பெரியாழ்வார் திருமொழி-மூன்றாம் பத்து


மூன்றாம் பத்து

முதல் திருமொழி

தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு* தளர்நடையிட்டு வருவான்*

பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு* ஒருபுள்ளுவன் பொய்யே தவழும்*

மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச* வாய் வைத்த பிரானே!*

அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.1.     

 

பொன்போல் மஞ்சனமாட்டி அமுதூட்டிப் போனேன்* வருமளவு இப்பால்*

வன்பார சகடம் இறச்சாடி* வடக்கில் அகம் புக்கிருந்து*

மின்போல் நுண்ணிடையால் ஒருகன்னியை* வேற்றுருவம் செய்துவைத்த*

அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம்தரவே.* 3.1.2.  

 

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்* குடத்தயிர் சாய்த்துப்பருகி*

பொய்ம்மாய மருதான அசுரரைப்* பொன்றுவித்து இன்றுநீவந்தாய்*

இம்மாயம் வல்லபிள்ளை நம்பீ!* உன்னை என்மகனே என்பர் நின்றார்*

அம்மா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.3.  

 

மையார்க்கண் மடவாய்ச்சியர் மக்களை* மையன்மை செய்து அவர் பின் போய்*

கொய்யார் பூந்துகில் பற்றித்தனிநின்று* குற்றம் பலபல செய்தாய்*

பொய்யா! உன்னைப் புறம் பலபேசுவ* புத்தகத்துக் உள கேட்டேன்*

ஐயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே.* 3.1.4.

 

முப்போதும் கடைந் தீண்டிய வெண்ணெயினோடு* தயிரும் விழுங்கி*

கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த* கலத்தொடு சாய்த்துப்பருகி*

மெய்ப்பாலுண்ட அழுபிள்ளைகள்போல* நீ விம்மி விம்மி ஆழுகின்ற*

அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.5.      

 

கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக்* கற்றா நிறைமண்டித் தின்ன*

விரும்பாக் கன்Ýறு ஒன்று கொண்டு* விளங்கனி வீழ எறிந்த பிரானே!*

சுரும்பார் மென்குழல் கன்னியொருத்திக்குச்* சூழ்வலை வைத்துத் திரியும்*

அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.6. 

 

மருட்டார் மெங்குழல் கொண்டு பொழில்புக்கு* வாய்வைத்து அவ்வாயர் தம்பாடி*

சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச்* சுற்றும் தொழ நின்ற சோதி!*

பொருட்டாயமிலேன் எம்பெருமான்!* உன்னைப் பெற்ற குற்றமல்லால்* மற்றிங்கு-

அரட்டா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.* 3.1.7.

 

வாளாவாகிலும் காணகில்லார்* பிறர் மக்களை மையன்மை செய்து*

தோளாலிட்டு அவரோடு திளைத்து* நீ சொல்லப்படாதன செய்தாய்*

கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன்!* வாழ்வில்லை* நந்தன்-

காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.*  3.1.8.

 

தாய்மார் மோர் விற்கப் போவர்* தகப்பன்மார் கற்றாநிறைப்பின்பு போவர்*

நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை* நேர்படவேகொண்டுபோதி*

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து* கண்டார் கழறத்திரியும்*

ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.*  3.1.9.

 

தொத்தார் பூங்குழல் கன்னியொருத்தியைச்* சோலைத் தடம் கொண்டு புக்கு*

முத்தார் கொங்கை புணர்ந்து இராநாழிகை* மூவேழு சென்ற பின்வந்தாய்*

ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*உன்னை உரப்பவே நான் ஒன்றும்மாட்டேன்*

அத்தா! உன்னை அறிந்துகொண்டேன்* உனக்கு அஞ்சுவன் அம்மம்தரவே.* 3.1.10.

காரார் மேனிநிறத்து ஏம்பிரானைக்* கடிகமழ் பூங்குழலாய்ச்சி*

ஆரா இன்னமுது உண்ணத்தருவன் நான்* அம்மம் தாரேனென்றமாற்றம்*

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்* பட்டர்பிரான் சொன்ன பாடல்*

ஏரார் இன்னிசை மாலைவல்லார்* இருடீகேசன் அடியாரே.*     3.1.11.

 

இரண்டாம் திருமொழி

அஞ்சனவண்ணனை* ஆயர் கோலக்கொழுந்தினை*

மஞ்சனமாட்டி* மனைகள் தோறும் திரியாமே*

கஞ்சனைக் காய்ந்த* கழலடி நோவக் கன்றின்பின்*

என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லேபாவமே!* (2)  3.2.1.

 

பற்று மஞ்சள் பூசிப்* பாவைமாரொடு பாடியில்*

சிற்றில் சிதைத்து எங்கும் *தீமை செய்து திரியாமே*

கற்றுத்தூளியுடை* வேடர் கானிடைக்கன்றின்பின்*

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?* எல்லேபாவமே!*  3.2.2.

 

நன்மணிமேகலை* நங்கைமாரொடு நாள்தொறும்*

பொன்மணிமேனி* புழுதியாடித்திரியாமே*

கன்மணி நின்றதிர்* கான் அதரிடைக் கன்றின்பின்*

என் மணிவண்ணனைப் போக்கினேன்* எல்லேபாவமே!*   3.2.3.

