட பிரான்.                                 28

 

2310:

பேய்ச்சிபால் உண்ட* பெருமானைப் பேர்ந்தெடுத்து,*

ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே,* வாய்த்த

இருளார் திருமேனி* இன்பவளச் செவ்வாய்,*

தெருளா மொழியானைச் சேர்ந்து.                           29

 

2311:

சேர்ந்த திருமால்* கடல்குடந்தை வேங்கடம்*

நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு,* – வாய்ந்த

மறைபாடகம் அனந்தன்* வண்துழாய்க் கண்ணி,*

இறைபாடி ஆய இவை.                                   30

 

2312:

இவையவன் கோயில்* இரணியனது ஆகம்,*

அவைசெய்த அரியுருவம் ஆனான்,* – செவிதெரியா

நாகத்தான்* நால் வேதத்துள்ளான்,* நறவேற்றான்*

பாகத்தான் பாற்கடலுளான்.                            31

 

2313:

பாற்கடலும் வேங்கடமும்* பாம்பும் பனிவிசும்பும்,*

நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல்,* – பாற்பட்டு

இருந்தார் மனமும்* இடமாகக் கொண்டான்,*

குருந்தொசித்த கோபாலகன்.                             32

 

2314:

பாலகனாய்* ஆலிலைமேல் பைய,* உலகெல்லாம்

மேலொருநாள்*உண்டவனே மெய்ம்மையே,* – மாலவனே-

மந்தரத்தால்* மாநீர்க் கடல்கடைந்து,* வானமுதம்

அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.                      33

 

2315:

அன்று இவ்வுலகம்* அளந்த அசைவேகொல்,*

நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* – அன்று

கிடந்தானைக்* கேடில்சீரானை,*முன் கஞ்சைக்

கடந்தானை* நெஞ்சமே! காண்.                            34

 

2316:

காண்காண் என* விரும்பும் கண்கள்,* கதிரிலகு

பூண்டார் அகலத்தான் பொன்மேனி,* – பாண்கண்

தொழில்பாடி* வண்டறையும் தொங்கலான்,* செம்பொற்

கழல்பாடி* யாம்தொழுதும் கை.                           35

 

2317:

கைய கனலாழி* கார்க்கடல்வாய் வெண்சங்கம்,*

வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள்,* செய்ய

படைபரவ பாழி* பனிநீர் உலகம்,*

அடியளந்த மாயன் அவற்கு.                              36

 

2318:

அவற்கடிமைப் பட்டேன்* அகத்தான் புறத்தான்,*

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்,* துவர்க்கும்

பவளவாய்ப் பூமகளும்* பன்மணி பூணாரம்,*

திகழும் திருமார்வன் தான்.                            37

 

2319:

தானே தனக்கு உவமன்* தன்னுருவே எவ்வுருவும்,*

தானே தவ உருவும் தாரகையும்,* – தானே

எரிசுடரும் மால்வரையும்* எண்திசையும்,* அண்டத்து

இருசுடரு மாய இறை.                                 38

 

2320:

இறையாய் நிலனாகி* எண்டிசையும் தானாய்,*

மறையாய் மறைப்பொருளாய் வானாய்* – பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி* விளங்கொலிநீர் வேங்கடத்தான்,*

உள்ளத்தினுள்ளே உளன்.                                   39

 

2321:

உளன்கண்டாய் நல்நெஞ்சே!* உத்தமனென்றும்

உளன்கண்டாய்,* உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய்,*

விண்ணொடுங்கக் கோடுயரும்* வீங்கருவி வேங்கடத்தான்,*

மண்ணொடுங்கத் தானளந்த மன்.                          40

 

2322:

மன்னு மணிமுடிநீண்டு* அண்டம்போய் எண்திசையும்,*

துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே,* – மின்னை

உடையாகக் கொண்டு* அன்றுலகளந்தான்,*குன்றும்

குடையாக* ஆகாத்த கோ.                                41

 

2323:

கோவலனாய்* ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,*

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,* மேவி

அரியுருவமாகி* இரணியனது ஆகம்,*

தெரியுகிரால் கீண்டான் சினம்.                           42

 

2324:

சினமா மதகளிற்றின்* திண்மருப்பைச் சாய்த்து,*

புனமேய பூமி அதனை,* – தனமாகப்

பேரகலத்து உள்ளொடுக்கும்* பேரார மார்வனார்,*

ஓரகலத்து உள்ளது உலகு.                               43

 

