முதல் பத்து
இரண்டாம் திருமொழி
வண்ண மாடங்கள் சூழ் *திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளராயிற்றே. (2) 1.2.1.
ஓடுவார் விழுவார்* உகந்தாலிப்பார்*
நாடுவார் நம்பிரான்* எங்குத்தான் என்பார்*
பாடுவார்களும்* பல்பறை கொட்டநின்று*
ஆடுவார்களும் * ஆயிற்று ஆய்ப்பாடியே. 1.2.2.
பேணிச் சீருடைப்* பிள்ளை பிறந்தினில்*
காணத்தாம் புகுவார்* புக்குப்போதுவார்*
ஆணொப்பார் * இவன் நேரில்லைகாண்* திரு-
வோணத்தான்* உலகாளும் என்பார்களே. 1.2.3.
உறியை முற்றத்து* உருட்டி நின்றாடுவார்*
நறுநெய் பால்தயிர் *நன்றாகத் தூவுவார்*
செறிமென் கூந்தல்* அவிழத் திளைத்து *எங்கும்-
அறிவழிந்தனர்* ஆய்ப்பாடி ஆயரே. 1.2.4.
கொண்டதாளுறி *கோலக் கொடுமழு*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்டமுல்லை* அரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார். 1.2.5.
கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*
பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*
ஐயநாவழித் தாளுக்கு * அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள் * பிள்ளை வாயுளே. 1.2.6.
வாயுள் வையகம் கண்ட * மட நல்லார்*
ஆயர் புத்திரன் அல்லன் * அருந்தெய்வம்*
பாயசீருடைப்* பண்புடைப் பாலகன்*
மாயன் என்று * மகிழ்ந்தனர் மாதரே. 1.2.7.
பத்துநாளும் கடந்த *இரண்டாநாள்*
எத்திசையும் *சயமரம் கோடித்து*
மத்த மாமலை*தாங்கிய மைந்தனை*
உத்தானம் செய்து* உகந்தனர் ஆயரே. 1.2.8.
கிடக்கில் தொட்டில் *கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில்* மருங்கையிறுத்திடும்*
ஒடுக்கிப்புல்கில் *உதரத்தே பாய்ந்திடும்*
மிடுக்கிலாமையால் *நான் மெலிந்தேன் நங்காய். 1.2.9.
செந்நெலார் வயல்சூழ்* திருக்கோட்டியூர்*
மன்னு நாரணன் *நம்பி பிறந்தமை*
மின்னுநூல்* விட்டுசித்தன் விரித்த *இப்-
பன்னுபாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே. (2) 1.2.10.
மூன்றாம் திருமொழி
சீதக்கடலுள்* அமுதன்ன தேவகி*
கோதைக் குழலாள்* அசோதைக்குப் போத்தந்த*
பேதைக் குழவி* பிடித்துச் சுவைத்துண்ணும்*
பாதக் கமலங்கள் காணீரே* பவள வாயீர்! வந்து காணீரே. (2) 1.3.1.
முத்தும் மணியும்* வயிரமும் நன்பொன்னும்*
தத்திப் பதித்துத் *தலைப் பெய்தாற்போல் * எங்கும் –
பத்து விரலும்* மணிவண்ணன் பாதங்கள்*
ஒத்திட்டு இருந்தவா காணீரே* ஒண்ணுதலீர்! வந்து காணீரே. 1.3.2.
பணைத்தோள் இளவாய்ச்சி *பால் பாய்ந்த கொங்கை*
அணைத்தார உண்டு *கிடந்தஇப்பிள்ளை*
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்*
கணைக்கால்இருந்தவா காணீரே* காரிகையீர்! வந்து காணீரே. 1.3.3.
உழந்தாள் நறுநெய்* ஓரோர்தடாவுண்ண*
இழந்தாள் எரிவினால்* ஈர்த்து எழில்மத்தின்*
பழந்தாம்பாலோச்சப்* பயத்தால்தவழ்ந்தான்**
முழந்தாள்இருந்தவாகாணீரே* முகிழ்முலையீர்! வந்து காணீரே. 1.3.4.
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான்போலே *கிடந்த இப்பிள்ளை*
மறங்கொள் இரணியன் *மார்பை முன்கீண்டான்*
குறங்குவளை வந்து காணீரே* குவிமுலையீர்! வந்து காணீரே. 1.3.5.
