ஏழாம் பத்து


திருவாய்மொழி ஏழாம் பத்து

முதல் திருமொழி

 

3453:##

உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாத பங்கயம்,*

நண்ணிலா வகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*

எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்கள்  ஏத்தும்* உலக மூன்றுடை,*

அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)    7.1.1

 

3454:

என்னையாளும் வன்கோ ஓரைந்திவைபெய்து* இராப்பகல் மோது வித்திட்டு,*

உன்னை நான் அணுகாவகை* செய்து போதி கண்டாய்,*

கன்னலே! அமுதே! கார்முகில்வண்ணனே!*கடல் ஞாலம் காக்கின்ற,*

மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே!  7.1.2

 

3455:

வேதியா நிற்கும் ஐவரால்* வினையேனை  மோதுவித்து,* உன் திருவடிச்

சாதியாவகை* நீ தடுத்து என்பெறுதியந்தோ,*

ஆதியாகி அகலிடம்படைத்து* உண்டுமிழந்து கடந்திடந்-

திட்ட,*சோதி நீள்முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே! 7.1.3

 

3456:

சூது நான் அறியாவகை* சுழற்றியோர்  ஐவரைக் காட்டி,* உன்னடிப்போது-

நான் அணுகாவகை* செய்து போதி கண்டாய்,*

யாதும் யாவரும் இன்றி நின்னகம்பால்  ஒடுக்கி*ஓராலின் நீளிலை,*

மீதுசேர்குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே!        7.1.4

 

3457:

தீர்மருந்தின்றி ஐந்து நோயடும்*  செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை,*

நேர்மருங்குடைத்தாவடைத்து* நெகிழிப்பான்  ஒக்கின்றாய்,*

ஆர்மருந்து இனியாகுவர்?* அடலாழி  ஏந்தி அசுரர் வன்குலம்,*

வேர்மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானேயோ!   7.1.5

 

3458:

விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும்* ஐம்புலனிவை,*

மண்ணுள் என்னைப் பெற்றால்* என்செய்யாமற்று நீயும்விட்டால்?*

பண்ணுளாய்! கவி தன்னுளாய்!*  பத்தியினுள்ளாய்! பரமீசனே,* வந்தென்-

கண்ணுளாய்! நெஞ்சுளாய்!* சொல்லுளாய்!  ஒன்று சொல்லாயே.            7.1.6

 

3459:

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓரைவர் வன்கயவரை,*

என்றுயான் வெல்கிற்பன்* உன் திருவருளில்லையேல்?,*

அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,* ஓர்

குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன்னமுதே!  7.1.7

 

3460:

இன்னமுதெனத் தோன்றி* ஓரைவர்  யாவரையும் மயக்க,* நீவைத்த-

முன்ன மாயமெல்லாம்* முழு வேரரிந்து,* என்னையுன்-

சின்னமும் திருமூர்த்தியும்* சிந்தித் தேத்திக் கைதொழவே அருள் எனக்கு,*என்னம்மா! என்கண்ணா!* இமையோர்தம் குலமுதலே!            7.1.8

 

3461:

குலமுதலடும் தீவினைக்* கொடுவன் குழியினில்  வீழ்க்கும் ஐவரை*

வலமுதல் கெடுக்கும்* வரமே தந்தருள் கண்டாய்,*

நிலமுதலினி எவ்வுலகுக்கும்* நிற்பன  செல்வனேன,* பொருள்-

பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே!       7.1.9

 

3462:

`என்பரஞ் சுடரே!என்றுன்னை அலற்றி* உன்  இணைத்தாமரைகட்கு,*

அன்புருகி நிற்கும்* அதுநிற்கச் சுமடு தந்தாய்,*

வன்பரங்கள் எடுத்து ஐவர்* திசைதிசை  வலித்தெற்றுகின்றனர்:*

முன்பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தியோ!          7.1.10

 

3463:##

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்தளித்துக் கெடுக்கும்,*அப்

புண்டரீகப் கொப்பூழ்* புனற் பள்ளி அப்பனுக்கே,*தொண்டர்

தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும்,*

கண்டு பாடவல்லார்* வினைபோம் கங்குலும் பகலே. (2)      7.1.11

 

இரண்டாம் திருமொழி

 

3464:##

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்*  கண்ணநீர் கைகளால் இறைக்கும்,*

சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்*  `தாமரைக் கண்என்றே தளரும்,*

`எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டுஎன்னும்*  இருநிலம் கை துழாவிருக்கும்,*

செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்கின்றாயே?'(2)

 

3465:

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்*

கண்ணீர்மல்க இருக்கும்,*

`என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?’என்னும்*

வெவ்வுயிர்த்துயிர் உருகும்:*

`முன்செய்த வினையே! முகப்படாய்என்னும்*

முகில்வண்ணா!தகுவதோ?’ என்னும்,*

முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!*

என்கொலோமுடிகின்றது இவட்கே?

