முதல் திருமொழி
3673:##
கொண்ட பெண்டிர் மக்களுற்றார்* சுற்றத்தவர் பிறரும்*
கண்டதோடு பட்டதல்லால்* காதல்மற்றுயாதுமில்லை*
எண்திசையும் கீழும்மேலும்* முற்றவும் உண்டபிரான்*
தொண்டரோமாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் துணையே. (2) 9.1.1
3674:
துணையும் சார்வுமாகுவார்போல்* சுற்றத்தவர்பிறரும்*
அணையவந்த ஆக்கமுண்டேல்* அட்டைகள்போல் சுவைப்பர்*
கணையொன்றாலே ஏழ்மாமரமும் எய்த* எம்கார்முகிலை*
புணையென்றுய்யப் போகிலல்லால்* இல்லைகண்டீர்பொருளே. 9.1.2
3675:
பொருள்கையுண்டாய்ச் செல்லக்காணில்* போற்றியென்றேற்றுஎழுவர்*
இருள்கொள்துன்பத் தின்மைகாணில்* என்னே! என்பாருமில்லை*
மருள்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப் பிறந்தாற்கு*
அருள்கொள் ஆளாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர்அரணே. 9.1.3
3676:
அரணமாவர் அற்றகாலைக்கு* என்றென்று அமைக்கப்பட்டார்*
இரணம்கொண்ட தெப்பராவர்* இன்றியிட்டாலும் அஃதே*
வருணித்தென்னே?* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சரணென்றுய்யப் போகிலல்லால்* இல்லைகண்டீர் சதிரே. 9.1.4
3677:
சதுரமென்று தம்மைத்தாமே* சம்மதித்து இன்மொழியார்*
மதுரபோகம் துற்றவரே* வைகிமற்றொன்றுஉறுவர்*
அதிர்கொள்செய்கை அசுரர்மங்க* வடமதுரைப்பிறந்தாற்கு*
எதிர்கொள்ஆளாய் உய்யலல்லால்* இல்லைகண்டீர் இன்பமே. 9.1.5
3678:
இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!* உள்ளது நினையாதே*
தொல்லையார்கள் எத்தனைவர்* தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
மல்லை மூதூர்* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
சொல்லிஉய்யப் போகலல்லால்* மற்றொன்றில்லைசுருக்கே. 9.1.6
3679:
மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம்* மாநிலத்தெவ்வுயிர்க்கும்*
சிற்றவேண்டா சிந்திப்பேயமையும்* கண்டீர்கள்அந்தோ!*
குற்றமன்றுஎங்கள் பெற்றத்தாயன்* வடமதுரைப்பிறந்தான்*
குற்றமில்சீர் கற்றுவைகல்* வாழ்தல்கண்டீர்குணமே. 9.1.7
3680:
வாழ்தல்கண்டீர் குணமிது அந்தோ!* மாயவன் அடிபரவி*
போழ்துபோக உள்ளகிற்கும்* புன்மையிலாதவர்க்கு*
வாழ்துணையா* வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
வீழ்துணையாய்ப் போமிதனில்* யாதுமில்லைமிக்கதே. 9.1.8
3681:
யாதுமில்லை மிக்கதனில்* என்றன்று அதுகருதி*
காதுசெய்வான் கூதைசெய்து* கடைமுறை வாழ்கையும்போம்*
மாதுகிலின் கொடிக்கொள்மாட* வடமதுரைப்பிறந்த*
தாதுசேர்தாள் கண்ணன் அல்லால்* இல்லை கண்டீர் சரணே. 9.1.9
3682:
கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்* சரண்அதுநிற்கவந்து*
மண்ணின் பாரம் நீக்குதற்கே* வடமதுரைப்பிறந்தான்*
திண்ணமாநும் உடைமை உண்டேல்* அவனடி சேர்ந்துய்ம்மினோ*
எண்ணவேண்டா நும்மதாதும்* அவனன்றிமற்றில்லையே. 9.1.10
3683:##
ஆதுமில்லை மற்றவனில்* என்றதுவே துணிந்து*
தாதுசேர்தோள் கண்ணனை* குருகூர்ச்சடகோபன்சொன்ன*
தீதிலாத ஒண்தமிழ்கள்* இவைஆயிரத்துள் இப்பத்தும்*
ஓதவல்லபிராக்கள்* நம்மையாளுடையார்கள் பண்டே. (2) 9.1.11
இரண்டாம் திருமொழி
3684:##
பண்டைநாளாலே நின்திருவருளும்* பங்கயத்தாள் திருவருளும் கொண்டு*
நின்கோயில் சீய்த்துப் பல்படிகால்* குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய்திறந்து* உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த* திருப்புளிங்குடிக் கிடந்தானே! (2)
3685:
குடிகிடந்து ஆக்கஞ்செய்து* நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*
உன்பொன் அடிக்கடவாதே வழிவருகின்ற* அடியரோர்க்கு அருளி*
நீஒருநாள் படிக்களவாக நிமிர்த்த* நின்பாத பங்கயமே தலைக்கணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலைத்* திருப்புளிங் குடிக்கிடந்தானே.