மத்தக்களிற்று* வசுதேவர்தம்முடை*
சித்தம் பிரியாத* தேவகிதன்வயிற்றில்*
அத்தத்தின் பத்தாநாள் *தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவா காணீரே* முகிழ்நகையீர்! வந்து காணீரே. 1.3.6.
இருங்கை மதகளிறு* ஈர்க்கின்றவனை*
பருங்கிப் பறித்துக் கொண்டு* ஓடுபரமன்தன்*
நெருங்குபவளமும் *நேர்நாணும்முத்தும்*
மருங்கும்இருந்தவாகாணீரே* வாணுதலீர்! வந்துகாணீரே. 1.3.7.
வந்தமதலைக்* குழாத்தை வலிசெய்து*
தந்தக் களிறுபோல் *தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு *நன்றுமழகிய*
உந்திஇருந்தவாகாணீரே* ஒளியிழையீர்! வந்துகாணீரே. 1.3.8.
அதிரும் கடல்நிறவண்ணனை *ஆய்ச்சி-
மதுரமுலையூட்டி* வஞ்சித்து வைத்து*
பதரப்படாமே* பழந்தாம்பாலார்த்த*
உதரம்இருந்தவா காணீரே* ஒளிவளையீர்! வந்துகாணீரே. 1.3.9.
பெருமாவுரலில்* பிணிப்புண்டிருந்து* அங்கு-
இருமா மருதம்* இறுத்தஇப்பிள்ளை*
குருமாமணிப்பூண்* குலாவித்திகழும்*
திருமார்புஇருந்தவாகாணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே. 1.3.10.
நாள்களோர் நாலைந்து *திங்களளவிலே*
தாளை நிமிர்த்துச் *சகடத்தைச் சாடிப்போய்*
வாள்கொள் வளையெயிற்று *ஆருயிர்வவ்வினான்*
தோள்கள் இருந்தவா காணீரே* சுரிகுழலீர்! வந்துகாணீரே. 1.3.11.
மைத்தடங்கண்ணி* யசோதைவளர்க்கின்ற*
செய்த்தலை நீல நிறத்துச் * சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும்* சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்து காணீரே* கனங்குழையீர்! வந்துகாணீரே. 1.3.12.
வண்டமர்பூங்குழல் *ஆய்ச்சிமகனாகக்*
கொண்டு வளர்க்கின்ற* கோவலக்குட்டற்கு*
அண்டமும் நாடும்* அடங்க விழுங்கிய*
கண்டம் இருந்தவா காணீரே* காரிகையீர்! வந்துகாணீரே. 1.3.13.
எந்தொண்டை வாய்ச்சிங்கம்* வாவென்று எடுத்துக்கொண்டு*
அந்தொண்டை வாய்* அமுது ஆதரித்து* ஆய்ச்சியர் –
தம்தொண்டை வாயால் *தருக்கிப்பருகும்* இச்-
செந்தொண்டை வாய்வந்து காணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே. 1.3.14.
நோக்கி யசோதை* நுணுக்கிய மஞ்சளால்*
நாக்கு வழித்து *நீராட்டும் இந்நம்பிக்கு*
வாக்கும் நயனமும்* வாயும் முறுவலும்*
மூக்கும் இருந்தவா காணீரே* மொய்குழலீர்! வந்துகாணீரே. 1.3.15.
விண்கொளமரர்கள்* வேதனைதீர* முன்-
மண்கொள் வசுதேவர்* தம் மகனாய் வந்து*
திண்கொள் அசுரரைத் *தேய வளர்கின்றான்*
கண்கள் இருந்தவா காணீரே* கனவளையீர்! வந்துகாணீரே. 1.3.16.
பருவம் நிரம்பாமே* பாரெல்லாம்உய்ய*
திருவின் வடிவொக்கும்* தேவகி பெற்ற*
உருவு கரிய *ஒளிமணிவண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே* பூண்முலையீர்! வந்துகாணீரே. 1.3.17.
மண்ணும் மலையும் *கடலும் உலகேழும்*
உண்ணுந்திறத்து* மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு*
வண்ணமெழில்கொள் *மகரக்குழையிவை*
திண்ணம் இருந்தவா காணீரே* சேயிழையீர்! வந்துகாணீரே. 1.3.18.
