ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – ஐந்தாம் பத்து – ஐந்தாம் திருமொழி
| 1388 | வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால், மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . |
5.1 |
| 1389 | கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான், விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச் சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . |
5.2 |
| 1390 | மானாய மென்னோக்கி வாநெடுங்கண் ணீர்மல்கும் வளையும் சோரும், தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின், கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . |
5.3 |
| 1391 | தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை- யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய், மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர். மதிக்கி லேனே . |
5.4 |
| 1392 | பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள், ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும், நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . |
5.5 |
| 1393 | தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின், யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல் மாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லு கேனே . |
5.6 |
| 1394 | வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள், எண்ணில் பேராளன் பேரல்லால் பேசாள் இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான், தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே . |
5.7 |
| 1395 | உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால், மறவாதே யெப்பொழுதும் மாயவனே. மாதவனே. என்கின் றளால், பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள் அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . |
5.8 |
| 1396 | பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள், வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும், சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி, அந்தோ.வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே . |
5.9 |
| 1397 | சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த, நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார் காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார், மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே |
5.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