 

3466:

வட்கிலள் இறையும் `மணிவண்ணா!என்னும்* வானமே நோக்கும் மையாக்கும்,*

`உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட*  ஒருவனே!என்னும் உள்ளுருகும்,*

`கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே!என்னும்,*

திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?   

 

3467:

இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்*

எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்,*

`கட்டமே காதல்!என்று மூர்ச்சிக்கும்*

`கடல்வண்ணா! கடியைகாண்என்னும்,*

`வட்டவாய் நேமி வலங்கையா!என்னும்*

`வந்திடாய்என்றென்றே மயங்கும்,*

சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!*

இவள்திறத்து என் சிந்தித்தாயே?    

 

3468:

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*

`திருவரங் கத்துள்ளாய்!என்னும் –

வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*

வந்திடாய்என்றென்றே மயங்கும்,*

அந்திப்போது அவுணன் உடலிடந்தானே!* 

அலைகடல் கடைந்த ஆரமுதே,*

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*

தையலை மையல் செய்தானே!

 

3469:

`மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!‘  என்னும்*

`மா மாயனே!என்னும்,*

`செய்யவாய் மணியே!என்னும்*

`தண் புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்!என்னும்,*

`வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும்*

விண்ணோர் முதல்!என்னும்,*

பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய்* 

பாவியேன் செயற்பாலதுவே.

 

3470:

`பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* 

பற்றிலார் பற்றநின்றானே,*

காலசக்கரத்தாய்! கடலிடங் கொண்ட* 

கடல்வண்ணா! கண்ணணே!என்னும்,*

`சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!என்னும்*

`என்தீர்த்தனே!என்னும்,*

கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*

என்னுடைக் கோமளக் கொழுந்தே. 

 

3471:

`கொழுந்து வானவர்கட்குஎன்னும்*

குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,*

அழுந்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்* 

`அஞ்சன வண்ணனே!என்னும்,*

எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*

எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்,*

செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*

என்செய்கேன் என்திருமகட்கே? 7.2.8

 

3472:##

`என்திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடை ஆவியே!என்னும்,*

`நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே!என்னும்,*

`அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே!என்னும்,*

தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.

 

3473:

`முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன்என்னும்*

`மூவுலகாளியே!என்னும்,*

`கடிகமழ் கொன்றைச் சடையனே!என்னும்*

`நான்முகக் கடவுளே!என்னும்,*

`வடிவுடை வானோர் தலைவனே!என்னும்*

`வண் திருவரங்கனே!என்னும்,*

அடியடையாதாள் போலிவள் அணுகி  அடைந்தனள்*

முகில்வண்ணன் அடியே.       

 

3474:##

முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி உய்ந்தவன்*

மொய்புனல் பொருநல்,*

துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*

வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*

முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*

ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,*

முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்*

பேரின்ப வெள்ளத்தே. (2)        

 

மூன்றாம் திருமொழி

 

3475:##

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்* 

தாமரைக் கண்ணனென் நெஞ்சினூடே,*

புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்*

என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*

வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த*

வேத ஒலியும் விழா ஒலியும்,*

பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்* 

திருப்பேரையில் சேர்வன் நானே! (2)        

 

3476:

நானக் கருங்குழல் தோழிமீர்காள்!*  அன்னையர்காள்!அயல் சேரியீர்காள்*,

நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றிதிராப்பகல்போய்,*

தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ் * தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,*

வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.          7.3.2

 

3477:

செங்கனி வாயின் திறத்ததாயும்* செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்ததாயும்,*

சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

திங்களும் நாளும் விழாவறாத*  தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*

நங்கள்பிரானுக்கென் னெஞ்சம் தோழி!*  நாணும் நிரையும் இழந்ததுவே.          7.3.3

 

3478:

இழந்த எம்மாமை திறத்துப் போன*  என்னெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,*

உழந்து இனியாரைக் கொண்டெனுசாகோ?*  ஓதக் கடலொலி போல* எங்கும்,

எழுந்தநல் வேதத்தொலி நின்றோங்கு*  தென்திருப்பேரையில் வீற்றிருந்த,*

முழங்கு சங்கக்கையன் மாயத்தாழ்ந்தேன்* அன்னையர்க்காள்! என்னை

                                                  என்முனிந்தே?   

3479:

முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலையுண்டு* மருதிடைபோய்,*

கனிந்த விளவுக்கு கன்றெறிந்த* கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,*

முனிந்தினி என்செய்தீர் அன்னைமீர்காள்!* முன்னியவன் வந்து வீற்றிருந்த,*

கனிந்த பொழில் திருப்பேரையிற்கே*  காலம் பெறவென்னைக் காட்டுமினே.         