முற்றிலும் தூதையும் *முன்கைம்மேல்பூவையும்*
சிற்றிலிழைத்துத்* திரிதருவோர்களை*
பற்றிப்பறித்துக்கொண்டு *ஓடும்பரமன்தன்*
நெற்றிஇருந்தவாகாணீரே* நேரிழையீர்! வந்துகாணீரே. 1.3.19.
அழகிய பைம்பொன்னின்*கோல் அங்கைக்கொண்டு*
கழல்கள் சதங்கை *கலந்துஎங்குமார்ப்ப*
மழகன்றினங்கள் *மறித்துத்திரிவான்*
குழல்கள்இருந்தவாகாணீரே* குவிமுலையீர்! வந்துகாணீரே. 1.3.20.
சுருப்பார்குழலி *யசோதைமுன்சொன்ன*
திருப்பாதகேசத்தைத்* தென்புதுவைப்பட்டன்*
விருப்பாலுரைத்த* இருபதோடொன்றும்-
உரைப்பார்போய்* வைகுந்தத்து ஒன்றுவர்தாமே. (2) 1.3.21.
நான்காம் திருமொழி
மாணிக்கம்கட்டி *வயிரம்இடைகட்டி*
ஆணிப்பொன்னால்செய்த *வண்ணச்சிறுத்தொட்டில்*
பேணிஉனக்குப்* பிரமன்விடுதந்தான்*
மாணிக்குறளனே! தாலேலோ* வையமளந்தானே! தாலேலோ. (2) 1.4.1.
உடையார்கனமணியோடு*ஒண் மாதுளம்பூ*
இடைவிரவிக்கோத்த *எழில் தெழ்கினோடு*
விடையேறுகாபாலி *ஈசன்விடுதந்தான்*
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ* உலகமளந்தானே! தாலேலோ. 1.4.2.
என்தம்பிரானார் *எழில்திருமார்வர்க்கு*
சந்தமழகிய* தாமரைத்தாளர்க்கு*
இந்திரன்தானும் *எழிலுடைக்கிண்கிணி*
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ* தாமரைக்கண்ணனே! தாலேலோ. 1.4.3.
சங்கின்வலம்புரியும் *சேவடிக்கிண்கிணியும்*
அங்கைச்சரிவளையும் *நாணும்அரைத்தொடரும்*
அங்கண்விசும்பில் *அமரர்கள்போத்தந்தார்*
செங்கண்கருமுகிலே! தாலேலோ* தேவகிசிங்கமே! தாலேலோ. 1.4.4.
எழிலார்திருமார்வுக்கு *ஏற்குமிவையென்று*
அழகியஐம்படையும்* ஆரமும்கொண்டு*
வழுவில்கொடையான் *வயிச்சிரவணன்*
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ* தூமணிவண்ணனே! தாலேலோ. 1.4.5.
ஓதக்கடலின்* ஒளிமுத்தின் ஆரமும்*
சாதிப்பவளமும்* சந்தச்சரிவளையும்*
மாதக்கவென்று* வருணன்விடுதந்தான்*
சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ* சுந்தரத்தோளனே! தாலேலோ. 1.4.6.
கானார் நறுந்துழாய்* கைசெய்த கண்ணியும்*
வானார் செழுஞ்சோலைக் *கற்பகத்தின் வாசிகையும்*
தேனார்மலர்மேல் *திருமங்கை போத்தந்தாள்*
கோனே! அழேல்அழேல்தாலேலோ* குடந்தைக்கிடந்தானே! தாலேலோ. 1.4.7.
கச்சொடுபொற்சுரிகை *காம்பு கனகவளை*
உச்சிமணிச்சுட்டி *ஒண்தாள்நிரைப்பொற்பூ*
அச்சுதனுக்கென்று* அவனியாள்போத்தந்தாள்*
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ* நாராயணா! அழேல்தாலேலோ. 1.4.8.
மெய்திமிரும் நானப் * பொடியோடு மஞ்சளும்*
செய்ய தடங்கண்ணுக்கு *அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி * கொண்டுஉவளாய் நின்றாள்*
அய்யா! அழேல்அழேல்தாலேலோ* அரங்கத்தணையானே! தாலேலோ. 1.4.9.
வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலையுண்ட*
அஞ்சனவண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர்சேர்* புதுவைப்பட்டன்சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லைஇடர்தானே. (2) 1.4.10.
ஐந்தாம் திருமொழி
தன்முகத்துச்சுட்டி* தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்*
பொன்முகக் கிண்கிணியார்ப்பப்* புழுதியளைகின்றான்*
என்மகன் கோவிந்தன்* கூத்தினை இளமாமதீ!*
நின்முகம் கண்ணுளவாகில்* நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.5.1.
என்சிறுக்குட்டன்* எனக்கோர் இன்னமுது எம்பிரான்*
தன்சிறுக்கைகளால்* காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணேனாடு* ஆடலாட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* மாமதீ! மகிழ்ந்தோடிவா. 1.5.2.
சுற்றும் ஒளிவட்டம் * சூழ்ந்து சோதி பரந்தெங்கும்*
எத்தனை செய்யினும்* என்மகன் முகம்நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கடவாணன்* உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிதோடிவா. 1.5.3.
சக்கரக்கையன்* தடங்கண்ணால் மலரவிழித்து*
ஒக்கலைமேலிருந்து* உன்னையே சுட்டிக்காட்டும்காண்*
தக்கதறிதியேல்* சந்திரா! சலம்செய்யாதே*
மக்கட்பெறாத* மலடன் அல்லையேல் வா கண்டாய். 1.5.4.
அழகியவாயில்* அமுதவூறல் தெளிவுறா*
மழலைமுற்றாத இளஞ்சொல்லால்* உன்னைக் கூவுகின்றான்*
குழகன்சிரீதரன்* கூவக்கூவ நீபோதியேல்*
புழை இலவாகாதே* நின்செவி புகர் மாமதீ! 1.5.5.
தண்டொடுசக்கரம்* சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
கண்துயில் கொள்ளக்கருதிக்* கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப்பாலறா கண்டாய்* உறங்காவிடில்*
விண்தனில் மன்னிய* மாமதீ! விரைந்தோடிவா. 1.5.6.
பாலகனென்று* பரிபவம்செய்யேல்* பண்டொருநாள்-
ஆலினிலை வளர்ந்த* சிறுக்கனவன் இவன்*
மேலெழப் பாய்ந்து* பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
மாலைமதியாதே* மாமதீ! மகிழ்ந்தோடிவா. 1.5.7.
சிறியனென்று என்* இளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை* மாவலியிடைச்சென்றுகேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்* நீயும்உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால்* விரைந்து உன்னைக்கூவுகின்றான். 1.5.8.
தாழியில் வெண்ணெய்* தடங்கையார விழுங்கிய*
பேழைவயிற்று எம்பிரான்* கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*
ஆழிகொண்டு உன்னை எறியும்* ஐயுறவு இல்லைகாண்*
வாழவுறுதியேல்* மாமதீ! மகிழ்ந்தோடிவா. 1.5.9.
மைத்தடங்கண்ணி* யசோதை தன் மகனுக்கு* இவை-
ஒத்தனசொல்லி* உரைத்த மாற்றம்* ஒளிபுத்தூர்-
வித்தகன் விட்டுசித்தன்* விரித்ததமிழிவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு* இடரில்லையே. (2) 1.5.10.
ஆறாம் திருமொழி
உய்யஉலகு படைத்துண்ட மணிவயிறா!*
ஊழிதோறூழி பலஆலினிலை அதன்மேல்*
பையஉயோகு துயில்கொண்ட பரம்பரனே!*
பங்கய நீள்நயனத்து அஞ்சனமேனியனே!*
செய்யவள் நின்னகலம் சேமமெனக்கருதிச்*
செல்வு பொலிமகரக் காது திகழ்ந்திலக*
ஐய! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2) 1.6.1.
கோளரியின் உருவங்கொண்டு அவுணனுடலம்*
குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!*
மீளஅவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி*
மேலையமரர்பதி மிக்கு வெகுண்டுவர*
காளநன்மேகமவை கல்லொடு கால்பொழியக்*
கருதி வரைக்குடையாக் காலிகள்காப்பவனே!*
ஆள! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.2.
