| கருவிருத்தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,*
ஒருவிருத்தம்புக் குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு,* ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த,* திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திரு நாட்டகத்தே. |
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்
2478:##
பொய் நின்ற ஞானமும்* பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்,*
இந்நின்ற நீர்மை* இனியாமுறாமை,* உயிரளிப்பான்-
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!*
மெய்நின்று கேட்டருளாய்,* அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1
2479:
செழுநீர்த் தடத்து* கயல்மிளிர்ந்தாலொப்ப,* சேயரிக்கண்-
அழுநீர் துளும்ப அலமருகின்றன,* வாழியரோ-
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்*
தொழு நீரிணையடிக்கே,* அன்பு சூட்டிய சூழ்குழற்கே. 2
2480:
குழல் கோவலர் மடப் பாவையும்* மண்மகளும்* திருவும்,-
நிழல்போல் வனர்கண்டு* நிற்குங்கொல் மீளுங்கொல்,* தண்ணந்துழாய்-
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழக்கடவும்*
தழல்போல் சினத்த,* அப் புள்ளின்பின் போன தனிநெஞ்சமே. 3
2481:
தனிநெஞ்சம் முன்னவர்* புள்ளே கவர்ந்தது,* தண்ணந்துழாய்க்கு-
இனிநெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்,* நீ நடுவே-
முனிவஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடுதுழாய்*
பனிநஞ்ச மாருதமே,* எம்மதாவி பனிப்பியல்வே? 4
2482:
பனிப்பியல்வாக* உடைய தண்வாடை,* இக்காலம் இவ்வூர்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரிவீசும்,* அந் தண்ணந்துழாய்-
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்?*
பனிப்புயல் வண்ணண்,* செங்கோல் ஒரு நான்று தடாவியதே? 5
2483:
தடாவிய அம்பும்* முரிந்த சிலைகளும் போகவிட்டு,*
கடாயின கொண்டொல்கும் வல்லியீதேனும்,* அசுரர்மங்கக்-
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்*
நடாவிய கூற்றங்கண்டீர்,* உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6
2484:
ஞாலம் பனிப்பச் செறித்து,* நன்னீரிட்டுக் கால்சிதைந்து*
நீலவல்லேறு பொராநின்ற வானம் இது,* திருமால்-
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு* தண்பூங்-
காலங்கொலோ அறியேன்,* வினையாட்டியேன் காண்கின்றவே? 7
2485:
காண்கின்றனகளும்* கேட்கின்றனகளும் காணில்,* இந்நாள்-
பாண்குன்ற நாடர் பயில்கின்றன,* இதெல்லாம் அறிந்தோம்-
மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர்நம்பும்*
சேண்குன்றம் சென்று,* பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே. 8
2486:
திண்பூஞ் சுடர்நுதி* நேமியஞ் செல்வர்,* விண்ணாடனைய-
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,* இவையோ-
கண்பூங் கமலம் கருஞ்சுடராடி வெண்முத்தரும்பி*
வண்பூங் குவளை,* மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9
2487:
மாயோன்* வடதிரு வேங்கட நாட,* வல்லிக்கொடிகாள்!-
நோயோ உரைக்கிலும்* கேட்கின்றிலீர் உரையீர்* நுமது-
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்-
ஆயோ?* அடும் தொண்டையோ,* அறையோ இதறிவரிதே. 10
2488:
அரியன யாம் இன்று காண்கின்றன,* கண்ணன் விண்ணனையாய்!-
பெரியன காதம்* பொருட்கோ பிரிவென,* ஞாலமெய்தற்கு-
உரியன வெண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோகுடங்கைப்*
