பெரியாழ்வார் திருமொழி-நான்காம் பத்து


நான்காம்பத்து

முதல் திருமொழி

கதிராயிரம் இரவி* கலந்தெரித்தாலொத்த நீள்முடியன்*

எதிரில் பெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*

அதிரும் கழற் பொருதோள்* இரணியனாகம் பிளந்து* அரியாய்-

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை* உள்ளவா கண்டாருளர். (2) 4.1.1.

 

நாந்தகம் சங்கு தண்டு* நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம்*

ஏந்துபெருமை இராமனை* இருக்குமிடம் நாடுதிரேல்*

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்* கடுஞ்சிலை சென்றிறுக்க*

வேந்தர் தலைவன் சனக ராசன்தன்* வேள்வியில் கண்டாருளர்.   4.1.2.

 

கொலை யானைக் கொம்பு பறித்துக்* கூடலர்சேனை பொருதழிய*

சிலையால் மராமரமெய்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*

தலையால் குரக்கினம் தாங்கிச்சென்று* தடவரை கொண்டு அடைப்ப*

அலையார் கடற்கரை வீற்றிருந்தானை* அங்குத்தைக் கண்டாருளர்.  4.1.3.

 

தோயம் பரந்த நடுவுசூழலில்* தொல்லை வடிவுகொண்ட*

மாயக் குழவியதனை நாடுறில்* வம்மின் சுவடுரைக்கேன்*

ஆயர் மடமகள் பின்னைக்காகி* அடல் விடை ஏழினையும்*

வீயப் பொருது வியர்த்து நின்றானை* மெய்ம்மையே கண்டாருளர்.   4.1.4.

 

நீரேறு செஞ்சடை நீலகண்டனும்* நான்முகனும் முறையால்*

சீரேறு வாசகஞ் செய்ய நின்ற* திருமாலை நாடுதிரேல்*

வாரேறு கொங்கை உருப்பிணியை* வலியப் பிடித்துக் கொண்டு-

தேரேற்றி* சேனைநடுவு போர்செய்யச்* சிக்கெனக் கண்டாருளர்.  4.1.5.

 

பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்* புணர் முலைவாய் மடுக்க-

வல்லானை* மாமணிவண்ணனை* மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு* பௌவம் ஏறி துவரை*

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே* இருந்தானைக் கண்டாருளர்.    4.1.6.

 

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம்* ஏந்துகையன்*

உள்ளவிடம் வினவில்* உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்*

வெள்ளைப்புரவிக் குரக்குவெல் கொடித்* தேர்மிசை முன்புநின்று*

கள்ளப் படைத் துணையாகிப்* பாரதம் கைசெய்யக் கண்டாருளர்.   4.1.7.

 

நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற* அரசர்கள் தம்முகப்பே*

நாழிகை போகப்படை பொருதவன்* தேவகிதன் சிறுவன்*

ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச்* சயத்திரதன் தலையை*

பாழில் உருளப் படைபொருதவன்* பக்கமே கண்டாருளர்.    4.1.8.

 

மண்ணும் மலையும் மறிகடல்களும்* மற்றும் யாவுமெல்லாம்*

திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச்* சிக்கென நாடுதிரேல்*

எண்ணற்கரியதோர் ஏனமாகி* இருநிலம்புக் கிடந்து*

வண்ணக் கருங்குழல் மாதரோடு* மணந்தானைக் கண்டாருளர்.   4.1.9.

 

கரியமுகில் புரைமேனி மாயனைக்* கண்ட சுவடுரைத்து*

புரவிமுகம் செய்து செந்நெலோங்கி* விளை கழனிப்புதுவை*

திருவிற் பொலி மறைவாணன்* பட்டர்பிரான் சொன்ன மாலைபத்தும்*

பரவு மனமுடைப் பத்தருள்ளார்* பரமனடி சேர்வர்களே. (2)       4.1.10.

 

இரண்டாம் திருமொழி

அலம்பாவெருட்டாக்* கொன்று திரியும் அரக்கரை*

குலம் பாழ் படுத்துக்* குலவிளக்காய் நின்ற கோன்மலை*

சிலம்பார்க் கவந்து* தெய்வ மகளிர்களாடும் சீர்*

சிலம்பாறு பாயும்* தென்திருமாலிருஞ்சோலையே. (2)   4.2.1.

 

வல்லாளன் தோளும்* வாளரக்கன் முடியும்* தங்கை-

பொல்லாத மூக்கும்* போக்குவித்தான் பொருந்தும்மலை*

எல்லாவிடத்தில் எங்கும்பரந்து* பல்லாண்டொலி*

செல்லா நிற்கும் சீர்த்* தென்திருமாலிருஞ்சோலையே.  4.2.2.

 

தக்கார் மிக்கார்களைச்* சஞ்சலம்செய்யும் சலவரை*

தெக்கா நெறியே போக்குவிக்கும்* செல்வன் பொன்மலை*

எக் காலமும் சென்று* சேவித்திருக்கும் அடியரை*

அக்கானெறியை மாற்றும்* தண் திருமாலிருஞ்சோலையே.  4.2.3.

 

ஆனாயர்கூடி* அமைத்த விழவை* அமரர்தம்-

கோனார்க் கொழியக்* கோவர்த்தனத்துச் செய்தான் மலை*

வானாட்டில்நின்று* மாமலர்க் கற்பகத் தொத்திழி*

தேனாறுபாயும்* தென்திருமாலிருஞ்சோலையே.   4.2.4.

 

ஒருவாரணம் பணிகொண்டவன்* பொய்கையில்* கஞ்சன்தன்-

ஒருவாரணம் உயிருண்டவன்* சென்றுறையும்மலை*

கருவாரணம்* தன்பிடி துறந்தோட* கடல்வண்ணன்-

திருவாணை கூறத்திரியும்* தண்திருமாலிருஞ்சோலையே.  4.2.5.

 

ஏவிற்றுச்செய்வான்* ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை*

சாவத் தகர்த்த* சாந்தணி தோள் சதுரன்மலை*

ஆவத்தனமென்று* அமரர்களும் நன்முனிவரும்*

சேவித்திருக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே.    4.2.6.

 

மன்னர் மறுக* மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்*

முன்னங்கு நின்று* மோழை யெழுவித்தவன் மலை*

கொன்னவில் கூர்வேற்கோன்* நெடுமாறன் தென்கூடற்கோன்*

தென்னன் கொண்டாடும்* தென்திருமாலிருஞ்சோலையே.  4.2.7.

