முதல் திருமொழி
2901:##
வாயும் திரையுகளும்* கானல் மடநாராய்,*
ஆயும் அமருலகும்* துஞ்சிலும் நீதுஞ்சாயால்,*
நோயும் பயலைமையும்* மீதூர எம்மேபோல்,*
நீயும் திருமாலால்* நெஞ்சம் கோட்பட்டாயே?. 2.1.1
2902:
கோட்பட்ட சிந்தையாய்க்* கூர்வாய அன்றிலே,*
சேட்பட்டயாமங்கள்* சேராதிரங்குதியால்,*
ஆட்பட்ட எம்மேபோல்* நீயும் அரவணையான்,*
தாட்பட்ட தண் துழாய்த்* தாமம் காமுற்றாயே. 2.1.2
2903:
காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,*
நீமுற்றக் கண்துயிலாய்* நெஞ்சுருகி ஏங்குதியால்*
தீமுற்றத் தென்னிலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,*
யாமுற்றது உற்றாயோ?* வாழி கனைகடலே. 2.1.3
2904:
கடலும்மலையும்* விசும்பும் துழாயெம்போல்,*
சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண்வாடாய்,*
அடல்கொள் படையாழி* அம்மானைக் காண்பான்நீ,*
உடலம் நோயுற்றாயோ* ஊழிதோறூழியே. 2.1.4
2905:
ஊழி தோறூழி* உலகுக்கு நீர்க்கொண்டு,*
தோழியரும் யாமும்போல்* நீராய் நெகிழ்கின்ற,*
வாழிய வானமே* நீயும் மதுசூதன்,*
பாழிமையிற்பட்டு அவன்கண்* பாசத்தால் நைவாயே. 2.1.5
2906:
நைவாயவெம்மேபோல்* நாண்மதியே நீ இந்நாள்,*
மைவானிருள் அகற்றாய்* மாழாந்து தேம்புதியால்,*
ஐவாய் அரவணைமேல்* ஆழிப்பெருமானார்,*
மெய் வாசகம் கேட்டு* உன் மெய்ந்நீர்மை தோற்றாயே. 2.1.6
2907:
தோற்றோம் மடநெஞ்சம்* எம்பெருமான் நாரணற்கு* எம்
ஆற்றாமை சொல்லி* அழுவோமை நீநடுவே,*
வேற்றோர் வகையில்* கொடிதாய் எனையூழி,*
மாற்றாண்மை நிற்றியோ* வாழி கனை இருளே. 2.1.7
2908:
இருளின் திணி வண்ணம்* மாநீர்க்கழியே போய்,*
மருளுற்று இராப்பகல்* துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*
உருளும் சகடம்* உதைத்த பெருமானார்,*
அருளின் பெரு நசையால்* ஆழாந்துநொந்தாயே. 2.1.8
2909:
நொந்தாராக் காதல் நோய்* மெல்லாவியுள் உலர்த்த,*
நந்தா விளக்கமே* நீயும் அளியத்தாய்,*
செந்தாமரைத் தடங்கண்* செங்கனிவாய் எம்பெருமான்,*
அந்தாமத்தண்துழாய்* ஆசையால்வேவாயே. 2.1.9
2910:
வேவாரா வேட்கைநோய்* மெல்லாவியுள் உலர்த்த,*
ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*
மாவாய் பிளந்து* மருதிடை போய் மண்ணளந்த,*
மூவா முதல்வா* இனியெம்மைச் சோரேலே. 2.1.10
2911:##
சோராத எப்பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,*
ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,*
ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,*
சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணெனவே. 2.1.11
இரண்டாம் திருமொழி
2912:
திண்ணன் வீடு* முதல் முழுதுமாய்,*
எண்ணின் மீதியன்* எம்பெருமான்,*
மண்ணும் விண்ணுமெல்லாம்* உடனுண்ட,* நம்
கண்ணன் கண்ணல்லது* இல்லையோர் கண்ணே. 2.2.1
2913:
ஏபாவம் பரமே* ஏழ் உலகும்,*
ஈபாவம் செய்து* அருளால் அளிப்பாரார்,*
மாபாவம் விட* அரற்குப் பிச்சைபெய்,*
கோபாலகோளரி* ஏறன்றியே. 2.2.2
2914:
ஏறனைப் பூவனைப்* பூமகள் தன்னை,*
வேறின்றி விண் தொழத்* தன்னுள்வைத்து,*
மேல்தன்னை மீதிட* நிமிர்ந்து மண்கொண்ட,*