2325:

உலகமும்* ஊழியும் ஆழியும்,* ஒண்கேழ்

அலர்கதிரும்* செந்தீயும் ஆவான்,*- பலகதிர்கள்

பாரித்த* பைம்பொன் முடியான் அடியிணைக்கே,*

பூரித்தென் நெஞ்சே புரி.                                 44

 

2326:

புரிந்து மதவேழம்* மாப்பிடியோடு ஊடி,*

திரிந்து சினத்தால் பொருது,*- விரிந்தசீர்

வெண்கோட்டு முத்து உதிர்க்கும்* வேங்கடமே,* மேலொருநாள்

மண்கோட்டுக்* கொண்டான் மலை.                                45

 

2327:

மலைமுகடுமேல் வைத்து* வாசுகியைச் சுற்றி,*

தலைமுகடு தானொருகை பற்றி,*- அலைமுகட்டு

அண்டம்போய் நீர்தெறிப்ப* அன்று கடல்கடைந்தான்,*

பிண்டமாய் நின்ற பிரான்.                                 46

 

2328:

நின்ற பெருமானே!* நீரேற்று,* உலகெல்லாம்

சென்ற பெருமானே!* செங்கண்ணா,* – அன்று

துரகவாய் கீண்ட* துழாய்முடியாய்,* நங்கள்

நரகவாய் கீண்டாயும் நீ.                              47

 

2329:

நீயன்றே நீரேற்று* உலகம் அடியளந்தாய்,*

நீயன்றே நின்று நிரைமேய்த்தாய்* – நீயன்றே

மாவாயுரம் பிளந்து* மாமருதினூடுபோய்,*

தேவாசுரம் பொருதாய் செற்று?                            48

 

2330:

செற்றதுவும்* சேரா இரணியனை* சென்றேற்றுப்

பெற்றதுவும்* மாநிலம், பின்னைக்காய்* – முற்றல்

முரியேற்றின்* முன்நின்று மொய்ம்பொழித்தாய்,* மூரிச்

சுரியேறு* சங்கினாய்! சூழ்ந்து.                           49

 

2331:

சூழ்ந்த துழாயலங்கல்* சோதி மணிமுடிமால்,*

தாழ்ந்த அருவித் தடவரைவாய்,* – ஆழ்ந்த

மணிநீர்ச்சுனை வளர்ந்த* மாமுதலை கொன்றான்,*

அணிநீல வண்ணத் தவன்.                               50

 

2332:

அவனே அருவரையால்* ஆநிரைகள் காத்தான்,*

அவனே அணிமருதம் சாய்த்தான்,* – அவனே

கலங்காப் பெருநகரம்* காட்டுவான் கண்டீர்,*

இலங்கா புரமெரித்தான் எய்து.                           51

 

2333:

எய்தான் மராமரம்* ஏழும் இராமனாய்,*

எய்தான் அம்மான் மரிய ஏந்திழைக்காய்,* – எய்ததுவும்

தென்னிலங்கைக்கோன் வீழ* சென்று குறளுருவாய்*

முன்னிலம் கைக்கொண்டான் முயன்று.                           52

 

2334:

முயன்று தொழுநெஞ்சே!* மூரிநீர் வேலை,*

இயன்றமரத்தாலிலையின் மேலால்,* – பயின்றங்கோர்

மண்ணலங்கொள் வெள்ளத்து* மாயக் குழவியாய்,*

தண்ணலங்கல் மாலையான் தாள்.                          53

 

2335:

தாளால் சகடம்* உதைத்துப் பகடுந்தி,*

கீளா மருதிடைபோய்க் கேழலாய்,* – மீளாது

மண்ணகலம் கீண்டு* அங்கோர் மாதுகந்த மார்வற்கு,*

பெண்ணகலம் காதல் பெரிது.                             54

 

2336:

பெரியவரைமார்பில்* பேராரம் பூண்டு,*

கரிய முகிலிடைமின் போல,* – திரியுங்கால்

பாணொடுங்க வண்டறையும் பங்கயமே,* மற்றவன்தன்

நீள் நெடுங்கண் காட்டும் நிறம்.                              55

 

2337:

நிறம்வெளிது செய்து* பசிது கரிதென்று,*

இறையுருவம் யாமறியோம் எண்ணில்,* – நிறைவுடைய

நாமங்கை தானும்* நலம்புகழ வல்லளே,*

பூமங்கை கேள்வன் பொலிவு?                                56

 

2338:

பொலிந்திருண்ட கார்வானில்* மின்னேபோல் தோன்றி,*

மலிந்து திருவிருந்த மார்வன்,* – பொலிந்து

கருடன்மேல் கொண்ட* கரியான் கழலே,*

தெருடன்மேல் கண்டாய் தெளி.                              57

 

2339:

தெளிந்த சிலாதலத்தின்* மேலிருந்த மந்தி,*

அளிந்த கடுவனையே நோக்கி,* – விளங்கிய

வெண்மதியம் தாவென்னும்* வேங்கடமே,* மேலொருநாள்

மண்மதியில்* கொண்டுகந்தான் வாழ்வு.                        58

 

2340:

வாழும் வகையறிந்தேன்* மைபோல் நெடுவரைவாய்,*

தாழும் அருவிபோல் தார்கிடப்ப,* – சூழும்

திருமா மணிவண்ணன்* செங்கண்மால்,* எங்கள்

பெருமான்* அடிசேரப் பெற்று.                                59

 

2341:

பெற்றம் பிணைமருதம்* பேய்முலை மாச்சகடம்,*

முற்றக்காத்தூடு போயுண்டுதைத்து,* – கற்றுக்

குணிலை* விளங்கனிக்குக் கொண்டெறிந்தான்,* வெற்றிப்

பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.                      60

 

2342:##

பண்டெல்லாம் வேங்கடம்* பாற்கடல் வைகுந்தம்,*

கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்,* – வண்டு

வளங்கிளரும் நீள்சோலை* வண்பூங் கடிகை,*

இளங்குமரன் தன் விண்ணகர். (2)                           61

 

2343:

விண்ணகரம் வெஃகா* விரிதிரைநீர் வேங்கடம்,*

மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த

தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.                       62

 

2344:

தாழ்சடையும் நீள்முடியும்* ஒண்மழுவும் சக்கரமும்,*

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,*- சூழும்

திரண்ட அருவி பாயும்* திருமலைமேல் எந்தைக்கு,*

இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.                            63

 

2345:

இசைந்த அரவமும்* வெற்பும் கடலும்,*

பசைந்தங்க அமுது படுப்ப,* – அசைந்து

கடைந்த வருத்தமோ* கச்சி வெஃகாவில்,*

கிடந்திருந்து நின்றதுவும் அங்கு?                        64

 

2346:

அங்கற்கு இடரின்றி* அந்திப் பொழுதத்து,*

மங்க இரணியனது ஆகத்தை,*- பொங்கி

அரியுருவமாய்ப் பிளந்த* அம்மான் அவனே,*

கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.                     65

 

2347:

காய்ந்திருளை மாற்றிக்* கதிரிலகு மாமணிகள்,*

ஏய்ந்த பணக்கதிர்மேல்* வெவ்வுயிர்ப்ப,* – வாய்ந்த

மதுகைடவரும்* வயிறுருகி மாண்டார்,*

அது கேடவர்க்கிறுதி ஆங்கே.                            66

 

2348:

ஆங்கு மலரும்* குவியுமால் உந்திவாய்,*

ஓங்கு கமலத்தின் ஒண்போது,* – ஆங்கைத்

திகிரி சுடரென்றும்* வெண்சங்கம்,* வானில்

பகருமதி என்றும் பார்த்து.                            67

 

2349:

பார்த்த கடுவன்* சுனைநீர் நிழற்கண்டு,*

பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து,* – கார்த்த

களங்கனிக்குக்* கைநீட்டும் வேங்கடமே,* மேனாள்

விளங்கனிக்குக்* கன்றெறிந்தான் வெற்பு.                      68

 

2350:

வெற்பென்று* வேங்கடம் பாடும்,* வியன்துழாய்க்

கற்பென்று சூடும் கருங்குழல் மேல்,* மற்பொன்ற

நீண்டதோள் மால்கிடந்த* நீள்கடல் நீராடுவான்,*

பூண்டநா ளெல்லாம் புகும்.                               69

 

2351:

புகுமதத்தால்* வாய்பூசிக் கீழ்தாழ்ந்து,* அருவி

உகுமதத்தால்* கால்கழுவிக் கையால்,*- மிகுமதத்தேன்

விண்டமலர் கொண்டு* விறல் வேங்கடவனையே,*

கண்டு வணங்கும் களிறு.                                  70

 

2352:

களிறு முகில்குத்தக்* கையெடுத்தோடி,*

ஒளிறு மருப்பொசிகை* யாளி பிளிறி-

விழ,* கொன்று நின்றதிரும்* வேங்கடமே,* மேனாள்

குழக்கன்று* கொண்டெறிந்தான் குன்று.                         71

 

2353:

குன்றொன்றினாய* குறமகளிர் கோல்வளைக்கை,*

சென்று விளையாடும்* தீங்கழைபோய்,* – வென்று

விளங்குமதி கோள்விடுக்கும்* வேங்கடமே,* மேலை

இளங்குமரர் கோமான் இடம்.                                72

 

2354:

இடம்வலம் ஏழ்பூண்ட* இரவித் தேரோட்டி,*

வடமுக வேங்கடத்து மன்னும்,* – குடம்நயந்த

கூத்தனாய் நின்றான்* குரைகழலே கூறுவதே,*

நாத்தன்னால் உள்ள நலம்.                                73

 

2355:

நலமே வலிதுகொல்* நஞ்சூட்டு வன்பேய்,*

நிலமே புரண்டுபோய் வீழ,* – சலமேதான்

வெங்கொங்கை உண்டானை* மீட்டாய்ச்சி ஊட்டுவான்,*

தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.                     74

 

2356:

சார்ந்தகடு தேய்ப்பத்* தடாவிய கோட்டுச்சிவாய்*

ஊர்ந்தியங்கும் வெண்மதியின்* ஒண்முயலை,* – சேர்ந்து

சினவேங்கை பார்க்கும்* திருமலையே,* ஆயன்

புனவேங்கை நாறும் பொருப்பு.                              75

 

2357:

பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து

நெருப்பிடையே* நிற்கவும் நீர் வேண்டா* – விருப்புடைய

வெஃகாவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*

அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.                           76

 

2358:

ஆய்ந்த அருமறையோன்* நான்முகத்தோன் நன்குறங்கில்*

வாய்ந்த குழவியாய் வாளரக்கன்,* – ஏய்ந்த

முடிப்போது* மூன்றேழன்றெண்ணினான்,* ஆர்ந்த

அடிப்போது நங்கட்கு அரண்.                                 77

 

2359:

அரணாம் நமக்கென்றும்* ஆழி வலவன்,*

முரணாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,* – சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை* ஏதுபிறப் பென்னாதே,*

ஓதுகதி மாயனையே ஓர்த்து.                            78

 

2360:

ஓர்த்த மனத்தராய்* ஐந்தடக்கி ஆராய்ந்து,*

பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம்,* – கார்த்த

விரையார் நறுந்துழாய்* வீங்கோத மேனி,*

நிரையார மார்வனையே நின்று.                           79

 

2361:

நின்று எதிராய* நிரைமணித்தேர் வாணன்தோள்,*

ஒன்றிய ஈரைஞ்நுறுடன் துணிய,* – வென்றிலங்கும்

ஆர்படுவான் நேமி* அரவணையான் சேவடிக்கே*

நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.                        80

 

2362:

நெஞ்சால்* நினைப்பரியனேலும்* நிலைபெற்று என்

நெஞ்சமே! பேசாய்* நினைக்குங்கால்,*- நெஞ்சத்துப்

பேராது நிற்கும்* பெருமானை என்கொலோ,*

ஓராது நிற்பது உணர்வு?                                 81

 

2363:

உணரில் உணர்வரியன்* உள்ளம் புகுந்து*

புணரிலும் காண்பரியன் உண்மை,* – இணரணையக்

கொங்கணைந்து வண்டறையும்* தண்துழாய்க் கோமானை,*

எங்கணைந்து காண்டும் இனி?                                82

 

2364:

இனியவன் மாயன்* என உரைப்பரேலும்,*

இனியவன் காண்பரியனேலும்,* – இனியவன்

கள்ளத்தால் மண்கொண்டு* விண்கடந்த பைங்கழலான்,*

உள்ளத்தின் உள்ளே உளன்.                                  83

 

2365:

உளனாய* நான்மறையின் உட்பொருளை,* உள்ளத்

துளனாகத்* தேர்ந்து உணர்வரேலும்,* – உளனாய

வண்தாமரை நெடுங்கண்* மாயவனை யாவரே,*

கண்டார் உகப்பர் கவி?                                   84

 

2366:

கவியினார் கைபுனைந்து* கண்ணார் கழல்போய்,*

செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* – புவியினார்

போற்றி உரைக்கப்* பொலியுமே,* பின்னைக்காய்

ஏற்றுயிரை அட்டான் எழில்?                                  85

 