3686:
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி* உன்திருவுடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழிவரும்* தொண்டரோர்க்கு அருளி*
தடந்தோள் தாமரைக்கண்விழித்து* நீஎழுந்துஉன்தாமரை மங்கையும்நீயும்*
இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்* திருப்புளிங்குடிக்கிடந்தானே!
3687:
புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து* வைகுந்தத்துள் நின்று*
தெளிந்தஎன்சிந்தை அகங்கழியாதே* என்னையாள்வாய் எனக்கருளி*
நளிந்தசீருலகம் மூன்றுடன்வியப்ப* நாங்கள்கூத்தாடி நின்றார்ப்ப*
பளிங்குநீர் முகிலின்பவளம்போல்* கனிவாய்சிவப்பநீ காணவாராயே. 9.2.4
3688:
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து* நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து* நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,
பவளநன்படர்க்கீழ்ச் சங்குறைபொருநல்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்* காய்சினப்பறவையூர்ந்தானே! 9.2.5
3689:
காய்சினப்பறவையூர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல்*
மாசினமாலி மாலிமானென்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருபுளிங்குடியாய்*
காய்சினவாழி சங்குவாள் வில்தண்டேந்தி* எம்மிடர்கடிவானே! 9.2.6
3690:
எம்மிடர்க்கடிந்து இங்கு என்னையாள்வானே!* இமையவர்தமக்கு மாங்கனையாய்*
செம்மடல்மலரும் தாமரைப்பழனத்* தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடையடியர் கவ்வைகண்டுகந்து* நாம்களித்து உளநலம்கூர*
இம்மடவுலகர்காண நீஒருநாள்* இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 9.2.7
3691:
எங்கள்கண்முகப்பே உலகர்களெல்லாம்* இணையடி தொழுதெழுந்திறைஞ்சி*
தங்களன்பாரத் தமதுசொல்வலத்தால்* தலைதலைச் சிறந்தபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!* திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்திதனுளும் ஒருநாள்* இருந்திடாய் வீற்றிடங்கொண்டே. 9.2.8
3692:
வீற்றிடங்கொண்டு வியன்கொள்மாஞாலத்து* இதனுளும் இருந்திடாய்*
அடியோம்போற்றி ஓவாதே கண்ணினை குளிர* புதுமலராகத்தைப்பருக*
சேற்றிளவாளை செந்நெலூடுகளும்* செழும்பணைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதலரிந்த* கொடுவினைப்படைகள் வல்லானே! 9.2.9
3693:
கொடுவினைப்படைகள் வல்லையாய்* அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்கிடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவிணையில்லா மலர்மகள்* மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்லடியை*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்* கூவுதல்வருதல் செய்யாயே. 9.2.10
3694:##
`கூவுதல்வருதல் செய்திடாய்‘என்று* குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்கமர்ந்த வியன்புனல்பொருநல்* வழுதிநாடன் சடகோபன்*
நாவியல்பாடல்ஆயிரத்துள்ளும்* இவையுமோர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதலின்றிஉலகம் மூன்றளந்தான்* அடியிணை உள்ளத்தோர்வாரே. (2) 9.2.11
மூன்றாம் திருமொழி
3695:##
ஓராயிரமாய்* உலகேழ்அளிக்கும்*
பேராயிரம்கொண்டதுஓர்* பீடுடையன்
காராயின* காளநன்மேனியினன்*
நாராயணன்* நங்கள்பிரான்அவனே. (2) 9.3.1
3696:
அவனேஅகல்ஞாலம்* படைத்திடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான்* அளந்தான்*
அவனேஅவனும்* அவனும்அவனும்*
அவனேமற்றெல்லாமும் அறிந்தனமே. 9.3.2
3697:
அறிந்தனவேத* அரும்பொருள்நூல்கள்*
