ஆறாம் பத்து
முதல் திருமொழி – வண்டுணுநருமலர்
1448:##
வண்டுணுநறுமலர் இண்டைகொண்டு* பண்டைநம் வினைகெடஎன்று*அடிமேல் தொண்டரும் அமரும் பணியநின்று* அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே* (6.1.1)
1449:
அண்ணல்செய்து அலைகடல் கடைந்து*அதனுள்கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே!*
விண்ணவர்அமுதுண அமுதில்வரும்* பெண்ணமுதுண்ட எம்பெருமானே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.2)
1450:
குழல்நிறவண்ண! நின்கூறுகொண்ட* தழல்நிறவண்ணன் நண்ணார்நகரம்விழ*
நனிமலைசிலை வளைவுசெய்து* அங்கழல்நிற அம்பதுவானவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.3)
1451:
நிலவொடுவெயில் நிலவிஇருசுடரும்* உலகமும் உயிர்களும் உண்டொருகால்*
கலைதரு குழவியின் உருவினையாய்* அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.4)
1452:
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்* சீர்கெழும் இவ்வுலகேழுமெல்லாம்*
ஆர்கெழுவயிற்றினில் அடக்கிநின்று* அங்குஓரெழுத்தோர் உருவானவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.5)
1453:
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்* ஏர்கெழும் உலகமுமாகி*
முதலார்களும் அறிவருநிலையினையாய்ச்* சீர்கெழு நான்மறையானவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.6)
1454:
உருக்குறு நறுநெய்கொண்டு ஆரழலில்* இறுக்குறும் அந்தணர் சந்தியின்வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமரநல்கும்* இருக்கினில் இன்னிசையானவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.7)
1455:
காதல்செய்து இளையவர் கலவிதரும்* வேதனை வினையது வெருவுதலாம்*
ஆதலின்உனதடி அணுகுவன்நான்!* போதலார் நெடுமுடிப் புண்ணியனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே (6.1.8)
1456:
சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்* காதல்செய்யாது உனகழல்அடைந்தேன்*
ஓதல்செய் நான்மறையாகி* உம்பர்ஆதல்செய் மூவுருவானவனே!*
ஆண்டாய்!உனைக் காண்பதோர்* அருளெனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே! (6.1.9)
1457:##
பூமரு பொழிலணி* விண்ணகர்மேல்*
காமருசீர்க்* கலிகன்றிசொன்ன*
பாமருதமிழிவை* பாடவல்லார்*
வாமனன்அடியிணை* மருவுவரே* (6.1.10)
இரண்டாம் திருமொழி – பொறுத்தேன்
1458:##
பொறுத்தேன் புன்சொல்நெஞ்சில்* பொருளின்பமென இரண்டும்இறுத்தேன்*
ஐம்புலங்கட்கிடனாயின* வாயிலொட்டிஅறுத்தேன்*
ஆர்வச்செற்றம் அவைதம்மை* மனத்தகற்றி வெறுத்தேன்*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.1)
1459:
மறந்தேன் உன்னைமுன்னம்* மறந்த மதியின் மனத்தால்*
இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக்குழியில்*
பிறந்தே எய்த்தொழிந்தேன்* பெருமான்! திருமார்பா!*
சிறந்தேன் நின்னடிக்கே* திருவிண்ணகர் மேயவனே (6.2.2)
1460:
மானேய் நோக்கியர்தம்* வயிற்றுக்குழியில் உழைக்கும்*
ஊனேராக்கை தன்னை* உதவாமை உணர்ந்துணர்ந்து*
வானே! மானிலமே!* வந்துவந்து என்மனத்திருந்த தேனே*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.3)