நம்முடைநாயகனே! நான்மறையின்பொருளே!*
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு* ஒருகால்-
தம்மனையானவனே! தரணிதலமுழுதும்*
தாரகை இன்னுலகும் தடவிஅதன்புறமும்*
விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்*
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே!*
அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.3.
வானவர்தாம்மகிழ வன்சகடம் உருள*
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக்கருதிக்*
கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல்வெந்நரகன்*
என்பவர்தாம் மடியச் செருவதிரச்செல்லும்*
ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.4.
மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்*
வைத்தன நெய் களவால் வாரிவிழுங்கி* ஒருங்கு-
ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை*
ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்!*
முத்தினிள முறுவல் முற்ற வருவதன்முன்*
முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய*
அத்த! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.5.
காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!*
கானக மாமடுவில் காளியன் உச்சியிலே*
தூயநடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!*
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்தமல்லை*
அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய்!*
ஆய! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.6.
துப்புடை ஆயார்கள் தம்சொல்வழுவாது ஒருகால்*
தூயகருங்குழல் நல்தோகைமயிலனைய*
நப்பினைதன் திறமா நல்விடை ஏழவிய*
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகுசோதிபுகத்*
தனியொரு தேர்கடவித் தாயொடுகூட்டிய* என்-
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுகசெங்கீரை*
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. 1.6.7.
## உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி*
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*
கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்*
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்!* மதிள்சூழ்-
சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!*
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2) 1.6.8.
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்*
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர*
கோலநறும்பவளச் செந்துவர்வாயினிடைக்*
கோமள வெள்ளிமுளைப்போல் சிலபல்லிலக*
நீலநிறத்தழகார் ஐம்படையின்நடுவே*
நின்கனி வாயமுதம் இற்றுமுறிந்துவிழ*
ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. 1.6.9.
செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல்விரலில்*
சேர்திகழ் ஆழிகளும்கிண்கிணியும்* அரையில்-
தங்கிய பொன்வடமும் தாளநன்மாதுளையின்*
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*
மங்கலஐம்படையும் தோல்வளையும்குழையும்*
மகரமும் வாளிகளும் சுட்டியும்ஒத்திலக*
எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. 1.6.10.
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*
ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே!*
என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை*
ஏழுலகும்முடையாய்! ஆடுக ஆடுகவென்று*
அன்னநடைமடவாள் அசோதை உகந்தபரிசு*
ஆனபுகழ் புதுவைப்பட்டன் உரைத்ததமிழ்*
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்-
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே. (2) 1.6.11.
ஏழாம் திருமொழி
மாணிக்கக்கிண்கிணியார்ப்ப* மருங்கின்மேல்*
ஆணிப்பொன்னால்செய்த* ஆய்பொன்னுடைமணி*
பேணிப்பவளவாய் முத்திலங்க* பண்டு-
காணிகொண்டகைகளால்சப்பாணி* கருங்குழல்குட்டனே! சப்பாணி. (2) 1.7.1.
பொன்னரைநாணொடு* மாணிக்கக்கிண்கிணி*
தன்னரையாடத்* தனிச்சுட்டிதாழ்ந்தாட*
என்னரைமேல்நின்றிழிந்து* உங்கள் ஆயர்தம்*
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி* மாயவனே! கொட்டாய்சப்பாணி. 1.7.2.
பன்மணிமுத்து* இன்பவளம் பதித்தன்ன*
என்மணிவண்ணன்!* இலங்குபொற்றேட்டின்மேல்*
நின்மணிவாய்முத்திலங்க* நின்னம்மைதன்*
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி* ஆழியங்கையனே! சப்பாணி. 1.7.3.
தூநிலாமுற்றத்தே* போந்துவிளையாட*
வானிலாஅம்புலீ!* சந்திரா! வாவென்று*
நீநிலாநின்புகழா* நின்றஆயர்தம்*
கோநிலாவக் கொட்டாய்சப்பாணி* குடந்தைக்கிடந்தானே! சப்பாணி. 1.7.4.
புட்டியில்சேறும்* புழுதியும்கொண்டுவந்து*
அட்டியமுக்கி* அகம்புக்கறியாமே*
சட்டித்தயிரும்* தடாவினில்வெண்ணெயும்உண்*
பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி* பற்பநாபா! கொட்டாய்சப்பாணி. 1.7.5.
