நான்காம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – நான்காம் திருமொழி

1378 உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே
4.1

 

1379 வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே
4.2

 

1380 பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே
4.3

 

1381 விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே
4.4

 

1382 வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே
4.5

 

1383 கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே
4.6

 

1384 கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே
4.7

 

1385 ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே
4.8

 

1386 சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய,
இம் மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே
4.9

 

1387 அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே
4.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!