மால்தனில் மிக்கும் ஓர்* தேவும் உளதே. 2.2.3
2915:
தேவும் எப்பொருளும் படைக்க,*
பூவில் நான் முகனைப் படைத்த,*
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*
பூவும் பூசனையும் தகுமே. 2.2.4
2916:
தகும் சீர்த்* தன்தனி முதலினுள்ளே,*
மிகும்தேவும்* எப்பொருளும்படைக்க,*
தகும்கோலத்* தாமரைக்கண்ணன் எம்மான்,*
மிகும்சோதி* மேலறிவார்யவரே. 2.2.5
2917:
எவரும் யாவையும்* எல்லாப்பொருளும்,*
கவர்வின்றித்* தன்னுள் ஒடுங்கநின்ற,*
பவர்க்கொள்ஞான* வெள்ளச் சுடர் மூர்த்தி,*
அவர் எம்மாழி* அம்பள்ளியாரே. 2.2.6
2918:
பள்ளியாலிலை* ஏழுலகும் கொள்ளும்,*
வள்ளல்* வல் வயிற்றுப் பெருமான்,*
உள்ளுளார் அறிவார்* அவன்தன்,*
கள்ளமாய* மனக்கருத்தே. 2.2.7
2919:
கருத்தில் தேவும்* எல்லாப்பொருளும்,*
வருத்தித்த* மாயப் பிரானையன்றி,* ஆரே
திருத்தித்* திண்ணிலை மூவுலகும்* தம்முள்
இருத்தி* காக்கும் இயல்வினரே. 2.2.8
2920:
காக்கும் இயல்வினன்* கண்ணபெருமான்,*
சேர்க்கை செய்து* தன்னுந்தியுள்ளே,*
வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,*
ஆக்கினான்* தெய்வ உலகுகளே. 2.2.9
2921:
கள்வா எம்மையும்* ஏழுலகும்,* நின்
னுள்ளே தோற்றிய* இறைவ! என்று,*
வெள்ளேறன் நான்முகன்* இந்திரன் வானவர்,*
புள்ðர்தி* கழல் பணிந்தேத்துவரே. 2.2.10
2922:
ஏத்த ஏழுலகும் கொண்ட* கோலக்
கூத்தனை,* குருகூர்ச்சடகோபன்சொல்,*
வாய்த்த ஆயிரத்துள்* இவைபத்துடன்,*
ஏத்தவல்லவர்க்கு* இல்லையோர் ஊனமே. 2.2.11
மூன்றாம் திருமொழி
2923:
ஊனில் வாழுயிரே* நல்லைபோஉன்னைப்பெற்று,*
வானுளார் பெருமான்* மதுசூதன் என்னம்மான்,*
தானும் யானுமெல்லாம்* தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,*
தேனும் பாலும் நெய்யும்* கன்னலும் அமுதுமொத்தே. 2.3.1
2924:
ஒத்தார் மிக்காரை* இலையாய மாமாய,*
ஒத்தாய்* எப்பொருட்கும் உயிராய்,* என்னைப்பெற்ற
அத் தாயாய் தந்தையாய்* அறியாதன அறிவித்த,*
அத்தா, நீசெய்தன* அடியேன் அறியேனே. 2.3.2
2925:
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மாமாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறளாய்* நிலம்மாவலி மூவடியென்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனதாவியுள் கலந்தே. 2.3.3
2926:
எனதாவியுள் கலந்த* பெருநல்லுதவிக்கைம்மாறு,*
எனதாவி தந்தொழிந்தேன்* இனிமீள்வதென்பது உண்டே,*
எனதாவியாவியும் நீ* பொழிலேழும் உண்ட எந்தாய்,*
எனதாவியார் யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே. 2.3.4
2927:
இனியார் ஞானங்களால்* எடுக்கலெழாத எந்தாய்,*
கனிவார் வீட்டின்பமே* என்கடல்படா அமுதே,*
தனியேன் வாழ்முதலே* பொழிலேழும் ஏனமொன்றாய்,*
நுனியார் கோட்டில் வைத்தாய்* உன்பாதம் சேர்ந்தேனே. 2.3.5
2928:
சேர்ந்தார் தீவினைகட்கு* அருநஞ்சைத்திண்மதியை,*
தீர்ந்தார் தம்மனத்துப்* பிரியாதவர் உயிரை,*
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை* அரக்கியைமூக்கு
ஈர்ந்தாயை,* அடியேன் அடைந்தேன்* முதல்முன்னமே. 2.3.6
2929:
முன்நல்யாழ்பயில் நூல்* நரம்பின் முதிர் சுவையே,*
பன்னலார் பயிலும்* பரனே பவித்திரனே,*