 

வண்ணக் கருங்குழல்* மாதர்வந்து அலர் தூற்றிட*

பண்ணிப்பலசெய்து* இப்பாடி எங்கும் திரியாமே*

கண்ணுக்கினியானைக்* கான் அதரிடைக் கன்றின்பின்*

எண்ணற்கரியானைப் போக்கினேன்* எல்லேபாவமே!*  3.2.4.

 

அவ்வவ்விடம்புக்கு* அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்*

கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்* கூழைமைசெய்யாமே*

எவ்வும் சிலையுடை* வேடர் கானிடைக்கன்றின்பின்*

தெய்வத் தலைவனைப் போக்கினேன்* எல்லேபாவமே!*    3.2.5.

 

மிடறு மெழுமெழுத்தோட* வெண்ணெய் விழுங்கிப் போய்*

படிறுபலசெய்து* இப்பாடியெங்கும்திரியாமே*

கடிறுபலதிரி* கான் அதரிடைக் கன்றின்பின்*

இடற என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லேபாவமே!*    3.2.6.

 

வள்ளி நுடங்கிடை* மாதர்வந்து அலர்தூற்றிட*

துள்ளி விளையாடித்* தோழரோடு திரியாமே*

கள்ளியுணங்கு* வெங் கான் அதரிடைக் கன்றின்பின்*

புள்ளின் தலைவனைப் போக்கினேன்* எல்லேபாவமே!*  3.2.7.

 

பன்னிருதிங்கள்* வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்*

என் இளங்கொங்கை* அமுதமூட்டி எடுத்து யான்*

பொன்னடி நோவப்* புலரியே கானில்கன்றின்பின்*

என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன்* எல்லேபாவமே!*  3.2.8.

 

குடையும் செருப்பும் கொடாதே* தாமோதரனை நான்*

உடையும் கடியன ஊன்று* வெம்பரற்களுடை*

கடிய வெங்கானிடைக்* காலடிநோவக் கன்றின்பின்*

கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன்* எல்லேபாவமே!*  3.2.9.

 

என்றும் எனக்கு இனியானை* என்மணிவண்ணனை*

கன்றின் பின் போக்கினேனென்று* அசோதைகழறிய*

பொன் திகழ்மாடப்* புதுவையர் கோன் பட்டன் சொல்*

இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு* இடரில்லையே.* (2) 3.2.10.

 

மூன்றாம் திருமொழி

சீலைக்குதம்பை ஒருகாது ஒருகாது* செந்நிறமேல்தோன்றிப்பூ*

கோலப்பணைக் கச்சும் கூறையுடையும்* குளிர்முத்தின்கோடாலமும்*

காலிப்பின்னே வருகின்ற* கடல்வண்ணன் வேடத்தை வந்துகாணீர்*

ஞாலத்துப் புத்திரனைப்பெற்றார்* நங்கைமீர்! நானே மற்றாருமில்லை. (2)  3.3.1.

 

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*

மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*

உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*

என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா.* 3.3.2.      

 

காடுகðடு போய்க் *கன்றுகள் மேய்த்து மறியோடி* கார்க் கோடல்பூச்-

சூடி வருகின்ற தாமோதரா!* கற்றுத் தூளிகாண் உன்னுடம்பு*

பேடை மயிற் சாயல் பின்னைமணாளா!* நீராட்டமைத்து வைத்தேன்*

ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்* உன்னோடு உடனே உண்பான்.* 3.3.3.       

 

கடியார் பொழிலணி வேங்கடவா!* கரும் போரேறே!* நீயுகக்கும்-

குடையும் செருப்பும் குழலும்* தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*

கடிய வெங்கானிடைக் கன்றின்பின்போன* சிறுக்குட்டச்செங்கமல*

அடியும் வெதும்பி* உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய்* நீ எம்பிரான்! 3.3.4.

 

பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை* வாய்வைத்த போரேறே!*

என் சிற்றாயர்சிங்கமே! சீதைமணாளா!* சிறுக்குட்டச் செங்கண்மாலே!*

சிற்றாடையும் சிறுப்பத்திரமும்* இவை கட்டிலின் மேல்வைத்துப் போய்*

கற்றாயரோடு நீ கன்றுகள்மேய்த்துக்* கலந்துடன் வந்தாய்போலும்.*  3.3.5.

 

அஞ்சுடராழி உன்கையகத்து ஏந்தும் அழகா!* நீ பொய்கைபுக்கு*

நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும்* நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*

என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?* ஏதும் ஓர் அச்சமில்லை*

கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்* காயாம் பூவண்ணம் கொண்டாய்!* 3.3.6.

 

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய* பாற்கடல்வண்ணா!* உன்மேல்-

கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த* கள்ள அசுரர் தன்னை*

சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே* விளங்காய் எறிந்தாய் போலும்*

என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்* அங்கனமாவர்களே.*  3.3.7.