 

குறுகாத மன்னரைக்* கூடுகலக்கி* வெங்கானிடைச்-

சிறுகால் நெறியே போக்குவிக்கும்* செல்வன் பொன்மலை*

அறுகால் வரிவண்டுகள்* ஆயிரநாமம் சொல்லி*

சிறுகாலைப் பாடும்* தென்திருமாலிருஞ்சோலையே.   4.2.8.

 

சிந்தப்புடைத்துச்* செங்குருதிகொண்டு* பூதங்கள்-

அந்திப்பலி கொடுத்து* ஆவத்தனம் செய் அப்பன்மலை*

இந்திர கோபங்கள்* எம்பெருமான் கனிவாய் ஒப்பான்*

சிந்தும் புறவில்* தென்திருமாலிருஞ்சோலையே.     4.2.9.

 

எட்டுத் திசையும்* எண்ணிறந்த பெருந்தேவிமார்*

விட்டு விளங்க* வீற்றிருந்த விமலன் மலை*

பட்டிப் பிடிகள்* பகடு உ றிஞ்சிச் சென்று* மாலைவாய்த்-

தெட்டித் திளைக்கும்* தென்திருமாலிருஞ்சோலையே.   4.2.10.

 

மருதப் பொழிலணி* மாலிருஞ்சோலை மலைதன்னை*

கருதியுறைகின்ற* கார்க் கடல் வண்ணனம்மான் தன்னை*

விரதம் கொண்டேத்தும்* வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்*

கருதியுரைப்பவர்* கண்ணன் கழலிணை காண்பார்களே. (2)  4.2.11.

 

மூன்றாம் திருமொழி

உருப்பிணி நங்கை தன்னைமீட்பான்* தொடர்ந்தோடிச் சென்ற*

உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு* உறைத்திட்ட உறைப்பன்மலை*

பொருப்பிடைக் கொன்றை நின்று* முறியாழியும் காசும் கொண்டு*

விருப்பொடு பொன்வழங்கும்* வியன்மாலிருஞ்சோலையதே. (2)  4.3.1.

 

கஞ்சனும் காளியனும்* களிறும் மருதும் எருதும்*

வஞ்சனையில் மடிய* வளர்ந்த மணிவண்ணன் மலை*

நஞ்சுமிழ் நாகமெழுந்தணவி* நளிர்மாமதியை*

செஞ்சுடர் நாவளைக்கும்* திருமாலிருஞ்சோலையதே.   4.3.2.

 

மன்னு நரகன் தன்னைச்* சூழ்போகி வளைத்தெறிந்து*

கன்னி மகளிர் தம்மைக்* கவர்ந்த கடல்வண்ணன் மலை*

புன்னை செருந்தியொடு* புன வேங்கையும் கோங்கும் நின்று*

பொன்னரிமாலைகள்சூழ்* பொழில்மாலிருஞ்சோலையதே.  4.3.3.

 

மாவலி தன்னுடைய* மகன் வாணன் மகளிருந்த*

காவலைக் கட்டழித்த* தனிக்காளை கருதும்மலை*

கோவலர் கோவிந்தனைக்* குறமாதர்கள் பண்குறிஞ்சிப்*

பாவொலி பாடி நடம்பயில்* மாலிருஞ்சோலையதே.   4.3.4.

 

##பலபல நாழம் சொல்லிப்* பழித்த சிசுபாலன் தன்னை*

அலவலைமை தவிர்த்த* அழகன் அலங்காரன் மலை*

குலமலை கோலமலை* குளிர்மாமலை கொற்றமலை*

நிலமலை நீண்டமலை* திருமாலிருஞ்சோலையதே. (2)  4.3.5.

 

பாண்டவர் தம்முடைய* பாஞ்சாலி மறுக்கமெல்லாம்*

ஆண்டு அங்கு நூற்றுவர்தம்* பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*

பாண்தகு வண்டினங்கள்* பண்கள் பாடி மதுப்பருக*

தோண்டலுடைய மலை* தொல்லைமாலிருஞ்சோலையதே.   4.3.6.

 

கனங் குழையாள் பொருட்டாக்* கணைபாரித்து* அரக்கர்தங்கள்-

இனம் கழுவேற்றுவித்த* எழில்தோள் எம் இராமன்மலை*

கனம்கொழி தெள்ளருவி* வந்துசூழ்ந்து கல் ஞாலமெல்லாம்*

இனம் குழுவாடும் மலை* எழில்மாலிருஞ்சோலையதே.   4.3.7.

 

எரிசிதறும் சரத்தால்* இலங்கையினை* தன்னுடைய-

வரிசிலை வாயில் பெய்து* வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த*

அரையன் அமரும் மலை* அமரரொடு கோனும்சென்று*

திரிசுடர் சூழும்மலை* திருமாலிருஞ்சோலையதே.   4.3.8.

 

கோட்டு மண் கொண்டிடந்து* குடங்கையில் மண் கொண்டளந்து*

மீட்டும் அதுண்டுமிழ்ந்து* விளையாடு விமலன் மலை*

ஈட்டிய பல்பொருள்கள்* எம்பிரானுக்கு அடியுறையென்று*

ஓட்டரும் தண் சிலம்பாறுடை* மாலிருஞ்சோலையதே.    4.3.9.

 

##ஆயிரம்தோள்பரப்பி* முடியாயிரம் மின்னிலக*

ஆயிரம் பைந்தலைய* அனந்த சயனன் ஆளும்மலை*

ஆயிரம் ஆறுகளும்* சுனைகள் பலவாயிரமும்*

ஆயிரம் பூம்பொழிலுமுடை* மாலிருஞ்சோலையதே. (2)   4.3.10.

 

## மாலிருஞ்சோலையென்னும்* மலையை உடைய மலையை*

நாலிரு மூர்த்தி தன்னை* நால் வேதக் கடலமுதை*

மேலிருங் கற்பகத்தை* வேதாந்த விழுப்பொருளில்*

மேலிருந்த விளக்கை* விட்டுசித்தன் விரித்தனவே. (2)  4.3.11.

 

நான்காம் திருமொழி

நாவகாரியம் சொல்லிலாதவர்* நாள்தொறும் விருந்தோம்புவார்*

தேவகாரியம்செய்து* வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர்*

மூவர் காரியமும் திருத்தும்* முதல்வனைச் சிந்தியாத* அப்-

பாவ காரிகளைப் படைத்தவன்* எங்ஙனம் படைத்தான் கொலோ! (2) 4.4.1.

