ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – நான்காம் பத்து – ஆறாம் திருமொழி
| 1298 | தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே |
6.1 |
| 1299 | மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான், விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய் துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய, கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.2 |
| 1300 | உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி, கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய், பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக் கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே |
6.3 |
| 1301 | முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங் கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே, சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக், கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே |
6.4 |
| 1302 | படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து, மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே, தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய, கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.5 |
| 1303 | மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று, பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய், நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய, கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.6 |
| 1304 | மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி, மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய், பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக் காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே |
6.7 |
| 1305 | ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று, காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய், பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே |
6.8 |
| 1306 | சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி, அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய், மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை, கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே |
6.9 |
| 1307 | மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன, பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி, கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே |
6.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