தாரித்துநூற்றுவர்* தந்தைசொல்கொள்ளாது*
போருய்த்துவந்து* புகுந்தவர்மண்ணாள*
பாரித்தமன்னர்படப்* பஞ்சவர்க்கு* அன்று-
தேருய்த்தகைகளால்சப்பாணி* தேவகிசிங்கமே! சப்பாணி. 1.7.6.
பரந்திட்டுநின்ற* படுகடல்தன்னை*
இரந்திட்டகைம்மேல்* எறிதிரைமோத*
கரந்திட்டுநின்ற* கடலைக்கலங்க*
சரந்தொட்டகைகளால்சப்பாணி* சார்ங்கவிற்கையனே! சப்பாணி. 1.7.7.
குரக்கினத்தாலே* குரைகடல்தன்னை*
நெருக்கிஅணைகட்டி* நீள்நீரிலங்கை*
அரக்கர்அவிய* அடுகணையாலே*
நெருக்கியகைகளால்சப்பாணி* நேமியங்கையனே! சப்பாணி. 1.7.8.
அளந்திட்டதூணை* அவன்தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாளுகிர்ச்சிங்கவுருவாய்*
உளந்தொட்டிரணியன்* ஒண்மார்வகலம்*
பிளந்திட்டகைகளால்சப்பாணி* பேய்முலையுண்டானே! சப்பாணி. 1.7.9.
அடைந்திட்டுஅமரர்கள்* ஆழ்கடல்தன்னை*
மிடைந்திட்டுமந்தரம்* மத்தாகநாட்டி*
வடம்சுற்றி* வாசுகிவன்கயிறாக*
கடைந்திட்டகைகளால்சப்பாணி* கார்முகில்வண்ணனே! சப்பாணி. 1.7.10.
ஆட்கொள்ளத்தோன்றிய* ஆயர்தன் கோவினை*
நாட்கமழ்பூம்பொழில்* வில்லிபுத்தூர்ப்பட்டன்*
வேட்கையால்சொன்ன* சப்பாணிஈரைந்தும்*
வேட்கையினால்சொல்லுவார்* வினைபோமே. (2) 1.7.11.
எட்டாம் திருமொழி
தொடர் சங்கிலிகை சலார்பிலாரென்னத்* தூங்கு பொன்மணியொலிப்ப*
படுமும் மதப்புனல்சோர வாரணம்பைய* நின்றுஊர்வதுபோல்*
உடன்கூடிக் கிண்கிணியாரவாரிப்ப* உடைமணி பறைகறங்க*
தடந்தாளிணைகொண்டு சார்ங்கபாணி* தளர்நடைநடவானோ. (2) 1.8.1.
செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும்* சிறுபிறை முளைப்போல்*
நக்கசெந்துவர் வாய்த் திண்ணை மீதே* நளிர்வெண் பல் முளையிலக*
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலிபூண்ட* அனந்தசயனன்*
தக்க மாமணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடைநடவானோ. 1.8.2.
மின்னுக் கொடியும் ஓர்வெண்திங்களும்* சூழ்பரி வேடமுமாய்*
பின்னல் துலங்கும் அரசிலையும்* பீதகச் சிற்றாடையொடும்*
மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக்* கழுத்தினில் காறையொடும்*
தன்னில் பொலிந்த இருடீகேசன்* தளர்நடைநடவானோ. 1.8.3.
கன்னல்குடம் திறந்தால் ஒத்து ஊறிக்* கணகண சிரித்துவந்து*
முன்வந்து நின்று முத்தம்தரும்* என் முகில்வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத் தன்வாயமுதம்தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே* தளர்நடைநடவானோ. 1.8.4.
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்* மொடுமொடு விரைந்தோட*
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்குட்டன்* பெயர்ந் தடியிடுவதுபோல்*
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்* பலதேவனென்னும்*
தன் நம்பியோடப்பின் கூடச்செல்வான்* தளர்நடைநடவானோ. 1.8.5.
ஒருகாலில்சங்கு ஒருகாலில்சக்கரம்* உள்ளடி பொறித்தமைந்த*
இருகாலும்கொண்டு அங்கங்கு எழுதினாற்போல்* இலச்சினை படநடந்து*
பெருகா நின்ற இன்பவெள்ளத்தின்மேல்* பின்னையும் பெய்துபெய்து*
கருகார்க் கடல்வண்ணன் காமர்தாதை* தளர்நடைநடவானோ. 1.8.6.