பெரியென கெண்டைக் குலம்,*இவையோ வந்து பேர்கின்றவே? 11
2489:
பேர்கின்றது மணி மாமை,* பிறங்கியள்ளல் பயலை*
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே,* இதெல்லாமினவே-
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண்ணந்துழாய்*
சார்கின்ற நன்னெஞ்சினார்,* தந்து போன தனிவளமே. 12
2490
தனிவளர் செங்கோல் நடாவு,* தழல்வாய் அரசவியப்-
பனிவளர் செங்கோல் இருள்வீற்றிருந்தது,* பார்முழுதும்-
துனிவளர் காதல் துழாயைத் துழாவுதண் வாடைதடிந்து*
இனிவளை காப்பவர் ஆர்,* எனை ஊழிகள் ஈர்வனவே. 13
2491:
ஈர்வன வேலும் அஞ்சேலும்,* உயிர்மேல் மிளிர்ந்திவையோ*
பேர்வனவோ வல்ல* தெய்வ நல்வேள்கணை,* பேரொளியே-
சோர்வன நீலச் சுடர்விடும் மேனி அம்மான்* விசும்பூர்-
தேர்வன,* தெய்வ மன்னீர கண்ணோ? இச் செழுங்கயலே? 14
2492:
`கயலோ நுமகண்கள்?’ என்று* களிறு வினவிநிற்றீர்,*
அயலோர் அறியிலும் ஈதென்ன வார்த்தை,* கடல்கவர்ந்த-
புயலோடு உலாம்கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்*
பயலோவிலீர்,* கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. 15
2493:
பலபல ஊழிகள் ஆயிடும்,* அன்றியோர் நாழிகையைப்*
பலபல கூறிட்ட கூறாயிடும்,* கண்ணன் விண்ணனையாய்!*
பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்*
பலபல சூழலுடைத்து,* அம்ம! வாழி இப் பாயிருளே. 16
2494:
இருள்விரிந்தால் அன்ன* மாநீர்த் திரைகொண்டு வாழியரோ*
இருள்பிரிந்தார் அன்பர் தேர்வழி தூரல்,* அரவணைமேல்-
இருள்விரி நீலக் கருநாயிறுசுடர் கால்வதுபோல்*
இருள்விரி சோதிப்,* பெருமான் உறையும் எறிகடலே! 17
2495:
கடல்கொண்டு எழுந்தது வானம்* அவ்வானத்தை அன்றிச்சென்று*
கடல்கொண்டு எழுந்த அதனால்இது,* கண்ணன் மண்ணும்விண்ணும்-
கடல்கொண்டு எழுந்த அக்காலங்கொலோ! புயற் காலங்கொலோ!*
கடல்கொண்ட கண்ணீர்,* அருவி செய்யா நிற்கும் காரிகையே. 18
2496:
காரிகையார் நிறை காப்பவர் யாரென்று,* கார்கொண்டு இன்னே-
மாரிகை ஏறி* அறையிடும் காலத்தும்,* வாழியரோ-
சாரிகைப் புள்ளர் அந்தண்ணந் துழாயிறை கூயருளார்*
சேரிகையேறும்,* பழியாய் விளைந்தது என் சின்மொழிக்கே. 19
2497:
சின்மொழி நோயோ* கழிபெருந்தெய்வம்,* இந் நோயினதென்று-
இன்மொழி கேட்கும்* இளந்தெய்வம் அன்றிது* வேல! நில்நீ-
என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்*
சொல்மொழி, மாலை* அந் தண்ணந்துழாய் கொண்டு சூட்டுமினே. 20
2498:
சூட்டுநன் மாலைகள்* தூயனவேந்தி,* விண்ணோர்கள் நன்னீர்-
ஆட்டி* அந் தூபம் தராநிற்கவே அங்கு,* ஓர் மாயையினால்-
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்*
கோட்டிடை ஆடினை கூத்து* அடலாயர் தம் கொம்பினுக்கே. 21
2499:
கொம்பார் தழைகை சிறுநாணெறிவிலம்* வேட்டைகொண்டாட்டு-
அம்பார் களிறு வினவுவது ஐயர்* புள்ðரும் கள்வர்-
தம்பார் அகத்து என்று மாடா தனதம்மில் கூடாதன*
வம்பார் வினாச்சொல்லவோ,* எம்மை வைத்தது இவ் வான்புனத்தே? 22
2500:
புனமோ? புனத்தயலே * வழி போகும் அருவினையேன்*
மனமோ? மகளிர் நுங்காவல் சொல்லீர்,* புண்டரீகத்து அங்கேழ்-
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும்* தெய்வத்து-
இனமோர் அனையீர்களாய்,* இவையோ நும் இயல்வுகளே? 23
2501:
இயல்வாயின வஞ்ச நோய்கொண்டு உலாவும்,* ஓரோகுடங்கைக்-
கயல் பாய்வன* பெரு நீர்க்கண்கள் தம்மொடும்,* குன்றமொன்றால்-
புயல்வாயின நிரை காத்த புள்ðர்தி கள்ðரும் துழாய்க்*
கொயல்வாய் மலர்மேல்,* மனத்தொடு என்னாங்கொல் எம் கோல்வளைக்கே? 24
2502:
எங்கோல் வளை முதலா,* கண்ணன் மண்ணும் விண்ணும்அளிக்கும்*