1461:
பிறிந்தேன் பெற்றமக்கள்* பெண்டிரென்றிவர் பின்னுதவாதுஅறிந்தேன்*
நீபணித்த அருளென்னும்* ஒள்வாளுருவி எறிந்தேன்*
ஐம்புலங்கள் இடர்த்தீர* எறிந்துவந்து செறிந்தேன்*
நின்னடிக்கே* திருவிண்ணகர் மேயவனே (6.2.4)
1462:
பாண்தேன் வண்டறையும்குழலார்கள்* பல்லாண்டிசைப்ப*
ஆண்டார் வையமெல்லாம்* அரசாகி*முன்னாண்டவரே-
மாண்டாரென்று வந்தார்* அந்தோ! மனைவாழ்க்கைதன்னை வேண்டேன்*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.5)
1463:
கல்லா ஐம்புலங்கள்அவை* கண்டவாறு செய்யகில்லேன்*
மல்லா! மல்லமருள் மல்லர்மாள* மல்லடர்த்தமல்லா!*
மல்லலம் சீர்* மதிள்நீரிலங்கையழித்த வில்லா*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.6)
1464:
வேறாயானிரந்தேன்* வெகுளாது மனக்கொள்எந்தாய்!*
ஆறா வெந்நரகத்து* அடியேனை இடக்கருதி*
கூறாஐவர் வந்துகுமைக்கக்* குடிவிட்டவரை*
தேராது உன்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.7)
1465:
தீவாய வல்வினையார்* உடன்நின்று சிறந்தவர்போல்*
மேவா வெந்நரகத்திட* உற்று விரைந்துவந்தார்*
மூவா வானவர்தம் முதல்வா!* மதிகோள் விடுத்ததேவா*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.8)
1466:
போதார் தாமரையாள்* புலவிக்குல வானவர்தம்கோதா*
கோதில் செங்கோல்* குடைமன்னரிடை நடந்ததூதா*
தூமொழியாய்! சுடர்ப்போல்* என் மனத்திருந்தவேதா*
நின்னடைந்தேன்* திருவிண்ணகர் மேயவனே (6.2.9)
1467:##
தேனார் பூம்புறவில்* திருவிண்ணகர் மேயவனை*
வானாரும் மதில்சூழ்* வயல்மங்கையர்க்கோன் மருவார்*
ஊனார்வேல் கலியன்* ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
கோனாய் வானவர்தம்* கொடிமாநகர் கூடுவரே (6.2.10)
மூன்றாம் திருமொழி – துறப்பேன்
1468:##
துறப்பேன் அல்லேன்* இன்பம் துறவாது*
நின்னவரும் மறப்பேனல்லேன்* என்றும்மறவாது*
யான்உலகில்பிறப்பேனாக எண்ணேன்* பிறவாமை பெற்றது*
நின்திறத்தேன் ஆதன்மையால்* திருவிண்ணகரானே (6.3.1)
1469:
துறந்தேன் ஆர்வச்செற்றச்* சுற்றம் துறந்தமையால்*
சிறந்தேன் நின்னடிக்கே* அடிமை திருமாலே*
அறந்தானாய்த் திரிவாய்* உன்னைஎன் மனத்தகத்தே*
திறம்பாமல் கொண்டேன்* திருவிண்ணகரானே (6.3.2)
1470:
மானேய் நோக்குநல்லார்* மதிபோல் முகத்துஉலவும்*
ஊனேய் கண்வாளிக்கு* உடைந்தோட்டந்து உன்னடைந்தேன்*
கோனே! குறுங்குடியுள்குழகா!* திருநறையூர்த் தேனே*
வருபுனல்சூழ்* திருவிண்ணகரானே (6.3.3)
1471:
சாந்தேந்து மென்முலையார்* தடந்தோள் புணரின்பவெள்ளத்து ஆழ்ந்தேன்*
அருநகரத்தழுந்தும்* பயன்படைத்தேன்*
போந்தேன் புண்ணியனே!* உனையெய்தி என்தீவினைகள் தீர்ந்தேன்*
நின்னடைந்தேன்* திருவிண்ணகரானே (6.3.4)
1472:
மற்றோர் தெய்வமெண்ணேன்* உன்னை என்மனத்துவைத்துப் பெற்றேன்*
பெற்றதுவும்* பிறவாமை எம்பெருமான்*
வற்றா நீள்கடல்சூழ்* இலங்கை இராவணனைச்செற்றாய்*
கொற்றவனே!* திருவிண்ணகரானே (6.3.5)
1473:
மையொண் கருங்கடலும்* நிலனும் மணிவரையும்*
செய்ய சுடரிரண்டும்* இவையாய நின்னை*
நெஞ்சில் உய்யும்வகை உணர்ந்தேன்* உண்மையால் இனி*
யாதும் மற்றோர்தெய்வம் பிறிதறியேன்* திருவிண்ணகரானே (6.3.6)
1474:
வேறே கூறுவதுண்டு* அடியேன் விரித்துரைக்குமாறே*
நீபணியாது அடை* நின் திருமனத்து*
கூறேன் நெஞ்சுதன்னால்* குணங்கொண்டு*
மற்றோர்தெய்வம் தேறேன் உன்னையல்லால்* திருவிண்ணகரானே (6.3.7)
1475:
முளிதீந்த வெங்கடத்து* மூரிப் பெருங்களிற்றால்*
விளிதீந்த மாமரம்போல்* வீழ்ந்தாரை நினையாதே*
அளிந்தோர்ந்த சிந்தை* நின்பால் அடியேற்க்கு*
வானுலகம் தெளிந்தே என்றுஎய்துவது?* திருவிண்ணகரானே (6.3.8)
1476:
சொல்லாய் திருமார்வா!* உனக்காகித் தொண்டுபட்ட நல்லேனை*
வினைகள் நலியாமை* நம்புநம்பீ*
மல்லா! குடமாடி!* மதுசூதனே*
உலகில் செல்லா நல்லிசையாய்!* திருவிண்ணகரானே (6.3.9)
1477:##
தாரார் மலர்க்கமலத்* தடஞ்சூழ்ந்த தண்புறவில்*
சீரார் நெடுமறுகில்* திருவிண்ணகரானை*
காரார் புயல்தடக்கைக்* கலியனொலிமாலை*
ஆரார் இவைவல்லார்* அவர்க்கு அல்லல்நில்லாவே (6.3.10)
நான்காம் திருமொழி – கண்ணும்சுழன்று
1478:##
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளைவந்தேங்கினால்*
பண்ணின் மொழியார்* பையநடமின்‘ என்னாதமுன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியுமாயினான்*
நண்ணு நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே (6.4.1)
1479:
கொங்குண் குழலார்* கூடியிருந்து சிரித்து*
நீரிங்கென் இருமி* எம்பால்வந்ததென்று இகழாதமுன்*
திங்களெரிகால்* செஞ்சுடராயவன் தேசுடை*
நங்கள் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.2)
1480:
கொங்கார் குழலார்* கூடியிருந்து சிரித்து*
எம்மை எங்கோலம் ஐயா!* என்இனிக்காண்பது என்னாதமுன்*
செங்கோல் வலவன்* தான்பணிந்தேத்தித் திகழுமூர்*
நங்கோன் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.3)
1481:
கொம்பும் அரவமும்* வல்லியும்வென்ற நுண்ணேரிடை*
வம்புண்குழலார்* வாசலடைத்து இகழாதமுன்*
செம்பொன் கமுகினம்தான்* கனியும்செழுஞ்சோலைசூழ்*
நம்பன்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.4)
1482:
விலங்கும் கயலும்* வேலும்ஒண்காவியும் வென்றகண்*
சலங்கொண்டசொல்லார்* தாங்கள் சிரித்துஇகழாதமுன்*
மலங்கும் வராலும்* வாளையும்பாய்வயல்சூழ்தரு*
நலங்கொள் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.5)
1483:
மின்னேரிடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என்நீர்இருமி* எம்பால்வந்தது என்றுஇகழாதமுன்*
தொன்னீரிலங்கை மலங்க* விலங்கெரி ஊட்டினான்*
நன்னீர்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே (6.4.6)
1484:
வில்லேர்நுதலார்* வேட்கையை மாற்றிச் சிரித்து*
இவன்பொல்லான் திரைந்தானென்னும்* புறனுரை கேட்பதன்முன்*
சொல்லார் மறைநான்கோதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.7)
1485:
வாளொண்கண் நல்லார்தாங்கள்* மதனனென்றார்தம்மை*
கேண்மின்கள் ஈளையோடு* ஏங்குகிழவன் என்னாதமுன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும்அறாதவூர்*
நாளும்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.8)
1486:
கனிசேர்ந்திலங்கு நல்வாயவர்* காதன்மை விட்டிட*
குனிசேர்ந்துடலம்* கோலில்தளர்ந்து இளையாதமுன்*
பனிசேர் விசும்பில்* பால்மதிகோள் விடுத்தானிடம்*
