ஏழாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஏழாம் திருமொழி

1408 பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,
கொடல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே
7.1

 

1409 இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே
7.2

 

1410 மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.3

 

1411 மாயிருங் குன்ற மொன்றுமத் தாக
மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப்
படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.4

 

1412 எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்
இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.5

 

1413 ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய
அடல்புரை யெழில்திகழ் திரடோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி
மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச
அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.6

 

1414 சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய்
திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து
மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.7

 

1415 ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால்
உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை
மலங்கவன் றடுசரந் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப்
பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.8

 

1416 பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்
சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமா நகரமர்ந் தானே
7.9

 

1417 பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து
பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
அரங்கமா நகரமர்ந் தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேற் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப் பாரே
7.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!