அறிந்தனகொள்க* அரும்பொருள்ஆதல்*
அறிந்தனர்எல்லாம்* அரியைவணங்கி*
அறிந்தனர்* நோய்கள்அறுக்கும்மருந்தே. 9.3.3
3698:
மருந்தேநங்கள்* போகமகிழ்ச்சிக்கென்று*
பெருந்தேவர்குழாங்கள்* பிதற்றும்பிரான்*
கருந்தேவன்எம்மான்* கண்ணன்விண்ணுலகம்*
தரும்தேவனை* சோரேல்கண்டாய்மனமே! 9.3.4
3699:
மனமே!உன்னை* வல்வினையேன்இரந்து*
கனமேசொல்லினேன்* இதுசோரேல்கண்டாய்*
புனமேவிய* பூந்தந்துழாய் அலங்கல்*
இனமேதுமிலானை* அடைவதுமே. 9.3.5
3700:
அடைவதும்அணியார்* மலர்மங்கைதோள்*
மிடைவதும்* அசுரர்க்குவெம்போர்களே*
கடைவதும்* கடலுளமுதம்*
என்மனம்உடைவதும்* அவற்கேஒருங்காகவே. 9.3.6
3701:##
ஆகம்சேர்* நரசிங்கமதாகி*
ஓர்ஆகம்வள்ளுகிரால்* பிளந்தானுறை*
மாகவைகுந்தம்* காண்பதற்கு*
என்மனம்ஏகம்எண்ணும்* இராப்பகலின்றியே. 9.3.7
3702:
இன்றிப்போக* இருவினையும்கெடுத்து*
ஒன்றியாக்கைபுகாமை* உய்யக்கொள்வான்*
நின்றவேங்கடம்* நீள்நிலத்துஉள்ளது,
சென்றுதேவர்கள்* கைதொழுவார்களே. 9.3.8
3703:
தொழுதுமாமலர்* நீர்சுடர்தூபம்கொண்டு*
எழுதுமென்னும்இது* மிகையாதலில்*
பழுதில்தொல்புகழ்ப்* பாம்பணைப்பள்ளியாய்*
தழுவுமாறுஅறியேன்* உனதாள்களே. 9.3.9
3704:
தாளதாமரையான்* உனதுஉந்தியான்*
வாள்கொள் நீள்மழுவாளி* உன்ஆகத்தான்*
ஆளராய்த்தொழுவாரும்* அமரர்கள்*
நாளும் என்புகழ்கோ* உனசீலமே? 9.3.10
3705:##
சீலமெல்லையிலான்* அடிமேல்*
அணிகோலநீள்* குருகூர்ச்சடகோபன்*
சொல்மாலையாயிரத்துள்ள்* இவை பத்தினின்பாலர்*
வைகுந்தமேறுதல்* பான்மையே. (2) 9.3.11
நான்காம் திருமொழி
3706:##
மையார்கருங்கண்ணி* கமல மலர்மேல்செய்யாள்*
திருமார்வினில்சேர்* திருமாலே*
வெய்யார்சுடராழி* சுரிசங்கமேந்தும்கையா*
உனைக்காணக்* கருதும் என்கண்ணே. 9.4.1
3707:
கண்ணேஉனைக்* காணக்கருதி*
என்னெஞ்சம்எண்ணேகொண்ட* சிந்தையதாய் நின்றியம்பும்*
விண்ணோர் முனிவர்க்கு என்றும்* காண்பரியாயை*
நண்ணாது ஒழியேன் என்று* நான் அழைப்பனே. 9.4.2
3708:
அழைக்கின்ற அடிநாயேன்* நாய்கூழை வாலால்*
குழைக்கின்றது போல* என்னுள்ளம் குழையும்*
மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து* ஆநிரைகாத்தாய்,
பிழைக்கின்றதருளென்று* பேதுறுவனே. 9.4.3
3709:
உறுவது இதுவென்று* உனக்கு ஆட்பட்டு*
நின்கண்பெறுவது எதுகொலென்று* பேதையேன் நெஞ்சம்*
மறுகல்செய்யும்* வானவர் தானவர்க்கு என்றும்*
அறிவதரிய* அரியாய அம்மானே! 9.4.4
3710:
அரியாய அம்மானை* அமரர் பிரானை*
பெரியானைப்* பிரமனை முன்படைத்தானை*
வரிவாள் அரவின்அணைப்* பள்ளிகொள்கின்ற*
கரியாங்கழல் காணக்* கருதும் கருத்தே. 9.4.5
3711:
கருத்தேஉனைக்* காணக்கருதி*
என்னெஞ்சத்து இருத்தாக இருத்தினேன்* தேவர்கட்கெல்லாம்*
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி* உயரத்தொருத்தா*
உனையுள்ளும்* என்னுள்ளம்உகந்தே. 9.4.6
3712:
உகந்தேஉன்னை* உள்ளும் என்னுள்ளத்து*
அகம்பால் அகந்தான் அமர்ந்தே* இடங்கொண்ட அமலா*
மிகுந்தானவன் மார்வகலம்* இருகூறா நகந்தாய்*
நரசிங்கமதாய உருவே! 9.4.7
3713:
உருவாகிய* ஆறுசமயங்கட்கெல்லாம்*
பொருவாகி நின்றான்* அவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகிய ஆதியைத்* தேவர்கட்கெல்லாம்*
கருவாகிய கண்ணனைக்* கண்டுகொண்டேனே. 9.4.8
3714:
கண்டுகொண்டு* என்கண்ணினை ஆரக்களித்து*
பண்டைவினையாயின* பற்றோடறுத்து*
தொண்டர்க்கு அமுதுண்ணச்* சொன்மாலைகள் சொன்னேன்*
அண்டத்தமரர் பெருமான்!* அடியேனே. 9.4.9
3715:
அடியான் இவனென்று* எனக்காரருள்செய்யும் நெடியானை*
நிறைபுகழ் அஞ்சிறைப்* புள்ளின் கொடியானை*
குன்றாமல்* உலகமளந்த அடியானை*