 

கேட்டு அறியாதன கேட்கின்றேன்* கேசவா! கோவலர் இந்திரற்கு*

காட்டிய சோறும் கறியும் தயிரும்* கலந்துடன் உண்டாய் போலும்*

ஊட்ட முதலிலேன் உன்தன்னைக் கொண்டு* ஒருபோதும் எனக்கரிது*

வாட்டமிலாப் புகழ் வாசுதேவா!* உன்னை அஞ்சுவன் இன்றுதொட்டும்.*  3.3.8.

 

திண்ணார் வெண்சங்குடையாய்!* திருநாள் திருவோணம் இன்றேழுநாள்* முன்-

பண்ணேர் மொழியாரைக் கூவிமுளையட்டிப்* பல்லாண்டு கூறுவித்தேன்*

கண்ணாலம்செய்யக்* கறியும் கலத்தரிசியும் ஆக்கிவைத்தேன்*

கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்* கோலம்செய்திங்கேயிரு.* 3.3.9.   

 

புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி* தன் புத்திரன் கோவிந்தனை*

கற்றினம் மேய்த்துவரக் கண்டுகந்து* அவள் கற்பித்த மாற்றமெல்லாம்*

செற்றமிலாதவர்வாழ்தரு* தென்புதுவை விட்டுசித்தன்சொல்*

கற்றிவை பாடவல்லார்* கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே. (2) 3.3.10.

நான்காம் திருமொழி

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*

            தண்ணுமை எக்கம் மத்தளிதாழ் பீலி*

குழல்களும் கீதமுமாகி* எங்கும்-

            கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு*

மழைகொலோ வருகின்றதென்று சொல்லி*

            மங்கைமார் சாலக வாசல் பற்றி*

நுழைவனர் நிற்பனராகி எங்கும்*

            உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே.* (2)   3.4.1.

 

வல்லி நுண் இதழன்ன ஆடைகொண்டு*

            வசையறத் திருவரை விரித்துடுத்து*

பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்திப்*

            பணைக்கச்சு உந்திப் பலதழை நடுவே*

முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்-

            அணிந்து* பல்லாயர் குழாம் நடுவே*

எல்லியம் போதாகப் பிள்ளைவரும்*

            எதிர் நின்று அங்கு இனவளை இழவேன்மினே.*   3.4.2.

 

சுரிகையும் தெறிவில்லும் செண்டுகோலும்*

            மேலாடையும் தோழன்மார் கொண்டோட*

ஒருகையால் ஒருவன் தன் தோளையூன்றி*

            ஆநிரை இனம் மீளக் குறித்தசங்கம்*

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*

            மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*

அருகே நின்றாள் என்பெண் நோக்கிக்கண்டாள்*

            அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே.*  3.4.3.

 

குன்றெடுத்து ஆநிரைகாத்த பிரான்*

            கோவலனாய்க் குழலூதி யூதி*

கன்றுகள் மேய்த்துத் தன்தோழரோடு*

            கலந்து உடன் வருவானைத் தெருவில்கண்டு*

என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*

            கண்டறியேன்ஏடி! வந்துகாணாய்*

ஒன்றும் நில்லா வளை கழன்று*

            துகில் ஏந்து இளமுலையும் என்வசமல்லவே.*   3.4.4.

 

சுற்றிநின்று ஆயர் தழைகள் இடச்*

            சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து*

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*

            பாடவும் ஆடக்கண்டேன்* அன்றிப்பின்-

மற்றொருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*

            மாலிருஞ்சோலை எம் ஆயற்கல்லால்*

கொற்றவனுக்கு இவளாம் என்றெண்ணிக்*

            கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே.*     3.4.5.

 

சிந்துரமிலங்கத் தன் திருநெற்றிமேல்*

            திருத்திய கோறம்பும் திருக்குழலும்*

அந்தரம் முழவம் தண் தழைக் காவின்கீழ்*

            வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*

அந்தம் ஒன்றில்லாத ஆயப் பிள்ளை*

            அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில்*

பந்துகொண்டானென்று வளைத்து வைத்துப்*

            பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ!*   3.4.6.

 

சாலப்பல் நிரைப்பின்னே தழைக்காவின்கீழ்*

            தன் திருமேனி நின்றொளி திகழ*

நீல நல் நறுங் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*

            பல்லாயர் குழாம் நடுவே*

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*

            குழல் ஊதி இசை பாடிக் குனித்து* ஆயரோடு-

ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*

            அழகுகண்டு என்மகள் அயர்க்கின்றதே.*    3.4.7.

 

சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி அப்பித்*

            திருநாமம் இட்டு அங்கோர் இலையந் தன்னால்*

அந்தரமின்றித் தன்னெறி பங்கியை*

            அழகிய நேத்திரத்தால் அணிந்து*

இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*

            எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் அன்ன*

சந்தியில் நின்று கண்டீர் நங்கைதன்*

            துகிலொடு சரிவளை கழல்கின்றதே.*    3.4.8.

 

வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து*

            மல்லிகை வனமாலை மௌவல் மாலை*

சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டுத்*

            தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி*

அலங்காரத்தால் வரும் ஆய்ப்பிள்ளை*

            அழகுகண்டு என்மகள் ஆசைப்பட்டு*

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்*

            வெள்வளை கழன்று மெய் மெலிகின்றதே.*  3.4.9.