 

3480:

காலம் பெறவென்னைக் காட்டுமின்கள்* காதல் கடலின் மிகப் பெரிதால்,*

நீலமுகில்வண்ணத்து எம்பெருமான்* நிற்குமுன்னே வந்தென் கைக்கும் எய்தான்*

ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,*

கோலச் செந்நெற்கள் கவரி வீசும்* கூடுபுனல் திருப்பேரையிற்கே.            7.3.6

 

3481:

பேரெயில் சூழ்கடல் தென்னிலங்கை* செற்றபிரான் வந்து வீற்றிருந்த,*

பேரையிற்கே புக்கென்நெஞ்சம் நாடிப்* பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,*

ஆரை இனிங்குடையம் தோழி!*  என்னெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,*

ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது* என்னெஞ்சம் கண்டதுவே கண்டேனே

 

3482:

கண்டதுவே கொண்டெல்லாருங் கூடிக்* கார்க்கடல் வண்ணேனாடு எந்திறத்துக்

கொண்டு* அலர் தூற்றிற்றது முதலாக்* காண்டவென் காதல் உரைக்கில் தோழி*

மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,*

தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த* தென்திருப்பேரையில் சேர்வன  சென்றே.7.3.8

 

3483:

சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*அன்னையர்க்காள்!என்னைத்தேற்ற வேண்டா,*

நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்கிங்கில்லை,*

கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,*

ஏர்வள ஒண்கழனிப் பழனத்து*  தென்திருப்பேரையின் மாநகரே.            7.3.9

 

3484:

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,*

சிகரம் அணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரையில் வீற்றிருந்த,*

மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,*

நிகரில் முகில்வண்ணன் நேமியான் என்*  நெஞ்சம் கவர்ந்தெனை ஊழியானே?         

 

3485:##

ஊழிதோறூழி உருவம் பேரும்  செய்கையும்* வேறவன் வையங் காக்கும்,*

ஆழிநீர் வண்ணனை அச்சுதன்னை*  அணிகுரு கூர்ச் சடகோபன் சொன்ன,*

கேழில் அந்தாதி ஓராயிரத்துள் இவை* திருப்பேரையில் மேய பத்தும்,*

ஆழியங்கையனை ஏத்த வல்லார்*  அவரடிமைத் திறத்து ஆழியாரே. (2)        7.3.11

 

நான்காம் திருமொழி

 

3486:##

ஆழியெழச்* சங்கும் வில்லுமெழ,* திசை

வாழியெழத்* தண்டும் வாளுமெழ,* அண்டம்

மோழையெழ* முடி பாதமெழ,* அப்பன்

ஊழியெழ* உலகம் கொண்டவாறே. (2)     7.4.1

 

3487:

ஆறு மலைக்கு* எதிர்ந்தோடும் ஒலி,* அர

வூறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்

மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்

சாறுபட* அமுதங்கொண்ட நான்றே.           7.4.2

 

3488:

நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்

நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்

நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்

ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே.        7.4.3

 

3489:

நாளுமெழ* நில நீருமெழ* விண்ணும்

கோளுமெழ* எரி காலுமெழ,* மலை

தாளுமெழச்* சுடர் தானுமெழ,* அப்பன்

ஊளியெழ* உலகமுண்ட ஊணே.     7.4.4

 

3490:

ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்

ஆணுடை சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்

ஏணுடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்

காணுடைப் பாரதம்* கையறைப் போழ்தே.         7.4.5

 

3491:

போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை

சூழு மெழுந்து* உதிரப்புனலா,* மலை

கீழ்து பிளந்த* சிங்கமொத்ததால்,* அப்பன்

ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே.    7.4.6

 

3492:

மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன

நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்

ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்

நீறுபட* இலங்கை செற்ற நேரே.        7.4.7

 

3493:

நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்

நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்

நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்

நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே.         7.4.8

 

3494:

அன்றுமண் நீரெரிகால்* விண் மலைமுதல்,*

அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்

அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்

அன்று முதல்* உலகம் செய்ததுமே. 7.4.9

 

3495:

மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை

வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன

ஆநிரை பாடி* அங்கேயொடுங்க,* அப்பன்

தீமழை காத்துக்* குன்றம் எடுத்தானே.      7.4.10

 

3496:##

குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*

ஒன்றிநின்ற* சடகோபனுரைசெயல்,*

நன்றி புனைந்த* ஓராயிரத்துள் இவை*

வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே. (2)  7.4.11

 

ஐந்தாம் திருமொழி

 

3497:##

கற்பார் இராம பிரானை அல்லால்* மற்றும் கற்பரோ?,*

புற்பா முதலாப்* புல்லெறும்பாதி ஒன்றின்றியே,*

நற்பால் அயோத்தியில் வாழும்* சராசரம் முற்றவும்,*

நற்பாலுக்கு உய்த்தனன்* நான்முக னார்பெற்ற நாட்டுளே. (2)            7.5.1

 

3498:

நாட்டில் பிறந்தவர்* நாரணற்கு ஆளன்றி யாவரோ,*

நாட்டில் பிறந்து படாதன பட்டு* மனிசர்க்கா,*

நாட்டை நலியும் அரக்கரை* நாடித் தடிந்திட்டு,*

நாட்டை அளித்துய்யச் செய்து* நடந்தமை கேட்டுமே?            7.5.2

 

3499:

கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லால்*மற்றூம் கேட்பரோ,*

கேட்பார் செவிசுடு* கீழ்மை வசவுகளே வையும்,*

சேட்பால் பழம்பகைவன்* சிசு பாலன்,* திருவடி

தாட்பால் அடைந்த* தன்மை அறிவாரை அறிந்துமே? 7.5.3

 

3500:

தன்மை அறிபவர்* தாம் அவற்கு ஆளன்றி யாவரோ,*

பன்மைப் படர்பொருள்* ஆதுமில்பாழ் நெடுங்காலத்து,*

நன்மைப் புனல்பண்ணி* நான்முகனைப்பண்ணி, தன்னுள்ளே*

தொன்மை மயக்கிய தோற்றிய* சூழல்கள் சிந்தித்தே?          7.5.4

 

3501:

சூழல்கள் சிந்திக்கில்* மாயன் கழலன்றிச் சூழ்வரோ,*

ஆழப் பெரும்புனல்* தன்னுள் அழுந்திய ஞாலத்தை,*

தாழப் படாமல்*தன் பாலொரு கோட்டிடைத் தான்கொண்ட,*

கேழல் திருவுருவாயிற்றுக்* கேட்டும் உணர்ந்துமே?    7.5.5

 

3502:

கேட்டும் உணர்ந்தவர்* கேசவற்கு ஆளன்றி யாவரோ,*

வாட்டமிலா வண்கை* மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*

ஈட்டங்கொள் தேவர்கள்* சென்றிரந்தார்க்கு இடர் நீக்கிய,*

கோட்டங்கை வாமனனாய்ச்* செய்த கூத்துகள் கண்டுமே? 7.5.6

 

3503:

கண்டும் தெளிந்தும் கற்றார்* கண்ணற்கு ஆளன்றி யாவரோ,*

வண்டுன் மலர்த்தொங்கல்* மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்*

இண்டைச் சடைமுடி* ஈசனுடன்கொண்டு உசாச்செல்ல,*

கொண்டங்குத் தன்னொடும் கொண்டு* உடன்சென்றது உணர்ந்துமே?       7.5.7

 

3504:

செல்ல உணர்ந்தவர்* செல்வன்தன் சீரன்றிக் கற்பரோ,*

எல்லை யிலாத பெருந்தவத்தால்* பல செய்மிறை,*

அல்லல் அமரரைச் செய்யும்* இரணியன் ஆகத்தை,*

மல்லல் அரியுருவாய்ச்* செய்த மாயம் அறிந்துமே?    7.5.8

 

3505:

மாயம் அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*

தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க* ஓரைவர்க்காய்,*

தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று* சேனையை

நாசம் செய்திட்டு,* நடந்த நல் வார்த்தை அறிந்துமே? 7.5.9

 

3506:

வார்த்தை அறிபவர்* மாயவற்கு ஆளன்றி யாவரோ,*

போர்த்த பிறப்பொடு நோயோடு மூப்பொடு* இறப்பிவை

பேர்த்து,* பெருந்துன்பம் வேரற நீக்கித்* தன் தாளின்கீழ்ச்

சேர்த்து,* அவன் செய்யும்* சேமத்தையெண்ணித் தெளிவுற்றே? (2)            7.5.10

 

3507:##

தெளிவுற்று வீவின்றி* நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,*

தெளிவுற்ற கண்ணனை* தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*

தெளிவுற்ற ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லாரவர்,*

தெளிவுற்ற சிந்தையர்* பாமரு மூவுலகத்துள்ளே. (2)  7.5.11

 

ஆறாம் திருமொழி

 

3508:##

பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,*

பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*

தாமரைக் கண்ணாவோ!* தனியேன்  தனியாளாவோ,*

தாமரைக் கையாவோ!* உன்னை  என்றுகொல் சேர்வதுவே? (2)            7.6.1

 

3509:

என்றுகொல் சேர்வது அந்தோ* அரன்  நான்முகன் ஏத்தும்,* செய்ய

நின் திருப்பாதத்தை* யான்நிலம்  நீரெரி கால்,* விண்ணுயிர்

என்றிவை தாம்முதலா* முற்றுமாய்  நின்ற எந்தாயோ,*

குன்றெடுத்து ஆநிரை மேய்த்து* அவை  காத்த எங்கூத்தாவோ!            7.6.2

 

3510:

காத்த எங்கூத்தாவோ!* மலையேந்திக்  கன்மாரி தன்னை,*

பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*

வாய்த்த என் நான்முகனே!* வந்தென்  ஆருயிர் நீயானால்,*

ஏத்தரும்  கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே?            7.6.3

 

3511:

எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில்  மூவுலகும் நீயே,*

அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*

வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*

கொங்கலர் தண்ணந் துழாய்முடி* என்னுடைக் கோவலனே!            7.6.4

 

3512:

என்னுடைக் கோவலனே!* என்  பொல்லாக் கருமாணிக்கமே,*

உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*

உன்னுடைச் சோதிவெள்ளத்து  அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*

என்னுடை ஆருயிரார்* எங்ஙனேகொல் வந்தெய்துவரே?       7.6.5

 

