பதினான்காம் திருமொழி


14. பட்டி மேய்ந்து

 

637 பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?-
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி,
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே.
 1

 

638 அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்,
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே?-
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல, வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே.
2

 

639 மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?-
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்,
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே.
3

 

640 கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத் தி,என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?-
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்,
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே.
4

 

641 மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்,
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே?-
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்,
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே.
 5

 

642 தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்,
புருவ வட்ட மழகிய
பொருத்த மிலியைக் கண்டீரே?-
உருவு கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்,
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோ மே.
6

 

643 பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே?-
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்,
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே.
7

 

644 வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே.
8

 

645 நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே.
9

 

646 பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே.
 10

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.