 

குற்றமின்றிக் குணம் பெருக்கிக்* குருக்களுக்கு அனுகூலராய்*

செற்றமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

துற்றி ஏழ் உலகுண்ட* தூமணிவண்ணன் தன்னைத் தொழாதவர்*

பெற்ற தாயர் வயிற்றினைப்* பெருநோய் செய்வான் பிறந்தார்களே.  4.4.2.

 

வண்ணநல் மணியும் மரகதமும் அழுத்தி* நிழலெழும்-

திண்ணைசூழ்* திருக்கோட்டியூர்த்* திருமாலவன் திருநாமங்கள்*

எண்ணக் கண்ட விரல்களால்* இறைப்பொழுதும் எண்ணகிலாது போய்*

உண்ணக்கண்ட தம் ஊத்தை வாய்க்குக்* கவளம் உந்துகின்றார்களே.   4.4.3.

 

உரகமெல்லணையான் கையில்* உறை சங்கம்போல் மடவன்னங்கள்*

நிரை கணம் பரந்தேறும்* செங்கமல வயல் திருக்கோட்டியூர்*

நரக நாசனை நாவில் கொண்டு அழையாத* மானிட சாதியர்*

பருகு நீரும் உடுக்குங் கூறையும்* பாவம் செய்தனதாங் கொலோ!  4.4.4.

 

ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு* தூமலர் சாடிப்போய்*

தீமை செய்து இள வாளைகள்* விளையாடு நீர்த் திருக்கோட்டியூர்*

நேமிசேர் தடங்கையினானை* நினைப்பிலா வலி நெஞ்சுடை*

பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப்* புல்லைத் திணிமினே.  4.4.5.

 

பூதம் ஐந்தொடு வேள்வியைந்து* புலன்களைந்து பொறிகளால்*

ஏதமொன்றுமிலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்

நாதனை நரசிங்கனை* நவின்றேத்துவார்கள் உழக்கிய*

பாத தூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.   4.4.6.

 

குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று* கூடியாடி விழாச்செய்து*

திருந்து நான்மறையோர்* இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்*

கருந்தட முகில்வண்ணனைக்* கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள்*

இருந்த ஊரிலிருக்கும் மானிடர்* எத்தவங்கள் செய்தார்கொலோ!  4.4.7.

 

நளிர்ந்த சீலன் நயாசலன்* அபிமனதுங்கனை* நாள்தொறும்-

தெளிந்த செல்வனைச்* சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்*

குளிர்ந்துறைகின்ற கோவிந்தன்* குணம் பாடுவாருள்ள நாட்டினுள்*

விளைந்த தானியமும் * இராக்கதர் மீது கொள்ளகிலார்களே.  4.4.8.

 

கொம்பினார் பொழில்வாய்க்* குயிலினம் கோவிந்தன் குணம் பாடுசீர்*

செம்பொனார் மதிள்சூழ்* செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்*

நம்பனை நரசிங்கனை* நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்*

எம்பிரான் தன சின்னங்கள்* இவர் இவரென்று ஆசைகள் தீர்வனே.  4.4.9.

 

காசின் வாய்க் கரம் விற்கிலும்* கரவாது மாற்றிலி சோறிட்டு*

தேச வார்த்தை படைக்கும்* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*

கேசவா! புருடோத்தமா!* கிளர் சோதியாய்! குறளா! என்று*

பேசுவார் அடியார்கள்* எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.    4.4.10.

 

சீதநீர் புடைசூழ்* செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்*

ஆதியான் அடியாரையும்* அடிமையின்றித் திரிவாரையும்*

கோதில் பட்டர்பிரான்* குளிர் புதுவைமன் விட்டுசித்தன்சொல்*

ஏதமின்றி உரைப்பவர்* இருடீகேசனுக்காளரே. (2)     4.4.11.

 

ஐந்தாம் திருமொழி

ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி* அன்னை அத்தன் என் புத்திரர் பூமி*

வாசவார் குழலாள் என்று மயங்கி* மாளுமெல்லைக் கண்வாய் திறவாதே*

கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழலாகிய கேடிலீ! என்றும்*

பேசுவார் அவர் எய்தும் பெருமை* பேசுவான் புகில் நம் பரமன்றே. (2) 4.5.1.

 

சீயினால் செறிந்தேறிய புண்மேல்* செற்றல் ஏறிக் குழம்பிருந்து* எங்கும்-

ஈயினால் அரிப்புண்டு மயங்கி* எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்*

வாயினால் நமோநாரணா என்று*   மத்தகத்திடைக் கைகளைக்கூப்பி*

போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகவொட்டாரே.

 

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்* சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து*

ஆர் வினவிலும் வாய் திறவாதே*     அந்தகாலம் அடைவதன் முன்னம்*

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து* மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி*

ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு* அரவ தண்டத்தில் உய்யலுமாமே.  4.5.3.

 

மேலெழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து* மேல் மிடற்றினை உள் எழ வாங்கி*

காலும் கையும் விதிர் விதிர்த்தேறிக்* கண் உறக்கம் அது ஆவதன்முன்னம்*

மூலமாகிய ஒற்றை எழுத்தை* மூன்றுமாத்திரை உள் எழ வாங்கி*

வேலை வண்ணனை மேவுதிராகில்* விண்ணகத்தினில் மேவலுமாமே.  4.5.4.

 

மடிவழி வந்து நீர் புலன் சோர* வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே*

கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்* கண்ணுறக்கம் அது ஆவதன் முன்னம்*

தொடை வழி உம்மை நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்*

இடைவழியில் நீர் கூறையும் இழவீர்* இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே. 4.5.5.

 

அங்கம்விட்டு அவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினில் சோதித்த பின்னை*

சங்கம் விட்டவர் கையை மறித்துப்* பையவே தலை சாய்ப்பதன் முன்னம்*

வங்கம் விட்டு உலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனனை மார்பில்-

தங்க விட்டு வைத்து* ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு * என்றும் சாதிக்கலாமே. 4.5.6.