படர் பங்கயமலர் வாய்நெகிழப்* பனிபடு சிறு துளிபோல்*
இடங்கொண்ட செவ்வாயூறி யூறி* இற்றிற்று வீழநின்று*
கடுஞ் சேக்கழுத்தின் மணிக் குரல்போல்* உடைமணி கணகணென*
தடந்தாளினை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடைநடவானோ. 1.8.7.
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*
அக்குவடம் இழிந்தேறித் தாழ* அணி அல்குல்புடைபெயர*
மக்களுலகினில் பெய்தறியா* மணிக் குழவியுருவின்*
தக்க மாமணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடைநடவானோ. 1.8.8.
வெண்புழுதிமேல் பெய்து கொண்டு அளைந்ததோர்* வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன்* சிறுபுகர் படவியர்த்து*
ஒண் போதலர் கமலச்சிறுக்கால் * உறைத்து ஒன்றும்நோவாமே*
தண்போது கொண்ட தவிசின்மீதே* தளர்நடைநடவானோ. 1.8.9.
திரைநீர்ச் சந்திரமண்டலம் போல்* செங்கண்மால்கேசவன்* தன் –
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்தெங்கும் புடைபெயர*
பெருநீர்த் திரையெழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-
தருநீர்* சிறுச் சண்ணம் துள்ளம்சோரத்* தளர்நடைநடவானோ. 1.8.10.
ஆயர்குலத்தினில் வந்துதோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னை*
தாயர்மகிழ ஒன்னார்தளரத்* தளர்நடை நடந்ததனை*
வேயர்புகழ்விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்க வல்லார்*
மாயன்மணிவண்ணன் தாள்பணியும்* மக்களைப்பெறுவர்களே. 1.8.11.
ஒன்பதாம் திருமொழி
பொன்னியல்கிண்கிணி* சுட்டிபுறம்கட்டி*
தன்னியலோசை* சலஞ்சலன் என்றிட*
மின்னியல் மேகம்* விரைந்தெதிர் வந்தாற்போல்*
என்னிடைக்கோட்டரா அச்சோவச்சோ* எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ. 1.9.1.
செங்கமலப்பூவில்* தேனுண்ணும் வண்டேபோல்*
பங்கிகள்வந்து* உன் பவளவாய் மொய்ப்ப*
சங்கு வில் வாள் தண்டு* சக்கரமேந்திய*
அங்கைகளாலேவந்து அச்சோவச்சோ* ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ. 1.9.2.
பஞ்சவர்தூதனாய்ப்* பாரதம்கைசெய்து*
நஞ்சுமிழ் நாகம்* கிடந்த நல்பொய்கை புக்கு*
அஞ்சப்பணத்தின்மேல்* பாய்ந்திட்டுஅருள்செய்த*
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ* ஆயர்பெருமானே! அச்சோவச்சோ. 1.9.3.
நாறிய சாந்தம்* நமக்கிறைநல்கென்ன*
தேறிஅவளும்* திருவுடம்பில்பூச*
ஊறியகூனினை* உள்ளேயொடுங்க* அன்று-
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ* எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. 1.9.4.
கழல்மன்னர்சூழக்* கதிர்போல்விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்துஉன்னைநோக்கும்*
சுழலைப்பெரிதுடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோவச்சோ* ஆழியங்கையனே! அச்சோவச்சோ. 1.9.5.
போரொக்கப்பண்ணி* இப்பூமிப்பொறைதீர்ப்பான்*
தேரொக்கவூர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்*
காரொக்கும்மேனிக்* கரும்பெருங்கண்ணனே!*
ஆரத் தழுவா வந்துஅச்சோவச்சோ* ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ. 1.9.6.
மிக்கபெரும்புகழ்* மாவலிவேள்வியில்*
தக்கதி தன்றென்று* தானம்விலக்கிய*
சுக்கிரன்கண்ணைத்* துரும்பால்கிளறிய*
சக்கரக்கையனே! அச்சோவச்சோ* சங்கமிடத்தானே! அச்சோவச்சோ. 1.9.7.
