பதிமூன்றாம் திருமொழி


13. கண்ணனென்னும்

 

627 கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை,
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே,
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு,என்னை
வாட்டம் தணிய வீசீரே.
 1

 

628 பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை,
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே,
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி,
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறிமேன் குழல்மேல் சூட்டீரே.
2

 

629 கஞ்சைக் காய்ந்த கருவல்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை,
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை,
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே.
3

 

630 ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய,
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கிரே.
4

 

631 அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்,
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்,
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே.
5

 

632 நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்,
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு,
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே.
6

 

633 வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து,
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே,
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு,
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே.
7

 

634 உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே.
8

 

635 கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்,
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று,
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே.
9

 

636 அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை,
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை,
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்,
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடளுள் துவளாரே.
 10