பத்தாம் திருமொழி


741 அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே .
1

 

742 வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே .
2

 

743 செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே .
3

 

744 தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்
பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே .
4

 

745 வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே .
5

 

746 தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை
ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ .
6

 

747 குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே .
7

 

748 அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே .
8

 

749 செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று
செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத்
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே .
9

 

750 அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே .
10

 

751 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்
றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே .
11

குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.