என்னிதுமாயம்?* என்னப்பன்அறிந்திலன்*
முன்னையவண்ணமே* கொண்டு அளவாயென்ன*
மன்னுநமுசியை* வானில்சுழற்றிய*
மின்னுமுடியனே! அச்சோவச்சோ* வேங்கடவாணனே! அச்சோவச்சோ. 1.9.8.
கண்டகடலும்* மலையும்உலகேழும்*
முண்டத்துக் காற்றா* முகில்வண்ணா ஓ! என்று*
இண்டைச் சடைமுடி* ஈசன் இரக்கொள்ள*
மண்டை நிறைத்தானே! அச்சோவச்சோ* மார்வில்மறுவனே! அச்சோவச்சோ. 1.9.9.
துன்னியபேரிருள்* சூழ்ந்து உலகைமூட*
மன்னியநான்மறை* முற்றும்மறைந்திட*
பின்னிவ்வுலகினில்* பேரிருள்நீங்க* அன்று-
அன்னமதானானே! அச்சோவச்சோ* அருமறைதந்தானே! அச்சோவச்சோ. 1.9.10.
நச்சுவார்முன்னிற்கும்* நாராயணன்தன்னை*
அச்சோவருகவென்று* ஆய்ச்சியுரைத்தன*
மச்சணிமாடப்* புதுவைகோன்பட்டன்சொல்*
நிச்சலும்பாடுவார்* நீள்விசும்பாள்வரே. (2) 1.9.11.
பத்தாம் திருமொழி
வட்டுநடுவே* வளர்கின்ற* மாணிக்க –
மொட்டுநுனையில்* முளைக்கின்றமுத்தேபோல்*
சொட்டுச்சொட்டென்னத்* துளிக்கத்துளிக்க* என்-
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். 1.10.1.
கிங்கிணிகட்டிக்* கிறிகட்டி கையினில்*
கங்கணமிட்டுக்* கழுத்தில்தொடர்கட்டி*
தன்கணத்தாலே* சதிராநடந்துவந்து*
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்* எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 1.10.2.
கத்தக்கதித்துக்* கிடந்தபெருஞ்செல்வம்*
ஒத்துப்பொருந்திக்கொண்டு* உண்ணாதுமண்ணாள்வான்*
கொத்துத்தலைவன்* குடிகெடத்தோன்றிய*
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* ஆயர்களேறுஎன்புறம்புல்குவான். 1.10.3.
நாந்தகமேந்திய* நம்பிசரணென்று*
தாழ்ந்த தனஞ்சயற்காகி* தரணியில் –
வேந்தர்களுட்க* விசயன்மணித்திண்தேர்*
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 1.10.4.
வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடி*
கண்பலசெய்த* கருந்தழைக்காவின்கீழ்*
பண்பலபாடிப்* பல்லாண்டிசைப்ப* பண்டு-
மண் பல கொண்டான் புறம்புல்குவான்* வாமனன்என்னைப்புறம்புல்குவான். 1.10.5.
சத்திரமேந்தித்* தனியொருமாணியாய்*
உத்தரவேதியில்* நின்றஒருவனை*
கத்திரியர்காணக்* காணிமுற்றும்கொண்ட*
பத்திராகாரன் புறம்புல்குவான்* பாரளந்தான்என்புறம்புல்குவான். 1.10.6.
பொத்த வுரலைக் கவிழ்த்து* அதன்மேலேறி*
தித்தித்தபாலும்* தடாவினில்வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்* ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 1.10.7.
மூத்தவை காண* முது மணற் குன்றேறி*
கூத்துஉவந்தாடிக்* குழலால் இசைபாடி*
வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்-
ஏத்த வந்து என்னைப்புறம்புல்குவான்* எம்பிரான்என்னைப்புறம்புல்குவான். 1.10.8.
கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவதென்று* இந்திரன் காவினில்*
நிற்பனசெய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்* உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான். 1.10.9.
ஆய்ச்சி அன்றாழிப்பிரான்* புறம்புல்கிய*
வேய்த்தடந்தோளிசொல்* விட்டுசித்தன்மகிழ்ந்து*
ஈத்ததமிழிவை* ஈரைந்தும்வல்லவர்*
வாய்த்தநன்மக்களைப்பெற்று* மகிழ்வரே.(2) 1.10.10.

