திருப்பல்லாண்டு


ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு

தனியன்கள்-நாதமுனிகள் அருளிச் செய்தது

குருமுக மனதீத்ய ப்ராஹ வேதான ஶேஷாந்

            நரபதி பரிக்லுப்தம் ஶíல்க மாதாது காம:

ஶ்வஶுர மமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்

            த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி||

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்*

சொன்னார் கழற்கமலம் சூடினோம்* – முன்னாள்

கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும்-

வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று*

ஈண்டியசங்கம் எடுத்தூத* – வேண்டிய

வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*

பாதங்கள்யாமுடையபற்று.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*

பலகோடி நூறாயிரம்*

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்-

சேவடி செவ்வி திருக்காப்பு. (2)                                      

 

அடியோமோடும்நின்னோடும்* பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு*

வடிவாய் நின்வல மார்பினில் *வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*

வடிவார் சோதி வலத்துறையும்* சுடராழியும் பல்லாண்டு*

படைபோர் புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)             

 

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் *வந்து மண்ணும் மணமும் கொண்மின்*

கூழாட்பட்டு நின்றீர்களை* எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*

ஏழாட்காலும் பழிப்பிலோம்* நாங்கள் இராக்கதர்வாழ்* இலங்கை-

பாழாளாகப் படை பொருதானுக்குப்* பல்லாண்டு கூறுதமே.   1.1.3.

 

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து * எங்கள் குழாம் புகுந்து*

கூடு மனமுடையீர்கள் வரம்பொழி* வந்துஒல்லைக்கூடுமினோ*

நாடும் நகரமும் நன்கறிய* நமோ நாராயணாயவென்று*

பாடு மனமுடைப் பத்தருள்ளீர்!* வந்து பல்லாண்டு கூறுமினே.    1.1.4.

 

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*

இண்டைக்குலத்தை எடுத்துக்களைந்த* இருடீகேசன்தனக்கு*

தொண்டக்குலத்திலுள்ளீர்!* வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி*

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.     

 

எந்தை தந்தை தந்தை தந்தைதன் மூத்தப்பன் *ஏழ்படி கால்தொடங்கி*

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்*

அந்தியம்போதில் அரியுருவாகி* அரியை அழித்தவனை*

பந்தனை தீரப் பல்லாண்டு* பல்லாயிரத்தாண்டென்று பாடுதமே.   1.1.6.

 

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி* திகழ் திருச்சக்கரத்தின்*

கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று* குடிகுடி ஆட்செய்கின்றோம்*

மாயப் பொருபடை வாணனை* ஆயிரந்தோளும் பொழிகுருதி-

பாய * சுழற்றிய ஆழி வல்லானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே.      1.1.7.

 

நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும்*

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து *என்னை வெள்ளுயிராக்க வல்ல*

பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே. 1.1.8

 

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக்* கலத்ததுண்டு*

தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன* சூடும் இத்தொண்டர்களோம்*

விடுத்த திசைக்கருமம் திருத்தித்* திருவோணத் திருவிழவில்*

படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப்* பல்லாண்டு கூறுதுமே. 1.1.9.

 

எந்நாள்எம்பெருமான் *உன்தனக்கு அடியோமென்று எழுத்துப்பட்ட-

அந்நாளே *அடியோங்கள் அடிக்குடில்* வீடுபெற்று உய்ந்ததுகாண்*

செந்நாள் தோற்றித்* திருமதுரையுள் சிலைகுனித்து *ஐந்தலைய-

பைந்நாகத் தலை பாய்ந்தவனே!* உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 1.1.10.

 

அல்வழக்கொன்றுமில்லா *அணிகோட்டியர்கோன்* அபிமானதுங்கன்-

செல்வனைப்போலத் * திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்*

நல்வகையால் நமோநாராயணா என்று *நாமம் பலபரவி*

பல்வகையாலும் பவித்திரனே! *உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (2) 1.1.11

 

பல்லாண்டென்று பவித்திரனைப்* பரமேட்டியை *சார்ங்கம் என்னும்-

வில்லாண்டான் தன்னை* வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்*

நல்லாண்டென்று நவின்றுரைப்பார்* நமோ நாராயணாயவென்று*

பல்லாண்டும் பரமாத்மனை* சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. (2) 1.1.12.

 

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.