ஒன்பதாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – முதல் பத்து – ஒன்பதாம் திருமொழி

1028 தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே.
9.1

 

1029 மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.2

 

1030 கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.3

 

1031 குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்,
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்,
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா.,
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.4

 

1032 எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்,
துப்பா. நின்னடியே
தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்,
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.5

 

1033 மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்,
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்,
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா.,
அண்ணா. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.6

 

1034 தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,
அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.7

 

1035 நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்,
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்.,
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா.,
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.8

 

1036 பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்,
மற்றேலொன்றறியேன் மாயனே. எங்கள்மாதவனே.,
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா.,
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
9.9

 

1037 கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை,
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை,
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்,
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே.
9.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!