2367:

எழில்கொண்டு* மின்னுக் கொடியெடுத்து,* வேகத்

தொழில்கொண்டு* தான்முழங்கித் தோன்றும்,* – எழில் கொண்ட

நீர்மேகம் அன்ன* நெடுமால் நிறம்போல,*

கார்வானம் காட்டும் கலந்து.                            86

 

2368:

கலந்து மணியிமைக்கும் கண்ணா,*நின் மேனி

மலர்ந்து* மரகதமே காட்டும்,* – நலந்திகழும்

கொந்தின்வாய் வண்டறையும்* தண்துழாய்க் கோமானை,*

அந்திவான் காட்டும் அது.                                 87

 

2369:

அது நன்று இது தீதென்று* ஐயப்படாதே,*

மதுநின்ற தண்துழாய் மார்வன்,* – பொதுநின்ற*

பொன்னங் கழலே தொழுமின்,* முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.                               88

 

2370:

முடிந்த பொழுதில்* குறவாணர்,* ஏனம்

படிந்துழுசால்* பைந்தினைகள் வித்த,* – தடிந்தெழுந்த

வேய்ங்கழைபோய்* விண்திறக்கும் வேங்கடமே,* மேலொருநாள்

தீங்குழல்* வாய் வைத்தான் சிலம்பு.                       89

 

2371:

சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப,* விண்ணாறு

அலம்பிய சேவடிபோய்,* அண்டம் – புலம்பியதோள்*

எண்திசையும் சூழ* இடம்போதாது என்கொலோ,*

வண்துழாய் மாலளந்த மண்?                               90

 

2372:

மண்ணுண்டும்* பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,*

வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*ஆய்ச்சி – கண்ணிக்

கயிற்றினால் கட்ட* தான் கட்டுண்டு இருந்தான்,*

வயிற்றினோடு ஆற்றா மகன்.                                91

 

2373:

மகனொருவர்க்கு அல்லாத* மாமேனி மாயன்,*

மகனாம் அவன்மகன் தன்* காதல் மகனை*

சிறைசெய்த வாணன்தோள்* செற்றான் கழலே*

நிறைசெய்து என் நெஞ்சே! நினை.                             92

 

2374:

நினைத்துலகில் ஆர்தெளிவார்* நீண்ட திருமால்,*

அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல்,* – கனைத்துலவு

வெள்ளத்தோர் பிள்ளையாய்* மெள்ளத் துயின்றானை,*

உள்ளத்தே வைநெஞ்சே! உய்த்து.                            93

 

2375:

உய்த்துணர்வு என்னும்* ஒளிகொள் விளக்கேற்றி,*

வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்,* – மெத்தெனவே

நின்றான் இருந்தான்* கிடந்தான் என் நெஞ்சத்து,*

பொன்றாமை மாயன் புகுந்து.                              94

 

2376:

புகுந்திலங்கும்* அந்திப் பொழுதகத்து,* அரியாய்

இகழ்ந்த* இரணியன தாகம்,*- சுகிர்ந்தெங்கும்

சிந்தப் பிளந்த* திருமால் திருவடியே*

வந்தித்து என்னெஞ்சமே! வாழ்த்து.                       95

 

2377:

வாழ்த்திய வாயராய்* வானோர் மணிமகுடம்*

தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* – கேழ்த்த

அடித்தாமரை* மலர்மேல் மங்கை மணாளன்,*

அடித்தாமரையா மலர்.                                96

 

2378:

அலரெடுத்த உந்தியான்* ஆங்கெழிலாய,*

மலரெடுத்த மாமேனி மாயன்,* – அலரெடுத்த

வண்ணத்தான் மாமலரான்* வார்சடையான்* என்றிவர்கட்கு

எண்ணத்தானாமோ இமை?                                 97

 

2379:

இமம்சூழ் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*

அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும்,* – நமன்சூழ்

நரகத்து* தம்மை நணுகாமல் காப்பான்,*

துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.                     98

 

2380:##

தொட்ட படையெட்டும்* தோலாத வென்றியான்,*

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* – குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக்* குறித்தெறிந்த சக்கரத்தான்*

தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2)                     99

 

2381:##

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான்,* தண்துழாய்த்

தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* – காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும்* வண்தாமரைநெடுங்கண்,*

தேனமரும் பூமேல் திரு. (2)                            100

பேயாழ்வார் திருவடிகளே சரணம்