 

தென்னவன் தமர் செப்பமிலாதார்* சே அதக்குவார் போலப்புகுந்து*

பின்னும் வன்கயிற்றால் பிணித்து எற்றிப்* பின் முன்னாக இழுப்பதன் முன்னம்*

இன்னவன் இனையான் என்றுசொல்லி*   எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி*

மன்னவன் மதுசூதனன் என்பார்*    வானகத்து மன்றாடிகள் தாமே.   4.5.7.

 

கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து*

பாடிப் பாடி ஓர் பாடையிலிட்டு* நரிப் படைக்கு ஒரு பாகுடம்போலே*

கோடி மூடியெடுப்பதன் முன்னம்*   கௌத்துவமுடைக் கோவிந்தனோடு*

கூடியாடிய உள்ளத்தர் ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே.   4.5.8.

 

வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப* வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற*

தாய் ஒருபக்கம் தந்தை ஒருபக்கம்* தாரமும் ஒருபக்கம் அலற்ற*

தீ ஓருபக்கம் சேர்வதன் முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-

மாய்* ஒருபக்கம் நிற்க வல்லார்க்கு* அரவ தண்டத்தில் உய்யலுமாமே.  4.5.9.

 

செத்துப் போவதோர் போது நினைந்து* செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்*

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்*       செய்த மாலை இவைபத்தும் வல்லார்*

சித்தம் நன்கு ஒருங்கித் திருமால்மேல்*    சென்ற சிந்தை பெறுவர் தாமே. (2) 4.5.10.

 

ஆறாம் திருமொழி

காசும் கரை உடைக் கூறைக்கும்* அங்கோர் கற்றைக்கும்-

ஆசையினால்* அங்கு அவத்தப் பேரிடும்* ஆதர்காள்!*

கேசவன் பேரிட்டு* நீங்கள் தேனித்து இருமினோ*

நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள். (2)   4.6.1.

 

அங்கொருகூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*

மங்கிய மானிட சாதியின்* பேரிடும் ஆதர்காள்!*

செங்கணெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக் கால்*

நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.    4.6.2.

 

உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*

எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?*

பிச்சை புக்கு ஆகிலும்* எம்பிரான் திருநாமமே-

நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.   4.6.3.

 

மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*

மானிட சாதியின் பேரிட்டால்* மறுமைக்கில்லை*

வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*

நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.       4.6.4.

 

மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*

மலமுடை ஊத்தையின் பேரிட்டால்* மறுமைக்கில்லை*

குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*

நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.    4.6.5.

 

நாடும் நகரும் அறிய* மானிடப் பேரிட்டு*

கூடி அழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*

சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-

நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.    4.6.6.

 

மண்ணில் பிறந்து மண்ணாகும்* மானிடப் பேரிட்டு* அங்கு-

எண்ணமொன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*

கண்ணுக்கினிய* கருமுகில் வண்ணன் நாமமே-

நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.     4.6.7.

 

நம்பி பிம்பியென்று* நாட்டு மானிடப் பேரிட்டால்*

நம்பும் பிம்புமெல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*

செம்பெருந் தாமரைக் கண்ணன்* பேரிட்டு அழைத்தக்கால்*

நம்பிகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.    4.6.8.

 

ஊத்தைக் குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-

மூத்திரப் பிள்ளையை* என் முகில்வண்ணன் பேரிட்டு*

கோத்துக் குழைத்துக்* குணாலம் ஆடித் திரிமினோ*

நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.   4.6.9.

 

சீரணி மால்* திருநாமமே இடத் தேற்றிய*

வீரணி தொல் புகழ்* விட்டுசித்தன் விரித்த*

ஓர் அணி ஒண் தமிழ்* ஒன்பதோடொன்றும் வல்லவர்*

பேரணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே. (2)   4.6.10.

 

ஏழாம் திருமொழி

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த* எம் தாசரதிபோய்*

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட* எம் புருடோத்தமன் இருக்கை*

கங்கை கங்கையென்ற வாசகத்தாலே* கடுவினை களைந்திட கிற்கும்*

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற* கண்டமென்னும் கடிநகரே. (2)  4.7.1.

 

சலம்பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்* சந்திரன் வெங்கதிர் அஞ்ச*

மலர்ந்து எழுந்து அணவு மணிவண்ண உருவின்* மால் புருடோத்தமன் வாழ்வு*

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும்* நாரணன் பாதத் துழாயும்*

கலந்திழி புனலால் புகர்படு கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே.  4.7.2.

 

அதிர் முகமுடைய வலம்புரி குமிழ்த்தி* அழல் உமிழ் ஆழி கொண்டெறிந்து* அங்கு-

எதிர்முக அசுரர் தலைகளை இடறும்* எம் புருடோத்தமன் இருக்கை*

சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*

கதிர்முக மணிகொண்டு எழி புனல் கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே.   4.7.3.

 

இமையவர் இறுமாந்திருந்து அரசாள* ஏற்று வந்தெதிர் பொருசேனை*

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்* நம் புருடோத்தமன் நகர்தான்*

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகிரைத்தாட*

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே. 4.7.4.

 

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்* ஒண் சுடராழியும் சங்கும்*

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய* மால் புருடோத்தமன் வாழ்வு*

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்* இறைப் பொழுது அளவினில் எல்லாம்*

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.  4.7.5.

 

தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம்* சலசல பொழிந்திடக்கண்டு*

மலைப் பெருங்குடையால் மறைத்தவன் மதுரை* மால் புருடோத்தமன் வாழ்வு*

அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர்* அவபிரதம் குடைந்தாட*

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.  4.7.6.

 

விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி* மேலிருந்தவன் தலைசாடி*

மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த* மால் புருடோத்தமன் வாழ்வு*

அற்புதமுடைய ஐராவத மதமும்* அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*

கற்பக மலரும் கலந்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே.   4.7.7.

 

திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து* தன் மைத்துனன்மார்க்காய்*

அரசனை அவிய அரசினை அருளும்* அரி புருடோத்தமன் அமர்வு*

நிரை நிரையாக நெடியன யூபம்* நிரந்தரம் ஒழுக்கு விட்டு* இரண்டு-

கரைபுரை வேள்விப் புகை கமழ் கங்கை* கண்டமென்னும் கடிநகரே.  4.7.8.

 

##வடதிசை மதுரை சாளக்கிராமம்* வைகுந்தம் துவரை அயோத்தி*

இடமுடை வதரி இட வகையுடைய* எம் புருடோத்தமன் இருக்கை*

தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்* தலைப் பற்றிக் கரை மரம்சாடி*

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்* கண்டமென்னும் கடிநகரே. (2) 4.7.9.

