ஆறாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து –  ஆறாம் திருமொழி

1398 கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே
6.1

 

1399 பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
6.2

 

1400 ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே
6.3

 

1401 வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே
6.4

 

1402 நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே
6.5

 

1403 தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே
6.6

 

1404 சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே
6.7

 

1405 துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே
6.8

 

1406 பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே
6.9

 

1407 ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே
6.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!