 

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித்தொழ*

            மிறைத்து ஆயர்ப் பாடியில் வீதியூடே*

கண்ணன் காலிப்பின்னே எழுந்தருளக்கண்டு*

            இளவாய்க் கன்னிமார் காமுற்ற-

வண்ணம்* வண்டமர் பொழில் புதுவையர்கோன்*

            விட்டுசித்தன் சொன்னமாலை பத்தும்*

பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்*

            பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  3.4.10.

 

ஐந்தாம் திருமொழி

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்*

            தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-

பொட்டத் துற்று* மாரிப் பகைபுணர்த்த*

            பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை*

வட்டத் தடங்கண் மடமான் கன்றினை*

            வலைவாய்ப் பற்றிக் கொண்டு* குற மகளிர்-

கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*

            கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையே.* (2)  3.5.1.

 

வழுவொன்றுமில்லாச் செய்கை வானவர்கோன்*

            வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*

மழைவந்து எழுநாள் பெய்து மாத்தடைப்ப*

            மதுசூதன் எடுத்து மறித்தமலை*

இழவு தரியாததோர் ஈÖற்றுப்பிடி*

            இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும்*

குழவியிடைக் காலிட்டு எதிர்ந்து பொரும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.2.

 

அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரும்*

            ஆனாயரும் ஆநிரையும் அலறி*

எம்மைச் சரண் என்று கொள் என்றிரப்ப*

            இலங்காழிக்கை எந்தை எடுத்தமலை*

தம்மைச் சரணென்ற தம் பாவையரைப்*

            புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று*

கொம்மைப் புயம் குன்றர் சிலைகுனிக்கும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.3.

 

கடுவாய்ச்சின வெங்கண் களிற்றினுக்குக்*

            கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்*

அடிவாய் உறக்கை இட்டு எழப் பறித்திட்டு*

            அமரர் பெருமான் கொண்டு நின்றமலை*

கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*

            கதுவாய்ப்பட நீர்முகந் தேறி* எங்கும்-

குடவாய்ப்பட நின்று மழைபொழியும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.4.

 

வானத்தில் உள்ளÖÖர்! வலியீர் உள்ளÖரேல்*

            அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்*

ஏனத்துருவாகிய ஈசன் எந்தை*

            இடவன் எழ வாங்கி எடுத்தமலை*

கானக் களியானைதன் கொம்பு இழந்து*

            கதுவாய் மதம் சோரத் தன் கையெடுத்து*

கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*  3.5.5.

 

செப்பாடுடைய திருமாலவன் தன்*

            செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*

கப்பாக மடுத்து மணிநெடுந்தோள்*

            காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை*

எப்பாடும் பரந்திழி தெள்ளருவி*

            இலங்கு மணி முத்து வடம் பிறழ*

குப்பாயமென நின்று காட்சி தரும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.6.

 

படங்கள் பலவும் உடைப் பாம்பரையன்*

            படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன்போல்*

தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*

            தாமோதரன் தாங்கு தடவரைதான்*

அடங்கச் சென்று இலங்கையை ஈÖடழித்த*

            அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை*

குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*  3.5.7.

 

சலமாமுகில் பல்கணப் போர்க்களத்துச்*

            சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு*

நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*

            நாராயணன் முன்முகம் காத்தமலை*

இலை வேய் குரம்பைத் தவ மாமுனிவர்*

            இருந்தார் நடுவேசென்று அணார் சொறிய*

கொலைவாய்ச்சின வேங்கைகள் நின்று உறங்கும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.8.

 

வன்பேய் முலையுண்ட தோர் வாயுடையன்*

            வன் தூணென நின்றதோர் வன் பரத்தை*

தன்பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்*

            தாமோதரன் தாங்கு தடவரைதான்*

முன்பே வழிகாட்ட முசுக் கணங்கள்*

            முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை*

கொம்பு ஏற்றியிருந்து குதி பயிற்றும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே.*   3.5.9.

 

கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்*

            கோலமும் அழிந்தில வாடிற்றில*

வடிவேறு திருவுகிர் நொந்துமில*

            மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்*

முடியேறிய மாமுகிற் பல் கணங்கள்*

            முன்னெற்றி நரைத்தன போல* எங்கும்-

குடியேறி இருந்து மழைபொழியும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடையே*.   3.5.10.

 

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*

            அரவப் பகையூர்தி அவனுடைய*

குரவிற்கொடி முல்லைகள் நின்று உறங்கும்*

            கோவர்த்தனம் என்னும் கொற்றக்குடைமேல்*

திருவிற் பொலிமறை வாணர் புத்தூர்த்-

            திகழ்* பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்*

பரவு மன நன்குடைப் பத்தருள்ளார்*

            பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)   3.5.11.

 

ஆறாம் திருமொழி

நாவலம் பெரிய தீவினில் வாழும்*

            நங்கைமீர்கள்! இதோர் அற்புதம் கேளÖர்*

தூவலம்புரி உடைய திருமால்*

            தூய வாயில் குழலோசை வழியே*

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை-

            குதுகலிப்ப* உடல் உள் அவிழ்ந்து* எங்கும்

காவலும் கடந்து கயிறு மாலையாகி*

            வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)     3.6.1.