செங்கோல் வளைவு விளைவிக்குமால்,* திறல் சேரமரர்-
தங்கோனுடைய தங்கோன் உம்பர் எல்லாயவர்க்கும் தங்கோன்*
நங்கோன் உகக்கும் துழாய்,* என்செய்யாது இனி நானிலத்தே ? 25
2503:
நானிலம் வாய்க்கொண்டு* நன்னீரறமென்று கோதுகொண்ட,*
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை,* கடந்தபொன்னே!-
கால்நிலந் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃ காவுது* அம்பூந்-
தேனிளஞ் சோலை அப்பாலது,* எப்பாலைக்கும் சேமத்ததே. 26
2504:
சேமம் செங்கோன் அருளே,* செருவாரும் நட்பாகுவரென்று-
ஏமம் பெற வையம்* சொல்லும் மெய்யே,* பண்டெல்லாம் அறைகூய்-
யாமங்கள் தோறெரி வீசும் நங்கண்ணன் அந் தண்ணந்துழாய்த்*
தாமம் புனைய,* அவ் வாடை ஈதோவந்து தண்ணென்றதே. 27
2505:
தண்ணந் துழாய்* வளை கொள்வது யாமிழப்போம்,* நடுவே-
வண்ணம் துழாவ* ஓர் வாடையுலாவும்,* வள்வாயலகால்-
புள்நந்துழாமே பொருநீர்த்திருவரங்கா! அருளாய்*
எண்ணந் துழாவுமிடத்து,* உளவோபண்டும் இன்னன்னவே? 28
2506:
இன்னன்ன தூது எம்மை* ஆளற்றப் பட்டிரந்தாள் இவளென்று*
அன்னன்ன சொல்லா* பெடையொடும் போய்வரும்,* நீலமுண்ட-
மின்னன்ன மேனிப் பெருமானுலகில் பெண் தூதுசெல்லா*
அன்னன்ன நீர்மைகொலோ,* குடிச்சீர்மையில் அன்னங்களே ! 29
2507:
அன்னம் செல்வீரும் * வண்டானம் செல்வீரும் தொழுதிரந்தேன்*
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ* கண்ணன் வைகுந்தேனாடு-
என்னெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி* அவரிடைநீர்-
இன்னம் செல்லீரோ,* இதுவோ தகவென்று இசைமின்களே ! 30
2508:
இசைமின்கள் தூதென்று* இசைத்தால் இசையிலம்,* என்தலைமேல்-
அசைமின்கள் என்றால் அசையிங்கொலாம்,* அம்பொன் மாமணிகள்-
திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்* சிமயம்
மிசை* மின் மிளிரியப் போவான் வழிக் கொண்ட மேகங்களே ! 31
2509:
மேகங்களோ! உரையீர்,* திருமால் திருமேனி ஒக்கும்*
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்,* உயிரளிப்பான்-
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து* நுந்தம்-
ஆகங்கள் நோவ,* வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32
2510:
அருளார் திருச் சக்கரத்தால்* அகல்விசும்பும் நிலனும்*
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர்,* ஈங்கோர்பெண்பால்-
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்றெண்ணோ?*
தெருளோம் அரவணையீர்,* இவள் மாமை சிதைக்கின்றதே. 33
2511:
சிதைக்கின்றது ஆழி* என்று ஆழியைச் சீறி,* தன் சீறடியால்-
உதைக்கின்ற நாயகன்* தன்னொடும் மாலே,* உனதுதண்தார்-
ததைக்கின்ற தண்ணந் துழாயணிவான் அதுவே மனமாய்ப்*
பதைக்கின்ற மாதின் திறத்து* அறியேன் செயற் பாலதுவே. 34
2512:
பால்வாய்ப் பிறைப்பிள்ளை* ஒக்கலைக் கொண்டு,* பகலிழந்த-
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை,* உலகளந்த-
மால்பால் துழாய்க்கும் மனமுடையார்க்கும் நல்கிற்றையெல்லாம்*
சோல்வான் புகுந்து,* இதுவோர் பனி வாடை துழாகின்றதே. 35
2513:
துழா நெடுஞ்சூழிருள் என்று,* தன் தண்தாரது பெயரா-
எழா நெடு ஊழி* எழுந்த இக்காலத்தும்,* ஈங்கிவளோ-
வழாநெடுந் துன்பத்தள் என்றிரங்கார் அம்மேனா!* இலங்கைக்-
குழா நெடு மாடம்,* இடித்தபிரானார் கொடுமைகளே ! 36
2514:
கொடுங்கால் சிலையர் * நிரைகோளுழவர், கொலையில்வெய்ய*
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து,* அருவினையேன்-
நெடுங்காலமும் கண்ணன் நீள்மலர்ப்பாதம் பரவிப் பெற்ற*
