ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – மூன்றாம் திருமொழி
| 1068 | விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.1 |
| 1069 | வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும், கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும், ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.2 |
| 1070 | வஞ்சனை செய்யத் தாயுரு வாகி வந்தபே யலறிமண் சேர, நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட நாதனைத் தானவர் கூற்றை, விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து துதிசெய்யப் பெண்ணுரு வாகி, அஞ்சுவை யமுத மன்றளித் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.3 |
| 1071 | இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய், |
3.4 |
| 1072 | இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும் இன்பன்நற் புவிதனக் கிறைவன், தந்துணை யாயர் பாவைநப் பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம் வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி வாயுரை தூதுசென் றியங்கும் என்துணை, எந்தை தந்தைதம் மானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.5 |
| 1073 | அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற் கிளையவ னணியிழை யைச்சென்று, எந்தமக் குரிமை செய் எனத் தரியாது எம்பெரு மானருள் என்ன, சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம் பெண்டிரு மெய்திநூ லிழப்ப, இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.6 |
| 1074 | பரதனும் தம்பி சத்துருக் கனன்னும் இலக்கும னோடுமை திலியும் இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந் தகனையெம் மானை, குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு குயிலொடு மயில்கள்நின் றால, இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.7 |
| 1075 | பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.8 |
| 1076 | மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த, கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை, தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. |
3.9 |
| 1077 | மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும் மாடமா ளிகையும்மண் டபமும், தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை, கன்னிநன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க்கலி கன்றி, சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே. |
3.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