 

இடவணரை இடத் தோளொடு சாய்த்து*

            இருகை கூடப் புருவம் நெரிந்து ஏற*

குடவயிறு படவாய் கடை கூடக்*

            கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*

மடமயில்களொடு மான் பிணைபோலே*

            மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ*

உடை நெகிழ ஓர் கையால் துகில்பற்றி*

            ஒல்கி ஓடு அரிக் கண் ஓட நின்றனரே.*   3.6.2.

 

வான் இளவரசு வைகுந்தக் குட்டன்*

            வாசுதேவன் மதுரைமன்னன்* நந்த-

கோன் இளவரசு கோவலர் குட்டன்*

            கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது*

வானிளம் படியர் வந்து வந்தீண்டி*

            மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப*

தேனளவு செறிகூந்தலவிழச்*

            சென்னி வேர்ப்பச் செவிசேர்த்து நின்றனரே.*  3.6.3.

 

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*

            தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி*

கானகம்படி உலாவி உலாவிக்*

            கருஞ் சிறுக்கன் குழலூதின போது*

மேனகையொடு திலோத்தமை அரம்பை*

            உருப்பசி அரவர் வெள்கி மயங்கி*

வானகம் படியில் வாய் திறப்பின்றி*

            ஆடல் பாடலவை மாறினர் தாமே*.    3.6.4.

 

முன்நரசிங்கமதாகி* அவுணன்-

            முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்-

மன்னர் அஞ்சும்* மதுசூதனன் வாயில்*

            குழலினோசை செவியைப் பற்றி வாங்க*

நன்னரம்புடைய தும்புருவோடு*

            நாரதனும் தம்தம் வீணை மறந்து*

கின்னர மிதுனங்களும் தம்தம்*

            கின்னரம் தொடுகிலோம் என்றனரே.*   3.6.5.

 

செம்பெருந் தடங்கண்ணன் திரள்தோளன்*

            தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்*

நம் பரமன் இந்நாள் குழலூதக்*

            கேட்டவர்கள் இடர் உற்றன கேளÖர்*

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*

            அமுத கீத வலையால் சுருக்குண்டு*

நம் பரமன் என்று நாணி மயங்கி*

            நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே.*  3.6.6.

 

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளÖர்*

            பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து*

அவையுள் நாகத்தணையான் குழலூத*

            அமர லோகத்தளவும் சென்றிசைப்ப*

அவியுணா மறந்து வானவரெல்லாம்*

            ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டி*

செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*

            கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*   3.6.7.

 

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*

            செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிக்க*

குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக்*

            கோவிந்தன் குழல் கொடு ஊதினபோது*

பறவையின் கணங்கள் கூடு துறந்து*

            வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப*

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*

            கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.*   3.6.8

 

 

திரண்டு எழு தழை மழை முகில்வண்ணன்*

            செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே*

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*

            ஊதுகின்ற குழலோசை வழியே*

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து*

            மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர*

இரண்டுபாடும் துலங்காப் புடை பெயரா*

            எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*    3.6.9.

 

கருங்கண் தோகைமயிற் பீலியணிந்து*

            கட்டி நன்கு உடுத்த பீதகவாடை*

அருங் கலம் உருவின் ஆயர் பெருமான்*

            அவன் ஒருவன் குழலூதின போது*

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*

            மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்*

இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற-

            பக்கம் நோக்கி* அவை செய்யும் குணமே.*      3.6.10.

 

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*

            கோவிந்தனுடைய கோமள வாயில்*

குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்*

            கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை*

குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*

            விட்டுசித்தன் விரித்த தமிழ்வல்லார்*

குழலை வென்ற குளிர் வாயினர் ஆகிச்*

            சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)  3.6.11.

 

ஏழாம் திருமொழி

ஐய புழுதி உடம்பளைந்து* இவள் பேச்சும் அலந்தலையாய்*

செய்ய நூலின் சிற்றாடை* செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்*

கையினில் சிறு தூதையோடு* இவள் முற்றில் பிரிந்தும் இலள்*

பையரவணைப் பள்ளியானொடு* கைவைத்து இவள் வருமே.* (2) 3.7.1.

 

வாயில் பல்லும் எழுந்தில* மயிரும் முடி கூடிற்றில*

சாய்விலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி*

தீ இணக்கு இணங்காடி வந்து* இவள் தன்னன்ன செம்மைசொல்லி*

மாயன் மாமணிவண்ணன் மேல்* இவள் மாலுறுகின்றாளே.*   3.7.2.

 

பொங்கு வெண்மணல் கொண்டு* சிற்றிலும் முற்றத்து இழைக்கல் உறில்*

சங்கு சக்கரம் தண்டு வாள்* வில்லும் அல்லது இழைக்கல் உறாள்*

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில* கோவிந்தேனாடு இவளை*

சங்கையாகி என்னுள்ளம்* நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே.* 3.7.3.