தொடுங்கால் ஒசியும் இடை,* இளமாஞ்சென்ற சூழ்கடமே. 37
2515:
கடமாயினகள் கழித்து,* தன்கால் வன்மையால் பலநாள்*
தடமாயின புக்கு* நீர்நிலை நின்ற தவமிதுகொல்,*
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து*
நடமாடிய பெருமான்,* உருவொத்தன நீலங்களே. 38
2516:
நீலத் தடவரை மேல்* புண்டரீக நெடுந்தடங்கள்-
போல,* பொலிந்து எமக்கு எல்லாவிடத்தவும்,* பொங்குமுந்நீர்-
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர்பிரான்*
கோலம் கரிய பிரான்,* எம்பிரான் கண்ணின் கோலங்களே. 39
2517:
கோலப் பகல் களிறொன்று கல்புய்ய,* குழாம்விரிந்த-
நீலக்கங்குல் களிறெல்லாம் நிறைந்தன,* நேரிழையீர் !-
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே*
ஏலப் புனைந்து என்னைமார்,* எம்மை நோக்குவது என்றுகொலோ! 40
2518:
என்றும் புன்வாடை இதுகண்டறிதும்,* இவ்வாறு வெம்மை-
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்,* ஓங்கசுரர்-
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந்நாள்*
மன்றில் நிறைபழி தூற்றி,* நின்று என்னை வன்காற்று அடுமே. 41
2519:
வன்காற்று அறைய * ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த,*
மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன,* மண்ணும்விண்ணும்-
என்காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த*
தன்கால் பணிந்த என்பால்,* எம்பிரானது அடங்கண்களே. 42
2520:
கண்ணும் செந்தாமரை கையும் * அவைஅடியோ அவையே,*
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று,* மதிவிகற்பால்-
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்குமற்று எப்பால்யவர்க்கும்*
எண்ணும் இடத்ததுவோ,* எம்பிரானது எழில்நிறமே? 43
2521:
நியமுயர் கோலமும் * பேரும் உருவும் இவையிவையென்று,*
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்,* அங்கங்கெல்லாம்-
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய் நின்றதன்றி ஒன்றும்*
பெற முயன்றார் இல்லையால்,* எம்பிரான் தன் பெருமையையே. 44
2522:
பெருங்கேழலார் தம்* பெருங்கண் மலர்ப் புண்டரீகம்* நம்மேல்-
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்,* ஒருவர்நம்போல்-
வரும் கேழ்பவர் உளரே?தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்*
மருங்கே வரப்பெறுமே,* சொல்லு வாழி மடநெஞ்சமே! 45
2523:
மடநெஞ்சம் என்றும் தமதென்றும்,* ஓர் கருமம் கருதி,-
விடநெஞ்சை உற்றார் விடவோ அமையும்,* அப் பொன்பெயரோன்-
தடநெஞ்சம் கீண்ட பிரானார் தமதடிக் கீழ்விடப்* போய்த்-
திடநெஞ்சமாய்,* எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே. 46
2524:
திரிகின்றது வட மாருதம்,* திங்கள் வெந்தீ முகந்து*
சொரிகின்றது அதுவும் அது* கண்ணன் விண்ணூர் தொழவே-
சரிகின்றது சங்கம் தண்ணந்துழாய்க்கு வண்ணம் பயலை*
விரிகின்றது முழு மெய்யும்,* என்னாங்கொல் என் மெல்லியற்கே? 47
2525:
மெல்லியல் ஆக்கைக் கிருமி,* குருவில் மிளிர்தந்து ஆங்கே*
செல்லிய செல்கைத்து உலகை என்காணும்,* என்னாலும் தன்னைச்-
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாதுகற்றேன்?*
பல்லியின் சொல்லும் சொல்லா* கொள்வதோ உண்டு பண்டுபண்டே. 48
2526:
பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்,* இப் பாயிருள்போல்-
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்,* காளவண்ண-
வண்டுண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்*
உண்டும் உமிழ்ந்தும் கடாய,* மண்ணேர் அன்ன ஒண்ணுதலே! 49