நனிசேர்நறையூர்* நாம்தொழுதும் எழுநெஞ்சமே. (6.4.9)
1487:##
பிறைசேர் நுதலார்* பேணுதல்நம்மை இலாதமுன்*
நறைசேர் பொழில்சூழ்* நறையூர்தொழு நெஞ்சமே!என்ற*
கறையார் நெடுவேல் மங்கையர்கோன்* கலிகன்றிசொல்*
மறவாதுஉரைப்பவர்* வானவர்க்கு இன்னரசாவாரே (6.4.10)
ஐந்தாம் திருமொழி- கலங்க முந்நீர்
1488:##
கலங்கமுந்நீர் கடைந்து* அமுதம்கொண்டு*
இமையோர் துலங்கல்தீர* நல்குசோதிச் சுடராய*
வலங்கையாழி இடங்கைச்சங்கம்* உடையானூர்*
நலங்கொள்வாய்மை* அந்தணர்வாழும் நறையூரே. (6.5.1)
1489:
முனையார்சீயமாகி* அவுணன் முரண்மார்வம்*
புனைவாளுகிரால்* போழ்படஈர்ந்த புனிதனூர்*
சினையார் தேமாஞ்செந்தளிர்க்கோதிக்* குயில்கூவும்*
நனையார் சோலை சூழ்ந்து* அழகாய நறையூரே. (6.5.2)
1490:
அனைப்புரவி தேரொடுகாலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச்சாடி* இலங்கை செற்றானூர்*
மீனைத் தழுவி வீழ்ந்தெழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமையொளிக்கும் நறையூரே* (6.5.3)
1491:
உறியார் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறியார் கூந்தல்* பின்னைபொருட்டுஆன் வென்றானூர்*
பொறியார் மஞ்ஞை* பூம்பொழில் தோறும் நடமாட*
நறுநாண்மலர்மேல்* வண்டிசைபாடும் நறையூரே. (6.5.4)
1492:
விடையேழ் வென்று* மென்தோளாய்ச்சிகு அன்பனாய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதனூர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*
நடையோடியலி* நாணி ஒளிக்கும் நறையூரே. (6.5.5)
1493:
பகுவாய்வன்பேய்* கொங்கைசுவைத்து ஆருயிருண்டு*
புகுவாய் நின்ற* போதகம்வீழப் பொருதானூர்*
நெகுவாய் நெய்தல்* பூமதுமாந்திக் கமலத்தின்*
நகுவாய் மலர்மேல்* அன்னமுறங்கும் நறையூரே* (6.5.6)
1494:
முந்துநூலும் முப்புரிநூலும்* முன்னீந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தானூர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப்* புள்ளோடி*
நந்துவாரும்* பைம்புனல்வாவி நறையூரே. (6.5.7)
1495:
வெள்ளைப் புரவைத் தேர்விசயற்காய்* விறல்வியூகம்விள்ள*
சிந்துக் கோன்விழ* ஊர்ந்த விமலனூர்*
கொள்ளைக் கொழுமீன்* உண்குருகுஓடிப் பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறலுகுக்கும் நறையூரே. (6.5.8)
1496:
பாரையூரும் பாரம்தீரப்* பார்த்தன்தன்-
தேரையூரும்* தேவ தேவன் சேருமூர்*
தாரையூரும்* தண்தளிர் வேலிபுடைசூழ*
நாரையூரும்* நல்வயல் சூழ்ந்த* நறையூரே. (6.5.9)
1497:##
தாமத்துளப* நீண்முடி மாயன் தான்நின்ற*
நாமத்திரள் மாமாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக்கதிர்வேல் வல்லான்* கலியனொலிமாலை*
சேமத்துணையாம்* செப்புமவர்க்குத் திருமாலே. (6.5.10)
ஆறாம் திருமொழி – அம்பரமும்
1498:##
அம்பரமும் பெருநிலனும் திசைகளெட்டும்*அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்*
கொம்பமரும் வடமரத்தினிலைமேல்* பள்ளிகூடினான் திருவடியே கூடிகிற்பீர்*
வம்பவிழும் செண்பகத்தின் வாசம்உண்டு* மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு*
செம்பியன்கோச்செங்கணான் சேர்ந்தகோயில்* திருநறையூர் மணிமாடம்சேர்மின்களே.