அடைந்து அடியேன்* உய்ந்தவாறே. 9.4.10
3716:##
ஆறாமதயானை* அடர்த்தவன்தன்னை*
சேறார்வயல்* தென்குருகூர்ச் சடகோபன்*
நூறேசொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
ஏறேதரும்* வானவர்தம் இன்னுயிர்க்கே. (2) 9.4.11
ஐந்தாம் திருமொழி
3717:##
இன்னுயிர்ச்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*இங்கு எத்தனை*
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்* குயில் பேடைகாள்*
என்னுயிர்க் கண்ணபிரானை* நீர் வரக்கூவுகிலீர்*
என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்* இத்தனை வேண்டுமோ? (2) 9.5.1
3718:
இத்தனை வேண்டுவதன்றந்தோ!* அன்றில் பேடைகாள்*
எத்தனை நீரும் நும்சேவலும்* கரைந்தேங்குதிர்*
வித்தகன் கோவிந்தன்* மெய்யனல்லன் ஒருவர்க்கும்*
அத்தனையாம் இனி* என்உயிர் அவன்கையதே. 9.5.2
3719:
அவன்கையதே எனதாருயிர்* அன்றில் பேடைகாள்*
எவன்சொல்லி நீர்குடைந்தாடுதிர்* புடைசூழவே*
தவம்செய்தில்லா* வினையாட்டியேன் உயிர் இங்குண்டோ*
எவம்சொல்லி நிற்றும்* நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 9.5.3
3720:
கூக்குரல்கேட்டும்* நம்கண்ணன் மாயன் வெளிப்படான்*
மேற்கிளை கொள்ளேன்மின்* நீரும் நும்சேவலும் கோழிகாள்*
வாக்கும்மனமும்* கருமமும் நமக்காங்கதே*
ஆக்கையும் ஆவியும்* அந்தரம் நின்றுழலுமே. 9.5.4
3721:
அந்தரம் நின்றுழல்கின்ற* யானுடைப் பூவைகாள்*
நுந்திரத்தேது மிடையில்லை* குழறேன்மினோ*
இந்திரஞாலங்கள் காட்டி*இவ்வேழுலகும் கொண்ட*
நம் திருமார்பன்* நம்மாவி உண்ண நன்கெண்ணினான். 9.5.5
3722:
நன்கெண்ணி நான்வளர்த்த* சிறுகிளிப்பைதலே*
இன்குரல் நீ மிழிற்றேல்* என்னாருயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாயொக்கும் வாயன்* கண்ணங்கை காலினன்*
நின்பசுஞ்சாம நிறத்தன்* கூட்டுண்டு நீங்கினான். 9.5.6
3723:
கூட்டுண்டு நீங்கிய* கோலத்தாமரை கண்செவ்வாய்*
வாட்டமில்என் கருமாணிக்கம்* கண்ணன் மாயன்போல்*
கோட்டிய வில்லொடு* மின்னு மேகக்குழாங்கள்காள்*
காட்டேன்மின் நும்முரு* என்னுயிர்க்கு அதுகாலனே. 9.5.7
3724:
உயிர்க்கது காலனென்று* உம்மை யானிரந்தேற்கு*
நீர் குயில் பைதல்காள்* கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*
தயிர்ப்பழஞ்சோற்றொடு* பாலடிசிலும் தந்து*
சொல்பயிற்றிய நல்வளமூட்டினீர்* பண்புடையீரே! 9.5.8
3725:
பண்புடை வண்டொடு தும்பிகாள்* பண்மிழற்றேன்மின்*
புண்புரை வேல்கொடு* குத்தாலொக்கும் நும்இன்குரல்
தண்பெருநீர்த் தடந்தாமரை* மலர்ந்தாலொக்கும் கண்பெருங்கண்ணன்*
நம்மாவியுண்டெழ நண்ணினான். 9.5.9
3726:
எழநண்ணி நாமும்* நம்வானநாடேனாடு ஒன்றினோம்*
பழன நன்நாரைக் குழாங்கள்காள்* பயின்றென்னினி*
இழைநல்லவாக்கையும்* பையவே புயக்கற்றது*
தழைநல்ல இன்பம் தலைப்பெய்து* எங்கும் தழைக்கவே. 9.5.10
3727:##
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த* பல்லூழிக்கு*
தண்புகழேத்தத்* தனக்கருள் செய்தமாயனை*
தென்குருகூர்ச் சடகோபன்* சொல்லாயிரத்துள் இவை*
ஒன்பதோடு ஒன்றுக்கும்* மூவுலகும் உருகுமே. (2) 9.5.11
ஆறாம் திருமொழி
3728:##
உருகுமால் நெஞ்சம்* உயிரின் பரமன்றி*
பெருகுமால் வேட்கையும்* என்செய்கேன் தொண்டனேன்*
தெருவெல்லாம் காவிகமழ்* திருக்காட்கரை*
மருவிய மாயன்தன்* மாயம் நினைதொறே. (2) 9.6.1
3729:
நினைதொறும் சொல்லுந்தொறும்* நெஞ்சு இடிந்துகும்*
வினைகொள்சீர் பாடிலும்* வேமெனதாருயிர்*
சுனைகொள் பூஞ்சோலைத்* தென்காட்கரையென்னப்பா*
நினைகிலேன் நான்உனக்கு* ஆட்செய்யும் நீர்மையே. 9.6.2