கன்னலே அமுதே* கார்முகிலே என்கண்ணா,*
நின்னலால் இலேன்காண்* என்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7
2930:
குறிக்கொள் ஞானங்களால்* எனையூழிசெய்தவமும்,*
கிறிக்கொண்டிப்பிறப்பே* சிலநாளில் எய்தினன்யான்,*
உறிக்கொண்ட வெண்ணெய்பால்* ஒளித்துண்ணும் அம்மான் பின்,*
நெறிக்கொண்டநெஞ்சனாய்* பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8
2931:
கடிவார்தண்ணந்துழாய்* கண்ணன் விண்ணவர்பெருமான்,*
படிவான்மிறந்த* பரமன் பவித்திரன்சீர்,*
செடியார்நோய்கள்கெடப்* படிந்துகுடைந்தாடி,*
அடியேன் வாய்மடுத்துப்* பருகிக் களித்தேனே. 2.3.9
2932:
களிப்பும் கவர்வும் அற்றுப்* பிறப்புப் பிணி மூப்பு இறப்பற்று,*
ஒளிக்கொண்ட சோதியுமாய்* உடன்கூடுவதென்றுகொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்* சுடராழிசங்கேந்தி,*
அளிக்கின்ற மாயப்பிரான்* அடியார்கள் குழாங்களையே. 2.3.10
2933:
குழாங்கொள் பேரரக்கன்* குலம் வீய முனிந்தவனை,*
குழாங்கொள் தென்குருகூர்ச்* சடகோபன்தெரிந்துரைத்த,*
குழாங்கொள் ஆயிரத்துள்* இவைபத்தும் உடன்பாடி,*
குழாங்களாய் அடியீருடன்* கூடிநின்றாடுமினே. 2.3.11
நான்காம் திருமொழி
2934:
ஆடியாடி* அகம்கரைந்து,* இசை
பாடிப்பாடிக்* கண்ணீர்மல்கி,* எங்கும்
நாடிநாடி* நரசிங்கா என்று,*
வாடிவாடும்* இவ்வாணுதலே. 2.4.1
2935:
வாணுதல்* இம்மடவரல்,* உம்மைக்
காணும் ஆசையுள்* நைகின்றாள்,* விறல்
வாணன்* ஆயிரந்தோள்துணித்தீர்,* உம்மைக்
காண* நீர் இரக்கமிலீரே. 2.4.2
2936:
இரக்க மனத்தோடு* எரியணை,*
அரக்கும் மெழுகும்* ஒக்குமிவள்,*
இரக்கமெழிர்* இதற்கு என்செய்கேன்,*
அரக்கனிலங்கை* செற்றீருக்கே. 2.4.3
2937:
இலங்கைசெற்றவனே என்னும்,* பின்னும்
வலங்கொள்* புள்ளுயர்த்தாய் என்னும்,* உள்ளம்
மலங்க* வெவ்வுயிர்க்கும்,* கண்ணீர்மிகக்
கலங்கிக்* கைதொழும் நின்று இவளே. 2.4.4
2938:
இவள் இராப்பகல்* வாய்வெரீஇ,* தன
குவளையொண்* கண்ணநீர் கொண்டாள்,* வண்டு
திவளும்* தண்ணந் துழாய்கொடீர்,* என
தவளவண்ணர்* தகவுகளே. 2.4.5
2939:
தகவுடையவனே என்னும்,* பின்னும்
மிகவிரும்பும்* பிரான் என்னும்,* எனது
அகவுயிர்க்கு* அமுதே என்னும்,* உள்ளம்
உகவுருகி* நின்று உள்ளுளே. 2.4.6
2940:
உள்ளுளாவி* உலர்ந்துலர்ந்து,* என
வள்ளலே* கண்ணனே என்னும்,* பின்னும்
வெள்ளநீர்க்* கிடந்தாய் என்னும்,* என
கள்விதான்* பட்ட வஞ்சனையே. 2.4.7
2941:
வஞ்சனே என்னும்* கைதொழும்,* தன
நெஞ்சம்வேவ* நெடிதுயிர்க்கும்,* விறல்
கஞ்சனை* வஞ்சனை செய்தீர்,* உம்மைத்
தஞ்சமென்று* இவள் பட்டனவே. 2.4.8
2942:
பட்டபோது* எழு போதறியாள்,* விரை
மட்டலர்* தண்துழா யென்னும்,* சுடர்
வட்டவாய்* நுதி நேமியீர்,* நுமது
இட்டம் என்கொல்* இவ்வேழைக்கே. 2.4.9
2943:
ஏழைபேதை* இராப்பகல்,* தன
கேழில் ஒண்* கண்ணநீர் கொண்டாள்,* கிளர்
வாழ்வைவேவ* இலங்கை செற்றீர்,* இவள்
மாழைநோக்கு ஒன்றும்* வாட்டேன்மினே. 2.4.10
2944:
வாட்டமில்புகழ்* வாமனனை,* இசை
கூட்டி* வண்சடகோபன் சொல்,* அமை
பாட்டு* ஓராயிரத்து இப் பத்தால்,* அடி
சூட்டலாகும்* அந்தாமமே. 2.4.11
ஐந்தாம் திருமொழி
2945:
அந்தாமத்து அன்புசெய்து* என்னாவிசேர் அம்மானுக்கு,*
அந்தாமவாழ்முடிசங்கு* ஆழிநூல் ஆரமுள,*
செந்தாமரைத் தடம்கண்* செங்கனிவாய் செங்கமலம்,*
செந்தாமரையடிக்கள்* செம்பொன் திருவுடம்பே. 2.5.1
2946:
திருவுடம்புவான் சுடர்* செந்தாமரைகண் கைகமலம்,*
திருவிடமே மார்பம்* அயனிடமேகொப்பூழ்,*
ஒருவிடமும்* எந்தை பெருமாற்கு அரனேயோ,*
ஒருவிடம் ஒன்றின்றி* என்னுள்கலந்தானுக்கே. 2.5.2
2947:
என்னுள்கலந்தவன்* செங்கனிவாய்செங்கமலம்,*
மின்னும் சுடர் மலைக்கு* கண்பாதம்கைகமலம்,*
மன்னுமுழுவேழ் உலகும்* வயிற்றினுள,*
தன்னுள்கலவாதது* எப்பொருளும்தானிலையே. 2.5.3
2948:
எப்பொருளும் தானாய்* மரகதக்குன்றமொக்கும்,*
அப்பொழுதைத்தாமரைப்பூக்* கண்பாதம் கைகமலம்,*
எப்பொழுதும் நாள்திங்கள்* ஆண்å ஊழியூழிதொறும்,*
அப்பொழுதைக் அப்பொழுது* என்னாராவமுதமே. 2.5.4
2949:
ஆராவமுதமாய்* அல்லாவியுள்கலந்த,*
காரார் கருமுகில்போல்* என்னம்மான் கண்ணனுக்கு,*
நேராவாய் செம்பவளம்* கண்பாதம் கைகமலம்,*
பேரார நீள் முடிநாண்* பின்னும் இழைபலவே. 2.5.5
2950:
பலபலவே ஆபரணம்* பேரும் பலபலவே,*
பலபலவே சோதி* வடிவு பண்பு எண்ணில்,*
பலபல கண்டுண்டு* கேட்டுற்றுமோந்தின்பம்,*
பலபலவே ஞானமும்* பாம்பணைமேலாற்கேயோ. 2.5.6
2951:
பாம்பணைமேல் பாற்கடலுள்* பள்ளி அமர்ந்ததுவும்,*
காம்பணைதோள் பின்னைக்கா* ஏறுடன் ஏழ்செற்றதுவும்,*
தேம்பணைய சோலை* மராமரம் ஏழெய்ததுவும்,*
பூம்பிணைய தண்துழாய்* பொன்முடியம் போரேறே. 2.5.7
2952:
பொன்முடியம் போரேற்றை* எம்மானை நால்தடந்தோள்,*
தன்முடி ஒன்றில்லாத* தன் துழாய் மாலையனை,*
என்முடிவு காணாதே* என்னுள் கலந்தானை,*
சொல் முடிவு காணேன்நான்* சொல்லுவது என் சொல்லீரே. 2.5.8
2953:
சொல்லீர் என்னம்மானை* என்னாவியாவிதனை,*
எல்லையில்சீர்* என் கருமாணிக்கச்சுடரை,*
நல்லவமுதம்* பெறற்கரிய வீடுமாய்,*
அல்லிமலர் விரையொத்து* ஆணல்லன் பெண்ணல்லனே. 2.5.9
2954:
ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே. 2.5.10
2955:
கூறுதலொன்றாராக்* குடக்கூத்த அம்மானை,*
கூறுதலே மேவிக்* குருகூர்ச்சடகோபன்,*
கூறின அந்தாதி* ஓராயிரத்துள் இப்பத்தும்,*
கூறுதல் வல்லாருளரேல்* கூடுவர் வைகுந்தமே. 2.5.11
ஆறாம் திருமொழி
2956:
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத்திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தாவருந்தீமை* உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா,* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. 2.6.1
2957:
சிக்கெனச்சிறுதோரிடமும்* புறப்படாத்தன்னுள்ளே,* உலகுகள்
ஒக்கவே விழுங்கிப்* புகுந்தான் புகுந்ததற்பின்,*
மிக்க ஞான வெள்ளச்சுடர் விளக்காய்த்* துளக்கற்று அமுதமாய்,* எங்கும்
பக்கம் நோக்கறியான்* என் பைந்தாமரைக் கண்ணனே. 2.6.2
2958:
தாமரைக்கண்ணனை* விண்ணோர் பரவும் தலைமகனை,* துழாய்விரைப்
பூமருவு கண்ணி* எம்பிரானைப் பொன்மலையை,*
நாமருவிநன்கேத்தி* உள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட,* நாவலர்
பாமருவி நிற்கத்தந்த* பான்மையேய் வள்ளலே. 2.6.3
2959:
வள்ளலே மதுசூதனா* என்மரதகமலையே,* உனைநினைந்து,
எள்கல்தந்த எந்தாய்* உன்னை எங்ஙனம் விடுகேன்,?*
வெள்ளமே புரைநின்புகழ் குடைந்தாடிப்பாடி* களித்து உகந்துகந்து*
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து* உய்ந்து போந்திருந்தே. 2.6.4
2960:
உய்ந்துபோந்து என்னுலப்பிலாத* வெந்தீ வினைகளை நாசஞ்செய்து* உனது
அந்தமிலடிமை* அடைந்தேன் விடுவேனோ,?*
ஐந்துபைந்தலை ஆட அரவணைமேவிப்* பாற்கடல் யோகநித்திரை,*
சிந்தை செய்த எந்தாய்* உன்னைச் சிந்தை செய்துசெய்தே. 2.6.5
2961:
உன்னைச் சிந்தை செய்துசெய்து* உன்நெடுமா மொழி இசைபாடியாடி* என்
முன்னைத் தீவினைகள்* முழுவே அரிந்தனன்யான்,*
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த* இரணியன கல்மார்வம் கீண்ட* என்
முன்னைக் கோளரியே* முடியாததென் எனக்கே. 2.6.6
2962:
முடியாததென் எனக்கேல் இனி?* முழுவேழுலகுமுண்டான்* உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான்* அகல்வானுமல்லன் இனி,*
செடியார் நோய்களெல்லாம் துரந்து* எமர்க்கீழ் மேலெழு பிறப்பும்,*
விடியா வெந்நரகத்து என்றும்* சேர்தல்மாறினரே. 2.6.7
2963:
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து* அடியை அடைந்து உள்ளம் தேறி*
ஈறில் இன்பத்திருவெள்ளம்* யான் மூழ்கினன்,*
பாறிப்பாறி அசுரர்தம்* பல்குழாங்கள் நீறெழ,* பாய்பறவையொன்று
ஏறிவீற்றிருந்தாய்* உன்னை என்னுள்நீக்கேல் எந்தாய். 2.6.8
2964:
எந்தாய்! தண்திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாளேழுருவ * ஒரு வாளிகோத்த வில்லா,*
கொந்தார் தண்ணந்துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்-
மைந்தா,* வானேறே* இனியெங்குப்போகின்றதே?. 2.6.9
2965:
போகின்ற காலங்கள் போய காலங்கள்* போகு காலங்கள்,* தாய்தந்தை உயி-
ராகின்றாய்* உன்னை நானடைந்தேன் விடுவேனோ,?
பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும்* நாதனே! பரமா,* தண்வேங்கடம்
மேகின்றாய்* தண்துழாய் விரைநாறுகண்ணியனே. 2.6.10
2966:
கண்ணித் தண்ணந்துழாய் முடிக்* கமலத்தடம் பெருங் கண்ணனை,* புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்* சடகோபன் மாறன்சொன்ன,*
எண்ணில் சோர்விலந்தாதி* ஆயிரத்துள் இவையும் ஓர்பத்திசையொடும்,*
பண்ணின் பாடவல்லாரவர்* கேசவன்தமரே. 2.6.11
ஏழாம் திருமொழி
2967:
கேசவன்தமர்* கீழ்மேலெமர் ஏழெழுபிறப்பும்,*
மாச திரிதுபெற்று* நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
ஈசன் என்கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்* விண்ணோர்
நாயகன்,* எம்பிரான் எம்மான்* நாராயணனாலே. 2.7.1
2968:
நாரணன் முழுவேழுலகுக்கும்* நாதன் வேதமயன்,*
காரணம் கிரிசை கருமமிவை* முதல்வன் எந்தை,*
சீரணங்கமரர் பிறர் பலரும்* தொழுதேத்தநின்று,*
வாரணத்தை மருப்பொசித்த பிரான்* என் மாதவனே. 2.7.2
2969:
மாதவன் என்றதேகொண்டு* என்னை இனி இப்பால் பட்டது,*
யாதவங்களும் சேர்க்கொடேனென்று* என்னுள் புகுந்திருந்து,*
தீதவம் கெடுக்கும் அமுதம்* செந்தாமரைக்கண் குன்றம்,*
கோதவமிலென் கன்னற்கட்டி* எம்மான் என் கோவிந்தனே. 2.7.3
2970:
கோவிந்தன் குடக்கூத்தன்* கோவலனென்றென்றேகுனித்து*
தேவும்தன்னையும்* பாடியாடத்திருத்தி,* என்னைக்கொண்டு என்
பாவந்தன்னையும்* பாறக்கைத்து எமரேழெழுபிறப்பும்,*
மேவும் தன்மையமாக்கினான்* வல்லன் எம்பிரான் விட்டுவே. 2.7.4
2971:
விட்டிலங்குசெஞ்சோதித்* தாமரைபாதம் கைகள் கண்கள்,*
விட்டிலங்கு கருஞ்சுடர்* மலையே திருவுடம்பு,*
விட்டிலங்கு மதியம்சீர்* சங்குசக்கரம்பரிதி,*
விட்டிலங்கு முடியம்மான்* மதுசூதனன் தனக்கே. 2.7.5
2972:
மதுசூதனையன்றி மற்றிலேனென்று* எத்தாலும் கருமமின்றி,*
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட* நின்றூழியூழிதொறும்,*
எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும்* எனக்கே அருள்கள் செய்ய,*
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்* திரிவிக்கிரமனையே. 2.7.6
2973:
திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்* எம்மான் என் செங்கனிவாய்*
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு* நிறத்தனனென்றென்று,* உள்ளிப்
பரவிப் பணிந்து* பல்லூழியூழி நின்பாதபங்கயமே,*
மருவித் தொழும் மனமே தந்தாய்* வல்லைகாண் என் வாமனனே. 2.7.7
2974:
வாமனன் என் மரதகவனன்* தாமரைக் கண்ணினன்
காமனைப்பயந்தாய்,* என்றென்ற் உன்கழல் பாடியே பணிந்து,*
தூமனத்தனனாய்* பிறவித்துழதிநீங்க,* என்னைத்
தீமனங்கெடுத்தாய் *உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே. 2.7.8
2975:
சிரீஇதரன் செய்யதாமரைக்கண்ணன்* என்றென்று இராப்பகல்வாய்
வெரீஇ,* அலமந்து கண்கள் நீர்மல்கி* வெவ்வுயிர்த்துயிர்த்து,*
மரீஇயதீவினைமாள இன்பம்வளர* வைகல்வைகல்
இரீஇ,* உன்னை என்னுள் வைத்தனை* என் இருடீகேசனே. 2.7.9
2976:
இருடீகேசன் எம்பிரான்* இலங்கை அரக்கர்க்குலம்,*
முருடு தீர்த்தபிரான் எம்மான்* அமரர் பெம்மானென்றென்று,*
தெருடியாகில் நெஞ்சேவணங்கு* திண்ணம் அறி அறிந்து,*
மருடியேலும் விடேல்கண்டாய்* நம்பி பற்பநாபனையே. 2.7.10
2977:
பற்பநாபன் உயர்வறவுயரும்* பெருந்திறலோன்,*
எற்பரன் என்னையாக்கிக்கொண்டு* எனக்கே தன்னைத்தந்த
கற்பகம்,* என்னமுதம் கார்முகில்போலும்* வேங்கடநல்
வெற்பன்,* விசும்போர்பிரான்* எந்தை தாமோதரனே. 2.7.11
2978:
தாமோதரனைத் தனிமுதல்வனை* ஞாலம் உண்டவனை,*
ஆமோதரமறிய* ஒருவர்க்கென்றெ தொழுமவர்கள்,*
தாமோதரன் உருவாகிய* சிவற்கும் திசைமுகற்கும்,*
ஆமோதரமறிய* எம்மானை என் ஆழிவண்ணனையே. 2.7.12
2979:
வண்ணமாமணிச்சோதியை* அமரர் தலைமகனை,*
கண்ணனை நெடுமாலைத்* தென்குருகூர்ச்சடகோபன்,*
பண்ணிய தமிழ்மாலை* ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,*
பண்ணிற் பன்னிருநாமப் பாட்டு* அண்ணல்தாள் அணைவிக்குமே. 2.7.13
எட்டாம் திருமொழி
2980:
அணைவது அரவணைமேல்* பூம்பாவையாகம்
புணர்வது,* இருவரவர் முதலும்தானே,*
இணைவனாம்* எப்பொருட்கும் வீடுமுதலாம்,*
புணைவன்* பிறவிக்கடல் நீந்துவார்க்கே. 2.8.1
2981:
நீந்தும் துயர்ப் பிறவி* உட்பட மற்றெவ்வெவையும்,*
நீந்தும் துயரில்லா* வீடு முதலாம்,*
பூந்தண் புனல் பொய்கை* யானை இடர்க்கடிந்த,*
பூந்தண்துழாய்* என்தனிநாயகன்புணர்ப்பே. 2.8.2