 

##மூன்றெழுத்து அதனை மூன்றெழுத்து அதனால்* மூன்றெழுத்தாக்கி* மூன்றெழுத்தை-

ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய* எம் புருடோத்தமன் இருக்கை*

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி* மூன்றினில் மூன்று உருவானான்*

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்* கண்டமென்னும் கடிநகரே.(2) 4.7.10.

 

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து* உறை புருடோத்தமனடிமேல்*

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்* விட்டுசித்தன் விருப்புற்று*

தங்கிய அன்பால் செய்த தமிழ்மாலை* தங்கிய நாவுடையார்க்கு*

கங்கையில் திருமால் கழலிணைக்கீழே* குளித்திருந்த கணக்காமே. (2) 4.7.11.

 

எட்டாம் திருமொழி

மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*

ஓதுவித்த தக்கணையா* உரு உருவே கொடுத்தானூர்*

தோத வத்தித் தூய் மறையோர்* துறை படியத் துளும்பி எங்கும்*

போதில் வைத்த தேன் சொரியும்* புனலரங்கம் என்பதுவே. (2)   4.8.1.

 

பிறப்பகத்தே மாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*

இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து* ஒருப்படுத்த உறைப்பனூர்*

மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார்* வரு விருந்தை அளித்திருப்பார்*

சிறப்புடைய மறையவர் வாழ்* திருவரங்கம் என்பதுவே.       4.8.2.

 

மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*

உரு மகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானூர்*

திருமுகமாய்ச் செங்கமலம்* திரு நிறமாய்க் கருங்குவளை*

பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே.   4.8.3.

 

கூன் தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க் கடிய சொல்கேட்டு*

ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும் ஆங்கொழிய*

கான் தொடுத்த நெறி போகிக்* கண்டகரைக் களைந்தானூர்*

தேன் தொடுத்த மலர்ச்சோலைத்* திருவரங்கம் என்பதுவே.     4.8.4.

 

பெரு வரங்கள் அவை பற்றிப்* பிழக்குடைய இராவணனை*

உருவரங்கப் பொருதழித்து* இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்*

குருவரும்பக் கோங்கு அலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*

திருவரங்கம் என்பதுவே* என்திருமால் சேர்விடமே.       4.8.5.

 

கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*

ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த வழிப்பனூர்*

தாழை மடல் ஊடு உரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*

யாழின் இசை வண்டினங்கள்* ஆளம் வைக்கும் அரங்கமே.     4.8.6.

 

கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்து இழிந்து குமிழ்த்தெறிய*

பிழக்குடைய அசுரர்களைப்* பிணம் படுத்த பெருமானூர்*

தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*

தெழிப்புடைய காவிரி வந்து* அடிதொழும் சீரரங்கமே.   4.8.7.

 

வல்லெயிற்றுக் கேழலுமாய்* வாளெயிற்றுச் சீயமுமாய்*

எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானூர்*

எல்லியம்போது இருஞ்சிறை வண்டு* எம்பெருமான் குணம்பாடி*

மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே.      4.8.8.

 

குன்றாடு கொழு முகில்போல்* குவளைகள்போல் குரைகடல்போல்*

நின்றாடு கண மயில்போல்* நிறமுடைய நெடுமாலூர்*

குன்றூடு பொழில் நுழைந்து* கொடியிடையார் முலை அணவி*

மன்றூடு தென்றலுமாம்* மதிளரங்கம் என்பதுவே.    4.8.9.

 

பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித்து எழுந்தானை*

செருவரங்கப் பொருது அழித்த* திருவாளன் திருப்பதிமேல்*

திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*

இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே. (2) 4.8.10.

 

ஒன்பதாம் திருமொழி

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்* வானோர்வாழ*

செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட* திருமால்கோயில்*

திருவடிதன் திருவுருவும்* திருமங்கைமலர் கண்ணும் காட்டி நின்று*

உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட* ஓ சலிக்கும் ஒளியரங்கமே. (2)  4.9.1.

 

##தன்னடியார் திறத்தகத்துத்* தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்*

என்னடியார் அதுசெய்யார்* செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்*

மன்னுடைய விபீடணற்கா* மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண்வைத்த*

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்* மற்றொருவர்க்கு ஆளாவரே? (2) 4.9.2.

 

கருளுடைய பொழில் மருதும்* கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்*

உருளுடைய சகடரையும் மல்லரையும்* உடைய விட்டு ஓசைகேட்டான்*

இருளகற்றும் எறி கதிரோன்* மண்டலத் தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி*

அருள் கொடுத்திட்டு அடியவரை*    ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே. 4.9.3.

 

பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணிசெய்ய துவரை என்னும்*

அதில் நாயகராகி வீற்றிருந்த*          மணவாளர் மன்னுகோயில்*

புதுநாண் மலர்க்கமலம்*          எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்*

பொதுநாயகம் பாவித்து* இருமாந்து பொன் சாய்க்கும் புனலரங்கமே.   4.9.4.

 

ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*

நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான்*

சேமமுடை நாரதனார்* சென்றுசென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்*

பூமருவிப் புள்ளினங்கள்*         புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே.   4.9.5.

 

மைத்துனன்மார் காதலியை* மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி*

உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட* உயிராளன் உறையும்கோயில்*

பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்*

சித்தர்களும் தொழுது இறைஞ்சத்* திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே. 4.9.6.

 

குறட் பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பு அதக்கி அரசுவாங்கி*

இறைப் பொழிதில் பாதாளம் கலவிருக்கை* கொடுத்துகந்த எம்மான்கோயில்*

எறிப்புடைய மணிவரைமேல்* இள ஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*

சிறப்புடைய பணங்கள் மிசைச்*      செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே. 4.9.7.

 

உரம்பற்றி இரணியனை*        உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்கவூன்றி*

சிரம்பற்றி முடி இடியக் கண் பிதுங்க* வாய் அலரத் தெழித்தான் கோயில்*

உரம் பெற்ற மலர்க்கமலம்* உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*

வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண்ணரங்கமே. 4.9.8.

 

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*

மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்*

சேவலொடு பெடையன்னம்* செங்கமல மலரேறி ஊசலாடி*

பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே.   4.9.9.