3513:

வந்தெய்து மாறறியேன்* மல்கு  நீலச் சுடர்தழைப்ப,*

செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு  மாணிக்கம் சேர்வதுபோல்,*

அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்வுகண்வாய்,*

செஞ்சுடர்ச் சோதி விடவுறை* என்திரு மார்பனையே.           7.6.6

 

3514:

என்திரு மார்பன் தன்னை* என்  மலைமகள் கூறன்தன்னை,*

என்றும் என்னாமகளை* அகம்பால்கொண்ட  நான்முகனை,*

நின்ற சசிபதியை* நிலங்கீண்டு எயில் மூன்றெரித்த,*

வென்று புலம்துரந்த* விசும்பாளியைக்  காணேனோ!           7.6.7

 

3515:

ஆளியைக் காண்பரியாய்*அரிகாண் நரியாய்,*அரக்கர்

ஊளையிட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்கொளிப்ப,*

மீளியம் புள்ளைக்கடாய்* விறல்  மாலியைக் கொன்று,*பின்னும்

ஆளுயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும்  காண்டுங்கொலோ?       7.6.8

 

3516:

காண்டுங்கொலோ நெஞ்சமே!*கடிய  வினையே முயலும்,*

ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கர் குலத்தைத் தடிந்து,*

மீண்டும் அவன் தம்பிக்கே* விரி  நீரிலங்கையருளி,*

ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?            7.6.9

 

3517:

ஏற்றரும் வைகுந்தத்தை* அருளும்  நமக்கு,* ஆயர்குலத்து

ஈற்றிளம் பிள்ளையொன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*

கூற்றியல் கஞ்சனைக் கொன்று*ஐவர்க்காய்  அக்கொடுஞ்சேனைதடிந்து,*

ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே.  7.6.10

 

3518:##

புக்க அரியுருவாய்*அவுணனுடல் கீண்டுகந்த,*

சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

மிக்க ஓராயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரை,*

தொக்குப் பல்லாண்டிசைத்துக்* கவரி செய்வர் ஏழையரே. (2)            7.6.11

 

ஏழாம் திருமொழி

 

3519:##

ஏழையர் ஆவியுண்ணும்* இணைக்  கூற்றங்கொலோ அறியேன்,*

ஆழியுங் கண்ணபிரான்* திருக்கண்கள் கொலோ அறியேன்,*

சூழவும் தாமரை நாண்மலர்  போல்*வந்து தோன்றும்கண்டீர்,*

தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன்  துயராட்டியேனே? (2)            7.7.1

 

3520:

ஆட்டியும் தூற்றியும் நின்று*அன்னைமீர்  என்னை நீர்நலிந்தென்?*

மாட்டுயர் கற்பகத்தின்*வல்லியோ  கொழுந்தோ?அறியேன்,*

ஈட்டிய வெண்ணெயுண்டான்*திருமூக்கு  எனதாவியுள்ளே,*

மாட்டிய வல்விளக்கின்*  சுடராய்நிற்கும் வாலியதே.  7.7.2

 

3521:

வாலியதோர் கனிகொல்* வினையாட்டியேன் வல்வினைகொல்,*

கோலம் திரள்பவளக்* கொழுந்துண்டங்கொலோ அறியேன்,*

நீல நெடுமுகில்போல்* திருமேனி அம்மான் தொண்டைவாய்,*

ஏலும் திசையுளெல்லாம்*வந்து  தோன்றும் என்இன்னுயிர்க்கே.            7.7.3

 

3522:

இன்னுயிர்க்கு ஏழையர்மேல்*வளையும்  இணை நீலவிற்கொல்,*

மன்னிய சீர்மதனன்* கருப்புச்  சிலை கொல்,*மதனன்

தன்னுயிர்த் தாதை*கண்ணபெருமான்  புருவமவையே,*

என்னுயிர் மேலனவாய்*   அடுகின்றன என்று நின்றே.           7.7.4

 

3523:

என்று நின்றேதிகழும்* செய்ய வீன்சுடர் வெண்மின்னுக்கொல்,*

அன்றி என்னாவியடும்* அணி முத்தங்கொலோ அறியேன்,*

குன்றம் எடுத்தபிரான்* முறுவல் எனதாவியடும்*,

ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்விடமே.            7.7.5

 

3524:

`உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்*

எவ்விடம்?’ என்றிலங்கி*மகரம்  தழைக்கும் தளிர்கொல்,*

பைவிடப் பாம்பணையான்*  திருக்குண்டலக் காதுகளே?*

கைவிடல் ஒன்றுமின்றி* அடுகின்றன காண்மின்களே.          7.7.6

 

3525:

காண்மின்கள் அன்னையர்காள்*!என்று  காட்டும் வகையறியேன்,*

நாண்மன்னு வெண்திங்கள் கொல்!*  நயந்தார்கட்கு நச்சிலைகொல்,*

சேண்மன்னு நால்தடந்தோள்* பெருமான்தன் திருநுதலே?,*

கோள்மன்னி ஆவியடும்*கொடியேன்  உயிர் கோளிழைத்தே.            7.7.7

 