 

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து* என் பெண்மகளை எள்கி*

தோழிமார் பலர் கொண்டு போய்ச்* செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்?*

ஆழியானென்னும் ஆழம் மோழையில்* பாய்ச்சி அகப்படுத்தி*

மூழை உப்பு அறியாதது என்னும்* மூதுரையும் இலளே.*     3.7.4.

 

நாடும் ஊரும் அறியவே போய்* நல்ல துழாய் அலங்கல் –

சூடி* நாரணன் போம் இடமெல்லாம்* சோதித்து ஊழி தருகின்றாள்*

கேடு வேண்டுகின்றார் பலர் உளர்* கேசவேனாடு இவளை*

பாடு காவல் இடுமின் என்றென்று* பார் தடுமாறினதே.*    3.7.5.

 

பட்டம் கட்டிப் பொன் தோடு பெய்து* இவள் பாடகமும் சிலம்பும்*

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு* என்னோடு இருக்கலுறாள்*

பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று* இவள் பூவைப் பூவண்ணாவென்னும்*

வட்டவார் குழல் மங்கைமீர்!* இவள் மாலுறுகின்றாளே.*   3.7.6.

 

பேசவும் தரியாத பெண்மையின்* பேதையேன் பேதை இவள்*

கூசமின்றி நின்றார்கள்* தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய்*

கேசவாவென்றும் கேடிலீயென்றும் *கிஞ்சுகம் வாய் மொழியாள்*

வாசவார் குழல் மங்கைமீர்!* இவள் மாலுறுகின்றாளே.*   3.7.7.

 

காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்*

கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்*

தேறித்தேறி நின்று ஆயிரம்பேர்த்* தேவன் திறம் பிதற்றும்*

மாறில் மாமணிவண்ணன் மேல்* இவள் மாலுறுகின்றாளே.*     3.7.8.

 

கைத் தலத்துள்ள மாடழியக்* கண்ணாலங்கள் செய்து* இவளை-

வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம்?* நம்மை வடுப்படுத்தும்*

செய்த்தலை எழு நாற்றுப்போல்* அவன் செய்வன செய்து கொள்ள*

மைத்தட முகில் வண்ணன் பக்கல்* வளர விடுமின்களே.*   3.7.9.

 

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து* பேணி நம் இல்லத்துள்ளே*

இருத்துவான் எண்ணி நாமிருக்க* இவளும் ஒன்று எண்ணுகின்றாள்*

மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்* வார்த்தை படுவதன் முன்*

ஒருப் படுத்திடுமின் இவளை* உலகளந்தானிடைக்கே.*    3.7.10.

 

ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத் துயில்* நாராயணனுக்கு* இவள்-

மாலதாகி மகிழ்ந்தனள் என்று* தாயுரை செய்ததனை*

கோலமார் பொழில் சூழ் புதுவையர்கோன்* விட்டுசித்தன்சொன்ன*

மாலை பத்தும் வல்லவர்கட்கு* இல்லை வருதுயரே.* (2)  3.7.11.

 

எட்டாம் திருமொழி

நல்லதோர் தாமரைப் பொய்கை* நாண் மலர் மேல் பனி சோர*

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு* அழகு அழிந்தால் ஒத்ததாலோ*

இல்லம் வெறியோடிற்றாலோ* என் மகளை எங்கும் காணேன்*

மல்லரை அட்டவன் பின்போய்* மதுரைப் புறம் புக்காள் கொலோ?* (2)  3.8.1.

 

ஒன்றும் அறிவொன்றில்லாத* உருவறைக் கோபாலர் தங்கள்*

கன்று கால் மாறுமா போலே* கன்னி இருந்தாளைக் கொண்டு*

நன்றும் கிறி செய்து போனான்* நாராயணன் செய்த தீமை*

என்றும் எமர்கள் குடிக்கு* ஓர் ஏச்சுக் கொல் ஆயிடுங் கொலோ?*    3.8.2.

 

குமரி மணம் செய்து கொண்டு* கோலம் செய்து இல்லத்து இருத்தி*

தமரும் பிறரும் அறியத்* தாமோதரற்கு என்று சாற்றி*

அமரர் பதியுடைத் தேவி* அரசாணியை வழிபட்டு*

துமிலம் எழப் பறை கொட்டித்* தோரணம் நாட்டிடுங் கொலோ?*  3.8.3.

 

ஒருமகள் தன்னையுடையேன்* உலகம் நிறைந்த புகழால்*

திருமகள் போல வளர்த்தேன்* செங்கண்மால்தான் கொண்டு போனான்*

பெருமகளாய்க் குடிவாழ்ந்து*  பெரும் பிள்ளை பெற்ற அசோதை*

மருமகளைக் கண்டுகந்து* மணாட்டுப்புறம் செய்யுங் கொலோ?*    3.8.4.

 

தம் மாமன் நந்தகோபாலன்* தழீஇக் கொண்டு என் மகள் தன்னை*

செம்மாந்து இரு என்று சொல்லிச்* செழுங்கயற் கண்ணும் செவ்வாயும்*

கொம்மை முலையும் இடையும்* கொழும் பணைத் தோள்களும் கண்டிட்டு*

இம்மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியாரென்னுங் கொலோ?*     3.8.5.