 

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச்செய்யும் நாந்தகமென்னும் ஒருவாளன்*

மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கையாளன்*

இரவாளன் பகலாளன் என்னை ஆளன்* ஏழுலகப் பெரும் புரவாளன்*

திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.   4.9.10.

 

கைந் நாகத்து இடர் கடிந்த* கனலாழிப் படை உடையான் கருதும்கோயில்*

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற* திருவரங்கம் திருப்பதியின்மேல்*

மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன்* விரித்த தமிழ் உரைக்க வல்லார்*

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக் கீழ்* இணை பிரியாது இருப்பர் தாமே. 4.9.11.

 

பத்தாம் திருமொழி

துப்புடையாரை அடைவதெல்லாம்* சோர்விடத்துத் துணையாவரென்றே*

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்* ஆனைக்கு நீ அருள்செய்தமையால்*

எய்ப்பு என்னை வந்து நலியும்போது* அங்குஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்*

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.1.

 

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*

நாமடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன்தமர்கள்*

போமிடத்து உன்திறத்து எத்தனையும்*     புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*

ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.2.

 

எல்லையில் வாசல் குறுகச்சென்றால்* எற்றி நமன்தமர் பற்றும்போது*

நில்லுமின் என்னும் உபாயமில்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!*

சொல்லலாம்போதே உன் நாமமெல்லாம்*          சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்*

அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.3.

 

ஒற்றைவிடையனும் நான்முகனும்* உன்னையறியாப் பெருமையோனே!*

முற்றஉலகெல்லாம் நீயேயாகி*        மூன்றெழுத்தாய முதல்வனேயா!*

அற்றது வாணாள் இவர்க்கு என்றெண்ணி* அஞ்சநமன்தமர் பற்றலுற்ற*

அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.4.

 

பையரவினணைப் பாற்கடலுள்*     பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி!*

உய்யஉலகு படைக்கவேண்டி* உந்தியில் தோற்றினாய் நான்முகனை*

வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்*        காலனையும் உடனே படைத்தாய்*

ஐய! இனி என்னைக் காக்க வேண்டும்*     அரங்கத்தரவணைப் பள்ளியானே!   4.10.5.

 

தண்ணனவில்லை நமன்தமர்கள்* சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்*

மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*

எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம்*             எண்ணினேன்,என்னைக் குறிக்கொண்டு என்றும்*

அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.6.

 

செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற* தேவர்கள்நாயகனே! எம்மானே!*

எஞ்சலில் என்னுடை இன்னமுதே!* ஏழுலகுமுடையாய்! என்னப்பா!*

வஞ்சவுருவின் நமன்தமர்கள்* வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது*

அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்* அரங்கத்தரவணைப் பள்ளியானே! 4.10.7.

 

நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்* நமன்தமர்பற்றி நலிந்திட்டு*

இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*அங்கேதும் நான்உன்னை நினைக்கமாட்டேன்*

வானேய் வானவர் தங்கள் ஈசா!*     மதுரைப் பிறந்த மாமாயனே!* என்-

ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*      அரங்கத்தரவணைப் பள்ளியானே!   4.10.8.

 

குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோநிரை மேய்த்தவனே! எம்மானே!*

அன்றுமுதல் இன்று அறுதியா* ஆதியஞ்சோதி மறந்தறியேன்*

நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது*

அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*   அரங்கத்தரவணைப் பள்ளியானே!   4.10.9.

 

மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*

ஆயர்களேற்றினை அச்சுதனை* அரங்கத்தரவணைப் பள்ளியானை*

வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்* விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*

தூய மனத்தனராகி வல்லார்* தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)   4.10.10.

 

ஐந்தாம் பத்து

 

முதல் திருமொழி

வாக்குத் தூய்மை இலாமையினாலே* மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்*

நாக்கு நின்னையல்லால் அறியாது* நான் அதஞ்சுவன் என் வசமன்று*

மூர்க்குப் பேசுகின்றான் இவனென்று* முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்*

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்* காரணா! கருளக் கொடியானே! (2) 5.1.1.

 

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்து கையனே!*

பிழைப்பர் ஆகிலும் தம்மடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடனன்றே*

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது*

உழைக்கு ஓர் புள்ளி மிகையன்று கண்டாய்* ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே! 5.1.2.

 

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்* நாரணா! என்னும் இத்தனை அல்லால்*

புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்* புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*

உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன்* ஓவாதே நமோநாரணா! என்பன்*

வன்மையாவது உன் கோயிலில்வாழும்* வைஷ்ணவன் என்னும் வன்மை கண்டாயே.5.1.3.

 

நெடுமையால் உலகேழும் அளந்தாய்!* நின்மலா! நெடியாய்! அடியேனைக்*

குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா* கூறை சோறு இவை வேண்டுவதில்லை*

அடிமையென்னும் அக் கோயின்மையாலே* அங்கங்கே அவை போதரும் கண்டாய்*

கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை* கோத்தவன் தளை கோள் விடுத்தானே!4.

 

தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*       துடவையும் கிணறும் இவையெல்லாம்*

வாட்டமின்றி உன்பொன்னடிக் கீழே* வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*

நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது* நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி*

கோட்டு மண் கொண்ட கொள்கையினானே!* குஞ்சரம் வீழக் கொம்பொசித்தானே! 5.1.5.

 

கண்ணா! நான்முகனைப் படைத்தானே!* காரணா! கரியாய்! அடியேன் நான்*

உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை* ஓவாதே நமோநாரணா என்று*

எண்ணா நாளும் இருக்கு எசுர் சாம வேத* நாண்மலர் கொண்டு உன்பாதம்-

நண்ணா நாள்* அவை தத்துறும் ஆகில்* அன்று எனக்கு அவை பட்டினிநாளே.   5.1.6.

 

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒருபாம்பை* மெத்தையாக விரித்து* அதன்மேலே-

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்* காணலாங்கொல் என்ற ஆசையினாலே*

உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி* உரோம கூபங்களாய்* கண்ண நீர்கள்-

துள்ளம்சோரத் துயிலணை கொள்ளேன்* சொல்லாய் யான் உன்னைத் தத்துறும் ஆறே. 5.1.7.