3526:

கோளிழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,*

கோளிழைத்தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*

கோளிழையாவுடைய* கொழுஞ்சோதி வட்டங்கொல்,* கண்ணன்,

கோளிழை வாண் முகமாய்க்* கொடியேன்  உயிர் கொள்கின்றதே?            7.7.8

 

3527:

கொள்கின்ற கோளிருளைச்* சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்,*

உள்கொண்ட நீல நன்னூல் தழைகொல்?*அன்று மாயன் குழல்,*

விள்கின்ற பூந்தண்துழாய்* விரைனாற வந்து என்னுயிரை,*

கள்கின்றவாறு அறியீர்* அன்னைமீர்! கழறாநிற்றிரே.          7.7.9

 

3528:

`நிற்றி முற்றத்துள்என்று*நெரித்த கையராய்*

என்னைநீர்ச்சுற்றியும் சூழ்ந்தும்* வைதிர்சுடர்ச்  சோதி மணிநிறமாய்,*

முற்ற இம்மூவுலகும்* விரிகின்ற சுடர்முடிக்கே*,

ஒற்றுமைக் கொண்டது உள்ளம்*அன்னைமீர்!  நசையென்  நுங்கட்கே?  7.7.10

 

3529:##

கட்கரிய பிரமன் சிவன்* இந்திரன் என்றிவர்க்கும்,*

கட்கரிய கண்ணனைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

உட்குடை ஆயிரத்துள்* இவையுமொரு பத்தும்வல்லார்,*

உட்குடை வானவரோடு* உடனாய் என்றும் மாயாரே. (2)       7.7.11

 

எட்டாம் திருமொழி

 

3530:##

மாயா! வாமனனே!* மதுசூதா! நீயருளாய்,*

தீயாய் நீராய் நிலனாய்* விசும்பாய்க் காலாய்,*

தாயாய் தந்தையாய்* மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,*

நீயாய் நீநின்றவாறு* இவை என்ன நியாயங்களே! (2)            7.8.1

 

3531:

அங்கண் மலர்த்தண் துழாய்முடி* அச்சுதனே!அருளாய்,*

திங்களும் ஞாயிறுமாய்ச்* செழும்பல் சுடராய் இருளாய்,*

பொங்கு பொழிமழையாய்ப்* புகழாய் பழியாய்ப் பின்னும்நீ,

வெங்கண் வெங்கூற்றமுமாம்* இவை என்ன விசித்திரமே! 7.8.2

 

3532:

சித்திரத் தேர்வலவா!* திருச்சக்கரத்தாய்!அருளாய்,*

எத்தனையோருகமும்* அவையாய் அவற்றுள் இயலும்,*

ஒத்தவொண் பல்பொருள்கள்* உலப்பில்லன வாய்வியவாய்,*

வித்தகத்தாய் நிற்றி நீ* இவை என்ன விடமங்களே!     7.8.3

 

3533:

கள்ளவிழ் தாமரைக்கண்* கண்ணனே! எனக்கொன்றருளாய்,*

உள்ளதும் இல்லதுமாய்* உலப்பில்லன வாய்வியவாய்,*

வெள்ளத் தடங்கடலுள்*விட நாகணை மேல்மருவி,*

உள்ளப்பல் யோகுசெய்தி* இவை என்ன உபாயங்களே!        7.8.4

 

3534:

பாசங்கள் நீக்கி* எனÛனை உனக்கே அறக் கொண்டிட்டு,*நீ

வாச மலர்த்தண் துழாய்முடி* மாயவனே!அருளாய்,*

காயமும் சீவனுமாய்க்* கழிவாய்ப் பிறப்பாய்ப் பின்னும்நீ,*

மாயங்கள் செய்துவைத்தி* இவையென்ன மயக்குகளே!      7.8.5

 

3535:

மயக்கா! வாமனனே!* மதியாம் வண்ணம் ஒன்றருளாய்,*

அயர்ப்பாய்த் தேற்றமுமாய்*அழலாய்க் குளிராய்வியவாய்,*

வியப்பாய் வென்றிகளாய்*வினையாய்ப் பயனாய்ப் பின்னும்நீ,*

துயக்காய் நீநின்றவாறு* இவை என்ன துயரங்களே!  7.8.6

 

3536:

துயரங்கள் செய்யுங்கண்ணா!*சுடர் நீண்முடியாய் அருளாய்,*

துயரம்செய் மானங்களாய்*மதனாகி உகவைகளாய்,*

துயரம்செய் காமங்களாய்த்*துலையாய் நிலையாய் நடையாய்,*

துயரங்கள் செய்துவைத்தி* இவையென்ன சுண்டாயங்களே.            7.8.7

 

3537:

என்னச்சுண்டாயங்களால்* நின்றிட்டாய் என்னையாளும்கண்ணா,*

இன்னதோர் தன்மையை என்று* உன்னையாவர்க்கும் தேற்றரியை,*

முன்னிய மூவுலகும்*அவையாய் அவற்றைப்படைத்து,*

பின்னும் உள்ளாய்!புறத்தாய்*!இவை என்ன இயற்கைகளே!            7.8.8

 

