ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஏழாம் திருமொழி
| 1408 | பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும், பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும், கொடல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும், அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.1 |
| 1409 | இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற, தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப் பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம், அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.2 |
| 1410 | மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும், துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய, பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள் அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.3 |
| 1411 | மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி, பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர, சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப, ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.4 |
| 1412 | எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம், பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய, வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது, அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.5 |
| 1413 | ஆயிரும் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள், ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய, ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே, ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.6 |
| 1414 | சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன், எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி, வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால் அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.7 |
| 1415 | ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில் சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.8 |
| 1416 | பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச் சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும், ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே |
7.9 |
| 1417 | பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து, அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே |
7.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