1499:
கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்டகாலம்*
குலவரையின்மீதோடி அண்டத்தப்பால்*
எழுந்துஇனிதுவிளையாடும் ஈசன்எந்தை*
இணையடிக்கீழ் இனிதிருப்பீர்! இனவண்டாலும்*
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல்சிந்தி*
உலகெல்லாம் சந்தனமும் அகிலும்கொள்ள*
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன்சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
1500:
பவ்வநீருடை ஆடையாகச் சுற்றிப்* பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா*
செவ்விமா திரமெட்டும் தோளா* அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லுகிற்பீர்*
கவ்வைமா களிறுந்தி விண்ணியேற்ற* கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற*
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
1501:
பைங்கண் ஆளரியுருவாய் வெருவநோக்கிப்* பருவரைத்தோள் இரணியனைப் பற்றிவாங்கி*
அங்கைவாள் உகிர்நுதியால் அவனதாகம்* அங்குருதி பொங்குவித்தான் அடிக்கீழ்நிற்பீர்*
வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற* விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த*
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
1502:
அன்றுலக மூன்றினையும் அளந்து*
வேறோர்அரியுருவாய் இரணியனதாகம்கீண்டு*
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த்தாற்கு*
விருந்தாவீர்!மேலெழுந்து விலங்கல்பாய்ந்து*
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல்சீந்திப்*
புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்*
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. (6.6.5)
1503:
தன்னாலே தன்னுருவம் பயந்ததானாய்த்* தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்*
தன்னாலே தன்னுருவின் மூர்த்தி மூன்றாய்த்* தானாயனாயினான் சரணென்றுய்வீர்*
மின்னாடுவேலேந்து விளைந்தவேளை* விண்ணேறத் தனிவேலுய்த்து உலகமாண்ட*
தென்னாடன் குடகொங்கன் சோழன்சேர்ந்த* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1504:
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி*
முதுதுவரைக் குலபதியாக்காலிப்பின்னே*
இலைத்தடத்த குழலூதிஆயர்மாதர்*
இனவளைகொண்டான் அடிக்கீழ்எய்தகிற்பீர்*
மலைத்தடத்த மணிகொணர்ந்து வையம்உய்ய*
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்*
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. (6.6.7)
1505:
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்*
மன்னெல்லாம் முன்னவியச்சென்று*
வென்றிச்செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்*
சிரந்துணிந்தான் திருவடி நும் சென்னிவைப்பீர்*
இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளÖசற்கு*
எழில்மாடம்எழுபது செய்துஉலகமாண்ட*
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8)
1506:
தாராளன் தண்ணரங்கவாளன்* பூமேல்தனியாளன்முனியாளர் ஏத்தநின்ற பேராளன்*
ஆயிரம்பேருடைய வாளன்* பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பாராளர் இவரிவரென்று அழுந்தையேற்ற* படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த*
தேராளங்கோச்சோழன் சேர்ந்தகோயில்* திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
1507:##
செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்* திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலை*
பொய்ம்மொழி ஒன்றில்லாத மெய்ம்மையாளன்* புலமங்கை குலவேந்தன் புலமையார்ந்த*
அம்மொழிவாய்க்கலிகன்றி இன்பப்பாடல்* பாடுவார்வியனுலகில் நமனார்பாடி*
வெம்மொழிகேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்* விண்ணவர்க்கு விருந்தாகும்
பெருந்தக்கோரே.
ஏழாம் திருமொழி – ஆளும்பணியும்
1508:##
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரை*
தோளும் தலையும் துணிவெய்தச்* சுடுவெஞ்சிலைவாய்ச் சரம்துரந்தான்*
வேளும் சேயும் அனையாரும்* வேற்கணாரும் பயில்வீதி*
நாளும்விழவினொலியோவா* நறையூர்நின்றநம்பியே (6.7.1)
1509:
முனியாய்வந்து மூவெழுகால்* முடிசேர்மன்னர் உடல்துணிய*
தனிவாய்மழுவின் படையாண்ட* தாரார்த்தோளான் வார்புறவில்*
பனிசேர் முல்லை பல்லரும்ப* பானல்ஒருபால் கண்காட்ட*
நனிசேர் கமலம் முகங்காட்டும்* நறையூர்நின்றநம்பியே. (6.7.2)
1510:
தெள்ளார் கடல்வாய் விடவாய* சினவாளரவில் துயிலமர்ந்து*
துள்ளாவருமான் வீழவாளி துரந்தான்* இரந்தான் மாவலிமண்*
புள்ளார்புறவில் பூங்காவி* புலங்கொள் மாதர் கண்காட்ட*
நள்ளார் கமலம் முகங்காட்டும்* நறையூர்நின்றநம்பியே. (6.7.3)
1511:
ஒளியா வெண்ணெயுண்டானென்று* உரலோடாய்ச்சி ஒண்கயிற்றால்*
விளியாஆர்க்க ஆப்புண்டு* விம்மியழுதான் மென்மலர்மேல்*
களியாவண்டு கள்ளுண்ணக்* காமர்தென்றல் அலர்தூற்ற*
நளிர்வாய்முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே. (6.7.4)
1512:
வில்லார் விழவில் வடமதுரை* விரும்பி விரும்பா மல்லடர்த்து*
கல்லார்திரள்தோள் கஞ்சனைக்காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்*
சொல்லார் சுருதிமுறையோதிச்* சோமுச்செய்யும் தொழிலினோர்*
நல்லார்மறையோர் பலர்வாழும்* நறையூர்நின்றநம்பியே. (6.7.5)
1513:
வள்ளிகொழுநன் முதலாய* மக்களோடு முக்கண்ணான் வெள்கியோட*
விறல்வாணன்* வியன்தோள்வனத்தைத் துணித்துகந்தான்*
பள்ளிகமலத்து இடைப்பட்ட* பகுவாயலவன் முகம்நோக்கி*
நள்ளியூடும் வயல்சூழ்ந்த* நறையூர்நின்றநம்பியே. (6.7.6)
1514:
மிடையாவந்தவேல் மன்னர்வீய* விசயன் தேர்கடவி*
குடையா வரை ஒன்றெடுத்து* ஆயர்க்கோவாய்நின்றான் கூராழிப்படையான்*
வேதம் நான்கு ஐந்துவேள்வி* அங்கம் ஆறு இசையேழ்*
நடையாவல்ல அந்தணர்வாழ்* நறையூர்நின்றநம்பியே. (6.7.7)
1515:
பந்தார்விரலாள் பாஞ்சாலி* கூந்தல்முடிக்கப் பாரதத்து*
கந்தார்க்களிற்றுக் கழல்மன்னர்க்கலங்கச்* சங்கம் வாய்வைத்தான்*
செந்தாமரைமேல் அயேனாடு* சிவனும்அனையபெருமையோர்*
நந்தாவண்கை மறையோர்வாழ்* நறையூர்நின்றநம்பியே (6.7.8)
1516:
ஆறும் பிறையும் அரவமும்* அடம்பும் சடைமேலணிந்து*
உடலம் நீறும்பூசியேறூரும்* இறையோன் சென்று குறையிரப்ப*
மாறொன்றில்லா வாசநீர்* வரைமார்பகலத்து அளித்துகந்தான்*
நாறும் பொழில்சூழ்ந்தழகாய* நறையூர்நின்றநம்பியே. (6.7.9)
1517:##
நன்மையுடைய மறையோர்வாழ்* நறையூர் நின்ற நம்பியை*
கன்னிமதிள்சூழ் வயல்மங்கைக்* கலியனொலிசெய் தமிழ்மாலை
பன்னியுலகில் பாடுவார்* பாடுசாரா பழவினைகள்*
மன்னிஉலகம் ஆண்டுபோய்* வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10)
எட்டாம் திருமொழி – மான்கொண்ட
1518:##
மான்கொண்டதோல்* மார்வின்மாணியாய்*
மாவலிமண் தான்கொண்டு* தாளால் அளந்த பெருமானை*
