பத்தாம் திருமொழி


10: கார்க்கோடல் பூக்காள்

 

597 கார்க்கோடல் பூக்காள்.கார்க்கடல்
வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்,
ஆர்க்கோ இனிநாம் பூச
லிடுவது, அணிதுழாய்த்
தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப்
படைக்கவல் லேனந்தோ.
 1

 

598 மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்,
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்,
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது,எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துகொள் கிற்றிரே.
2

 

599 கோவை மணாட்டி.நீயுன்
கொழுங்கனி கொண்டு,எம்மை
ஆவி தொலைவியேல் வாயழ-
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை-
யார்க்கும்தம் பாம்புபோல்,
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே.
3

 

600 முல்லைப் பிராட்டி.நீயுன்
முறுவல்கள் கொண்டு,எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய்.உன்ன டைக்கலம்,
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால், நானும்
பிறந்தமை பொய்யன்றே.
4

 

601 பாடும் குயில்காள். ஈதென்ன
பாடல்,நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்,
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து,
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே.
5

 

602 கணமா மயில்காள். கண்ணபி
ரான்திருக் கோலம்போன்று,
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்,
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்,
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே.
6

 

603 நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள்,உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்
நானோர் முதலிலேன்,
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்து,எம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்
கினியொன்று போதுமே ?
7

 

604 மழையே.மழையே.மண்புறம்
பூசியுள் ளாய்நின்ற,
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
வேங்கடத் துள்நின்ற,
அழகப் பிரானார் தம்மையென்
நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண்
டூற்றவும் வல்லையே?
8

 

605 கடலே. கடலே.உன்னைக்
கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுத்தவற்கு, என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக்
கேசென்று ரைத்தியே.
9

 

606 நல்லஎன் தோழி. நாக
ணைமிசை நம்பரர்,
செல்வர் பெரியர் சிறுமா
னிடவர்நாம் செய்வதென்,
வில்லி புதுவை விட்டுசித்
தர்தங்கள் தேவரை,
வல்ல பரிசு வருவிப்ப
ரேலது காண்டுமே.
 10