3730:
நீர்மையால் நெஞ்சம்* வஞ்சித்துப் புகுந்து*
என்னை ஈர்மைசெய்து* என்னுயிராய் என்னுயிர் உண்டான்*
சீர்மல்குசோலைத்* தென்காட்கரையென்னப்பன்*
கார்முகில் வண்ணன்தன்* கள்வம் அறிகிலேன். 9.6.3
3731:
அறிகிலேன் தன்னுள்* அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும்* அவற்றுள் நிற்கும் பிரான்*
வெறிகமழ்சோலைத்* தென்காட்கரை என்னப்பன்*
சிறியவென்னாருயிருண்ட* திருவருளே. 9.6.4
3732:
திருவருள் செய்பவன்போல* என்னுள்புகுந்து*
உருவமும் ஆருயிரும்* உடனே உண்டான்*
திருவளர்சோலைத்* தென்காட்கரையென்னப்பன்*
கருவளர்மேனி* எம்கண்ணன் கள்வங்களே. 9.6.5
3733:
என்கண்ணன் கள்வம்* எனக்குச் செம்மாய்நிற்கும்*
அங்கண்ணன் உண்ட* என்னாருயிர்க்கோதுஇது*
புங்கண்மை எய்திப்* புலம்பி இராப்பகல்*
எங்கண்ணன் என்று* அவன்காட்கரையேத்துமே. 9.6.6
3734:
காட்கரையேத்தும்* அதனுள் கண்ணாஎன்னும்*
வேட்கை நோய்கூர* நினைந்து கரைந்துகும்*
ஆட்கொள் வானொத்து* என்னுயிருண்ட மாயனால்*
கோட்குறைபட்டது* என்னாருயிர் கோளுண்டே. 9.6.7
3735:
கோளுண்டான் அன்றிவந்து* என்னுயிர் தானுண்டான்*
நாளுநாள்வந்து* என்னை முற்றவும் தானுண்டான்*
காளநீர்மேகத்* தென்காட்கரை என்னப்பற்கு
ஆளன்றேபட்டது* என்ஆருயிர் பட்டதே. 9.6.8
3736:
ஆருயிர் பட்டது* எனதுயிர் பட்டது*
பேரிதழ் தாமரைக்கண்* கனிவாயதோர்*
காரெழில் மேகத்* தென்காட்கரை கோயில்கொள்,
சீரெழில் நால்தடந்தோள்* தெய்வ வாரிக்கே. 9.6.9
3737:
வாரிக்கொண்டு* உன்னைவிழுங்குவன் காணில்‘என்று*
ஆர்வுற்ற என்னை ஒழிய* என்னின் முன்னம்பாரித்து*
தான்என்னை* முற்றப் பருகினான்*
காரொக்கும்* காட்கரைப்பன் கடியனே. 9.6.10
3738:##
கடியனாய்க் கஞ்சனைக்* கொன்றபிரான் தன்னை*
கொடிமதிள் தென்குருகூர்ச்* சடகோபன்சொல்*
வடிவமையாயிரத்து* இப்பத்தினால் சன்மம்-
முடிவெய்தி* நாசங்கண்டீர்கள் எங்கானலே. (2) 9.6.11
ஏழாம் திருமொழி
3739:##
எங்கானல் அகங்கழிவாய்* இரை தேர்ந்திங்கு இனிதமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்கார் பூந்துழாய்முடி* என்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நுங்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1
3740:
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகினங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடங்கு உறைவார்க்குத்* தக்கிலமே!கேளÖரே. 9.7.2
3741:
தக்கிலமே கேளÖர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்கினங்காள்!குருகினங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்தலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்திலைபோலும்* திருமேனி அடிகளுக்கே. 9.7.3
3742:
திருமேனி அடிகளுக்கு* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்கருளÖர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளியகற்றித்* தெளிவிசும்பு கடியுமே? 9.7.4
3743:
தெளிவிசும்பு கடிதோடித்* தீவளைத்து மின்னிலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துறையும் ஒண்சுடர்க்கு*
தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துறையும்*
துளிவார்கட்குழலார்க்கு* என்தூதுரைத்தல் செப்பமினே. 9.7.5
3744:
தூதுரைத்தல் செப்புமின்கள்* தூமொழியாய் வண்டினங்காள்*
போதிரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே. 9.7.6
3745:
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்த்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகினங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே. 9.7.7