தேன்கொண்டசாரல்* திருவேங்கடத்தானை*
நான் சென்று நாடி* நறையூரில் கண்டேனே* (6.8.1)
1519:
முந்நீரை முன்னாள்* கடைந்தானை*
மூழ்த்தநாள் அந்நீரைமீனாய்* அமைத்த பெருமானை*
தென்னாலிமேய* திருமாலை எம்மானை*
நன்னீர் வயல்சூழ்* நறையூரில் கண்டேனே. (6.8.2)
1520:
தூவாய புள்ðர்ந்துவந்து* துறைவேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதி தேவனைச்* செங்கமலக் கண்ணானை*
நாவாயுளானை* நறையூரில் கண்டேனே (6.8.3)
1521:
ஓடாஅரியாய்* இரணியனைஊனிடந்த*
சேடார் பொழில்சூழ்* திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய்* மாலை முடியானை*
நாடோறும்நாடி* நறையூரில் கண்டேனே (6.8.4)
1522:
கல்லார்மதில்சூழ்* கடியிலங்கைக் காரரக்கன்*
வல்லாகம்கீள* வரிவெஞ்சரம் துரந்த வில்லானை*
செல்வவிபீடணற்கு* வேறாக*
நல்லனை நாடி* நறையூரில் கண்டேனே (6.8.5)
1523:
உம்பருலகோடு* உயிரெல்லாம் உந்தியில்*
வம்புமலர்மேல்* படைத்தானை மாயோனை*
அம்பன்ன கண்ணாள்* அசோதைதன் சிங்கத்தை*
நம்பனைநாடி* நறையூரில் கண்டேனே. (6.8.6)
1524:
கட்டேறுநீள்சோலைக்* காண்டவத்தைத் தீமூட்டிவிட்டானை*
மெய்யம்அமர்ந்தபெருமானை*
மட்டேறு கற்பகத்தை* மாதர்க்காய்*
வண்துவரை நட்டானைநாடி* நறையூரில் கண்டேனே (6.8.7)
1525:
மண்ணின்மீபாரம்கெடுப்பான்* மறமன்னர்*
பண்ணின்மேல் வந்த* படையெல்லாம் பாரதத்து*
விண்ணின்மீதேற* விசயன்தேரூர்ந்தானை*
நங்கோனை நாடி* நறையூரில் கண்டேனே. (6.8.8)
1526:##
பொங்கேறு நீள்சோதிப்* பொன்னாழி தன்னோடும்*
சங்கேறு கோலத்* தடக்கைப் பெருமானை*
கொங்கேறுசோலைக்* குடந்தைக்கிடந்தானை*
நங்கோனைநாடி* நறையூரில் கண்டேனே (6.8.9)
1527:##
மன்னுமதுரை* வசுதேவர் வாழ்முதலை*
நன்னறையூர்* நின்ற நம்பியை*
வம்பவிழ்தார்கன்னவிலும் தோளான்* கலியனொலிவல்லார்*
பொன்னுலகில் வானவர்க்குப்* புத்தேளிர் ஆகுவரே (6.8.10)
ஒன்பதாம் திருமொழி – பெடையடர்த்த
1528:##
பெடையடர்த்த மடவன்னம்* பிரியாது*
மலர்க்கமலம்மடலெடுத்து மதுநுகரும்* வயலுடுத்த திருநறையூர்*
முடையடர்த்த சிரமேந்தி* மூவுலகும் பலிதிரிவோன்*
இடர்கெடுத்த திருவாளன்* இணையடியே அடைநெஞ்சே! (6.9.1)
1529:
கழியாரும் கனசங்கம்* கலந்துஎங்கும் நிறைந்தேறி*
வழியார முத்தீன்று* வளங்கொடுக்கும் திருநறையூர்*
பழியாரும் விறலரக்கன்* பருமுடிகள்அவைசிதற*
அழலாறும் சரந்துரந்தான்* அடியிணையே அடைநெஞ்சே! (6.9.2)
1530:
சுளைகொண்ட பலங்கனிகள்* தேன்பாய*
கதலிகளின் திளைகொண்டபழம்கெழுமு* திகழ்சோலைத் திருநறையூர்*
வளைகொண்ட வண்ணத்தன்* பின்தோன்றல்*
மூவுலகோடுஅளைவெண்ணெய் உண்டான்தன்* அடியிணையே அடைநெஞ்சே!
1531:
துன்றோளித்துகீற்படலம்* துன்னிஎங்கும் மாளிகைமேல்*
நின்றார வான்மூடும்* நீள்செல்வத் திருநறையூர்*
மன்றாரக் குடமாடி* வரையெடுத்து மழைதடுத்த*
குன்றாரும் திர்ள்தோளன்* குரைகழலே அடைநெஞ்சே! (6.9.4)
1532:
அகிற்குறடும் சந்தனமும்* அம்பொன்னும் மணிமுத்தும்*
மிகக்கொணர்ந்து திரையுந்தும்* வியன்பொன்னித் திருநறையூர்*
பகல்கரந்த சுடராழிப்* படையான் இவ்வுலகேழும்*
புகக்கரந்த திருவயிற்றன்* பொன்னடியே அடைநெஞ்சே! (6.9.5)
1533:
பொன்முத்தும் அரியுகிரும்* புழைக்கைம்மா கரிக்கோடும்*
மின்னத்தண் திரையுந்தும்* வியன்பொன்னித் திருநறையூர்*
மின்னொத்த நுண்மருங்குல்* மெல்லியலை*
திருமார்பில் மன்னத்தான் வைத்துகந்தான்* மலரடியே அடைநெஞ்சே!