2527:
ஒண்ணுதல் மாமை * ஒளிபயவாமை, விரைந்துநந்தேர்*
நண்ணுதல் வேண்டும்* வலவ! கடாகின்று,* தேன்நவின்ற-
விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்*
மண்முதல் சேர்வுற்று,* அருவி செய்யாநிற்கும் மாமலைக்கே. 50
2528:
மலைகொண்டு மத்தா அரவால்* சுழற்றிய மாயப்பிரான்.*
அலைகண்டு கொண்ட அமுதம்கொள்ளாது கடல்,* பரதர்-
விலைகொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய்துணையாத்*
துலைகொண்டு தாயம் கிளர்ந்து,* கொள்வான் ஒத்தழைக்கின்றதே. 51
2529:
அழைக்கும் கருங்கடல்* வெண்திரைக்கைகொண்டு போய்,*அலர்வாய்-
மழைக்கண் மடந்தை அரவணையேற,* மண்மாதர் விண்வாய்-
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்*
மழைக் கண்ணனீர்,* திருமால் கொடியான் என்று வார்கின்றதே! 52
2530:
வாராய் இனமுலையாள் இவள்* வானோர் தலைமகனாம்,*
சீராயின தெய்வ நன்னோயிது,* தெய்வத் தண்ணந்துழாய்த்-
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும்* கீழ்-
வேராயினும்,* நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே. 53
2531:
வீசும் சிறகால் பறத்திர்,*விண்ணாடு நுங்கட்கு எளிது*
பேசும் படியன்ன பேசியும் போவது,* நெய்தொடுவுண்டு-
ஏசும் படியன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்*
மாசின் மலரடிக் கீழ்,* எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54
2532:
வண்டுகளோ! வம்மின்* நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,*
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்றுரைக்கியம்,* ஏனமொன்றாய்-
மண்துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய்விரைபோல்*
விண்டுகள் வாரும்,* மலருளவோ நும்வியலிடத்தே? 55
2533:
வியலிடம் உண்ட பிரானார்* விடுத்த திருவருளால்,*
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,* ஓர் தண்தென்றல்வந்து-
அயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன்தேன்*
புயலுடை நீர்மையினால்,* தடவிற்று என் புலன்கலனே. 56
2534:
புலக்குண்டல் அப்புண்டரீகத்த போர்க்கெண்டை,* வல்லியொன்றால்-
விலக்குண்டுல் ஆகின்று வேல்விழிக்கின்றன,* கண்ணன் கையால்-
மலக்குண்டு அமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால்*
கலக்குண்ட நான்று கண்டார்,* எம்மை யாரும் கழறலரே. 57
2535:
கழல்தலம் ஒன்றே நிலமுழுதாயிற்று,* ஒருகழல்போய்-
நிழல்தர* எல்லா விசும்பும் நிறைந்தது,* நீண்ட அண்டத்து-
உழறலர் ஞானச் சுடர்விளக்காய் உயர்ந்தோரை இல்லா*
அழறலர் தாமரைக் கண்ணன்,* என்னோ இங்கு அளக்கின்றதே? 58
2536:
அளப்பருந் தன்மைய ஊழியங்கங்குல்,* அந் தண்ணந்துழாய்க்கு-
உளப்பெருங் காதலின் நீளிய வாயுள,* ஓங்குமுந்நீர்-
வளப்பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன்*
தளப்பெரு நீள்முறுவல்,* செய்யவாய தடமுலையே. 59
2537:##
முலையோ முழுமுற்றும் போந்தில,* மொய்பூங் குழல்குறிய-
கலையோ அரையில்லை நாவோ குழறும்,* கடல்மண்ணெல்லாம்-
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே! * பெருமான்-
மலையோ* திரு வேங்கடமென்று கற்கின்ற வாசகமே? (2) 60
2538:
வாசகம் செய்வது நம்பரமே?,* தொல்லை வானவர்தம்-
நாயகன்* நாயகர் எல்லாம் தொழுமவன்,* ஞாலமுற்றும்-
வேயகம் ஆயினும் சோரா வகை* இரண்டே அடியால்-
தாயவன்,* ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே. 61
2539:
இறையோ இரக்கினும்* ஈங்கோர் பெண்பால்,* எனவும் இரங்காது,-
அறையோ! என* நின்றதிரும் கருங்கடல்,* ஈங்கு இவள்தன்-
