ஒன்பதாம் திருமொழி


9. சிந்தூரச் செம்பொடி

 

587 சிந்துரச் செம்பொடிப்போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும்பரந் திட்டனவால்,
மந்தரம் நாட்டியன்று
மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான்
சுழலையினின் றுய்துங்கொலோ.
 1

 

588 போர்களி றுபொரும்மா
லிருஞ்சோலையம் பூம்புறவில்,
தார்க்கொடி முல்லைகளும்
தவளநகை காட்டுகின்ற,
கார்க்கொள் படாக்கள்நின்று
கழறிச்சிரிக் கத்தரியேன்,
ஆர்க்கிடு கோதோழி.
அவன்தார்ச்செய்த பூசலையே.
2

 

589 கருவிளை யொண்மலர்காள்.
காயாமலர் காள்,திருமால்
உருவொளி காட்டுகின்றீர்
எனக்குய்வழக் கொன்றுரையீர்,
திருவிளை யாடுதிண்டோ ள்
திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து
வந்திபற்றும் வழ்க்குளதே.
3

 

590 பைம்பொழில் வாழ்குயில்காள்.
மயில்காள்.ஒண் கருவிளைகாள்,
வம்பக் களங்கனிகாள்.
வண்ணப்பூவை நறுமலர்காள்,
ஐம்பெரும் பாதகர்காள்.
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?
4

 

591 துங்க மலர்ப்பொழில்சூழ்
திருமாலிருஞ் சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின்
திருவுருப் போல்,மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்.
தொகுபூஞ்சுனை காள்,சுனையில்
தங்குசெந் தாமரைகாள்.
எனக்கோர்சரண் சாற்றுமினே.
5

 

592 நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ.
 6

 

593 இன்றுவந் தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்,நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே.
7

 

594 காலை யெழுந்திருந்து
கரியகுரு விக்கணங்கள்,
மாலின் வரவுசொல்லி
மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,
சோலை மலைப்பெருமான்
துவராபதி யெம்பெருமான்,
ஆலி னிலைப்பெருமான்
அவன் வார்த்தை யுரைக்கின்றதே.
8

 

595 கோங்கல ரும்பொழில்மா-
லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ-
டுடனாய்நின்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து
மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும்
தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ.
9

 

596 சந்தொடு காரகிலும்
சுமந்துதடங் கள்பொருது,
வந்திழி யும்சிலம்பா-
றுடைமாலிருஞ் சோலைநின்ற,
சுந்தரனை, சுரும்பார்
குழல்கோதை தொகுத்துரைத்த,
செந்தமிழ் பத்தும்வல்லார்
திருமாலடி சேர்வர்களே.
 10