1534:
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல்* செங்கமலத் திடையிடையின்*
பார்தழைத்துக் கரும்போங்கிப்* பயன்விளைக்கும் திருநறையூர்*
கார்தழைத்த திருவுருவன்* கண்ணபிரான் விண்ணவர்கோன்*
தார்தழைத்த துழாய்முடியன்* தளிரடியே அடைநெஞ்சே! (6.9.7)
1535:##
குலையார்ந்த பழுக்காயும்* பசுங்காயும் பாளைமுத்தும்*
தலையார்ந்த இளங்கமுகின்* தடஞ்சோலைத் திருநறையூர்*
மலையார்ந்த கோலம்சேர்* மணிமாடம் மிகமன்னி*
நிலையார நின்றான்தன்* நீள்கழலே அடைநெஞ்சே! (6.9.8)
1536:
மறையாரும் பெருவேள்விக்* கொழும்புகைபோய் வளர்ந்துஎங்கும்*
நிறையார வான்மூடும்* நீள்செல்வத் திருநறையூர்*
பிறையாரும் சடையானும்* பிரமனும்முன் தொழுதேத்த*
இறையாகி நின்றான்தன்* இணையடியே அடைநெஞ்சே! (6.9.9)
1537:##
திண்களக மதிள்புடைசூழ்* திருநறையூர் நின்றானை*
வண்களக நிலவெறிக்கும்* வயல்மங்கை நகராளன்*
பண்களகம் பயின்றசீர்ப்* பாடலிவை பத்தும்வல்லார்*
விண்களகத்து இமையவராய்* வீற்றிருந்து வாழ்வாரே. (6.9.10)
பத்தாம் திருமொழி – கிடந்தநம்பி
1538:##
கிடந்தநம்பி குடந்தைமேவிக்* கேழலாய்உலகை இடந்தநம்பி*
எங்கள் நம்பி* எறிஞரரணழிய*
கடந்தநம்பி கடியாரிலங்கை* உலகைஈரடியால்*
நடந்தநம்பி நாமம்சொல்லில்* நமோநாராயணமே. (6.10.1)
1539:
விடந்தானுடைய அரவம்வெருவச்* செருவில் முனநாள்*
முன்தடந்தாமரைநீர்ப் பொய்கைபுக்கு* மிக்கதாடாளன்*
இடந்தான் வையம் கேழலாகி* உலகை ஈரடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோநாராயணமே. (6.10.2)
1540:
பூணாதனலும்* தறுகண் வேழம்மறுக*
வளைமருப்பைப் பேணான் வாங்கி* அமுதம் கொண்டபெருமான்திருமார்வன்*
பாணாவண்டு முரலும்கூந்தல்* ஆய்ச்சி தயிர்வெண்ணெய்*
நாணாதுஉண்டான் நாமம்சொல்லில்* நமோநாராயணமே. (6.10.3)
1541:##
கல்லார்மதிள்சூழ்* கச்சி நகருள்நச்சிப்*
பாடகத்துள் எல்லா உலகும்வணங்க* இருந்தஅம்மான்*
இலங்கைக்கோன் வல்லாளாகம்* வில்லால் முனிந்த எந்தை*
விபீடணற்கு நல்லானுடைய நாமம்சொல்லில்* நமோநாராயணமே (6.10.4)
1542:
குடையா வரையால்* நிரைமுன் காத்த பெருமான்*
மருவாத விடைதானேழும் வென்றான்* கோவல் நின்றான்*
தென்னிலங்கை அடையாஅரக்கர்வீயப்* பொருது மேவிவெங்கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான்நாமம்* நமோநாராயணமே (6.10.5)
1543:
கானஎண்கும் குரங்கும்* முசுவும்படையா*
அடலரக்கர் மானமழித்து நின்ற* வென்றியம்மான்*
எனக்கென்றும் தேனும்பாலும்அமுதுமாய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும்உரைமின்* நமோநாராயணமே (6.10.6)
1544:
நின்றவரையும் கிடந்தகடலும்* திசையும் இருநிலனும்*
ஒன்றுமொழியா வண்ணம்எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்றுகாண்மின் தொண்டீர்!சொன்னேன்* நமோநாராயணமே (6.10.7)
1545:
கடுங்கால்மாரி கல்லேபொழிய* அல்லேஎமக்கென்று படுங்கால்*
நீயே சரணென்று* ஆயரஞ்ச அஞ்சாமுன்*
நெடுங்கால்குன்றம் குடையொன்றேந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்காவண்ணம் காத்தான்நாமம்* நமோநாராயணமே (6.10.8)
1546:
பொங்குபுணரிக் கடல்சூழாடை* நிலமாமகள் மலர்மாமங்கை*
பிரமன்சிவன்இந்திரன்* வானவர் நாயகராய*
எங்களடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள்வினைகள் தவிரஉரைமின்* நமோநாராயணமே (6.10.9)
1547:##
வாவித்தடஞ்சூழ் மணிமுத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில்பரவி நெஞ்சில்கொண்டு* நம்பி நாமத்தை*
காவித்தடங்கண் மடவார்க்கேள்வன்* கலியனொலிமாலை*
மேவிச்சொல்ல வல்லார் பாவம்* நில்லாவீயுமே (6.10.10)