நிறையோ இனி உன் திருவருளால் அன்றிக்* காப்பரிதால்-
முறையோ,* அரவணை மேல் பள்ளிகொண்ட முகில்வண்ணனே! 62
2540:
வண்ணம் சிவந்துள* வானாடமரும் குளிர்விழிய,*
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன,* தாமிவையோ-
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு*
எண்ணம் புகுந்து,* அடியேனொடு இக்காலம் இருக்கின்றதே. 63
2541:
இருக்கார் மொழியால்* நெறியிழுக்காமை,* உலகளந்த-
திருத்தாளிணை நிலத் தேவர் வணங்குவர்,* யாமும் அவா-
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்*
கருக்காய் கடிப்பவர் போல்,* திருநாமச் சொல் கற்றனமே. 64
2542:
கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்று,* ஓரோ கருமம்-
உற்றுப் பயின்று செவியொடு உசாவி,* உலகமெல்லாம்-
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*
உற்றும் உறாதும்,* மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே! 65
2543:
உண்ணாது உறங்காது* உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்,* எரி நீர் வளிவான்-
மண்ணாகிய எம் பெருமான் தனது வைகுந்தமன்னாள்*
கண்ணாய் அருவினையேன்,* உயிராயின காவிகளே. 66
2544:
காவியும் நீலமும்* வேலும் கயலும் பலபலவென்று,*
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு,* அசுரர்செற்ற-
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்*
தூவியம் பேடை அன்னாள்,* கண்களாய துணைமலரே. 67
2545:
மலர்ந்தே ஒழிலிந்தில* மாலையும் மாலைபொன் வாசிகையும்*
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி,* பொருகடல்சூழ்-
நிலந்தாவிய எம் பெருமான் தனது வைகுந்தமன்னாய்!*
கலந்தார் வரவெதிர் கொண்டு,* வன்கொன்றைகள் கார்த்தனவே. 68
2546:
காரேற்று இருள்செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,* வெல்வான்-
போரேற்று எதிர்ந்தது புன்தலை மாலை,* புவனியெல்லாம்-
நீரேற்று அளந்த நெடியபிரான் அருளா விடுமே?*
வாரேற்று இளமுலையாய்,* வருந்தேல் உன் வளைத்திறமே. 69
2547:
வளைவாய்த் திருச்சக்கரத்து* எங்கள் வானவனார் முடிமேல்,*
தளைவாய் நறுங்கண்ணித்* தண்ணந்துழாய்க்கு வண்ணம்பயலை,*
விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டு ஊழி நிற்க* எம்மை-
உளைவான் புகுந்து,* இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே. 70
2548:
ஊழிகளாய்* உலகேழும் உண்டான் என்றிலம்,* பழங்கண்டு-
ஆழிகளாம் பழ வண்ணம் என்றேற்கு,* அஃதே கொண்டு அன்னை-
நாழிவளோவென்னும் ஞாலமுண்டான் வண்ணம் சொல்லிற்றென்னும்*
தோழிகளோ! உரையீர்,* எம்மை அம்மனை சூழ்கின்றவே. 71
2549:
சூழ்கின்ற கங்குல்* சுருங்கா இருளின் கருந்திணிம்பை,*
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க,* துழாய்மலர்க்கே-
தாழ்கின்ற நெஞ்சத்து ஒருதமியாட்டியேன் மாமைக்கு இன்று*
வாழ்கின்றவாறு இதுவோ,* வந்து தோனÛறிற்று வாலியதே. 72
2550:
வால் வெண்ணிலவு* உலகாரச் சுரக்கும் வெண் திங்களென்னும்,*
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை,* பரிதிவட்டம்-
போலும் சுடர் அடலாழிப்பிரான் பொழில் ஏழளிக்கும்*
சால்பின் தகைமை கொலாம்,* தமியாட்டி தளர்ந்ததுவே? 73
2551:
தளர்ந்தும் முறிந்தும்* வருதிரைப் பாயல்,* திருநெடுங்கண்-
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,* மால்வரையைக்-
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்தான் முடி சூடுதுழாய்*
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,* அந்தோ வந்துலாகின்றதே! 74