3746:
எனக்கொன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்கின்பம் படமேவும்* வண்டினங்காள்!தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துறையும்*
புனல்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே. 9.7.8
3747:
பூந்துழாய் முடியார்க்குப்* பொன்னாழி கையார்க்கு*
ஏந்துநீர் இளங்குருகே!* திருமூழிக்களத்தார்க்கு*
ஏந்துபூண் முலைப்பயந்து* என்னிணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டகல்தல்* தகவன்றென்று உரையீரே. 9.7.9
3748:
தகவன்றென்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகவின்பம் படமேவும்* மென்னடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவெய்தி* மேகலையும் ஈடழிந்து*
என்அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே. 9.7.10
3749:##
ஒழிவின்றி திருமூழிக்களத்துறையும்* ஒண்சுடரை*
ஒழிவில்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுவில்லா வண்குருகூர்* சடகோபன் வாய்ந்துரைத்த*
அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே. (2) 9.7.11
எட்டாம் திருமொழி
3750:##
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர் சோலைகள்சுழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலொ* கொடியேற்கே? (2) 9.8.1
3751:
கொடியேரிடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடங்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியானுறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறுநாள்* எவைகொலொ! 9.8.2
3752:
`எவைகொல் அணுகப் பெறுநாள்?’* என்று எப்போதும்*
கவையில் மனமின்றிக்* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவையில் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே. 9.8.3
3753:
நாளெல் அறியேன்* எனக்குள்ளன*
நானும்மீளா அடிமை* பணி செய்யப் புகுந்தேன்*
நீளார்மலர் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாளேய் தடங்கண்* மடப்பின்னை மணாளா! 9.8.4
3754:
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துயிர்* தேவர்கட்கெல்லாம்*
விண்ணாளன் விரும்பியுறையும்* திருநாவாய்*
கண்ணாரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே? 9.8.5
3755:
கண்டே களிக்கின்றது* இங்கென்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசின்றி*
வண்டார்மலர் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எங்கோவலர்கோவே! 9.8.6
3756:
கோவாகிய* மாவலியை நிலங்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாயுறைகின்ற* என்நாரணநம்பீ*
`ஆவா அடியான்* இவன்‘என்று அருளாயே. 9.8.7
3757:
அருளாது ஒழிவாய்* அருள்செய்து*
அடியேனைப்பொருளாக்கி* உன்பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேயின்றி* உன்னை என்னெஞ்சத்திருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே! 9.8.8
3758:
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்கரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகாளி*
தேவன் விரும்பியுறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனியந்தோ! 9.8.9
3759:
அந்தோ! அணுகப்பெறுநாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்தார்மலர் சோலைகள்சுழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா! 9.8.10
3760:##
வண்ணம் மணிமாட* நன்னாவாய் உள்ளானை*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. (2) 9.8.11
