ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி – மூன்றாம் பத்து – ஆறாம் திருமொழி
| 1198 | தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே, பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே, தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி, ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே. |
6.1 |
| 1199 | பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும், அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே, மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன், பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே. |
6.2 |
| 1200 | நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன் தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே, சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும், கூர்வாய சிறுகுருகே. குறிப்பறிந்து கூறாயே. |
6.3 |
| 1201 | தானாக நினையானேல் தன்னினைந்து நைவேற்கு,ஓர் மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ? தேன்வாய வரிவண்டே. திருவாலி நகராளும், ஆனாயற் கென்னுறுநோ யறியச்சென் றுரையாயே. |
6.4 |
| 1202 | வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப நாணாளும் நின்னினைந்து நைவேற்கு,ஓமண்ணளந்த தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே. |
6.5 |
| 1203 | தாராய தண்டுளவ வண்டுழுத வரைமார்பன், போரானைக் கொம்பொசித்த புட்பாக னென்னம்மான், தேராரும் நெடுவீதித் திருவாலி நகராளும், காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ. |
6.6 |
| 1204 | கொண்டரவத் திரையுலவு குரைகடல்மேல் குலவரைபோல், பண்டரவி னணைக்கிடந்து பாரளந்த பண்பாளா, வண்டமரும் வளர்ப்பொழில்சூழ் வயலாலி மைந்தா,என் கண்டுயில்நீ கொண்டாய்க்கென் கனவளையும் கடவேனோ. |
6.7 |
| 1205 | குயிலாலும் வளர்ப்பொழில்சூழ் தண்குடந்தைக் குடமாடி, துயிலாத கண்ணிணையேன் நின்னினைந்து துயர்வேனோ, முயலாலு மிளமதிக்கே வளையிழந்தேற்கு, இதுநடுவே வயலாலி மணவாளா. கொள்வாயோ மணிநிறமே. |
6.8 |
| 1206 | நிலையாளா நின்வணங்க வேண்டாயே யாகினும்,என் முலையாள வொருநாளுன் னகலத்தால் ஆளாயே, சிலையாளா மரமெய்த திறலாளா திருமெய்ய மலையாளா, நீயாள வளையாள மாட்டோமே. |
6.9 |
| 1207 | மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி, நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை, கையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை, ஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே. |
6.10 |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!