2982:
புணர்க்கும் அயனாம்* அழிக்கும் அரனாம்,*
புணர்த்த தன்னுந்தியோடு* ஆகத்துமன்னி,*
புணர்த்த திருவாகித்* தன்மார்வில்தான்சேர்,*
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு* எங்கும்புலனே. 2.8.3
2983:
புலனைந்துமேயும்* பொறியைந்தும் நீக்கி,*
நலமந்தமில்லது ஓர்* நாடு புகுவீர்,*
அலமந்து வீய* அசுரரைச் செற்றான்,*
பலமுந்துசீரில்* படிமின் ஓவாதே. 2.8.4
2984:
ஓவாத் துயர்ப் பிறவி* உட்பட மற்றெவ் வெவையும்,*
மூவாத் தனிமுதலாய்* மூவுலகும் காவலோன்,*
மாவாகி ஆமையாய்* மீனாகி மானிடமாம்,*
தேவாதி தேவபெருமான்* என்தீர்த்தனே. 2.8.5
2985:
தீர்த்தன் உலகளந்த* சேவடிமேல்பூந்தாமம்,*
சேர்த்தி அவையே* சிவன்முடிமேல் தான்கண்டு,*
பார்த்தன் தெளிந்தொழிந்த* பைந்துழாயான் பெருமை,*
பேர்த்தும் ஒருவரால்* பேசக்கிடந்ததே?. 2.8.6
2986:
கிடந்திருந்து நின்றளந்து* கேழலாய்க்கீழ்புக்கு
இடந்திடும்,* தன்னுள் கரக்கும் உமிழும்,*
தடம் பெருந்தோள் ஆரத்தழுவும்* பாரென்னும்
மடந்தையை,* மால் செய்கின்ற* மால் ஆர் காண்பாரே?. 2.8.7
2987:
காண்பாரார்? எம்மீசன்* கண்ணனை என்காணுமாறு,?*
ஊண்பேசில் எல்லா* உலகும் ஓர் துற்றாற்றா,*
சேண்பாலவீடோ* உயிரோ மற்றெப் பொருட்கும்,*
ஏண்பாலும் சோரான்* பரந்துளனாம் எங்குமே. 2.8.8
2988:
எங்கும்முளன் கண்ணனென்ற* மகனைக்காய்ந்து,*
இங்கில்லையாலென்று* இரணியன் தூண்புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப்பிரான் பெருமை* ஆராயும்சீர்மைத்தே. 2.8.9
2989:
சீர்மைகொள்வீடு* சுவர்க்கநரகீறா,*
ஈர்மைகொள் தேவர்*நடுவா மற்றெப் பொருட்கும்,*
வேர்முதலாய் வித்தாய்ப்* பரந்து தனிநின்ற,*
கார்முகில்போல் வண்ணன்* என் கண்ணனை நான் கண்டேனே. 2.8.10
2990:
கன் தலங்கள் செய்ய* கருமேனியம்மானை,*
வண்டலம்பும்சோலை* வழுதிவளநாடன்,*
பந்தலையில் சொன்னதமிழ்* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*
விண் தலையில் வீற்றிருந்தாள்வர்* எம்மாவீடே. 2.8.11
ஒன்பதாம் திருமொழி
2991:
எம்மாவீட்டுத்* திறமும்செப்பம்,* நின்
செம்மா பாதபற்புத்* தலைசேர்த்து ஒல்லை,*
கைம்மாதுன்பம்* கடிந்தபிரானே,*
அம்மா அடியேன்* வேண்டுவது ஈதே. 2.9.1
2992:
ஈதே யானுன்னைக்* கொள்வது எஞ்ஞான்றும்,* என்
மைதோய்சோதி* மணிவண்ண எந்தாய்,*
எய்தா நின்கழல்* யானெய்த,* ஞானக்
கைதா* காலக் கழிவு செய்யேலே. 2.9.2
2993:
செய்யேல் தீவினையென்று* அருள்செய்யும்,* என்
கையார்ச் சக்கரக்* கண்ணபிரானே,*
ஐயார் கண்டம் அடைக்கிலும்* நின்கழல்
எய்யாது ஏத்த,* அருள் செய் எனக்கே. 2.9.3
2994:
எனக்கேயாட்செய்* எக்காலத்தும் என்று,* என்
மனக்கே வந்து* இடைவீடின்றிமன்னி,*
தனக்கேயாக* எனைக்கொள்ளும் ஈதே,*
எனக்கே கண்ணனை* யான்கொள்சிறப்பே. 2.9.4
2995:
சிறப்பில் வீடு* சுவர்க்கம் நரகம்,*
இறப்பில் எய்துக* எய்தற்க,* யானும்
பிறப்பில்* பல்பிறவிப் பெருமானை,*
மறப்பொன்றின்றி* என்றும் மகிழ்வேனே. 2.9.5
2996:
மகிழ்கொள் தெய்வம்* உலோகம் அலோகம்,*
மகிழ்கொள் சோதி* மலர்ந்த அம்மானே,*
மகிழ்கொள் சிந்தை* சொல் செய்கை கொண்டு,* என்றும்
மகிழ்வுற்று* உன்னை வணங்கவாராயே. 2.9.6