ஒன்பதாம் திருமொழி
3761:##
மல்லிகைகமழ் தென்றல் ஈருமாலோ!*
வண்குறிஞ்சி இசைதவழுமாலோ*
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ!*
செக்கர்நன் மேகங்கள் சிதைக்குமாலோ*
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்*
ஆயர்கள்ஏறு அரியேறு எம்மாயோன்*
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியமாலோ! (2) 9.9.1
3762:
புகலிடம் அறிகிலம் தமியமாலோ!
புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ*
பகலடுமாலைவண் சாந்தமாலோ!*
பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*
அகலிடம் படைத்திடந்து உண்டுமிழ்ந்து-
அளந்து* எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்*
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*
இனியிருந்து என்னுயிர் காக்குமாறென்? 9.9.2
3763:
இனியிருந்து என்னுயிர் காக்குமாறென்*
இணைமுலை நமுக நுண்ணிடை நுடங்க*
துனியிருங்கலவி செய்து ஆகம்தோய்ந்து*
துறந்தெம்மை இட்டகல் கண்ணன்கள்வன்*
தனியிளஞ்சிங்கம் எம்மாயன்வாரான்*
தாமரைக்கண்ணும் செவ்வாயும்*
நீலப் பனியிருங்குழல்களும் நான்கு தோளும்*
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ! 9.9.3
3764:
பாவியேன் மனத்தே நின்றீருமாலோ!*
வாடை தண்வாடை வெவ்வாடையாலோ*
மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*
மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதுதைந்த*
எம்பெண்மையம் பூவிதாலோ*
ஆவியிம் பரமல்ல வகைகளாலோ!*
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ! 9.9.4
3765:
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ!*
ஆ புகும்மாலையும் ஆகின்றாலோ,*
யாமுடை ஆயன்தன் மனம் கல்லாலோ!*
அவனுடைத் தீங்குழல் ஈருமாலோ*
யாமுடை துணையென்னும் தோழிமாரும்*
எம்மின் முன்அவனுக்கு மாய்வராலோ*
யாமுடை ஆருயிர் காக்குமாறென்?
அவனுடை அருள் பெறும்போது அரிதே. 9.9.5
3766:
அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*
அவ்வருள்அல்லன அருளும் அல்ல*
அவனருள் பெறுமளவு ஆவிநில்லாது*
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*
சேர்திருவாகம் எம்மாவியீரும்*
எவம் இனிப்புகுமிடம்? எவன் செய்கேனோ?
ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்! 9.9.6
3767:
ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்!*
ஆருயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை*
காரொக்கும்மேனி நங்கண்ணன் கள்வம்*
கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கணஃதே*
சீருற்றாகிற் புகையாழ்நரம்பு*
பஞ்சமம்தண் பசுஞ்சாந்தணைந்து*
போருற்றவாடைதண் மல்லிகைப்பூப்*
புதுமணம்முகந்துகொண்டு எறியுமாலோ! 9.9.7
3768:
புதுமணம் முகந்துகொண்டு எறியுமாலோ!*
பொங்கிளவாடை புன்செக்கராலோ*
அதுமணந்தகன்றநண் கண்ணன்கள்வம்*
கண்ணினிற் கொடிது இனியதனிலும்பர்*
மதுமண மல்லிகை மந்தக்கோவை*
வண்பசுஞ்சாந்தினில் பஞ்சமம்வைத்து*
அதுமணந்து இன்னருள் ஆய்ச்சியர்க்கே*
ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்நான்! 9.9.8
3769:
ஊதும் அத்தீங்குழற்கே உய்யேன்நான்!*
அதுமொழிந்திடை இடைத்தன் செய்கோலத்*
தூதுசெய் கண்கள் கொண்டொன்று பேசித்*
தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*
பேதைநெஞ்சறவறப் பாடும்பாட்டை*
யாதுமொன்று அறிகிலம் அம்மஅம்ம!*
மாலையும்வந்தது மாயன்வாரான். 9.9.9
3770:
மாலையும்வந்தது மாயன்வாரான்*
மாமணிபுலம்ப வல்லேறணைந்த*
கோல நன்நாகுகள் உகளுமாலோ!
