பத்தாம் திருமொழி


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருமொழி – முதல் பத்து – பத்தாம் திருமொழி

1038 கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்,
திண்ணாகம்பிளக்கச் சரம்செலவுய்த்தாய்.,
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய,
அண்ணா. அடியேன் இடரைக்களையாயே.
10.1

 

1039 இலங்கைப்பதிக்கு அன்றீறையாய, அரக்கர்
குலம்கெட்டவர்மாளக்
கொடிப்புள்திரித்தாய்., விலங்கல்குடுமித்
திருவேங்கடம்மேய,
அலங்கல்துளபமுடியாய். அருளாயே.
10.2

 

1040 நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு,
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்.,
சீரார் திருவேங்கடமாமலைமேய,
ஆராவமுதே. அடியேற்கருளாயே.
10.3

 

1041 உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக,
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே,
விண்தோய்சிகரத்
திருவேங்கடம்மேய,
அண்டா. அடியேனுக்கு அருள்புரியாயே.
10.4

 

1042 தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி,
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்.,
சேணார் திருவேங்கடமாமலைமேய,
கோணாகணையாய். குறிக்கொள்ளெனைநீயே.
10.5

 

1043 மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி,
தன்னாகித் தன்னினருள்செய்யும்தலைவன்,
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய,
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே.
10.6

 

1044 மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த,
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா.,
தேனே. திருவேங்கடமாமலைமேய,
கோனே. என்மனம் குடிகொண்டிருந்தாயே.
10.7

 

1045 சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன், மணிவாளொளி வெண்டரளங்கள்,
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய,
ஆயனடியல்லது மற்றறையேனே.
10.8

 

1046 வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ.,
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய்., இனியானுன்னை யென்றும் விடேனே.
10.9

 

1047 வில்லார்மலி வேங்கடமாமலைமேய,
மல்லார்த்திரடோள் மணிவண்ணனம்மானை,
கல்லார்த்திரடோள் கலியன்சொன்னமாலை,
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே.
10.10

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!