 

வேடர் மறக்குலம் போலே* வேண்டிற்றுச் செய்து என்மகளை*

கூடிய கூட்டமேயாகக்* கொண்டு குடிவாழுங்கொலோ?*

நாடும் நகரும் அறிய* நல்லதோர் கண்ணாலம் செய்து*

சாடிறப் பாய்ந்த பெருமான்* தக்க ஆ கைப்பற்றுங்கொலோ?*    3.8.6.

 

அண்டத்தமரர் பெருமான்* ஆழியான் இன்று என்மகளை*

பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்* பரிசற ஆண்டிடுங் கொலோ?*

கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து* கோவலப் பட்டம் கவித்து*

பண்டை மணாட்டிமார் முன்னே* பாதுகாவல் வைக்குங்கொலோ?*   3.8.7.

 

குடியில் பிறந்தவர் செய்யும்* குணமொன்றும் செய்திலன் அந்தோ!*

நடையொன்றும் செய்திலன் நங்காய்!* நந்தகோபன் மகன் கண்ணன்*

இடை இருபாலும் வணங்க* இளைத்திளைத்து என் மகள் ஏங்கி*

கடை கயிறே பற்றி வாங்கிக்* கை தழும்பு ஏறிடுங் கொலோ?*     3.8.8.

 

வெண்ணிறத்தோய் தயிர்தன்னை* வெள்வரைப்பின் முன் எழுந்து*

கண்ணுறங்காதே இருந்து* கடையவும் தான் வல்லள்கொலோ?*

ஒண்ணிறத் தாமரைச் செங்கண்* உலகளந்தான் என்மகளை*

பண்ணறையாப் பணிகொண்டு *பரிசு அற அண்டிடுங்கொலோ?*    3.8.9.

 

மாயவன் பின் வழிசென்று* வழியிடை மாற்றங்கள் கேட்டு*

ஆயர்கள் சேரியிலும் புக்கு* அங்குத்தை மாற்றமும் எல்லாம்*

தாயவள் சொல்லிய சொல்லைத்* தண் புதுவைப்பட்டன் சொன்ன*

தூய தமிழ்ப் பத்தும் வல்லார்* தூமணிவண்ணனுக்காளரே.* (2) 3.8.10.

 

ஒன்பதாம் திருமொழி

என் நாதன் தேவிக்கு* அன்று இன்பப்பூ ஈயாதாள்*

தன் நாதன் காணவே* தண் பூமரத்தினை*

வன்னாதப் புள்ளால்* வலியப் பறித்திட்ட*

என் நாதன் வன்மையைப் பாடிப்பற* எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.* (2)  3.9.1.

 

என் வில்வலி கண்டு* போவென்று எதிர்வந்தான்*

தன் வில்லினோடும்* தவத்தை எதிர்வாங்கி*

முன் வில் வலித்து* முது பெண்ணுயிருண்டான்*

தன் வில்லின் வன்மையைப் பாடிப்பற* தாசரதி தன்மையைப் படிப்பற.* 3.9.2.

 

உருப்பிணி நங்கையைத்* தேரேற்றிக் கொண்டு*

விருப்புற்று அங்கேக* விரைந்து எதிர்வந்து*

செருக் குற்றான், வீரம் சிதைய* தலையைச்-

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற* தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.*   3.9.3.

 

மாற்றுத் தாய் சென்று* வனம் போகே என்றிட*

ஈற்றுத் தாய் பின்தொடர்ந்து* எம்பிரான்! என்றுஅழ*

கூற்றுத் தாய் சொல்லக்* கொடிய வனம் போன*

சீற்றமிலாதானைப் பாடிப்பற* சீதை மணாளனைப் பாடிப்பற.*  3.9.4.

 

பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கைசெய்து*

நஞ்சுமிழ் நாகம்* கிடந்த நல்பொய்கை புக்கு*

அஞ்சப்பணத்தின்மேல்* பாய்ந்திட்டு அருள் செய்த*

அஞ்சன வண்ணனைப் பாடிப்பற* அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற.*  3.9.5.

 

முடியொன்றி *மூவுலகங்களும் ஆண்டு* உன்-

அடியேற்கு அருளென்று* அவன்பின் தொடர்ந்த*

படியில் குணத்துப்* பரதநம்பிக்கு* அன்று-

அடிநிலை யீந்தானைப் பாடிப்பற* அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.*  3.9.6.

 

காளியன் பொய்கை* கலங்கப் பாய்ந்திட்டு* அவன்-

நீள் முடி ஐந்திலும்* நின்று நடம் செய்து*

மீள அவனுக்கு* அருள் செய்த வித்தகன்*

தோள்வலி வீரமே பாடிப்பற* தூமணி வண்ணனைப் பாடிப்பற.*    3.9.7.

 

தார்க்கு இளந் தம்பிக்கு* அரசீந்து* தண்டகம்-

நூற்றவள்* சொல் கொண்டு போகி* நுடங்கிடைச்-

சூர்ப்பணகாவைச்* செவியொடு மூக்கு* அவள்-

ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற* அயோத்திக்கரசனைப் பாடிப்பற.*    3.9.8.