 

வண்ணமால் வரையே குடையாக* மாரி காத்தவனே! மதுசூதா!*

கண்ணனே! கரிகோள் விடுத்தானே!* காரணா! களிறட்ட பிரானே!*

எண்ணுவார் இடரைக் களைவானே!* ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே!*

நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்* நன்மையே அருள்செய் எம்பிரானே! 5.1.8.

 

நம்பனே! நவின்று ஏத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமது ஆனாய்!*

உம்பர்கோன் உலகேழும் அளந்தாய்* ஊழி ஆயினாய்! ஆழி முன்னேந்தி*

கம்ப மா கரிகோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*

எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே. 5.1.9.

 

காமர் தாதை கருதலர் சிங்கம்* காண இனிய கருங்குழல் குட்டன்*

வாமனன் என் மரதக வண்ணன்* மாதவன் மதுசூதனன் தன்னை*

சேம நன்கமரும் புதுவையர்கோன்* விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்*

நாமமென்று நவின்றுரைப்பார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே. (2) 5.1.10.

 

 

இரண்டாம் திருமொழி

நெய்க் குடத்தைப்பற்றி* ஏறும் எறும்புகள்போல் நிரந்து* எங்கும்-

கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்!* காலம் பெற உய்யப்போமின்*

மெய்க் கொண்டு வந்து புகுந்து* வேதப்பிரானார் கிடந்தார்*

பைக் கொண்ட பாம்பணையோடும்* பண்டன்று பட்டினம் காப்பே. (2)   5.2.1.

 

சித்திரகுத்தன் எழுத்தால்* தென் புலக்கோன் பொறியொற்றி*

வைத்த இலச்சினை மாற்றித்* தூதுவர் ஓடி ஒளித்தார்*

முத்துத் திரைக்கடற் சேர்ப்பன்* மூதறிவாளர் முதல்வன்*

பத்தர்க்கு அமுதன் அடியேன்* பண்டன்று பட்டினம் காப்பே.         5.2.2.

 

வயிற்றில் தொழுவைப் பிரித்து* வன்புலச் சேவை அதக்கி*

கயிற்றும் அக்காணி கழித்துக்* காலிடைப் பாசம்கழற்றி*

எயிற்றிடை மண் கொண்ட எந்தை* இராப்பகல் ஓதுவித்து* என்னைப் –

பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்* பண்டன்று பட்டினம் காப்பே.     5.2.3.

 

மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்*

இங்குப் புகேன்மின் புகேன்மின்* எளிதன்று கண்டீர் புகேன்மின்*

சிங்கப்பிரான் அவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்*

பங்கப்படாது உய்யப்போமின்* பண்டன்று பட்டினம் காப்பே.      5.2.4.

 

மாணிக் குறளுருவாய* மாயனை என் மனத்துள்ளே*

பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன்* பிறிதின்றி *

மாணிக்கப் பண்டாரம் கண்டீர்* வலிவன் குறும்பர்கள் உள்ளÖர்!*

பாணிக்க வேண்டா நடமின்* பண்டன்று பட்டினம் காப்பே.     5.2.5.

 

உற்றவுறு பிணிநோய்காள்!* உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்*

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்* பேணும் திருக்கோயில் கண்டீர்*

அற்றம் உரைக்கின்றேன்* இன்னம் ஆழ் வினைகாள்!* உமக்கு இங்கு ஓர்-

பற்றில்லை கண்டீர் நடமின்* பண்டன்று பட்டினம் காப்பே.     5.2.6.

 

கொங்கைச் சிறுவரை என்னும்* பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி*

அங்கோர் முழையினில் புக்கிட்டு* அழுந்திக் கிடந்து உழல்வேனை*

வங்கக் கடல்வண்ணன் அம்மான்* வல் வினையாயின மாற்றி*

பங்கப்படா வண்ணம் செய்தான்* பண்டன்று பட்டினம் காப்பே.     5.2.7.

 

ஏதங்கள் ஆயினவெல்லாம்* இறங்கல் இடுவித்து* என்னுள்ளே-

பீதகவாடைப் பிரானார்* பிரம குருவாகி வந்து*

போதில் கமல வன்னெஞ்சம்* புகுந்தும் என் சென்னித்திடரில்*

பாத இலச்சினை வைத்தார்* பண்டன்று பட்டினம் காப்பே.     5.2.8.

 

உறகல் உறகல் உறகல்* ஒண்சுடராழியே! சங்கே!*

அறவெறி நாந்தக வாளே!* அழகிய சார்ங்கமே! தண்டே!*

இறவு படாமலிருந்த* எண்மர் உலோக பாலீர்காள்!*

பறவை அரையா! உறகல்* பள்ளியறைக் குறிக்கோண்மின். (2)   5.2.9.

 

அரவத்து அமளியினோடும்* அழகிய பாற்கடலோடும்*

அரவிந்தப் பாவையும் தானும்* அகம்படி வந்து புகுந்து*

பரவைத் திரை பல மோதப்* பள்ளி கொள்கின்ற பிரானை*

பரவுகின்றான் விட்டுசித்தன்* பட்டினம் காவற் பொருட்டே. (2)  5.2.10.

 

மூன்றாம் திருமொழி

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப் பறித்து*

புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன்* இனிப் போக விடுவதுண்டோ?*

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத* இழந்தவள் தன்வயிற்றில்*

சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! (2) 5.3.1.

 

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன்* உன்தன் இந்திர ஞாலங்களால்*

ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்* நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை*

அளித்தெங்கும் நாடும் நகரமும்* தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று*

தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத்* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.2.

 

##உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன்,* இனிப்போய் ஒருவன்-

தனக்குப் பணிந்து* கடைத்தலை நிற்கை* நின்சாயை அழிவு கண்டாய்*

புனத்தினை  கிள்ளிப் புது அவி காட்டி* உன் பொன்னடி வாழ்கவென்று*

இனக் குறவர் புதியது உண்ணும்* எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய்! (2)  5.3.3.

 

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு* அங்கோர் நிழலில்லை நீரில்லை* உன்-

பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்* நான் எங்கும் காண்கின்றிலேன்*

தூதுசென்றாய்! குரு பாண்டவர்க்காய்* அங்கோர் பொய் சுற்றம் பேசிச்சென்று*

பேதஞ்செய்து எங்கும் பிணம் படைத்தாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.4.