2997:
வாராய்* உன் திருப்பாத மலர்க்கீழ்,*
பேராதே யான் வந்து* அடையும்படி
தாராதாய்,* உன்னை என்னுள்* வைப்பில் என்றும்
ஆராதாய்,* எனக்கு என்றும் எக்காலே. 2.9.7
2998:
எக்காலத்தெந்தையாய்* என்னுள்மன்னில்,* மற்று
எக்காலத்திலும்* யாதொன்றும் வேண்டேன்,*
மிக்கார் வேத* விமலர்விழுங்கும்,* என்
அக்காரக்கனியே* உன்னையானே. 2.9.8
2999:
யானே என்னை* அறியகிலாதே,*
யானே என்தனதே* என்றிருந்தேன்,*
யானேநீ* எனÛனுடைமையும் நீயே,*
வானேயேத்தும்* எம்வானவரேறே. 2.9.9
3000:
ஏறேல் ஏழும்* வென்று ஏர்க்கொளிலங்கையை,*
நீறேசெய்த* நெடுஞ்சுடர்ச்சோதி,*
தேறேல் என்னை* உன் பொன்னடிச்சேர்த்து* ஒல்லை,
வேறேபோக* எஞ்ஞான்றும் விடலே. 2.9.10
3001:
விடலில் சக்கரத்து *அண்ணலை,மேவல்*
விடலில் வண்குருகூர்ச்* சடகோபன்சொல்,*
கெடலில் ஆயிரத்துள்* இவைபத்தும்,*
கெடலில் வீடுசெய்யும்* கிளர்வார்க்கே. 2.9.11
பத்தாம் திருமொழி
3002:
கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*
வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*
வளரிளம் பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர் விலராகிச்* சார்வதுசதிரே. 2.10.1
3003:
சதிரிள மடவார்* தாழ்ச்சியை மதியாது,*
அதிர் குரல் சங்கத்து* அழகர்தம்கோயில்,*
மதிதவழ்குடுமி* மாலிருஞ்சோலை,*
பதியது ஏத்தி* எழுவது பயனே. 2.10.2
3004:
பயனல்ல செய்து* பயனில்லை நெஞ்சே,*
புயல்மழை வண்ணர்* புரிந்துறைகோயில்,*
மயல்மிகு பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*
அயன்மலை அடைவது* அதுகருமமே. 2.10.3
3005:
கருமவன்பாசம்* கழித்துழன்றுய்யவே,*
பெருமலையெடுத்தான்* பீடுறைகோயில்,*
வருமழை தவழும்* மாலிருஞ்சோலை,*
திருமலையதுவே* அடைவதுதிறமே. 2.10.4
3006:
திறமுடை வலத்தால்* தீவினை பெருக்காது,*
அறமுயலாழிப்* படையவன் கோயில்,*
மறுவில் வண்சுனை சூழ்* மாலிருஞ்சோலை,*
புறமலை சாரப்* போவதுகிறியே. 2.10.5
3007:
கிறியென நினைமின்* கீழ்மை செய்யாதே,*
உறியமர் வெண்ணெய்* உண்டவன் கோயில்,*
மறியொடு பிணைசேர்* மாலிருஞ்சோலை,*
நெறிபட அதுவே* நினைவதுநலமே. 2.10.6
3008:
நலமென நினைமின்* நரகழுந்தாதே,*
நிலமுனமிடந்தான்* நீடுறை கோயில்,*
மலமறுமதிசேர்* மாலிருஞ்சோலை,*
வலமுறையெய்தி* மருவுதல் வலமே. 2.10.7
3009:
வலம்செய்து வைகல்* வலங்கழியாதே,*
வலம்செய்யும் ஆய* மாயவன் கோயில்,*
வலம்செய்யும் வானோர்* மாலிருஞ்சோலை,*
வலம்செய்து நாளும்* மருவுதல் வழக்கே. 2.10.8
3010:
வழக்கென நினைமின்* வல்வினை மூழ்காது,*
அழக்கொடியட்டான்* அமர் பெருங் கோயில்,*
மழக்களிற்றினம் சேர்* மாலிருஞ்சோலை,*
தொழுக் கருதுவதே* துணிவது சூதே. 2.10.9
3011:
சூதென்று களவும்* சூதும் செய்யாதே,*
வேதமுன் விரித்தான்* விரும்பிய கோயில்,*
மாதுறு மயில்சேர்* மாலிருஞ்சோலை,*
போதவிழ் மலையே* புகுவது பொருளே. 2.10.10
3012:
பொருளென்று இவ்வுலகம்* படைத்தவன் புகழ்மேல்,*
மருளில் வண்குருகூர்* வண்சடகோபன்,*
தெருள்கொள்ளச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்து,*
அருளுடையவன் தாள்* அணைவிக்கும் முடித்தே. 2.10.11