கொடியென குழல்களும் குழறுமாலோ*
வாலொளி வளர்முல்லை கருமுகைகள்*
மல்லிகை அலம்பி வண்டாலுமாலோ*
வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ!*
என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே? 9.9.10
3771:##
அவனைவிட்டகன்று உயிர்ஆற்றகில்லா*
அணியிழைஆய்ச்சியர் மாலைப்பூசல்*
அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*
அணிகுருகூர் சடகோபன்மாறன்*
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேலுரைத்த*
ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு*
அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!*
அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே! (2) 9.9.11
பத்தாம் திருமொழி
3772:##
மாலைநண்ணித்* தொழுதெழுமினோ வினைகெட*
காலைமாலை* கமலமலர் இட்டு நீர்*
வேலைமோதும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து*
ஆலின்மேலால் அமர்ந்தான்* அடிஇணைகளே. (2) 9.10.1
3773:
கள்ளவிழும் மலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
நள்ளிசேரும் வயல்சூழ்* கிடங்கின்புடை*
வெள்ளியேய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்உள்ளி*
நாளும்தொழுது எழுமினோ தொண்டரே! 9.10.2
3774:
தொண்டர் நுந்தம்* துயர்ப்போகநீர் ஏகமாய்*
விண்டுவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வண்டுபாடும் பொழில்சூழ்* திருக்கண்ணபுரத்து அண்டவாணன்*
அமரர்பெருமானையே. 9.10.3
3775:
மானைநோக்கி* மடப்பின்னைதன் கேள்வனை*
தேனைவாடாமலர்இட்டு* நீர்இறைஞ்சுமின்*
வானைஉந்தும் மதிள்சூழ்* திருக்கண்ணபுரம்*
தான்நயந்த பெருமான்* சரணமாகுமே. 9.10.4
3776:
சரணமாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
மரணமானால்* வைகுந்தம் கொடுக்கும்பிரான்*
அரணமைந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம் தரணியாளன்*
தனதன்பர்க்கு அன்பாகுமே. 9.10.5
3777:
அன்பனாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
செம்பொன்ஆகத்து* அவுணன்உடல் கீண்டவன்,
நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரத்து அன்பன்*
நாளும் தன்* மெய்யர்க்கு மெய்யனே. 9.10.6
3778:
மெய்யனாகும்* விரும்பித் தொழுவார்க்கெல்லாம்*
பொய்யனாகும்* புறமே தொழுவார்க்கெல்லாம்*
செய்யில்வாளையுகளும்* திருக்கண்ணபுரத்து ஐயன்*
ஆகத்தணைப்பார்கட்கு அணியனே. 9.10.7
3779:
அணியனாகும்* தனதாள் அடைந்தார்க்கெல்லாம்*
பிணியும்சாரா* பிறவிகெடுத்தாளும்*
மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்* திருக்கண்ணபுரம் பணிமின்*
நாளும் பரமேட்டிதன் பாதமே. 9.10.8
3780:
பாதம்நாளும்* பணியத் தணியும்பிணி*
ஏதம்சாரா* எனக்கேல் இனியென்குறை?*
வேதநாவர் விரும்பும்* திருக்கண்ணபுரத்து ஆதியானை*
அடைந்தார்க்கு அல்லல் இல்லையே. 9.10.9
3781:
இல்லை அல்லல்* எனக்கேல்இனி என்குறை?,
அல்லிமாதர் அமரும்* திருமார்பினன்*
கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்* திருக்கண்ணபுரம் சொல்ல*
நாளும் துயர் பாடுசாராவே. 9.10.10
3782:##
பாடுசாரா* வினைபற்றற வேண்டுவீர்*
மாடநீடு* குருகூர்ச்சடகோபன்*
சொல் பாடலானதமிழ்* ஆயிரத்துள் இப்பத்தும்-
பாடியாடி* பணிமின் அவன் தாள்களே. (2) 9.10.11