2552:
உலாகின்ற கெண்டை ஒளியம்பு,*எம் ஆவியை ஊடுருவக்-
குலாகின்ற* வெஞ்சிலை வாள்முகத்தீர்,* குனி சங்கிடறிப்-
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம்மான்* அடியார்-
நிலாகின்ற வைகுந்தமோ,* வையமோ நும் நிலையிடமே? 75
2553:
இடம்போய் விரிந்து இவ்வுலகளந்தான்* எழிலார் தண்துழாய்,*
வடம்போதினையும் மடநெஞ்சமே,* நங்கள் வெள்வளைக்கே-
விடம்போல் விரிதல் இதுவியப்பே வியன் தாமரையின்*
தடம்போது ஒடுங்க,* மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. 76
2554:
திங்களம் பிள்ளை புலம்பத்* தன் செங்கோல் அரசுபட்ட*
செங்களம் பற்றி நின்று எள்குபுன்மாலை,* தென் பாலிலங்கை-
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா*
நங்களை மாமை கொள்வான்,* வந்து தோன்றி நலிகின்றதே. 77
2555:
நலியும் நரகனை வீட்டிற்றும்,* வாணன் திண்தோள் துணித்த*
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல,* மைவரைபோல்-
பொலியும் உருவில் பிரானார் புனை பூந்துழாய் மலர்க்கே*
மெலியும் மடநெஞ்சினார்,* தந்து போயின வேதனையே! 78
2556:
வேதனை வெண்புரி நூலனை,* விண்ணோர் பரவநின்ற-
நாதனை* ஞாலம் விழுங்கும் அநாதனை,* ஞாலந்தத்தும்-
பாதனைப் பாற்கடல் பாம்பணைமேல் பள்ளி கொண்டருளும்*
சீதனையே தொழுவார்,* விண்ணுளாரிலும் சேரியரே. 79
2557:
சீர் அரசாண்டு* தன் செங்கோல் சிலநாள்* செலீஇக்கழிந்த,-
பாரர சொத்து மறைந்தது நாயிறு,* பாரளந்த-
பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்துவஞ்சித்த*
ஓரரசே! அருளாய்,* இருளாய் வந்து உறுகின்றதே. 80
2558:
உறுகின்ற கன்மங்கள்* மேலான ஓர்ப்பிலராய்,* இவளைப்-
பெறுகின்ற தாயர்* மெய் நொந்து பெறார்கொல்* துழாய்குழல்வாய்த்-
துறுகின்றிலர் தொல்லை வேங்கடமாட்டவும் * சூழ்கின்றிலர்*
இருகின்றதால் இவள் ஆகம்,* மெல்லாவி எரிகொள்ளவே. 81
2559:
எரிகொள் செந்நாயிறு* இரண்டுடனே உதயம் மலைவாய்,*
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்கண்கள்,* மீண்டவற்றுள்-
எரிகொள் செந்தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*
விரிவ சொல்லீர் இதுவோ,* வையமுற்றும் விளரியதே? 82
2560:
விளரிக் குரல் அன்றில்* மென்படைமேகின்ற முன்றில்பெண்ணை,*
முளரிக் குரம்பை இதுவிதுவாக,* முகில்வண்ணன்பேர்-
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல்லாவியும் நைவுமெல்லாம்*
தளரில் கொலோ அறியேன்,* உய்யலாவது இத் தையலுக்கே! 83
2561:
தையல் நல்லார்கள் குழாங்கள்* குழிய குழுவினுள்ளும்,*
ஐய நல்லார்கள் குழிய விழவினும்,* அங்கங்கெல்லாம்-
கைய பொன்னாழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்*
மையவண்ணா! மணியே,* முத்தமே! என்தன் மாணிக்கமே! 84
2562:
மாணிக்கங் கொண்டு* குரங்கெறிவொத்து இருளோடுமுட்டி,*
ஆணிப்பொன் அன்ன சுடர்படுமாலை,* உலகளந்த-
மாணிக்கமே! என் மரகதமே! மற்றொப்பாரை இல்லா*
ஆணிப்பொன்னே,* அடியேன் உடையாவி அடைக்கலமே! 85
2563:
அடைக்கலத்து ஓங்கு* கமலத்தலரயன் சென்னியென்னும்,*
முடைக்கலத் தூண்* முன் அரனுக்கு நீக்கியை,* ஆழிசங்கம்-
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்றாய்ச்சி வன் தாம்புகளால்*
புடைக் கலந்தானை, எம்மானை * என் சொல்லிப் புலம்புவனே? 86
2564:
புலம்பும் கனகுரல்* போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந்து*
அலம்பும் கனகுரல் சூழ்திரை ஆழியும்,* ஆங்கவைநின்-
வலம்புள்ளது நலம் பாடுமிது குற்றமாக* வையம்-
சிலம்பும் படி செய்வதே,* திருமால் இத் திருவினையே? 87
