இரண்டாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – முதல் பத்து – இரண்டாம் திருமொழி

958 வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்து,அன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனைப்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.1

 

959 கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி,
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரி தரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.2

 

960 துடிகொள்_ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து, ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்,
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.3

 

961 மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக்
கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே.
2.4

 

962 கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.5

 

963 பணங்களாயிரமுடையநல்லவரவணைப்
பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து,
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.6

 

964 கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படிந் தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.7

 

965 இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர,
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப்
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.8

 

966 ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்,
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே.
2.9

 

967 கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை,
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே.
2.10

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!