பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தாம் பத்து – இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )
| 443 | நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. |
1 |
| 444 | சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே. |
2 |
| 445 | வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. |
3 |
| 446 | மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
4 |
| 447 | மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
5 |
| 448 | உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. |
6 |
| 449 | கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. |
7 |
| 450 | ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. |
8 |
| 451 | உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். |
9 |
| 452 | அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. |
10 |