3538:

என்ன இயற்கைகளால்* எங்ஙனே நின்றிட்டாய் என்கண்ணா,*

துன்னு கரசரணம் முதலாக* எல்லாவுறுப்பும்*

உன்னு சுவையொளி* ஊறொலி நாற்றம் முற்றும்நீயே,*

உன்னை உணரவுறில்* உலப்பில்லை நுணுக்கங்களே.           7.8.9

 

3539:

இல்லை நுணுக்கங்களே* இதனில் பிறிதென்னும் வண்ணம்*

தொல்லை நன்னூலில் சொன்ன* உருவும் அருவும் நீயே:*

அல்லித் துழாயலங்கல்*அணிமார்ப! என் அச்சுதனே,*

வல்லதோர் வண்ணம்சொன்னால்*அதுவே உனக்கு ஆம்வண்ணமே.   7.8.10

 

3540:##

ஆம்வண்ணம் இன்னதொன்றென்று* அறிவதரிய அரியை,*

ஆம்வண்ணத்தால்*குருகூர்ச் சடகோபன் அறிந்துரைத்த*

ஆம்வண்ண ஒண்தமிழ்கள்* இவை ஆயிரத்துள் இப்பத்தும்,*

ஆம்வண்ணத்தால் உரைப்பார்* அமைந்தார் தமக்கென்றைக்குமே. (2)       7.8.11

 

ஒன்பதாம் திருமொழி

 

3541:##

என்றைக்கும் என்னை* உய்யக்கொண்டு போகிய,*

அன்றைக்கன்றென்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*

இன்தமிழ் பாடிய ஈசனை* ஆதியாய்-

நின்ற என் சோதியை,* என் சொல்லி நிற்பேனா? (2)   7.9.1

 

3542:

என்சொல்லி நிற்பன்* என் இன்னுயிரின் ஒன்றாய்,*

என்சொல்லால் யான்சொன்ன* இன்கவி யென்பித்து,*

தன்சொல்லால் தான்தன்னைக்* கீர்த்தித்த மாயன்,*என்

முன்சொல்லும்* மூவுருவாம் முதல்வனே. 7.9.2

 

3543:

ஆம்முதல்வன் இவனென்று*தன் தேற்றி,*என்

நாமுதல் வந்து புகுந்து* நல்லின்கவி,*

தூமுதல் பத்தர்க்குத்* தான்தன்னைச் சொன்ன,*என்

வாய்முதல் அப்பனை* என்று மறப்பேனா?          7.9.3

 

3544:

அப்பனை என்று மறப்பன்* என்னாகியே,*

தப்புதலின்றித்* தனைக் கவி தான்சொல்லி,*

ஒப்பிலாத் தீவினையேனை* உய்யக்கொண்டு*

செப்பமே செய்து* திரிகின்ற சீர்கண்டே? 7.9.4

 

3545:

சீர்கண்டு கொண்டு* திருந்து நல்லின்கவி,*

நேற்பட யான்சொல்லும்* நீர்மை இலாமையில்,*

ஏர்விலா என்னைத்* தன்னாக்கி எனÛனால் தன்னை,*

பார்பரவின்கவி* பாடும் பரமரே.     7.9.5

 

3546:

இன்கவி பாடும்* பரம கவிகளால்,*

தன்கவி தான் தன்னை* பாடுவியாது இன்று*

நன்கு வந்து என்னுடனாக்கி* என்னால் தன்னை,*

வன்கவி பாடும்* என் வைகுந்த நாதனே.   7.9.6

 

3547:

வைகுந்த நாதன்*என் வல்வினை மாய்ந்தறச்,*

செய்குந்தன் தன்னை* என்னாக்கி என்னால்தன்னை,*

வைகுந்தனாகப்* புகழ வண் தீங்கவி,*

செய்குந்தன் தன்னை* என்னாள் சிந்தித்தார்வேனா! 7.9.7

 

3548:

ஆர்வேனா ஆழியங்கை* எம்பிரான்புகழ்,*

பார்விண்நீர் முற்றும்* கலந்து பருகிலும்,*

ஏர்விலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*

சீர்பெற இன்கவி* சொன்ன திறத்துக்கே? 7.9.8

 

3549:

திறத்துக்கே துப்புரவாம்* திருமாலின்சீர்,*

இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வேனா,*

மறப்பிலா என்னைத்* தன்னாக்கி என்னால் தன்னை,*

உறப்பல இன்கவி* சொன்ன உதவிக்கே?  7.9.9

 

3560:

உதவிக் கைம்மாறு* என்னுயிர் என்ன உற்றெண்ணில்,*

அதுவும் மற்றாங்கவன்* தன்னது என்னால் தன்னை,*

பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*

எதுவும் ஒன்றுமில்லை* செய்வது இங்குமங்கே. 7.9.10

 