 

காலும் எழா கண்ண நீரும் நில்லா* உடல் சோர்ந்து நடுங்கி* குரல்-

மேலும் எழா மயிர்க்கூச்சும் அறா* எனதோள்களும் வீழ்வொழியா*

மால் உகளா நிற்கும் என் மனனே!* உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்*

சேலுகளா நிற்கும் நீள்சுனை சூழ்* திருமாலிருஞ்சோலை எந்தாய்!  5.3.5.

 

எருத்துக் கொடியுடையானும்* பிரமனும் இந்திரனும்* மற்றும்-

ஒருத்தரும் இப் பிறவியென்னும் நோய்க்கு* மருந்து அறிவாருமில்லை*

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* மறு பிறவி தவிரத்-

திருத்தி* உன்கோயில் கடைப்புகப் பெய்* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.6.

 

அக்கரையென்னு மனத்தக் கடலுள் அழுந்தி* உன் பேர் அருளால்*

இக் கரையேறி இளைத்திருந்தேனை* அஞ்சலென்று கை கவியாய்*

சக்கரமும் தடக்கைகளும்* கண்களும் பீதகவாடையொடும்*

செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்! 5.3.7.

 

எத்தனை காலமும் எத்தனையூழியும்* இன்றொடு நாளையென்றே*

இத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன்* இனி உன்னைப் போகலொட்டேன்*

மைத்துனன்மார்களை வாழ்வித்து* மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்!*

சித்தம் நின்பாலது அறிதி அன்றே* திருமாலிருஞ்சோலை எந்தாய்!    5.3.8.

 

அன்று வயிற்றில் கிடந்திருந்தே* அடிமை செய்யல் உற்றிருப்பன்*

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*

சென்று அங்கு வாணனை ஆயிரந்தோளும்* திருச் சக்கரம் அதனால்*

தென்றித் திசைதிசை வீழச் செற்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!  5.3.9.

 

சென்று உலகம் குடைந்தாடும் சுனைத்* திருமாலிருஞ்சோலை தன்னுள்-

நின்றபிரான்* அடிமேல் அடிமைத் திறம்* நேர்பட விண்ணப்பஞ்செய்*

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்* புதுவைக்கோன் விட்டுசித்தன்*

ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்* உலகமளந்தான் தமரே. (2)     5.3.10.

 

நாலாம் திருமொழி

சென்னியோங்கு* தண்திருவேங்கடமுடையாய்!* உலகு-

தன்னை வாழநின்றநம்பீ!* தாமோதரா! சதிரா!*

என்னையும் என்னுடைமையையும்* உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு*

நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)  5.4.1.

 

பறவையேறு பரம்புருடா!* நீஎன்னைக் கைக்கொண்டபின்*

பிறவியென்னும் கடலும்வற்றிப்* பெரும்பதம் ஆகின்றதால்*

இறவு செய்யும் பாவக்காடு* தீக்கொளÖஇ வேகின்றதால்*

அறிவையென்னும் அமுதவாறு* தலைப்பற்றி வாய்க்கொண்டதே.  5.4.2.

 

எம்மனா! என்குலதெய்வமே!* என்னுடையநாயகனே!*

நின் உளேனாய்ப் பெற்றநன்மை* இவ்வுலகினில்ஆர் பெறுவார்?*

நம்மன்போலே வீழ்த்தமுக்கும்* நாட்டிலுள்ள பாவமெல்லாம்*

சும்மெனாதே கைவிட்டோடித்* தூறுகள் பாய்ந்தனவே.  5.4.3.

 

கடல் கடைந்து அமுதம் கொண்டு* கலசத்தை நிறைத்தாற் போல்*

உடலுருகி வாய்திறந்து* மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்*

கொடுமை செய்யும் கூற்றமும்* என்கோல் ஆடி குறுகப்பெறா*

தடவரைத்தோள் சக்கரபாணீ!* சார்ங்கவிற் சேவகனே!   5.4.4.

 

##பொன்னைக்கொண்டு உரைகல்மீதே* நிறமெழ உரைத்தாற்போல்*

உன்னைக்கொண்டு என்நாவகம் பால்* மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்*

உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்* என்னையும்உன்னிலிட்டேன்*

என்னப்பா! என்னிருடீகேசா!* என்னுயிர்க் காவலனே!  (2)  5.4.5.

 

உன்னுடைய விக்கிரமம்* ஒன்றொழியாமல் எல்லாம்*

என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்*

மன்னடங்க மழுவலங்கைக் கொண்ட* இராமநம்பீ!*

என்னிடைவந்து எம்பெருமான்!* இனியெங்குப்போகின்றதே?    5.4.6.

 

##பருப் பதத்துக் கயல்பொறித்த* பாண்டியர்குலபதிபோல்*

திருப்பொலிந்தசேவடி* என் சென்னியின்மேல்பொறித்தாய்*

மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்று உன்வாசகமே*

உருப்பொலிந்த நாவினேனை* உனக்கு உரித்தாகினையே. (2)  5.4.7.

 

அனந்தன்பாலும் கருடன்பாலும்* ஐதுநொய்தாக வைத்து* என்-

மனந்தனுள்ளே வந்து வைகி* வாழச் செய்தாய் எம்பிரான்!*

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்* கண்கள் அசும்பொழுக*

நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்* நேமிநெடியவனே!   5.4.8.

 

பனிக்கடலில் பள்ளிகோளைப்* பழகவிட்டு* ஓடிவந்துஎன்-

மனக்கடலில் வாழவல்ல* மாய மணாளநம்பீ!*

தனிக்கடலே! தனிச்சுடரே!* தனியுலகே என்றென்று*

உனக்கிடமாயிருக்க* என்னை உனக்கு உரித்தாக்கினையே.  5.4.9.

 

##தடவரை வாய் மிளிர்ந்து மின்னும்* தவள நெடுங்கொடிபோல்*

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே* தோன்றும் என்சோதிநம்பி!*

வடதடமும் வைகுந்தமும்* மதிள் துவராபதியும்*

இடவகைகள் இகழ்ந்திட்டு* என்பால் இடவகை கொண்டனையே. (2) 5.4.10.

 

வேயர் தங்கள் குலத்துதித்த* விட்டுசித்தன் மனத்தே*

கோயில்கொண்ட கோவலனைக்* கொழுங்குளிர் முகில்வண்ணனை*

ஆயரேற்றை அமரர்கோவை* அந்தணர்தம் அமுதத்தினை*

சாயைபோலப் பாடவல்லார்* தாமும் அணுக்கர்களே. (2)   5.4.11.

 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.