2565:
திருமால் உருவொக்கும் மேரு,* அம்மேருவில் செஞ்சுடரோன்*
திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும்,* அன்னகண்டும்-
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பதோர்*
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,* எங்கேவரும் தீவினையே? 88
2566:
தீவினைகட்கு அரு நஞ்சினை* நல்வினைக்கு இன்னமுதை,*
பூவினை மேவிய தேவி மணாளனை,* புன்மையெள்காது-
ஆவினை மேய்க்கும் வல்லாயனை* அன்றுலகு ஈரடியால்-
தாவின ஏற்றை எம்மானை* எஞ்ஞான்று தலைப்பெய்வனே? 89
2567:
தலைப்பெய்து யான்உன்* திருவடி சூடும் தகைமையினால்,*
நிலைபெய்த ஆக்கைக்கு நோற்ற இம்மாயமும்,* மாயம்செவ்வே-
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர்குழாம்*
தொலைப்பெய்த நேமியெந்தாய்,* தொல்லையூழி சுருங்கலதே. 90
2568:
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை,* வையமுற்றும்-
ஒருங்குற உண்ட* பெருவயிற்றாளனை,* மாவலிமாட்டு-
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற*
பெருங்கிறியானை அல்லால்,* அடியேன் நெஞ்சம் பேணலதே. 91
2569:
பேணலம் இல்லா அரக்கர்* முந்நீர பெரும்பதிவாய்,*
நீள்நகர் நீளெரி வைத்தருளாயென்று,* நின்னைவிண்ணோர்-
தாள்நிலந்தோய்ந்து தொழுவர் நின்மூர்த்தி பல்கூற்றிலொன்று*
காணலுமாங்கொல் என்றே,* வைகல் மாலையும் காலையுமே. 92
2570:
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த* கங்குல் குறும்பர்*
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,* அன்னகண்டும்-
காலை நல் ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து*
மாலை நல் நாவில் கொள்ளார்,* நினையார் அவன் மைப்படியே. 93
2571:
மைப்படி மேனியும்* செந்தாமரைக்கண்ணும் வைதிகரே,*
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,*
எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்*
அப்படி யானும் சொன்னேன்* அடியேன் மற்று யாதென்பனே? 94
2572:##
யாதானும் ஓராக்கையில் புக்கு,* அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்*
மூதாவியில் தடுமாறும்* உயிர் முன்னமே,* அதனால்-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
மாதா வினைப்பிதுவை,* திருமாலை வணங்குவனே. 95
2573:
வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96
2574:
எழுவதும் மீண்டே* படுவதும் பட்டு,* எனை ஊழிகள்போய்க்-
கழிவதும் கண்டு கண்டு எள்கலல்லால்,* இமையோர்கள் குழாம்-
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக் கண்ணாரக்கண்டு*
கழிவதோர் காதலுற்றார்க்கும்,* உண்டோ கண்கள் துஞ்சுதலே? 97
2576:
துஞ்சா முனிவரும்* அல்லாதவரும் தொடரநின்ற,*
எஞ்சாப் பிறவி இடர்கடிவான்,* இமையோர் தமக்கும்-
தன் சார்விலாத தனிப்பெருமூர்த்தி தன் மாயம்செவ்வே*
நெஞ்சால் நினைப்பரிதால்,* வெண்ணெயூண் என்னும் ஈனச்சொல்லே. 98
2576:##
ஈனச் சொல்லாயினும் ஆக,* எறிதிரை வையம்முற்றும்*
ஏனத்து உருவாய் இடந்தபிரான்,* இருங் கற்பகம்சேர்-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும்*
ஞானப் பிரானை அல்லால் இல்லை* நான் கண்ட நல்லதுவே (2) 99
2577:
நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப்பேர்-
வல்லார்* அடிக்கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்*
பொல்லா அருவினை* மாயவன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே (2) 100
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்