3551:##

இங்கும் அங்கும்* திருமாலன்றி இன்மைகண்டு,*

அங்ஙனே வண்குருகூர்ச்* சடகோபன்,*

இங்ஙனே சொன்ன* ஓராயிரத்து இப்பத்தும்,*

எங்ஙனே சொல்லினும்* இன்பம் பயக்குமே. (2) 7.9.11

 

பத்தாம் திருமொழி

 

3552:##

இன்பம் பயக்க எழில்மலர்  மாதரும்* தானும் இவ்வேழுலகை,*

இன்பம் பயக்க இனிதுடன்  வீற்றிருந்து* ஆள்கின்ற எங்கள்பிரான்,*

அன்புற்று அமர்துறைகின்ற*  அணிபொழில் சூழ் திருவாறன்விளை,*

அன்புற்று அமர்ந்து வலம்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ! (2)       

 

3553:

ஆகுங்கொல் ஐயமொன்றின்றி*  அகலிடம் முற்றவும் ஈரடியே*

ஆகும் பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,*

மாகம் திகழ்கொடி மாடங்கள்  நீடு* மதிள்திருவாறன்விளை,*

மாகந்த நீர்கொண்டு தூவி  வலஞ்செய்து* கைதொழ கூடுங்கொலோ!   7.10.2

 

3554:

கூடுங்கொல் வைகலும்* கோவிந்தனை  மதுசூதனைக் கோளரியை,*

ஆடும் பறவை மிசைக்கண்டு*  கைதொழுதன்றி அவனுறையும்,*

பாடும் பெரும்புகழ் நான்மறை  வேள்வியைந்து* ஆறங்கம் பன்னினர்வாழ்,*

நீடு பொழில் திருவாறன்  விளைதொழ* வாய்க்குங்கொல் நிச்சலுமே!  7.10.3

 

3555:

வாய்க்குங்கொல் நிச்சலும்* எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந்னெலும்*வயல்சூழ் திருவாறன்விளை,*

வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன்* வட மதுரைப் பிறந்த,*

வாய்க்கும் மணிநிறக் கண்ணபிரான் தன்* மலரடிப் போதுகளே.            7.10.4

 

3556:

மலரடிப் போதுகள் என்னெஞ்சத்து எப்பொழுதும்*இருத்தி வணங்க,*

பலரடியார் முன்பருளிய*  பாம்பணையப்பன் அமர்ந்துறையும்,*

மலரில் மணிநெடு மாடங்கள்  நீடு* மதிள்திருவாறன் விளை,*

உலகம் மலிபுகழ் பாட* நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.            7.10.5

 

3557:

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*

அன்றங்கமர் வென்றுருப்பிணி  நங்கை* அணி நெடுந்தோள்புணர்ந்தான்,*

என்றும் எப்போதும் என்னெஞ்சம்  துதிப்ப* உள்ளே இருக்கின்றபிரான்,*

நின்ற அணி திருவாறன்  விளையென்னும்* நீள் நகரமதுவே.            7.10.6

 

3558:

நீணகர மதுவே மலர்ச்  சோலைகள் சூழ்*திருவாறன்விளை,*

நீணகரத்துறைகின்றபிரான்* நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*

வாண புரம்புக்கு முக்கட்ப்பிரானை தொலைய* வெம்போர்கள்செய்து,*

வாணனை ஆயிரந்தோள் துணித்தான்* சரணன்றி மற்றொன்றிலமே.           7.10.7

 

3559:

`அன்றிமற்றொன்றிலம் நின்சரணே!என்று* அகலிரும் பொய்கையின்வாய்,*

நின்றுதன் நீள் கழலேத்திய* ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தபிரான்,*

சென்றங்கு இனிதுறைகின்ற* செழும்பொழில் சூழ் திருவாறன்விளை,*

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.        7.10.8

 

3560:

தீவினை உள்ளத்தின் சார்வல்லவாகித்* தெளிவிசும்பேறலுற்றால்,*

நாவினுள்ளும் உள்ளத் துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*

யாவரும் வந்து வணங்கும்  பொழில்*திருவாறன் விளையதனை,*

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்* என்னுமென் சிந்தனையே.        7.10.9

 

3561:

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை* தேவ பிரானறியும்,*

சிந்தையினால் செய்வதானறியாதன* மாயங்கள் ஒன்றுமில்லை,*

சிந்தையினால் சொல்லினால் செய்கையால்* நிலத் தேவர் குழுவணங்கும்,*

சிந்தை மகிழ் திருவாறன்  விளையுறை* தீர்த்தனுக்கு அற்றபின்னே. 7.10.10

 

3562:##

தீர்த்தனுக்கு அற்றபின்* மற்றோர் சரணில்லை என்றெண்ணி,* தீர்த்தனுக்கே

தீர்த்த மனத்தனனாகிச்*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

தீர்த்தங்கள் ஆயிரத்துள்* இவை பத்தும் வல்லார்களை,* தேவர்வைகல்

தீர்த்தங்களேயென்று பூசித்து  நல்கி உரைப்பர்* தம் தேவியர்க்கே.(2) 7.10.11