 

மாயச் சகடமுதைத்து* மருது இறுத்து*

ஆயர்களோடுபோய்* ஆநிரைகாத்து* அணி-

வேயின் குழலூதி* வித்தகனாய்நின்ற*

ஆயர்களேற்றினைப் பாடிப்பற* ஆநிரைமேய்த்தானைப் பாடிப்பற.*  3.9.9.

 

காரார் கடலை அடைத்திட்டு* இலங்கைபுக்கு*

ஓராதான் பொன்முடி* ஒன்பதோடொன்றையும்*

நேரா அவன் தம்பிக்கே* நீள் அரசீந்த*

ஆராவமுதனைப் பாடிப்பற* அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.*  3.9.10.

 

நந்தன் மதலையைக்* காகுத்தனை நவின்று*

உந்திபறந்த* ஒளியிழையார்கள் சொல்*

செந்தமிழ்த் தென்புதுவை* விட்டுசித்தன்சொல்*

ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு* அல்லலில்லையே.* (2)   3.9.11.

 

பத்தாம் திருமொழி

நெறிந்த கருங்குழல் மடவாய்!* நின்னடியேன் விண்ணப்பம்*

செறிந்த மணி முடிச்சனகன்* சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது-

அறிந்து* அரசுகளைகட்ட* அருந்தவத்தோன் இடை விலங்க*

செறிந்த சிலை கொடு தவத்தைச்* சிதைத்ததும் ஓரடையாளம்.* (2)   3.10.1.

 

அல்லியம் பூமலர்க் கோதாய்!* அடிபணிந்தேன் விண்ணப்பம்*

சொல்லுகேன் கேட்டருளாய்* துணை மலர்க்கண் மடமானே!*

எல்லியம் போது இனிது இருத்தல்* இருந்ததோர் இட வகையில்*

மல்லிகை மாமாலை கொண்டு* அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.*   3.10.2.     

 

கலக்கிய மாமனத்தனளாய்க்* கைகேசி வரம் வேண்ட*

மலக்கிய மாமனத்தனனாய்* மன்னவனும் மறாதொழிய*

குலக் குமரா! காடுறையப் போ என்று *விடைகொடுப்ப*

இலக்குமணன் தன்னொடும்* அங்கு ஏகியது ஓரடையாளம்.*  3.10.3.

 

வாரணிந்த முலை மடவாய்!* வைதேவீ! விண்ணப்பம்*

தேரணிந்த அயோத்தியர் கோன்* பெருந்தேவீ! கேட்டருளாய்*

கூரணிந்த வேல் வலவன்* குகேனாடும் கங்கை தன்னில்*

சீரணிந்த தோழமை* கொண்டதும் ஓரடையாளம்.*   3.10.4.        

 

மான் அமரும் மெல் நோக்கி!* வைதேவீ! விண்ணப்பம்*

கானமரும் கல் அதர் போய்க்* காடுறைந்த காலத்து*

தேனமரும் பொழிற் சாரல்* சித்திர கூடத்து இருப்ப*

பால் மொழியாய்! பரதநம்பி* பணிந்ததும் ஓரடையாளம்.*     3.10.5.

 

சித்திரகூடத்து இருப்பச்* சிறுகாக்கை முலைதீண்ட*

அத்திரமே கொண்டெறிய* அனைத்து உலகும் திரிந்தோடி*

வித்தகனே! இராமாவோ!* நின் அபயம் என்று அழைப்ப*

அத்திரமே அதன் கண்ணை* அறுத்ததும் ஓரடையாளம்.*  3.10.6.

 

மின்னொத்த நுண்ணிடையாய்!* மெய்யடியேன் விண்ணப்பம்*

பொன்னொத்த மான் ஒன்று* புகுந்து இனிது விளையாட*

நின் அன்பின் வழி நின்று* சிலைபிடித்து எம்பிரான் ஏக*

பின்னே அங்கு இலக்குமணன்* பிரிந்ததும் ஓரடையாளம்.*  3.10.7.   

               

மைத்தகு மாமலர்க் குழலாய்!* வைதேவீ! விண்ணப்பம்*

ஒத்த புகழ் வானரக்கோன்* உடனிருந்து நினைத்தேட*

அத்தகுசீர் அயோத்தியர்கோன்* அடையாளம் இவை மொழிந்தான்*

இத்தகையால் அடையாளம்* ஈது அவன் கை மோதிரமே.*   3.10.8.           

 

## திக்கு நிறை புகழாளன்* தீ வேள்விச் சென்ற நாள்*

மிக்க பெருஞ்சபை நடுவே* வில்லிறுத்தான் மோதிரம் கண்டு*

ஒக்குமால் அடையாளம்* அனுமான்! என்று* உச்சிமேல்-

வைத்துக் கொண்டு உகந்தனளால்* மலர்க்குழலாள் சீதையுமே*. (2) 3.10.9.        

 

வாராரும் முலைமடவாள்* வைதேவிதனைக்கண்டு*

சீராரும் திறல் அனுமன்* தெரிந்துரைத்த அடையாளம்*

பாராரும் புகழ்ப் புதுவைப்* பட்டர்பிரான் பாடல்வல்லார்*

ஏராரும் வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே.* (2)    3.10.10.